Monday, December 28, 2015

பிரசாதம் - சிறுகதை வாசிப்பனுபவம்


பிரசாதம் - சுந்தர ராமசாமி

மனிதன் வாழ்வில் தன்னால் சாதிக்க முடியாத விஷயங்களின் முன் நிற்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறைவு நிலையை அடைகிறான். அந்த கையறு நிலையில் இருந்து பிறக்கும் அமைதி அது. சிந்தித்து பார்த்தால் அந்த நிலையில் அவன் அடையவேண்டியது மிகுந்த வருத்தத்தையே. இருப்பினும் அந்த தருணங்களில் தான் ஒரு வகை நிம்மதி நம்மை சூழ்கிறது. அது ஒரு வகை கடந்து வந்த நிலை. ஆசைகளை பயத்தை ஆனவத்தை அனைத்தையும் கடந்த பிறகு எஞ்சும் நம்மில் சுரக்கும் அமைதி அது. இத்தனை சுமைகளை இறக்கி வைத்ததனால் வரும் நிம்மது அது.

அது ஒருவகையில் நம் அகங்காரம் முற்றிலும் ஒடுங்கும் தருணம் என்று கொள்ளலாம். என்னால் முடியும் என்னால் முடியம் என்று நாம் துரத்தி கொண்டு செல்லும் விஷயம் ஒரு தருணத்தில் நாம் என்ன முயன்றாலும் முடியாது என்று அறியும் போது நாம் நமது சிறுமையை அறிகிறோம். இந்த சிறுமை குணத்தால் சிறுமை அல்ல. இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச வெளியின் முன் சுழன்று சுழன்று ஏறி செல்லும் இந்த காலத்தின் முன் சிறு துகளினும் கோடி பங்கில் ஒருவனாய் நம்மை பார்த்து உணரும் சிறுமை அது. இந்த சமயத்தில் தான் சரணாகதி என்பது முழு அர்த்தம் கொள்கிறது. நதிகிருஷ்ணன் கால்களில் சென்று பணிவதன் மேன்மை புரிகிறது. இவை எதற்கும் நான் பொறுப்பல்ல நீயே என்று அவன் மீது சுமைகளை இறக்கி வைத்து பஞ்சு போல் பறக்கும் இலகு தன்மை கூடுகிறது. அதற்கு பின் எதுவும் செய்யலாம். நக்கல், நையான்டி, சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்த கதையில் அந்த அர்ச்சகரும் போலிஸ்காரரும் உருமாறும் நுட்பமான தருணத்தில் நிகழ்ந்தது இதுவென்றும் சொல்லலாம்.

இன்னொரு வகையில் காவலன் என்ற பொறுப்பில் இருப்பவன் மீது எழும் பயம். அவன் மீது ஒரு சிறு கலங்கம் தெரியும் போது அவன் கேலிக்குறியவன் ஆகிவிடுகிறான். அதற்கு மேல் அவன் கொடுரமான தன்டனை வாங்கி கொடுத்தாலும். அதன் பொருள் இழந்துவிடுகிறது. அந்த தன்டனை உடலுக்கு மட்டும் தான். உள்ளத்தளவில் அந்த தன்டனையின் கீழ்மை அர்ச்சகருக்கு தெரியும்.அவருக்கு அதனால் எந்த அவமானமும் நிகழப்போவதில்லை.

இந்த கதையில் படிப்படியாக இரண்டு பாத்திரங்களும் மாறி வருவதை கவணிக்கலாம். முதலில் அர்ச்சகர் காவலன் என்ற அவர்களின் தொழில் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். அப்போது தான் பயம், மிரட்டல் ஆகியவை செல்லுபடியாகிறது. அடுத்த நிலையில் மனிதர்கள் என்ற அளவில் பேசிகொள்கிறார்கள். ஒருவரின் கீழ்மையும் ஒருவரின் நக்கலும் சேர்ந்த உரையாடலில் இருவரும் சிரித்து நாம் இருவரும் சமமான மனிதர்கள் என்ற நிலையை அடைகிறார்கள். அடுத்த நிலையில் உணர்வின் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். பசித்து ஏங்கும், உறவுகளின் சிறு சிறு சந்தோஷங்களுக்கும் கூட கூட பல வகையான சமரசங்கள் செய்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களின் உணர்வுகளை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

அந்த உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் போதே அங்கு மனிதர்கள் தங்கள் உயர்வை காட்டுகிறார்கள். தன்னை காத்துக்கொள்ள ஒருவனுக்கு கொடுக்கபடாத காசை அந்த உணர்வுகளுக்காக அந்த காவலனுக்கு கொடுக்கிறார் அர்ச்சகர். உணர்வுகள் மட்டுமல்ல கணவுகளும் சேர்ந்துதான். நதிகிருஷ்ணன் அர்ச்சகரின் கணவு. கண்ணம்மா காவலனின் கணவு. இதை நிறைவேற்றி பார்ப்பதற்க்காகவும் தான் அவர்கள் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். இது போன்ற உணர்வுகளும் கணவுகளும் தான் நம் வாழ்க்கையை இன்பமாக்குகிறது. அனைத்தையும துறந்து கிருஷ்ணனின் காலில் விழுவது ஒரு இன்பம் என்றால். அனைத்து பந்தங்கலுடனும் கிருஷ்ணனைஅனைத்து கொள்வதும் ஒரு இன்பம் தான்.

****

இதே கதையை பாலு மகேந்திரா குறும்படமாக எடுத்திருக்கிறார்.



Sunday, December 27, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்க கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும்.

கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே.


அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.

Saturday, December 26, 2015

முக்தியும் மறுபிறவி எனும் முன்னனுமானமும்

இந்திய மதங்களில் பெரும்பாலும் முக்தி எனும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முக்தியை அடையும் வழியாக சில யோக மார்க்கங்கள் வரையறுத்து தரப்பட்டிருக்கிறுது. கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் ஞான யோகம் போன்றவை.  மனிதன் வாழ்வின் துன்பங்களை, பந்தங்களை, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு இந்த இன்னல்கள் இல்லாத பேரானந்த நிலையில் சென்று அமர்வதே அந்த முக்தி என்பதாகும்.

இந்த முக்தியை அடைவதற்கு வாழ்நாள் முழுதும் அல்லது வாழ்வின் ஒரு பகுதி முழுக்க சாதகம் செய்து அந்த முக்தி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படிபட்ட முக்தி என்ற கருத்தை ஏற்று கொள்வதற்கு முன்னணுமானமாக - Presupposition ஒரு கருத்து நம்முள் இருக்கிறது.  மறுபிறவி எனும் கருத்து தான் அது. ஒரு ஆத்மா அல்லது உயிர் முக்தி அடையாத வரையிலும் மறுபிறப்பு எடுத்துகொண்டே இருக்கும் என்ற கருத்து அடிப்படையாக இருப்பதாலயே இந்த முக்தி என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த மறுபிறவி என்ற கருத்தை நான் மறுத்தால். எனது வாழ்க்கை என்பது சில பத்தாண்டுகள். இந்த காலத்தை நான் ஏன் முக்திக்கு செலவழிக்க வேண்டும்? வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே செலவு செய்துவிட்டு சென்றுவிடலாம். அது நல்ல வழியிலான இன்பமாக இருந்தாலும் சரி தீய வழியினாலான இன்பமாக இருந்தாலும் சரி. எனது வாழும் காலத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு செல்லதானே நான் பார்ப்பேன்.

ஒரு வசதிக்காக சொர்க்கம் நரகம் என்ற கருத்தையும் நிராகரிப்போம் என்றால், பாவம் எது புன்னியம் எது? மறுபிறவியும் இல்லை சொர்க்கம் நரகமும் இல்லை என்ற பின் நமது இந்த வாழ்க்கை மட்டுமே நமக்கானது. ஒவ்வொரு நொடியும் பொன் துளி அல்லவா? புலன் இன்பத்தை அளவோடோ அளவில்லாமலோ அனுபவித்து விட்டு செல்லலாமே? அறிதல் என்பதும் ஒரு புலன் இன்பமே. அதற்காக ஒருவர் அறிகிறார் என்றால் சரி. ஆனால் வீடுபேறுக்காக ஒருவர் அறிகிறார், தொழுகிறார், சாதகங்கள் செய்கிறார் என்பது எப்படி சரியாகும்.

ஆனால் மறுபிறவி என்ற கருத்து நமது இந்திய மதங்களில் ஆழமாக இருப்பதால் தான் முக்தி என்ற நிலை முக்கியமாக இருக்கிறது. அதற்காக நமது நேரத்தை செலவிட்டு செய்யும் சாதகங்கள் பொருள்படுகிறது. ஆனால் இந்த கருத்து மேற்கத்திய மதங்களில் இல்லை. அங்கு சொர்க்க நரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த கருத்தை வைத்து பாவ புன்னியங்கள் பொருள் படுகிறது. அதனால் அவர்களுக்கு இறைவழிபாடு பொருள்படுகிறது.

தன் வாழ்க்கையையே தன் முக்திக்காக அற்பனித்த ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். ஞான மார்க்கத்தை தனது பாதையாக தேர்ந்தெடுத்தவர். அவரது கருத்துகளுக்கும், முக்திக்கான ஏக்கத்திற்கும் அடிநாதமாக மறுபிறவி சங்கிலி என்னும் முன்னணுமானம் இருப்பதாக தோன்றியது.  முக்தியை தேடுபவர்கள் இந்த முன்னணுமாத்தை உணர்ந்து அதை ஏற்று கொண்டு தேடுவார்களாயின் அது ஏற்றுகொள்ளதக்கது. ஆனால் அப்படி ஒரு முன்னணுமானத்தை அறியாமலேயே வாழ்க்கையின் இலக்கை தேர்ந்தெடுப்பது என்பது சரியாகப்படவில்லை. அதுவும் குறிப்பாக ஞான மார்க்கத்தின் வழியில் செல்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

----

மேலே நான் எழுதிய அணுகுமுறையில் கொடுக்கல்-வாங்கல் என்ற தோரனை இருக்கிறது. அதில்லாமல் ஒரு உயிரானது தனது போதாமையை உணர்ந்து ஒரு முழுமைக்காக முக்தியை தேர்ந்தெடுக்கிறது என்ற கோணத்திலும் இதை அனுகலாம்.

Friday, December 25, 2015

கடவுச்சொல், போய்க் கொண்டிருப்பவள் - சிறுகதை வாசிப்பனுபவம்


சிலரால் பிறருக்கு அன்பை கொடுக்க முடியாவிட்டாலும் மற்றவர் செய்யும் அன்பை கண்டு பொறுத்துகொள்ளவும் முடிவதில்லை. வாழ்க்கையில் பணம் அந்தஸ்து ஆகியவற்றுக்கு பின்னால் போய்விட்டவர்களுக்கு வாழ்க்கையின் இயல்பாக கிடைக்கும் சந்தோஷம் என்பது இல்லாமல் ஆகிவிடுகிறது. அப்படி இழந்த சந்தோஷங்களின் மதிப்பு தெரிந்தாலும் அவர்களால் தாங்கள் ஏற்படுத்தி கொண்ட அந்த பொருளை தேடும் வாழ்விலிருந்து எளிதாக வெளிவரமுடியவில்லை. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகம். ஆனால் அதை ஒன்றும் தெரியாத ஒரு கிழவி வந்து அனுபவிக்கும் போது அவர்களால் பார்த்துகொண்டு இருக்க முடியவில்லை.

