Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Saturday, December 26, 2015

முக்தியும் மறுபிறவி எனும் முன்னனுமானமும்

இந்திய மதங்களில் பெரும்பாலும் முக்தி எனும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முக்தியை அடையும் வழியாக சில யோக மார்க்கங்கள் வரையறுத்து தரப்பட்டிருக்கிறுது. கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் ஞான யோகம் போன்றவை.  மனிதன் வாழ்வின் துன்பங்களை, பந்தங்களை, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு இந்த இன்னல்கள் இல்லாத பேரானந்த நிலையில் சென்று அமர்வதே அந்த முக்தி என்பதாகும்.

இந்த முக்தியை அடைவதற்கு வாழ்நாள் முழுதும் அல்லது வாழ்வின் ஒரு பகுதி முழுக்க சாதகம் செய்து அந்த முக்தி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படிபட்ட முக்தி என்ற கருத்தை ஏற்று கொள்வதற்கு முன்னணுமானமாக - Presupposition ஒரு கருத்து நம்முள் இருக்கிறது.  மறுபிறவி எனும் கருத்து தான் அது. ஒரு ஆத்மா அல்லது உயிர் முக்தி அடையாத வரையிலும் மறுபிறப்பு எடுத்துகொண்டே இருக்கும் என்ற கருத்து அடிப்படையாக இருப்பதாலயே இந்த முக்தி என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த மறுபிறவி என்ற கருத்தை நான் மறுத்தால். எனது வாழ்க்கை என்பது சில பத்தாண்டுகள். இந்த காலத்தை நான் ஏன் முக்திக்கு செலவழிக்க வேண்டும்? வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே செலவு செய்துவிட்டு சென்றுவிடலாம். அது நல்ல வழியிலான இன்பமாக இருந்தாலும் சரி தீய வழியினாலான இன்பமாக இருந்தாலும் சரி. எனது வாழும் காலத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு செல்லதானே நான் பார்ப்பேன்.

ஒரு வசதிக்காக சொர்க்கம் நரகம் என்ற கருத்தையும் நிராகரிப்போம் என்றால், பாவம் எது புன்னியம் எது? மறுபிறவியும் இல்லை சொர்க்கம் நரகமும் இல்லை என்ற பின் நமது இந்த வாழ்க்கை மட்டுமே நமக்கானது. ஒவ்வொரு நொடியும் பொன் துளி அல்லவா? புலன் இன்பத்தை அளவோடோ அளவில்லாமலோ அனுபவித்து விட்டு செல்லலாமே? அறிதல் என்பதும் ஒரு புலன் இன்பமே. அதற்காக ஒருவர் அறிகிறார் என்றால் சரி. ஆனால் வீடுபேறுக்காக ஒருவர் அறிகிறார், தொழுகிறார், சாதகங்கள் செய்கிறார் என்பது எப்படி சரியாகும்.

ஆனால் மறுபிறவி என்ற கருத்து நமது இந்திய மதங்களில் ஆழமாக இருப்பதால் தான் முக்தி என்ற நிலை முக்கியமாக இருக்கிறது. அதற்காக நமது நேரத்தை செலவிட்டு செய்யும் சாதகங்கள் பொருள்படுகிறது. ஆனால் இந்த கருத்து மேற்கத்திய மதங்களில் இல்லை. அங்கு சொர்க்க நரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த கருத்தை வைத்து பாவ புன்னியங்கள் பொருள் படுகிறது. அதனால் அவர்களுக்கு இறைவழிபாடு பொருள்படுகிறது.