கதை பாட்டி பேரன் அன்பை சொல்லும் கதையாக இருந்தாலும். இன்னொரு ஆழமான ஒரு விஷயமும் இந்த கதையிலிருக்கிறது. உண்மையான அன்பும் இன்பமும் மனிதனின் ஆழம் வரைக்கும் செல்லமுடிகிறது. மற்றவையவை எல்லாம் மேலோட்டமானவை. பாட்டியையும் பேரனையும் அந்த அன்பு ஆழமாக பாதிப்பதால் தான் பாட்டி தியானத்திற்கு அமரும் போது மனதில் பேரன் வந்து நிற்கிறான். பேரனுக்கு ரகசியமாக அவனுக்கு மட்டுமே தெரியகூடிய கடவுச்சொல்லில் பாட்டி வந்து நிற்கிறாள்.

*********************************************************************************

சாக்கடை என்பது அன்னத்தின் யதார்த்த வாழ்க்கையை குறிக்கிறது. அனைத்தும் நுகரப்பட்டு வெறும் கழிசல்கள் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடைக்கு அருகிலும் அவளுக்கென்று ஒரு வீடு இருக்கிறது. அதில் நினைவுகளும் கனவுகளும் பிணைப்புகளும் நிறைந்து அவள் வாழ்க்கைக்கு ஒளி சேர்க்கிறது. அந்த வீடு இருக்கையில் சாக்கடை என்பது எம்பி தாவி சென்றுவிட கூடிய ஒரு சின்ன தொல்லை அவ்வளவு தான்.

விருத்தாவும், கதை சொல்லியும் அன்னத்த்தின் சில கோணத்தை மட்டும் நிறுத்தி வைத்து ரசிக்கிறார்கள். ஆனால் அன்னம் இதை விட ஆழமானவள். இவர்கள் அறியாத கோணம் அவளை சுற்றியும் இருக்கிறது. ஆன்களுக்கு தெரிந்த கோணத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் இருந்து பார்க்க முடிகிறது, அந்த கோணத்தில் அவள் உடலே பிரதானம்.

ஒளிந்திருக்கும் அழகை கூட தேடி கண்டுபிடித்து பதிவு செய்யும் விருத்தா ஒரு ரசிகன். காட்சி ரசிகன். அவளிடம் அவன் ரசிப்பதும் அவளின் மயக்கம் தரும் இளமை அழகை தான். செழித்த கழுத்தும், மார்ப்புகளுமே அவனுடைய ரசனைக்கு தேவையானவை. கதை சொல்லிக்கு காட்சி குறியீடுகளும் அதில் எழும் கற்பனை எழுச்சியும் அவளை ரசிக்க வைக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல அவள். பாலுக்கு அழும் குழந்தை அன்னையிடம் ஒரு அழகை காணும். அவள் மடியில் மயங்கி கிடக்குமே அது ஒரு கோணம். டியுசன் படிக்கும் பையன் அன்னதிடம் ஒரு வித அழகை காண்பான், அது ஒரு கோணம்.

இப்படி பல் வேறு கோணங்களில் அழகை வெளிப்படுத்தி கொண்டு ஒரு பெண் போய் கொண்டிருக்கிறாள். இதில் சில அழகுகள் காலவதியாகலாம். அதனால் விரும்பியவர்கள் அவளை நிராகரிக்கலாம். ஆனால் ஒரு அழகு காலவதியாகும் போது அடுத்தகட்ட அழகு எழுந்து மிளிர தொடங்கும். இளமை உலர்ந்து ஒரு பெண் காய்ந்த பூவாகி போகும் போது அதில் தாய்மை எனும் பால் சுரந்து அடுத்தகட்ட அழகு மிளிர தொடங்குகிறது. 

நமக்கு வேண்டியவைகளை பூட்டி வைத்து கொள்வது வீடு. அது தேவையற்று போகும் போது அது சாக்கடையில் அல்லது குப்பை மேட்டில். விருத்தா அன்னத்தை வீட்டில் சென்று பார்க்கும் போது அவன் ரசனையில் சாக்கடை கலக்க தொடங்கிவிடுகிறது.

ஆனால் அன்னம் எந்த வகையில் தன் மேல் ஈர்ப்பு கொண்டவனையும் விலக்குவதில்லை. அன்னையாக அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டாலும் தன் உடலை ரசித்தவனின் ரசனையை எங்கோ ஒரு இடுக்கில் சுருட்டி வைத்திருக்கிறாள். தேவை எனும் போது அவள் மனம் பூனை போல் அதை நோன்டி எடுத்துப்பார்த்து ஏங்குகிறது. ஒரு வகையில் இன்புறுகிறது.

என்னாளும் அவளோடு ஆண்கள் நடக்க முடியாது. அவளின் வாழ்க்கை கனங்களின் உறைந்த காட்சி கோணங்களை பார்த்து நின்றுவிடுகிறார்கள். ஆனால் அவள் தொடர்ந்து நடந்து போய் கொண்டே இருக்கிறாள்.

Thursday, December 24, 2015

நாடகக்காரி, ரீதி - சிறுகதை வாசிப்பனுபவம்



நாடகக்காரி: ஆண்டன் செக்காவ், மொழிபெயர்ப்பு - புதுமைபித்தன்
ஆங்கில வடிவம் - The Chorus Girl

வாழ்க்கையில் எதையும் அடையாமல் யாருக்காவோ வாழ்ந்து தனது வாழ்க்கையையும் சந்தோஷங்களையும் சமுதாய அந்தஸ்தையும் பெறாமல் இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்த கதை எனக்கு நினைவுப்படுத்துகிறது.

இந்த நாடக்காரி அழகானவள் ஆனால் தன் அழகை நினைத்துக்கூட பெருமிதம் அடையாத அளவுக்கு அவளுக்கு தாழ்வுணர்ச்சியிருக்கிறது. இவளிடம் வந்து செல்லும் ஆண்களுக்கு இவள் மேல் எந்த காதலுமில்லை. நாய்க்கு ரொட்டி துண்டுகள் வாங்கி வருவது போல் இவளுக்கு இனிப்புகள் வாங்கி வருகிறான் கோல்ப்பக்கோ. ஏதோ சமுதாய காரணங்களுக்காக கோல்ப்பக்கோவுடன் இவள் இணங்கிபோகிறாள்.

பெருந்தன்மையுடன் அவள் தனது நகைகளை விட்டுகொடுத்தபோதிலும் அவளுக்கு வெறுப்பும் வசைகளும் தான் கிடைக்கிறது. கோல்ப்பக்கோவினின் மனைவியிடமிருந்து எந்த நன்றியணர்வும் இவளுக்கு கிடைப்பதில்லை. எந்தவிதமான அங்கிகாரம் இவளுக்கு கிடைப்பதில்லை. ஆனால் இவள் தான் பிறருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறாள்.

“மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது” என்ற இந்த வரி எந்த பாவமும் செய்யாத இவளை இந்த நிலையில் வைத்திருக்க முடிவெடுத்தது எதுவோ எனும் கேள்வியை எழுப்புகிறது.

*******************************************************************************************************************

ரீதி - பூமணி

இயற்கை அன்னை மனிதர்களுக்கு துயரங்களை வைத்தாலும் ஏதோ வகையில் அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறாள். பாலை வனத்திலும் சோலை என்ற இடம் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை துயர் நிறைந்த நிலமாக இருந்தாலும் மனிதர்கள் காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கை முறையை அந்த இடத்துக்கு ஏற்றார் போல் அமைத்துக்கொள்கிறார்கள்.

இயற்கைக்கு எந்த பேதமும் இல்லை. எல்லா உயிரினங்களையும் அரவனைத்து செல்கிறது. ஆனால் மனிதர்கள் தன் வளர்ச்சி போக்கில் அவரவர் களஞ்சியத்தை நிரப்பி கொள்ள எத்தனிக்கிறார்கள். அப்படி அளவுக்கு மீறி அவர்கள் அள்ளிப்போடும் போது அதில் அடுத்தவர்க்கு உண்டான பொருட்களும் சென்று விழுந்துவிடுகிறது. இப்படி வளத்தை குவிப்பவர்களுக்கென்றே இந்த நவீன உலகம் கருவிகளை ஏராளமாக உருவாக்கி தருகிறது.

இந்த கருவிகளை உபயோகிக்கும் தோறும் இயற்கையின் அரவனைத்து செல்லும் போக்கை இழக்க செய்கிறோம். அணைகள் கட்ட கட்ட அது இயற்கை சுழலை பல விதமான உயிர்களை பாதிக்கிறது. வசதியான ஆழ்குழாய் நீர் வசதி செய்யும் தோறும் மக்களுக்கென்று பொதுவாக இருக்கும் நீரை நமக்கென நம் சக்திக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறோம் அல்லது வீணடிக்கிறோம்.

இந்த கதையில் வரும் பையன்களும் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தான். மழையில்லா பூமி என்றாலும் மக்கள் குறைந்தபட்ச அளவில் உயிர்வாழ்வதற்கு இயற்கையில் வழியிருக்கும். ஆனால் ஒரு கிராமம் நவீனமயம் ஆகும் தோறும் அந்த வாசல்கள் எல்லாம் மூடப்படுகிறது. பலம் படைத்தவர்கள் கருவிகளின் உதவியினால் மேலும் பலம் கொள்கிறார்கள். இயற்கையின் வளங்களை ஒரு சொட்டு கூட “வீணடிக்காமல்” எடுத்து தங்கள் களஞ்சியங்களை நிரப்புகிறார்கள்.

ஒரு சமுதாயம் அன்றாடம் சோற்றை திங்க இன்னொன்று பனை மரத்தின் உச்சியிலிருக்கும் அணில்களை தேடுகிறது. மனிதனின் வளர்ச்சியில் வேட்டை சமுகத்திலிருந்து விவசாயம் நோக்கி நகர்ந்தது வளர்ச்சியாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு சமுதாயம் மீண்டும் வேட்டை சமுகத்தை நோக்கி தள்ளப்படுகிறது. இயற்கை என்பது அனைவருக்கும் பொது என்பது மாறிவிட்டது.

கிராமத்துக்குள் முரட்டு தனமாக வரும் காரை பார்த்து பயந்து ஓடும் ஆடுகளை போல, பிற உயிரினங்களும் மனிதர்களில் சிலரும் நவீனத்துவம் என்ற இந்த ராட்சச பலத்தை கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். 

Wednesday, December 23, 2015

பரதநாட்டியம் - ஒரு சிறு விவாதம்


சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் பல தரப்பட்ட நாட்டிய கலைகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். பரதம், கதக், ஒடிசி, குச்சுபுடி என்று பல நாட்டியங்களையும் எடுத்துபார்த்தேன். எல்லாமே வியக்க வைத்தது.

கதக்கில் சுழன்று சுழன்று ஆடும் முறை மைக்கல் ஜாக்சனின் சுழற்சிக்கு நிகரானது. ஒடிசியில் பார்த்த சில ஸ்டெப்புகளை மைக்கல் ஜாக்ஸன் போட பார்த்திருக்கிறேன்(MJவின் தீவர ரசிகன்). இப்படி பல ஸ்டெப்புகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பரதமும் மிக கவர்ந்தது. இந்திய நாட்டியத்திலேயே பரதம் மிக கடிணமானது என்று கலை விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் சொல்லியிருப்பார்.

இங்கு பரதத்தின் இரு கலைஞர்களின் நடன வீடியோவை கொடுத்திருக்கிறேன். பத்மா சுப்ரமணியம் மற்றும் ஜானகி ரங்கராஜன். இதில் நான் காணும் வித்தியாசம்  இது தான். பத்மா சுப்ரமணியம் உச்சமான பரதநாட்டிய கலைஞர் என்று கூறுகிறார்கள். அவரது இந்த வீடியோவிலிருக்கும் நடனத்தில் அடவுகள் நெளிவுகள் வேகம் எல்லாம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால் அவரது நடனத்தில் ஏதோ ஒன்று என்னை கவரவில்லை.





அது நளினம் இல்லாத தன்மையா? அல்லது அவரது உடல் வாகு நடனத்துக்கு ஏற்றவாறு இல்லையா என்று தெரியவில்லை. உடல் அமைப்பு என்பது நடனத்துக்கு மிக முக்கியமானது, இலக்கியத்திற்கு மொழி போல. மேலும் அவரது முக பாவங்களில் ஒரு சிரிப்பூட்டும் தன்மை தெரிகிறது. ஆனால் பாரம்பரிய நடன கலைகளை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆரம்ப நிலை ரசிகன். எனக்கு தெரியாத ஏதோ ஒரு அம்சம் அவரது நடனத்தில் இருக்கலாம் அதனால் அவர் பெரும் கலைஞராக அறியப்படலாம்.  பரதநாட்டியத்தை ரசிக்க தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்க முடிந்தால் நன்று.

ஆனால் எனக்கு பரதநாட்டியத்தை ரசிக்கவே தெரியாது என்று சொல்ல முடியாது. நடனத்தை குறித்து ஒரு அடிப்படை ரசனை எனக்கிருக்கிறது. இரண்டாவது வீடியோவிலிருக்கும் ஜானகி ரங்கராஜனின் நடனம் என்னை மிக கவர்ந்தது. அவரது நடனத்தின் கச்சிதம், அற்புதமான நெளிவுகள், நேர்த்தி, பாவங்கள் அனைத்தும் வியக்க செய்கிறது. அரை மன்டி நிலையில் கையை விரித்து ஆடும் போது மயில் போல தெரிகிறார். இவர் பத்மா சுப்ரமணியத்தின் மானவி தான். இருந்தாலும் நிறைய வேறுபாடு தெரிகிறது.



இதை ஒரு நண்பருடன் இணையம் வழியாக விவாதித்த போது அவர் பரத நாட்டியத்தில் பல்வேறு நடன பாணிகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.  நடன பள்ளிகளுக்கு ஏற்றவாறு பாணிகள் வேறுபடுகிறது. பந்தநல்லார் பாணி, வழுவுர் பாணி, கலாக்ஷேத்ரா பாணி போன்றவைகளை அறிமுகம் செய்தார்.

மேலும் நண்பர் பல விஷயங்களை சொன்னார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் இங்கு முயன்றிருப்பது கோயில் சிற்பங்களில் இருக்கும் கரணங்களை நடனத்தில் மீளுருவாக்கம் செய்வது. இதே ஒரு முக்கிய முன்னேடுப்பு. நாம் இழந்துவிட்ட பல நடன கரணங்களை சிற்பங்களின் உதவியோடும் நாட்டிய சாஸ்திர நூல்களின் உதவியோடும் அவர் மீட்டெடுத்திருப்பது பெரு உதவியே. இந்த வீடியோவிலும் அவர் கரணங்களையே ஆடிக்காட்டுகிறார். அந்த ஆடல் முறையை அவர் பரத நிர்த்யம் என்று குறிப்பிடுகிறார் என்றார்.

ஆனால் ஜானகி செய்வது முழு மேடை நாட்டியம் - வந்தனம், வர்ணம், பதம், தில்லானா என்று பல பாகங்களை உள்ளடக்கிய ஒட்டு மொத்த நடன நிகழ்வு. அதை மார்க்கம் என்று அழைப்பார்கள் என்றார்.

இருப்பினும் நான் நண்பருக்கு இதை எழுதினேன்.

ஆனால் நான் சுட்டிக்காட்டுவது இருவரின் உடல் மொழியை பாருங்கள். ஜானகியிடம் தெரியும் அந்த நலினம் பத்மாவிடம் தெரியவில்லை எனக்கு. வெடுக் வெடுக் என்று ஒடித்துவிடுகிறார். பத்மாவின் கால்கள், இடை, torsoவின் அசைவுகளை பாருங்கள். அதில் ஒரு வேகம் தெரிகிறதே தவிர அழகு அவ்வளவாக தெரியவில்லை.

ஜானகியின் 5:28வது நிமிடத்தில் வரும் நடனத்தை பாருங்கள்.  அவரின் நடனத்திலேயே அது உச்சமான வெளிப்பாடாக இருக்கிறது. அதிலிருந்து வெளிவரமுடியவில்லை. பத்து பதினைந்து முறை திரும்ப திரும்ப பார்த்தேன். அதே இடை நெளிவு பத்மாவின் நடனத்திலும் இருக்கிறது. ஆனால் இருவரும் அதை செய்யும் விதத்திலிருக்கும் வித்தியாசத்தை தான் நான் சுட்டிகாட்டுகிறேன். ஜானகியிடம் இருக்கும் நலினமும், உடலமைதியும், கச்சிதமான செய்கையும் பத்மாவிடம்  இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் பத்மாவின் கரணங்கள் பல புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

நண்பர் மேலும் விளக்கினார்.

பத்மா அவர்கள் தன் நாட்டியத்தில் நாட்டியதர்மி ஆடல்முறையையும் லோகதர்மி ஆடல்முறையையும் கலந்து பயன்படுத்துகிறார். நாட்டியதர்மி ஆடல் முறையில் அபிநயங்கள் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருவதனால் நன்கு மெருகேறி காட்சியளிக்கிறது. அந்த மெருக்கேற்றளையே நாம் நளினம் என்கிறோம். ஆனால் கரணங்கள் ஆடல்களை மீளுருவாக்கம் செய்வதால் அதில் அந்த நளினம் கைகூடுவதில்லை என்றார்.

ஆனால் எனக்கு நளினம் என்பது ஆடுபவரின் தனிப்பட்ட திறமை தான் என்று தோன்றியது.

****

நடன பாணிகளை பற்றி வெங்கட் சாமிநாதன்.

//உதாரணமாக, பரதத்தில் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரதம் சமரசம் ஏதும் இல்லாத பழமையின் இறுக்கமும் விதிகளின் பிடி வழுவாது கற்பிக்கப்படும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக, வழுவூர் பரம்பரையில் வரும் பரதம் சற்று நெகிழ்வுகளுக்கு இடம் கொடுத்து அலையோடும் இழையாக, இசையின் பாவங்களும் உணர்ச்சி வெளிப் பாடுகளும் கொண்டதாக, சொல்லப் படுகிறது. இந்த நெகிழ்வுகளின் காரணமாகவே அது, பந்தநல்லூர் மரபைப் பார்க்க அதிக வரவேற்பும் கவர்ச்சியும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த நெகிழ்வும் உணர்ச்சி பாவங்களும், அவ்வளவாக கலைமனம் ஆழம் அற்றோர் வசத்தில், அது ஒரு கேளிக்கையாக, பொழுது போக்குக்கான ஒன்றாக மாறிவிடக்கூடும். குறிப்பாக, ஆடப்படும் பாட்டு சிருங்காரத்தையும் லாஸ்யத்தையும் வெளிப்பாட்டில் முதன்மையாகக் கொள்ளும் ஒன்றாக இருக்குமானால். அது அழகும் கம்பீரமும் கொண்ட செவ்வியல் குணங்களை இழந்து நிற்கும். இது போலவே, பந்த நல்லூர் பத்ததியிலும், அவ்வளவாக கலைஉணர்வு அற்றோர் வசத்தில் அந்த பரதம் இறுக்கம் கொண்டதாக, விதிகளை, இலக்கணங்கள்மீறி எழும் கலையாக மாறும் திறனற்றுப் போகும். இதை அங்க சுத்தி என்று பெரிய வார்த்தைகளில் சொல்லி நியாயப் படுத்தக் கூடும்//

http://solvanam.com/?p=35907

Monday, December 21, 2015

Tuesday, December 1, 2015

ஃபிரைட் ரைஸ் - சிறுகதை

எனது முதல் சிறுகதை சொல்வனத்தில் வெளியாகியிருக்கிறது.

ஃபிரைட் ரைஸ் - http://solvanam.com/?p=42983

Friday, November 27, 2015

அன்பளிப்பு - சிறுகதை வாசிப்பனுபவம்

அன்பளிப்பு - கு அழகிரிசாமி

http://azhiyasudargal.blogspot.in/2011/04/blog-post.html


நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நமது அன்பு ஏதோ வகையில் சார்புடையதாக ஆகிவிடுகிறது. ஆனால் நாம் கண்டுகொள்ளாவிட்டாலும் நமது அன்பை கோரிக்கும் உயிர்கள் எப்போதும் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ளமுடியாதபடி அவர்களின் உணர்வுகள் நமக்கு தெரியாதபடி நம்மை ஏதோ மறைக்கிறது.

ஆனால் இந்த மாதிரி ஏமாற்றத்தை இந்த கதையில் வரும் சாரங்கன் குழந்தையாக இருந்தாலும் மிக கௌரவமாக கையான்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அன்புக்காக ஏங்கி தோற்று சென்றும், கடைசியில் வாய் விட்டு கேட்டும் அவமானமடைந்தும் தோல்வியுற்றாலும் பெரும் தன்மையுடன் கதை சொல்லியை தன் வீட்டுக்கு ஆழைத்து அவன் கையாலயே அன்பளிப்பு பெருவது போல் பாவனை செய்து கொள்கிறான்.

சாரங்கன் போன்ற மனிதர்களுக்கு இந்த உலகம் ஏமாற்றங்களை தொடர்ந்து தந்தாலும் அதை வென்று செல்வதற்கான பாவனையை கையான்டு இந்த உலகத்தை இன்பமையமாக ஆக்கிகொள்ளும் உயிர்துடிப்பு கொண்டவர்கள். எல்லாரும் ஏதோ ஒரு வகை பாவனை செய்து தானே இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நாம் அடையும் ஏமாற்றங்களையும் ஏன் அதே பாவனையால் தான்டி செல்ல கூடாது?

புத்தகம், படிப்பு, கவிதை என்று முழுவதும் அறிவு உலகிலும் கற்பனை உலகிலும் மயங்கி கிடக்கும் கதை சொல்லிக்கு சாரங்கன் ஒரு அதிர்ச்சி கொடுத்து அவன் கண்களை திறக்கிறான். அந்த வரலாற்று புத்தகத்தை தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிளுகிளுப்பையை மெதுவாக எடுத்துவைப்பது போல் கதை சொல்லியின் புத்தகங்களினால் ஆன உலகத்திலிருந்து அவனை மீட்டு உணர்வுகள் நிரம்பிய இந்த மனிதர்களின் உலகத்திற்கு அழைத்து வருகிறான் சாரங்கன்.

மாப்பஸானின் - The Necklace

Maupassant's The Necklace

http://americanliterature.com/author/guy-de-maupassant/short-story/the-necklace
இந்த கதையை படித்தவுடன் தோன்றிய பழமொழி - மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது தான். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கிறோம். அதனை அடைவதற்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து கொள்கிறோம். ஆனால் நாம் கனவுகானும் அந்த விஷயம் உண்மையிலேயே மதிப்புள்ளதா இல்லையா என்று நமக்கு எப்படி தெரியும். அதன் மதிப்பை உண்மையிலேயே பரிசீலித்து தான் அதனை அடைய முயல்கிறோமா. இல்லை ஏதோ ஒரு வகை மயக்கத்தில் அதன் மீது விருப்பத்தை வளர்த்து கொண்டு அதனால் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துகொள்கிறோமா? இது போன்ற கேள்விகளை இந்த சிறுகதை எழுப்புகிறது.

இந்த கதை  ஒரு டிவிஸ்டுடன் முடிகிறது.

-----

நான் மத்தில்டேவை மானிடர்களுக்கான ஒரு குறியீடாக தான் பார்த்தேன்.

1. அவள் ஆசைப்படும் விஷயத்தின் மதிப்பு என்ன என்று தெரியாமலேயே அந்த விஷயத்துக்காக தன் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறாள். எந்த விஷயங்கள் அவளிடம் நிறைவாக இருக்கிறதோ அதை அந்த ஆசையினால் கெடுத்து கொள்கிறாள். இது எல்லா மானுடருக்குமே பொருந்தும். நாம் எண்ணி ஏங்கும் விஷயங்களை அடைய நினைப்பவைகளை மறுபரிசீலனை செய்துபார்க்கவேண்டும்.

2.அவள் தன்னிடம் நிறைவாக இருக்கும் விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதில்லை. அந்த நிறைவான விஷயத்திலிருந்து மேலும் மேலும் எதிர்பார்ப்புகளை வளர்த்துகொள்கிறாள். அழகாக இருக்கிறோமே என்று நிறைவடையவில்லை அந்த அழகுக்கு ஏற்ற அந்தஸ்தில் இல்லையே என்று நினைக்கிறாள். புது கவுன் கிடைத்ததே என்று நினைக்கவில்லை அதற்கு மேலும் நகைகளை எதிர்பார்க்கிறாள். இப்படியே போனால் என்று தான் நிறைவடைவது? இப்படி தானே மனிதர்கள் ஓடி கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் நாம் இருக்கும் நிலையை நினைத்து மகிழ்வடையும் பக்குவம் அனைவருக்கும் இருப்பதில்லை.

Wednesday, November 18, 2015

சித்த மருத்துவம் சில நூல்களும் அறுவை சிகிச்சையும்

அங்காதிபாதம் என்று நூல் பரராசசேகரம் என்ற சித்த மருத்துவ நூல் தொகுப்பின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது. அங்காதிபாதம் என்றால் Anatomy. ஆனால் இந்த அங்காதிபாதம் நூலில் பாக்களில் உடற்பாகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இது மேலை நாட்டில் சென்ற நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மிக விரிவான உடற்கூறு புத்தகங்களுடன் ஒப்பிட முடியாது. 

ரராசசேகரம் என்பது 14 - 16ம் நூற்றாண்டு காலத்தில் இலங்கை பரராசசேகரம் மன்னனால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

பரராசசேகரம் என்ற நூல் இணையத்தில் என் தேடலுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ’ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்' என்ற நூல் பரராசசேகரம் உட்பட பல நூல்களை அறிமுகப்படுகிறது.

இந்த அறிமுக நூலில் பக்கம் 38ல் அங்காதிபாதம் பற்றி விளக்கப்படுகிறது. பக்கம் 62ல் சாமூவேல் கிறீன் அவர்களின் அங்காதிபாதம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.


அறுவைசிகச்சை குறித்து:
 
இது சித்த மருத்துவத்தில் அரக்க வைத்தியம் என்று கூறப்படுகிறது. இதில் பல முறைகள் பிரயோகிக்கப்படுகிறது. அறுவை, கீரல், சுடல், அட்டைவிடல் போன்றவை.


பரராசசேகரத்தின் ஐந்தாம் பாகம் மட்டும் இணையத்தில் கிடைக்கிறது. முற்றிலும் செய்யுள் வடிவில் இருக்கிறது. அதில் சந்திர விதி என்ற பகுதியில் 26 வகை கருவிகள் குறிப்பிடப்படுகிறது.

மண்டலாக்கிரம், விருத்தி, உற்பலம், சூசி, குடோரி, முத்தரி, கத்தரி, குறும்பிவாங்கி, கபத்திரம், பணபத்திரம், கரபந்திரம்,விண்டகண்ணி, சாரி போன்ற கருவிகள் இதில் அடங்கும்.


ஆனால் சுஷ்ருத சம்ஹிதையின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அறுவை சிகிச்சை முறைகளை பற்றி விரிவாகவே விளக்கப்படுகிறது.

https://archive.org/details/englishtranslati01susruoft 

Monday, November 16, 2015

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

http://www.jeyamohan.in/22604#.VkEVKytqmFc

முன்னே செல்லும் மாட்டின் தலையில் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது. அதன் வழி பின்னே மாட்டு மந்தை செல்கிறது. முன்னே செல்லும் மாட்டின் ஒரு சிறு இடறல் தயங்கள் கூட இந்த மந்தை எனும் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அதன் முன்னே புல்லும் பின்னே சவுக்கும் அதை நிறுத்தாமல் வழி நடத்துகிறது. கதை சொல்லும் இந்த புரட்சியாளன் அல்லது தீவிரவாதி பார்த்த அந்த முன் செல்லும் மாடு என்ன? இவன் பின் தொடர்ந்து செல்லும் சேகுவாராவோ பிரபாகரனோ போன்ற ஒரு தலைவன் தானே அது. முன்னே லட்சியவாதமும்(அல்லது சுய லாபமும்) பின்னே இக வாழ்க்கை நெருக்கடிகளும்(அல்லது ஆயுதங்களும்) செலுத்தும் ஒரு சுடரெந்திய தலைவன் தானே.

மாட்டை போல் தொடர்ந்து சென்று இந்த புரட்சியாளர்கள் தங்கள் உயிரை பலியாக்குகிறார்கள். அரசாங்கத்தின் காலடி நெஞ்சில் ஏறி ஏறி மிதிக்க நசுங்கி சாகிறார்கள். அப்படி பட்ட பயணத்தில் தானே இந்த கதை சொல்லியும் இருக்கிறான். சென்று சென்று முடியாத பயணம். யார் இந்த மந்தையை நடத்தி செல்வது. முன்னே புல்லும் பின்னே சவுக்கும் கொண்டு வழிநடத்தும் இந்த மனிதர்கள் யார்? இந்த உலகின் இயக்கத்திற்கு காரணமாய் விளங்கும் நாமறியா ’அது’ தான் இவர்களா? ஒவ்வொரு நாளும் மனிதர்களை அந்த அறுப்புகூடத்திற்கு அழைத்து செல்வது அதன் சிறு விளையாட்டா? இந்த உக்கிரமான பலிகளில் இன்பம் நுகர்வது அதன் குணமா?

வழியில் விழும் மாடுகளின் தோலையும் கரியையும் வாங்க பின்னே வரும் கூட்டம் யார். இந்த வன்முறை பயணத்தில் லாபம் காண வரும் குள்ளநரிகளா? செல்லும் வழியில் புன்னகைத்து இறந்து விழுந்தவன் தான் கோபாலா? கதை சொல்லி அறுப்பு கூடத்துக்கு சென்று சேருவானா? பயணத்தின் இலக்கு சாவு! என்ன கொடுமை? செல்ல செல்ல தீராத பயணம். சென்று சென்று உடலணுக்களில் ஊறிப்போன பயணம். தினம் தினம் ஒருமாடு விளக்கு ஏந்தி முன் செல்கிறது. மாட்டின் தலையில் விளக்கின் பகுதியாய் இருக்கும் அந்த டயர் தான் கால சக்கரமா?

அறுவை கூடத்தில் நடக்கும் அந்த பலியை நினைத்துபாருங்கள். போர் வெறியல்ல அங்கு இருப்பது. அமைதியான கொலைகள். ஒரு நிமிடத்திற்கு எத்தனை விழும்? சிறு ஈசல் பூச்சிகள் தானே நாம் அந்த பெரும் சுடரின் முன் என்ன செய்ய முடியும்?

----

இது ஒரு விதமான வாசிப்பு. வேறுவகையிலும் அர்த்தபடுத்தி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்த கதையை பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன். விவாதம் தொடங்கினால் மேலும் பல கேள்விகள் உள்ளன கேட்பதற்கு,

Sunday, November 15, 2015

புலிக்கலைஞன் சிறுகதை வாசிப்பனுபவம்

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

 

புலிக்கலைஞன் கதையை இரு முறை படித்தேன். இந்த சிறுகதை கலைக்காக வாழ்க்கையை அற்பனித்த ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு காட்டுகிறது. அந்த கலைஞனின் உச்சமான கலை வெளிப்பாட்டை சித்தரித்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட கலைஞனை இந்த காலத்தில் இந்த சமுதாயம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று உணர்த்துகிறது.

இதுவே இந்த கதையின் கரு. ஆனால் இந்த கதை பல செறிவான விஷயங்களை நுட்பமாக உள்ளடக்கி இருக்கிறது. இந்த கதை மூன்று விதமான மனிதர்களை சித்தரித்து காட்டுகிறது. கதையின் தொடக்கமே சோற்றில் தான் ஆரம்பிக்கிறது. சோற்று நேரம் அன்றாட அலுவல். அதன் வேலை பளு, அதன் வெட்டி நேரங்கள் என்று விவரித்து செல்கிறான் கதை சொல்லி. சோற்றையும் அன்றாட வாழ்க்கையையும் பற்றியே கவலைபடும் ஒரு வித மனிதர்கள்.

அடுத்தவகை மனிதர் சர்மா போன்றவர்கள். உண்மையில் இவரும் ஒரு வகை கலைஞர் தான். கதைகள் எழுதுகிறவர். காக்கி ட்ரௌசரிலிருந்து வேட்டிக்கு உருமாறியவர். தன்னுடைய இயல்புக்கு காக்கி சட்டை உரியதல்ல என்றுணர்ந்து இந்த ஸ்டுடியோவின் கதை இலக்காவில் வந்தமர்ந்தவர். இந்த ஸ்டுடியோவின் தேவையின் போது தனது கலை மனதை தூண்டி விட்டு தேவையில்லாத நேரம் அனைத்துவிட்டு குடை ரிப்பேர் போன்ற லௌகீக விஷயங்களில் ஈடுபடுபவர். இதை போன்ற மத்திம மனிதர்களுக்கு வாழ்க்கையின் பாதுகாப்பு முதல் அதன் பின்னே தான் கலை.

இந்த இருவகை மனிதர்கள் முன் வந்து நிற்கிறான் புலிக்கலைஞன். ஆம் அவன் புலிக்கலைஞன் தான் - உள்ளுக்குள்ளும். அவன் வந்து நிற்பது முதலே அவனை பற்றி நுட்பமாக சித்தரிக்க ஆரம்பித்துவிடுகிறார் எழுத்தாளர். முதலில் அவன் “க்ரவுடில்” ஒருவனாக இருக்க விரும்பவில்லை. அவனுக்கென்று ஒரு திறன் இருக்கிறது  அதனை வெளிக்காட்டவே காதர் விரும்புகிறான். பின் அவன் மற்ற புலிஆட்டகாரர்கள் போல அல்ல என்று கூறிக்கொள்கிறான். புலியை அப்படியே அசலாக கொண்டு வந்து காட்ட கூடிய கலைஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்கிறான்.

“ஐயாவெல்லாம் எங்க புலியாட்டம் பார்த்துருப்பீங்க” என்று சொல்லி அசல் புலி போல் நடித்து அவர்களை மிரள செய்கிறான். தன் கலைத்திறனை அவர்களுக்கு உணர்த்துகிறான். மற்ற புலிஆட்டகாரர்களிலிருந்து அவன் எப்படி வித்தியாசப்படுகிறான் என்று உணர்த்துமிடம் மூலம் நாம் உன்மையான கலை என்பது என்ன என்று புரிந்து கொள்ளலாம். சாதாரன வாழ்க்கையின் காணக்கிடைக்காத வாழ்க்கையின் பிரபஞ்சத்தின் ரசமான விஷயங்களை எடுத்து அடுத்தவர்கள் முன் வைப்பவனே கலைஞன் அல்லவா? இந்த புலிக்கலைஞன் பயம் என்ற ஒரு அடிப்படையான உணர்வை அவர்களில் தூண்டி தன் கலையை உணர்த்துகிறான்.

ஆனால் இன்னும் இந்த புலிகலைஞன் முழுமையடையவில்லை. இதுவரையிலும் நமக்கு தெரிந்தது ஒரு கலைஞன் தான். அவன் எப்படி புலிகலைஞனாகிறான் என்று நுட்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. காதர் ஒன்றும் முட்டாள் அல்ல. அந்த அறையில் அவர்களிடம் 5 நிமிடம் பேசும் போதே அவர்களில் யார் முக்கியம் என்று நன்கு உணர்ந்து கொள்கிறான். தொடர்ந்து அவர்களை தன் எண்ணத்திற்கு இணங்க வைப்பதில் வெற்றியடைகிறான்.

மேலும் யாருக்குமே இருக்கமுடியாத ஒரு அசாதாரனமான லாவகமும் கச்சிதமும் அவன் புலியாட்டத்தில் இருக்கிறது. இப்படி சாமர்த்தியமும் திறனும் கொண்ட ஒருவனுக்கு இந்த லௌகீக உலகில் வாழத்தெரியாதா? அது அவனுக்கு வாழைபழத்தை போல் எளிமையாக சாப்பிடும் விஷயமாக அல்லவா இருக்கும்? ஆனால் அவன் வறுமையில் வாடுகிறான். அது ஏன்? அவன் நினைத்தால் அவன் ஒரு ஸ்டன்ட் நடிகனாக எளிதாக ஆக முடியாதா? ஆம் முடியும். அவனுக்கு நீச்சல் கூட நன்கு தெரிந்திருக்கலாம்.

அவன் அந்த நீச்சல் காட்சியை மறைமுகமாக தட்டிகழிக்கிறான் என்று நினைக்கிறேன். அவன் செய்ய விரும்புவது கூட்டத்தில் ஒருவனாக நடிப்பது அல்ல. தெருவில் ரம்சானுக்கும் மொஹரத்துக்கும் புலிவேஷமிட்டு மக்களிடம் கைத்தட்டு வாங்குவதல்ல. அவன் புலிக்கலைஞனாகவே எப்போதும் இருக்கவிரும்புகிறான். அந்த புலியாட்டத்தை தவிர அவனுக்கு வேறு எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவன் செய்திருக்கமாட்டான். அதனாலேயே அவன் திரும்ப திரும்ப ரோல் ரோல் என்று கேட்டு கொண்டு இருக்கிறான்.

இந்த கதையில் அவன் புலியாக மாறும் தருணம் தான் பலருக்கும் உச்சமாக தெரியும். அது சரிதான். ஆனால் நான் அவன் முகமூடி அனிவதை அவன் வேஷமாக நினைக்கவில்லை. அவன் அந்த புலி முகமூடியை கழற்றும் போது தான் முகமூடியை போட்டுகொள்கிறான். ஆம். அவன் புலிதான். அவன் அகத்தில் எப்போதும் அந்த புலிதான் உலாவி கொண்டிருக்கிறது. இந்த உலகத்திற்கும் சமூதாயத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் ஒரு முகமூடி அணிந்து கொள்கிறான் அதுவே காதர். காலில் விழுபவன் அந்த காதரே புலி அல்ல. அவனுக்கு அந்த புலிதான் முக்கியம் காதர் அல்ல.

இவன் அகத்தில் எப்படி அந்த புலி எப்போதும் விழிப்புடனிருக்கிறது என்று மிக நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு கால் குட்டையான நாற்காலியை ஏன் விவரிக்கிறார் எழுத்தாளர்? வந்தமர்பவர்கள் வயிறை ஒரு நொடி கலக்க வைக்கும் அந்த நாற்காலியை அவன் முதுகை பிடித்து கொண்டு நிற்கிறான். இது போதாதா அவனில் அந்த புலி எப்போதும் விழித்திருக்கிறது என்று சொல்வதற்கு. ஆம் அவனுக்கு ஒரு பார்வை போதும் அவன் இருக்கும் இடத்தை அவன் அறிந்து கொள்ள. முகமூடி அணிந்து அறையை அங்குமிங்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேசையிலிருக்கும் ஒரு பொருள் மீது கூட கால்படாமல் அவனால் பாய்ந்தும் குதித்தும் பற்றியும் புலியாட்டம் செய்ய முடியும்.

இங்கு புலி என்பது ஒரு குறியீடு. கலைஞனுக்குளிருக்கும் கலைக்கண் என்றும் மூடுவதில்லை. அதன் வழியாகவே அவன் உலகை பார்க்கிறான். சாமனியர்களுக்கு தெரியாத பல உண்மை கலைஞனுக்கு தெரிகிறது. அதிலிருந்தே தரிசனங்கள் பிறக்கிறது. இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. கீழே நான் கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஜெ புலிக்கலைஞன் என்ற தலைப்பில் இருக்கும் கலைஞனை அடிக்கோடிட்டு காண்பித்திருப்பார். நான் அதோடு அந்த புலியையும் அடிகோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன்.

புலி என்பது நமது பண்பாட்டில் அதன் தனித்தன்மைக்காகவே அறியப்படுகிறது. புலி பசித்தாலும் புல்லை திங்காது என்பார்கள். ஆடுகளுடன் சேர்ந்து ஆடு போல் கத்தி கொண்டிருக்கும் புலியை ஒரு பெரும் புலி வந்து மீட்டு கர்ஜிக்க வைத்த கதையை நாம் படித்திருப்போம். இந்த கதையில் வரும் கலைஞன் புலி வேடமிடுவதால் மட்டும் அவன் புலிக்கலைஞனல்ல. அவன் அந்த கலையை தவிர வேறு எதையும் எதற்காகவும் எந்த காலத்திலும் செய்ய தயாராக இல்லாதவன் என்பதாலேயே அவன் புலிக்கலைஞன். புலி பசித்தாலும் புல்லை திங்காது. அவன் செத்தாலும் அந்த கலையை தவிர வேறு ஒன்றை செய்யமாட்டான்.

அவன் வந்து ஆடும் அந்த அறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பல மாதங்களாக வேலையில்லாமல் ஊளை சதையை சுமந்து கொண்டு வெட்டியாய் அமர்ந்திருக்கும் மனிதர்கள். பல்லை நோன்டி கொண்டும், வடையை தின்று கொண்டும் அரட்டையும் வாயுவும் உலாவும் அந்த அறையில் ஒரு தீ தழல் போல ஆடிவிட்டு போகிறான் அந்த கலைஞன். இருண்ட அறை ஜோதி மயம் அணிந்தெழுவது போல் அந்த அறையில் கலை ஒளியை பரவவிடுகிறான்.

சர்மாவுக்கும் இவனுக்குமான வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள்.ஒன்றரை வருடம் எந்த வேலையும் இல்லை என்றாலும் தன் படைப்பை தேவை எனும் போது வெகுஜன மக்களுக்காக தூண்டி விட்டுகொண்டு ஏதோ செய்ய கூடியவர் சர்மா. ஆனால் இவனோ தனது கலையை  வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடித்து கொண்டிருக்கும் கலைஞன். ஆஹாம் வேணாம் வேணாம் என்று சொல்ல சொல்ல முகமூடியை எடுத்து அணிந்து கொள்கிறான் இவன். எப்போதும் தனது முகமூடியை அணிந்து கொண்டு தன் உண்மையான இருப்பை வெளிக்காட்ட துடிக்கிறான் இந்த புலிக்கலைஞன்.

இவனுக்கு என்ன பசியானாலும் குடும்பத்தை இழந்தாலும் இவன் இப்படி தான் இருப்பான். இவனது இயல்பு இது. பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் பசி விதைக்கப்பட்டு பிறப்பிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதுவே பிரதானம். ஆனால் லட்சத்தில் ஒருவன் கலை விதைக்கப்பட்டு பிறப்பிக்கபடுகிறான். முன்னவர்களுக்கு உணவு என்பது செடிகள் எப்போதும் நினைத்து கைகூப்பி காத்திருக்கும் சூரியன் போன்றது. ஆனால் நமது புலிக்கலைஞர்கள் போன்றவருக்கோ அது கொடிகள் பற்றி ஏறும் ஒரு கிளை மட்டுமே. அவர்கள் தங்கள் கலையை நிதமும் வெளிப்படுத்துவதையே தர்மமாக கொண்டவர்கள்.

சாப்பிட காசு கொடுத்தாலும் ஏதாவது ரோல் கொடுங்க ரோல் கொடுங்க என்று இரைகிறான். அதுவே சர்மாவை நுட்பமாக சீண்டுகிறது. வர்ர லஷ்மிய வேண்டான்னு சொன்னா எப்டி காசு வரும் என்று கேட்கிறார். அவனுக்கு லஷ்மி இரண்டாம் பட்சம் தான். அவனுள் சரஸ்வதி என்றும் உறைந்திருக்கிறாள். இதை போல எத்தனையோ புலிக்கலைஞர்கள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் போலும். நான்கு தபால் அனுப்பினால் மூன்று இல்லை என்று திரும்பி வருவது இதை போன்ற புலிக்கலைஞர்களால் தானா? குடும்பத்தை இழந்து சுயமரியாதை இழந்து பசியிலும் தன் இயல்பை விட்டுகொடுக்க இயலாத உயர்ந்த கலைஞர்கள் எங்கோ தங்களுக்கான பார்வையாளர்களை தேடி சுற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்த கலையை தவிர வேறு எதுவும் பிணைத்து வைப்பதில்லை போலும்.

நிலப்பிரபுத்துவ காலத்தில் இந்த கலைஞர்களுக்கென்று ஒரு களமிருந்திருக்கும். அவர்கள் சுயமரியாதை இழந்திருந்தாலும் அவர்களின் கலையை வெளிக்காட்ட அதிலேயே திளைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நுகர்வையே பிரதானப்படுத்தும் இந்த நவீன யுகத்தில் கலைக்கென்று ஒரு தரப்பு அறிதாகவே இருக்கிறது. அதுவும் சோறு சோறு என்று ஓடி கொண்டிருக்கும் நம்மை போன்ற ஏழை நாடுகளில் அதற்கான தரப்பே இல்லை போலும். வெகுஜன விஷயங்களே இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது
. மக்கள் அதிகமாக விரும்பி பார்த்த அந்த காவடி காட்சியே புலியாட்டத்தின் இடத்தை பிடித்து கொள்கிறது. இந்த புலிகள் எல்லாம் இறையின்றி மடிகின்றது. புலியில்லா காடு எத்தனை வெறுமையானது?

http://www.jeyamohan.in/37090#.VklciL9qnMs

http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D – இந்த பதிவுக்காக இந்த இணைப்பை கொடுக்கவில்லை. இதன் கீழே இருக்கும் ஜெ அவர்களின் கமென்டை படித்துபார்க்கவும்

Wednesday, November 11, 2015

வாசகனின் இலக்கு

வாசிப்பு என்பது அகவயமானது. ஓரளவுக்கு மேல் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. கற்பனையை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்கயில் ஒவ்வொரு வாசகனின் கற்பனை சக்திக்கு ஏற்பவும் அவனது இயல்புக்கு ஏற்பவும் படைப்பிலிருந்து தனக்கான அனுபவங்களை பெற்றுகொள்கிறான். அதிலிருந்து கருத்துக்களை உருவாக்கி கொள்கிறான்.
வெறும் கதை ஓட்டத்தை மட்டும் படித்து செல்லாமல் அந்த கதை தருணங்களை பற்றி தன்னுள் கேள்விகளையும் கற்பனைகளையும் எழுப்பி கொண்டு தனக்கென ஒரு பார்வையை கதை முழுதும் தொகுத்து கொண்டு வருபவன் நல்ல இலக்கிய வாசகன் என்று கருதுகிறேன்.

இது நல்ல வாசகனின் முதல் நிலை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு படைப்பில் இருந்து எடுக்கப்படும் கருத்தை தன் வாழ்வு மட்டும் பிரபஞ்சம் என்ற Phenomenon மீது தனக்கான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள கூடியதாக இருப்பின் அது தரிசனமாக அமைகிறது. இப்படி ஒரு கருத்தை படைப்பிலிருந்து எடுப்பவன் மேலே சொன்ன வாசகனை விட ஒரு படி மேல்.
அதே சமயம் ஒரு நல்ல இலக்கியம் என்பது(நாவல் போன்றவை) இந்த ஒட்டு மொத்த தரிசனத்தை தருபவையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படைப்புகள் உலகியல் தளத்திலும் எளிய உணர்வு தளத்திலும் பேசும் படைப்புகளை விட உயர்ந்தது.

எழுத்தாளர் எழுதியதையே தான் வாசகனும் சென்று அடையவேண்டும் என்று இல்லை. வாசகன் தனக்குண்டான அனுபவத்தை எடுத்துகொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் எந்த அளவுக்கு ஆழமான ஒரு கதை கருவை அடிப்படையாக கொண்டு எழுதியிருக்கிறாரோ அந்த ஆழம் வரை வாசகன் செல்லக்கூடியவனாக இருக்கவேண்டும். அதை விட ஆழமாக சென்று கூட அதை விளக்கி கொள்ளலாம். அவன் சிறந்த வாசகன்.

அதே சமயம் இன்னொரு விஷயமிருக்கிறது. ஒரு படைப்பு என்பது அந்த படைப்பாளி உருவாக்குவதால் அவர் எழுத நினைத்த சாரம்சத்தை நோக்கி நம்மை அழைத்து சொல்கிறார். இலக்கிய வாசிப்பை ஒரு பயணமாக உருவகித்து பார்க்கலாம். வாசகர்கள் அனைவரும் ஒரு இடத்துக்கு பயணம் செல்கிறார்கள். பயணத்தின் இலக்கு என்பது அந்த படைப்பின் சாராம்சம். போகும் பாதை என்பது அந்த படைப்பு. நம்மை அந்த இலக்கை நோக்கி வண்டி ஓட்டி செல்வது எழுத்தாளர்.

இந்த பயணத்தில் அனைவருக்கும் ஒரே புறவெளிதான் இருக்கிறது. எங்கு, எந்த வழியே செல்கிறோம் என்பதை எழுத்தாளரே முடிவெடுக்கிறார். அங்கு கொண்டும் சேர்க்கிறார். ஆனால் இந்த பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமிருந்திருக்கலாம். அவரவரின் அக ஓட்டம், கற்பனை, நுண்ணுணர்வு பொருத்தது அது. இருந்தும் சென்ற பயணம் ஒன்றே. அதனால் கிட்டத்தட்ட எழுத்தாளர் உட்பட அனைத்து நல்ல வாசகர்களும் – பயணத்தில் தூங்காமல் வந்தவர்கள்! – ஒரு பொதுவான அனுபவத்தையும் அடைந்திருப்பார்கள்.

அதனால் இந்த விஷயத்திற்கு Binary இல் பதில் சொல்ல முடியாது. இரண்டுமே முக்கியம்.

Silicon shelf என்ற தளத்தில் நடந்த விவாதத்தில் நான் எழுதியது.

Tuesday, October 27, 2015

இந்திய மெய்ஞானமும் தர்க்கமும்

இந்து ஞான மரபை அனுகும் போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அது மேலை தத்துவ மரபுக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம். மேலை தத்துவ மரபுகள் தர்கத்தை தன் அடிப்படையாக கொண்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்து ஞான மரபில் அப்படியல்ல.. சில வரிகளை மேற்கொள் காட்டுகிறேன்.

இந்த வரிகளை ஸிம்மர் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்.

Philosophy as the handmaid of empirical research, thought wearing the blinders of the standards of contemporary science, and metaphysics open to rational criticism from every quarter - in short, reason infallible; this is the ideal and requirement of the practical-minded thinker. Whereas the other is simply not convinced by all the plausible searching and discovering...what he wants is a response...to the primary question in his mind.

Something beyond critical reasoning is what he requires; something that someone of adequate mind should have realized intuitively as a Truth(with a capital T) about man's existence and the nature of the cosmos; something to enter the breast and pierce the heart with what Baudelaire called "the steely barb of the infinite". What he requires is a philosophy that will confront and resolve the conflict once performed by religion; and this is a need from which no number of college courses on the validity of inference can emancipate him.
- Page 16, Philosophies of India, Heinrich Zimmer (ஓழுங்குக்காக வரிகளின் வரிசை சற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது)

தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்ட ஞானம். ஒரு குறிப்பிட்ட ஞானிக்கு கிடைத்த ஒரு உள்ளுணர்வு(Intuition) - தரிசனம். அதுவே ஒரு ஒட்டு மொத்தமான பிரபஞ்ச தரிசனமாயும் அடிப்படையாயும் அமையமுடியும். தர்க்கத்தால் நிராகரிக்க முடியாத ஒரு தத்துவத்தை தேடும் ஒருவனுக்கல்ல, நெஞ்சை கிழித்து உள்ளிறங்கும் தரிசனத்தை தேடும் ஒருவனுக்கே இந்திய ஞானத்தில் விடை கிடைக்கும்.

//இந்து தத்துவ மரபு எனும்போது இந்து மரபில் உள்ள பல்வேறு சிந்தனைப்போக்குகளை மட்டுமே கூறமுடியும். ஆனால் தரிசனம் என்பது சிந்தனையினால் உருவாக்கப்பட்டது அல்ல. தர்க்கபூர்வமாக முழுமையாக விளக்கிவிடக் கூடியதும் அல்ல. தர்க்கமானது ஓர் எல்லை வரை மட்டுமே போகமுடியும். தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அதிகம்.

உதாரணமாக ‘பிரபஞ்சமே ஒரு சக்தி பிரவாகம்’ என்ற ஆதி தரிசனம், தர்க்கபூர்வமாக ஒருவர் அடையப் பெற்ற ஒன்றாக இருக்க இயலுமா என்ன? தன்னைச் சுற்றி உள்ள ஒவ்வொரு பொருளையும்  எடுத்து பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது? இல்லை. அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொத்தமான அகப்பார்வை மட்டுமே.//
பக்கம் 45, "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்", ஜெயமோகன்
----
இந்திய மெய்ஞானம் என்பது அறிவை தொகுத்து வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமல்ல.  அது ஒரு மனிதனின் அக மற்றும் தரிசன மாற்றத்தையே  பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது.

"They(Hindu Philosophers) study also the visible traits of phenomenal existence, criticizing the data of external experience and drawing deductions with respect to the supporting principles. India, that is to say, has had, and still has its own disciplines of psychology, ethics, physics, and metaphysical theory. But the primary concern-in striking contrast to the interests of the modern philosophers of the West-has always been, not information, but transformation: a radicalchanging of man's nature and, therewith, a renovation of his understanding both of the outer world and of his own existence; a transformation as complete as possible, such as will amount when successful to a total conversion or rebirth"
- Page 4, Philosophies of India, Heinrich Zimmer

//தரிசனங்கள் என்பவை தத்துவ நிலைபாடுகளும் கூடத்தான். ஆகவே மெய்ஞான மரபு என்பதும் தத்துவ மரபு கூடத்தான். ஆனால் தத்துவத்திற்கு அப்பால் கற்பனையும் உள்ளுணர்வும் செல்லும் தூரம் வரை தரிசனங்கள் நீண்டு செல்கின்றன. மெய்ஞான மரபும் அப்படி நீண்டு செல்கிறது.

ஒரே வரியில் இப்படி கூறலாம். அறிவு என்பதற்கு ஞானம் என்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான்அது.//
பக்கம் 46 "இந்து ஞானமரபில்..."
----
தர்ககத்தையும் மீறி ஒரு அறிதல் நிகழ்கிறது என்றால் அது தர்ககத்தால் விளக்கபட முடியாது. அதே தரிசனத்தை நானும் அடைய வேண்டும். இதற்கான மொழி வேறு. இலக்கியத்தை இதற்கான மொழி என்று சொல்லலாமென நினைக்கிறேன். அதனால் தான் நம் மரபில் ஏராளமான கதைகளும் புராணங்களும் இருக்கிறது.

இங்கு தான் குரு நமக்கு கை கொடுப்பார்.குருவிடம் செல்லும் ஒரு மாணவனுக்கான முதல் விதி அவன் அது வரை அறிந்ததை எல்லாம் எடுத்து ஓரத்தில் வைத்து விட்டு குருவிடம் சரணடைவது. அதில் தர்ககமும் அடங்கும்.

இந்திய தரிசனங்களை தத்துவம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தத்துவத்தை விட ஆழமானவை அவை. அதனால் தான் மெய்ஞானம் என்ற வார்த்தை உபயோகிக்கபடுகிறது. அது மெய்யியலில் இருந்து மாறுப்பட்டது என்று நினைக்கிறேன். தத்துவம் என்பது முழுக்க முழுக்க தர்க்கத்தை அடிப்படையாக கொண்டது. தத்துவத்தை தர்க்கமே வழிநடத்தி செல்கிறது. தர்க்கம் என்ற தண்டவாளத்தின் மேல் தத்துவம் ரயில் போல செல்கிறது.

கற்பனையாலோ உள்ளுணர்வாலோ கண்டுபிடித்த விஷயத்தை தர்க்கம் மூலம் விளக்கமுடிகிறது. தர்க்கத்தின் மூலம் விளக்கி அது நீருபனம் செய்யப்பட்ட தத்துவமாக ஆகிவிடுகிறது. இன்னொரு தர்க்க கட்டுமானத்தை கொண்டு நீருபிக்கப்பட்ட தத்துவம் விமர்சிக்கப்படுகிறது. ஒரு தத்துவத்தில் விமர்சித்து நிராகரிக்கப்பட்ட கருத்துகளை களைந்து ஏற்புடைய கருத்துகளை கொண்டு வேறு ஒரு தத்துவம் வளரக்கூடும்.

நமது இந்திய மெய்ஞானத்தில் தரிசனத்துக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டு அதன் பின் அந்த தரிசனத்துக்கு தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டு தத்துவமாக்கப்படுகிறது.
----

இந்திய ஞானத்தை மரபை பின்பற்றும் ஒருவர் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய பாடமிது.

Monday, October 19, 2015

காந்தியும் இந்திய ஆன்மீகமும்

நவகாந்தியத்தை பற்றி மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரையை படித்தேன். அதன் தமிழ் மொழியாக்கம் இங்கு

காந்தியை இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியாக வைத்து விளக்குமிடம் பிடித்திருந்தது. காந்தி அந்த மரபின் அடிப்படைகளுக்கு எப்படி தன் வழியில் விளக்கம் கொடுத்தார் அதிலிருந்து எப்படி ஒரு வாழ்வியல் வழிமுறையை வரையறுத்தார் என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். நவ இந்தியர்கள் காந்தியை பின்பற்றுபவர்களாக, காந்தியவாதிகளாக இருக்க முயற்சிக்காமல் காந்தியை-போல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியை-போல் எப்படி இருப்பது? காந்தி எங்கிருந்து தனது வழிமுறையை எடுத்து கொண்டார்? இந்திய மெய்ஞான மரபிலிருந்து. அதற்கே திரும்ப செல்வோம். அந்த மெய்ஞானத்தின் அடிப்படைகளை கொண்டு நமது காலகட்டத்திற்கும் நமது உண்மை தேடலுக்கும் ஏற்றார் போல் ஒரு வாழ்க்கை முறையை வரையறுப்போம். மேலும் முக்கியமாக அந்த வாழ்க்கை முறையை நமது வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும், அனைத்து சமயங்களிலும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

காந்தியை-போல் நாம் வாழ வேண்டுமென்றால் இரு முக்கியமான விஷயங்களை நாம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
1. அகங்காரம்
2. புலன் இன்பம்

அகங்காரத்தை சிறிதாக்கி நமக்குள் இருக்கும்  ஆன்மாவிற்கு - spirit முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புலன் இண்பமே வாழ்க்கை என்றில்லாமல் ஆன்ம இண்பத்தை மையபடுத்தவேண்டும். இந்த இரண்டையுமே நான் காந்தி தனது சிந்தனையின் செயல்பாட்டின் முக்கியமான அடிப்படையாக கொண்டார் என்று கருதுகிறேன். தாக்குபிடிக்கும் பொருளாதாரம், சுழலியல் என்று பல்வேறு தளங்களில் அவரின் சிந்தனை-செயல்முறைகளை போட்டு பார்த்தாலும் அனைத்துக்கும் வேர் இந்த ஆதார புள்ளிகளிலிருக்கிறது.   தனது ஆன்மாவின் குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.. தன் புலனடக்கம், உணவு பழக்கவழக்கங்கள் வழியாக அந்த ஆன்மாவை சுத்திகரிக்கிறார்.

அகங்கார மற்றும் புலன் இன்ப கட்டுபாடு என்ற இரு மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்த தொடங்கினால், சுயநலம்  என்பதற்கான அவசியம் குறைந்து போகிறது. சமூகத்தின் மீது அக்கரையும். உலகத்தின் மீது பொருப்புணர்வு தோன்றும். அங்கு ஆரம்பிக்கிறது நாம் செய்ய வேண்டிய சேவை. சுயநலமில்லாத, அறத்தின் அடிப்படையில், அஹிம்சையை வழிமுறையாக கொண்டு இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.

இங்கு தான் காந்தி மற்ற இந்திய மெய்ஞானிகளிடமிருந்து வெறுபடுகிறார். ஆன்ம தேடலால் முற்றிலும் தங்களுக்குள் ஆழ்ந்துவிடும் மற்ற ஆன்மீகவாதிகள் போலில்லாமல் ஆன்மாவையும் சமூகத்தையும் இணைத்து பார்க்கும் பார்வை கொண்டவர் காந்தி.

அகங்காரம், புலன் இன்பத்தை கட்டுபடுத்துதல் போன்ற விழுமியங்கள் எல்லாம் காந்தி மட்டும் முன்வைத்தது அல்ல. நம் பண்பாடே இதை வலியுறுத்துகிறது. அதனால் தான் புலன் இன்பத்தை சிற்றின்பம் என்கிறோம். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவது போல் புருஷார்த்தம் என்பதை நம் மரபு வகுத்தளிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை வாழ்க்கையின் பகுதிகளாக வரையறை செய்கிறது.

இதில் சில மகான்கள் நேரடியாக வீடுபேறு எனும் கடைசி நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் மற்ற மூன்றையும் அனுபவித்து விட்டு கடைசியில் அங்கு வந்து சேருவார்கள். வராமல் செல்பவர்களும் உண்டு. காந்தி அந்த கடைசி நிலையில் இருந்து நம்மிடம் உரையாடுகிறார். அந்த நிலைக்கு நாம் செல்லவேண்டும். இல்லை என்றால் பிற மூன்று தளத்திலிருந்து அங்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இன்பம் என்பதை விலக்கி வைப்பதாக நம் மரபு இருக்கவில்லை. அதை வாழ்வின் ஒரு பகுதியாக சொல்லி காம சுத்திரம் எழுதி வைத்தது தான் நம் மரபு. அதன்படி இன்பத்தை முற்றும் துறந்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் கட்டாயமில்லை. அளவான இன்பம் வேண்டுவோர் அடைந்து கொள்ளலாம். அந்த இன்பத்தில் கள்ளும் ஒரு பகுதியே.

காந்தியிடம் இருக்கும் அந்த விஷேச கலவை குணம் ஆன்ம விடுதலை + உலக நலம் என்பதில் இரண்டாம் பகுதியான உலக நலம் என்னும் கூறு காந்தியை-போல் வாழ நினைப்பவரின் அனைத்து வாழ்க்கை தளத்திலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும். அதன்படி நாம் கள் குடித்தாலும் அந்த குடிக்கும் முறையும் அமைப்பும் உலக நலம் கருதுவதாக கட்டுப்பாடு உடையதாக இருக்கவேண்டும். நம் இண்பத்துக்காக எதையும் அழிப்பதாக இருக்ககூடாது. நமது இலக்கு காந்தி நின்று பேசும் அந்த தளத்தை சென்றடைவது என்ற உணர்வு எப்போதும் நமக்கிருக்கவேண்டும்.

கிழக்கு x மேற்கு மெய்யியல் - சில கேள்வி பதில்கள்

நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டது.


மனிதனின் அறிவு எப்படி பெறப்படுகிறது?

நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
கிழக்கு மதங்கள் உடலை மீறி நான் என்ற ஒரு இருப்பை அடையாளம் காட்டுகிறதே? மேற்கத்திய மெய்யியலின் நிலை என்ன?

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

பேரியற்கையை பரப்பிரம்மம் என்று சொல்லலாமா?

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

Thursday, October 1, 2015

காந்தியின் நினைவில்

காந்தி என்னை கவர்ந்த தருணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. சில வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்தது. அந்த தருணத்தில் நான் என் அகத்தின் அஸ்திவாரங்களை உடைத்தெடுத்து மறு கட்டுமானம் செய்து கொண்ட காலம். அப்படி ஒரு அடி என் அகங்காரத்தின் மேல் விழுந்தது. அகங்காரத்தை காலடியில் போட்டு நசுக்கி தள்ளினால் ஒழிய அந்த தருண நரகத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழ்நிலை. அந்த தருணத்தில் எனது அகம் பல உண்மைகளை கண்டடைந்தது. எந்த முன் அறிவும் இல்லாமல் தத்துவார்த்தமான சில விஷயங்கள் என்னில் எழுந்தது. இந்த பிரபஞ்சத்தின் முன் நான் எத்தனை சிறியவன் என்பதை முழுதாய் உணர்ந்த காலம் அது. என் சிந்தனைகளின், வாழ்க்கை நோக்கின் அடிகட்டுமானத்தை மாற்றி அமைத்தது அந்த காலகட்டம்.

அப்போது புரிந்தது மனிதர்களின் செயல்கள் எவ்வளவு அர்த்தமற்றது என்று. பகைகளும், வெறுப்பும், கோபமும் தேவையற்றது என்று விளங்கியது. இயற்கையாக மனிதர்கள் மேல் அன்பு பிறந்தது. அதே போல் இயற்கையாக காந்தியின் மீது அபிமானம் தோன்றியது. அவரது அஹிம்சையின் மீது பெரு மதிப்பு வந்தது. அதற்கு முன்னால் காந்தியை பற்றி சிறிதளவு கூட நான் படித்ததில்லை. காந்தி என்று அனைவருக்கும் தெரிந்த பொது பிம்பமே எனக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சுபாஷ் சந்திர போஸ் தான் மிகவும் பிடித்தவர். ஆனால் அந்த தருணம் என் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றது, உலகின் மீது புது பார்வையை ஏற்படுத்தியது. என் அகம் முதிர்ச்சி அடைந்த தருணம் அது என்று நான் கருதுகிறேன். அந்த தருணத்தில் காந்தி என்னுள் நுழைந்தார்.

அதன் பிறகு சில வருடம் கழித்து ஜெவை கண்டறிந்து காந்தியை பற்றி அவ்வப்போது படிக்கும் போது அவரின் மற்ற பரிமானங்களையும் தெரிந்து கொண்டேன். என்னை பொருத்த வரை ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறான் என்பதை விட அவன் எவ்வளவு நல்ல நோக்குடனும் நேர்மையுடனும் இருக்கிறான் என்பது முக்கியம். சமீபத்தில் அந்த கருத்தை விரிவாக்கி கொண்டேன். அதை வைத்து நாம் காந்தியை அளவிடலாம் என்று நினைக்கிறேன். மக்கள் தலைவராய் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மனிதருக்கு தேவையான அடிப்படை குணங்கள்,

1. பொது நலம் மற்றும் நேர்மை
2. அணுகுமுறை
3. அறிவும் சிந்தனையும்

முதல் அம்சம் குறித்து அதிகம் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் அம்சமான அணுகுமுறை பற்றி நிறையவே சொல்லாம். ஒரு நல்ல கருத்தை லட்சியத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது. அதை எப்படி நடைமுறையில் வெல்வது என்பதை வரையறுப்பது அணுகுமுறை. இதில் பல வழிகளை பல தலைவர்கள் கடைபிடித்திருக்கிறார். அதில் இன்று வரை எனக்கு தெரிந்து காந்தியின் வழிமுறையை மிகவும் மேலானதாக கருதுகிறேன். அஹிம்சையை முன் வைத்து மக்களை பிரதானபடுத்தி போராடும் வழிமுறை அது. மார்ட்டின் லூரத் கிங் சொல்வது போல "Christ gave me the message.  Gandhi gave me the method." காந்தி மறைந்துவிட்டாலும் இன்னும் பல காலங்களுக்கு இந்த வழிமுறை பல காந்திகளை உருவாக்கும்.

மூன்றாவதாக காந்தியின் சிந்தனையும் அறிவும். காந்தி அறிவுஜீவியா என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான உலக நடப்புகளும் வரலாறும் அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதை விட அவருக்கு மக்களுடனான நேரடி உறவிருந்தது. நாள் தோறும் மக்களிடம் தொடர்பிலிருந்ததால் அவருக்கு மக்களின் உண்மை நிலவரம் தெரியும். அவர்களின் உணர்வுகள் கஷ்டங்களை அறிந்தவர். அவரது சிந்தனை முறை வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு சிந்திப்பதாக இருந்தது. எதை தர்க்கபூர்வமாக அணுகவேண்டுமோ அதை அந்த நோக்குடன் பார்க்கும் தன்மை அவருக்கிருந்தது. நவீன காலத்தின் மக்களுக்கும் காலத்திற்கும் உகந்த அம்சங்களை எடுத்துகொண்டு குறைபாடுகளை சுட்டிகாட்ட அவரால் முடிந்தது.

ஆனால் மேலே சொன்னவை எல்லாம் ஒரு மக்கள் தலைவரை உருவாக்கிவிடும். ஒரு மஹானை உருவாக்கிவிடாது. யோசித்து பார்த்தால் இந்த குணாம்சங்கள் ஓரளவுக்கு நேருவுக்கும் பட்டேலுக்குமே பொருந்தி வரும். இருவரும் நேர்மையும் நல்ல நோக்கமும் உடையவர்கள். காந்திக்கு பின் இந்தியாவை கட்டி எழுப்பும் திறன் கொண்டவர்கள். சில விஷயங்களில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக நிறுவினார் நேரு. 500க்கும் மேற்பட்டதாக சிதறிகிடந்த இந்திய மாநிலங்களை, குறுநிலங்களை ஒன்றினைக்கும் அறிவும் திறனும் பட்டேலுக்கு இருந்தது.

ஆனால் இதை எல்லாம் விட மேலும் ஒரு அம்சம் காந்தியிடம் இருந்தது. தன் உள்ளுணர்வுடன் உரையாடும் திறன். இறைவன் தன்னை வெளிபடுத்தி கொள்ள தேர்தெடுத்த ஒரு விஷேச மனிதர் அவர். அதுவே காந்தியை தலைவராக மட்டுமில்லாமல் ஒரு ஞானியாகவும் ஆக்கியது. அந்த ஞானமே அவரை அஹிம்சையை தேர்ந்தெடுக்க செய்தது. அந்த அஹிம்சையினாலேய அவர் மஹான். மனித குலத்துக்கு அவர் கொடுத்த நற்செய்தி அஹிம்சையே.

இன்றைய உலகுக்கு வேறு எந்த அறிஞர், தலைவர் தேவையோ இல்லையோ காந்தி மிகவும் தேவை. அவர் கருத்துக்கள் மட்டுமல்ல அவரே மீண்டும் இங்கு வர வேண்டும். அவருக்காக இந்தியாவும் உலகமும் காத்துகொண்டிருக்கிறது. 

பெரியாரின் பகுத்தறிவு

பெரியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை தற்போது படித்து முடித்தேன். அந்த புத்தகத்தில் பெரியாரை விமர்சன நோக்குடன் பார்க்காமல் புகழும் நோக்குடன் எழுதப்பட்டிருந்தது. இருந்தும் அவரது வாழ்க்கையை உள்ளபடியே பதிவு செய்திருந்ததாகதான் தோன்றியது. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களே அவரின் அணுகுமுறையை தெளிவாக நமக்கு எடுத்துகாட்டுகிறது.

தி.கவிற்குள் அண்ணாவின் தனிப்பட்ட போக்கினால் எரிச்சலடைந்த பெரியார் இப்படி சொல்கிறார்(எனது வார்த்தைகளில்). "உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் கொண்டு நான் முன்வைக்கும் கொள்கைகளை சிந்தித்து பாருங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானால் எடுத்துகொள்ளுங்கள். கொள்கை ஏற்புடையதாக இருந்தால் கட்சியில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த மறுநொடியில் உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் எடுத்து ஓரமாக வைத்துவிடுங்கள். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், செய்யுங்கள். இது சர்வாதிகாரம் தான். ஆனால் அதை கொண்டு தான் கட்சியை நடத்த முடியும்" என்கிறார்.

இது பகுத்தறிவுக்கே எதிரான நிலைபாடு. நவீன ஐரோப்பாவில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகி சில காலங்களிலேயே அங்கே தனித்துவவாதம் -individualism என்ற கருத்து தோன்றிவிட்டது. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அனைவருக்கும் அவரவர் தர்க்க புத்தியை உபயோகிக்கும் உரிமை உண்டு என்று அடக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். இதன் விளைவாக பிறந்ததே ஜனநாயகம்.

பகுத்தறிவின் வரலாறு இப்படி இருக்க பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை என்றெல்லாம் பேசிய பெரியார் மக்கள் அவர் கட்சியில் சேர்ந்த பிறகு பகுத்தறிவை ஓரமாக வைத்துவிடுங்கள், நான் சிந்திக்கிறேன் உங்களுக்காக என்று சொல்வது பெரும் அபத்தமாக தெரிகிறது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மாநிலத்து மக்களிலேயே தனக்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்பது போல் அவர் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பெரியாரிடம் பொது நல நோக்கும், நேர்மையும் இருந்ததாக நான் கருதுகிறேன். அது ஒரு ஆளுமைக்கு தேவையான முக்கியமான அடிப்படை தகுதி. அவர் பகுத்தறிவு என்ற பிரச்சாரம் செய்ததும் அன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அந்த பகுத்தறிவின் ஆழம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் தனி என்றாலும் அவர் அப்படி ஒரு கருத்தை பரப்பினார் என்பதற்காக அவருக்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் தனக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என்பது போல் பேசியிருக்கும் அளவுக்கு அவரது பகுத்தறிவு அணுகுமுறைகள் அறிவுபூர்வமாகவும் இல்லை, ஆழமானதாகவும் இல்லை, நடைமுறைக்கு ஏற்றதாகவும் இல்லை.

Tuesday, September 8, 2015

இந்துத்துவமும் அதன் மீதான என் விமர்சனமும்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் மூன்று வகையான தேசிய கனவுகள் இருந்தது. அதில் நேரு கனவு கண்ட  தாராளவாத சோஷியலிச தேசம், காந்தி கனவு கண்ட ஸ்வாரஜ்யம், இந்துதவர்கள் கனவு கண்ட இந்துத்தவ தேசியம். இதில் நேரு வெண்றார், காந்தி தோற்றார். இந்துத்துவர்கள் வெல்வதற்கு அன்று ஒரு பெரிய தரப்பாக இருக்கவில்லை.

இந்துத்துவத்தும் என்ற கருத்தை முதலில் வரையறை செய்தவர் சாவர்க்கர். இந்துத்துவம் என்பது இந்துக்களை ஒட்டுமொத்தமாக திரட்டி அவர்களின் பெரும்பான்மையை கொண்டு ஒரு தேசத்தை உருவாக்குது. இவர்கள் இந்துக்கள் என்று சொல்வது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்ல என்று விளக்கபடுகிறது. இந்து என்பது இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியர்களை குறிக்கிறது. அவர்களே இந்து இணம் என்கிறது. இந்து மதம் என்பது ஒற்றை வேதநூல் கொண்ட மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதன் படி இந்திய பன்பாட்டில் வளர்ந்த எந்த மதத்துக்கும் இந்து என்ற வரையறையில் இடமுண்டு என்பது இவர்களது வாதம். ஆக இந்துத்துவ தேசியம் என்பது இந்து கலாச்சாரம் சார்ந்த தேசியம்.


இந்தியாவில் இந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்துகிடந்ததே காலனியதிக்கதுக்கும் இஸ்வாமிய ஆதிக்கத்துக்கும் காரணமானது. அதனால் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்த தேசத்தை ஒரு இந்து தேமாக ஆக்குவதே இவர்களின் குறிக்கோள். இந்த தேசமானது இங்கிருக்கும் மக்களின் பித்ருதேசமாகவும் புன்னிய பூமியாகவும்  இங்கு வாழும் மக்களால் கருதப்படவேண்டும். அப்படி இந்தியாவை தங்களது தந்தை தேமாக கருதமுடியாத பிற மதத்தினர்கள் இந்தியாவை தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தேசமாக கருதவேண்டும். அவர்கள் இந்து பண்பாட்டின் மீதும் இந்து மதத்தின் மீதும் மதிப்பும் பெருமிதமும் கொண்டிருக்கவேண்டும். அதை அவரகள் நிராகரிக்ககூடாது. அப்படி நிராகரிப்பவர்களுக்கு இந்த நாட்டில் குடிமை உரிமை வழங்கப்படகூடாது என்று சொல்லியிருக்கிறார் இந்துத்துவ சித்தாந்தவாதியான கோல்வால்க்கர்.

1 -
இந்துத்தவம் என்ற கருத்து உருவாக்கப்பட்ட காலத்தையும் அந்த கருத்தையும் கவனித்தால் ஒன்று புரிகிறது. அது பயத்தினால் உருவாக்கப்பட்டது என்று தெரியவரும். நாம் கடந்த ஆயிரம் வருடங்களாய் பிற தேசங்களால் தாக்கப்பட்ட நாடாய் இருந்திருக்கிறோம். இந்தியாவில் நடந்த காலணி ஆதிக்கத்துக்கும் இஸ்லாமிய படையெடுப்புக்கும் காரணம் இந்துக்கள் ஒன்றிணையாமல் இருந்ததே. அதனால் இந்துக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அவர்கள் இணைந்து வலுவான ஒரு இந்து தேசத்தை கட்டமைக்கவேண்டும் என்பது இந்துத்துவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த கருத்து ஒரு நவீன தேசம் எப்படி இயங்கும் என்ற ஒரு புரிதலில்லாமல் சொல்லப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நவீன தேசம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டால் அதற்கென்று ஒரு ராணுவம் அமையும். அது அந்த தேசத்தை படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும். இதற்காக இந்தியா இந்து நாடாக ஒன்று திரளவேண்டியது அவசியமற்றது.


2 -
இந்துத்துவர்கள் சொல்லும் பல கருத்துகளுக்கு புறவயமான வரலாற்று பின்புலம் இருப்பதில்லை. அவர்கள் புராணங்களேயே வரலாறாக சொல்லிவருகின்றனர். சாவர்க்கர் எழுதிய இந்துத்துவ புத்தகத்தில் ராமர் என்று ராவனனை வெண்று நாடு திரும்பி சிம்மாசனத்தில் அமர்ந்தாரோ அன்று தான் இந்தியா என்பது முழுமையாக உருவாக்கப்பட்டது என்கிறார். அதுவே நம் தேசிய தினம் என்கிறார். பெரும்பாலும் புராணங்களில் வரும் ஸ்லோகங்களையே ஆதாரமாக வைக்கிறார். இன்று வரையிலும் இவர்களின் வாதம் புராணங்க்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது.

3 -
இந்துத்துவர்களுள் ஒரு அறிவார்ந்த தரப்பு இருப்பதில்லை என்பது திரும்ப திரும்ப அறிஞர்களால் சொல்லபடுகிறது. இவர்கள் இந்து பெருமிதத்தை மட்டும் வைத்துகொண்டு நாங்களே தலை சிறந்ந பண்பாடு, இன்று நவீன அறிவியல் கண்டுபிடித்ததை எல்லாம் நாங்கள் என்றோ கண்டு பிடித்துவிட்டோம் என்று மார்த்தட்டிகொள்கிறார்கள். விநாயகருக்கு யானை தலை இருப்பது அந்த காலத்திலேயே ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதை காட்டுகிறது. சமஸ்கிருதமே அறிவியல் பூர்வமான மொழி என்பது போல பல நகைச்சுவைகளை செய்வது இவர்களுக்க வழக்கமாய் இருந்து வருகிறது.

அறிவியல் என்றால் என்ன என்று ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள் சொல்வது இது போன்ற கருத்துக்கள். ஆனால் உன்மையில் அறிவியல் பற்றி அறிந்த சில இந்துத்துவர்கள் இந்த பெருந்தலைவர்களின் அதிரடியான இந்த கருத்துகளுக்கு விளக்கம் கொடுகின்றனர். இவர்களுள் இருக்கும் ஒன்றிரண்டு அறிவார்ந்தவர்களும் இவர்கள் தலைவர்கள் சொல்லும் அடிப்படையில்லா கருத்துகளை நியாயப்படுத்துவதற்கென்றே இருக்கிறார்கள் போலும். இது போன்ற கருத்துக்களால் இந்தியாவில் உன்மையாகவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் வெளி கொண்டு வரப்பட்டால் கூட அது ஏளனமாகவே பார்க்கப்படும்.


4 -
ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவன் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவனது உரிமை. தன் சொந்த கலாச்சாரத்தின் மேல் பிடிப்பு இருப்பது நல்லது. ஆனால் அதை முடிவெடுப்பது அவனது உரிமையாக இருக்கவேண்டும். அதை அவனில் வலுகட்டாயமாக ஏற்க செய்ய கூடாது. அப்படி நடந்தால் அது ஜனநாயக நாடாக அமையாது. ஒரு ஜனநாயக நாட்டில் அவன் அதன் சட்டத்தின் படி நடப்பதும் வரி கட்டுவது மட்டுமே அவனது கடமைகளாக இருக்க முடியும். அதற்கு மேல் அந்த நாட்டை அவன் போற்றுவதும் விமர்சிப்பதும் அவனது தனி மனித உரிமை. அதற்கு ஜனநாயக நாட்டில் சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் இந்துவத்தின் படி இந்திய நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்திய பண்பாட்டை பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும் இந்து மதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்லுவது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தாகவே தெரிகிறது.