தன் வாழ்க்கையையே தன் முக்திக்காக அற்பனித்த ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். ஞான மார்க்கத்தை தனது பாதையாக தேர்ந்தெடுத்தவர். அவரது கருத்துகளுக்கும், முக்திக்கான ஏக்கத்திற்கும் அடிநாதமாக மறுபிறவி சங்கிலி என்னும் முன்னணுமானம் இருப்பதாக தோன்றியது.  முக்தியை தேடுபவர்கள் இந்த முன்னணுமாத்தை உணர்ந்து அதை ஏற்று கொண்டு தேடுவார்களாயின் அது ஏற்றுகொள்ளதக்கது. ஆனால் அப்படி ஒரு முன்னணுமானத்தை அறியாமலேயே வாழ்க்கையின் இலக்கை தேர்ந்தெடுப்பது என்பது சரியாகப்படவில்லை. அதுவும் குறிப்பாக ஞான மார்க்கத்தின் வழியில் செல்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

----

மேலே நான் எழுதிய அணுகுமுறையில் கொடுக்கல்-வாங்கல் என்ற தோரனை இருக்கிறது. அதில்லாமல் ஒரு உயிரானது தனது போதாமையை உணர்ந்து ஒரு முழுமைக்காக முக்தியை தேர்ந்தெடுக்கிறது என்ற கோணத்திலும் இதை அனுகலாம்.

Tuesday, October 27, 2015

இந்திய மெய்ஞானமும் தர்க்கமும்

இந்து ஞான மரபை அனுகும் போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அது மேலை தத்துவ மரபுக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம். மேலை தத்துவ மரபுகள் தர்கத்தை தன் அடிப்படையாக கொண்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்து ஞான மரபில் அப்படியல்ல.. சில வரிகளை மேற்கொள் காட்டுகிறேன்.

இந்த வரிகளை ஸிம்மர் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்.

Philosophy as the handmaid of empirical research, thought wearing the blinders of the standards of contemporary science, and metaphysics open to rational criticism from every quarter - in short, reason infallible; this is the ideal and requirement of the practical-minded thinker. Whereas the other is simply not convinced by all the plausible searching and discovering...what he wants is a response...to the primary question in his mind.

Something beyond critical reasoning is what he requires; something that someone of adequate mind should have realized intuitively as a Truth(with a capital T) about man's existence and the nature of the cosmos; something to enter the breast and pierce the heart with what Baudelaire called "the steely barb of the infinite". What he requires is a philosophy that will confront and resolve the conflict once performed by religion; and this is a need from which no number of college courses on the validity of inference can emancipate him.
- Page 16, Philosophies of India, Heinrich Zimmer (ஓழுங்குக்காக வரிகளின் வரிசை சற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது)

தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்ட ஞானம். ஒரு குறிப்பிட்ட ஞானிக்கு கிடைத்த ஒரு உள்ளுணர்வு(Intuition) - தரிசனம். அதுவே ஒரு ஒட்டு மொத்தமான பிரபஞ்ச தரிசனமாயும் அடிப்படையாயும் அமையமுடியும். தர்க்கத்தால் நிராகரிக்க முடியாத ஒரு தத்துவத்தை தேடும் ஒருவனுக்கல்ல, நெஞ்சை கிழித்து உள்ளிறங்கும் தரிசனத்தை தேடும் ஒருவனுக்கே இந்திய ஞானத்தில் விடை கிடைக்கும்.

//இந்து தத்துவ மரபு எனும்போது இந்து மரபில் உள்ள பல்வேறு சிந்தனைப்போக்குகளை மட்டுமே கூறமுடியும். ஆனால் தரிசனம் என்பது சிந்தனையினால் உருவாக்கப்பட்டது அல்ல. தர்க்கபூர்வமாக முழுமையாக விளக்கிவிடக் கூடியதும் அல்ல. தர்க்கமானது ஓர் எல்லை வரை மட்டுமே போகமுடியும். தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அதிகம்.

உதாரணமாக ‘பிரபஞ்சமே ஒரு சக்தி பிரவாகம்’ என்ற ஆதி தரிசனம், தர்க்கபூர்வமாக ஒருவர் அடையப் பெற்ற ஒன்றாக இருக்க இயலுமா என்ன? தன்னைச் சுற்றி உள்ள ஒவ்வொரு பொருளையும்  எடுத்து பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது? இல்லை. அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொத்தமான அகப்பார்வை மட்டுமே.//
பக்கம் 45, "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்", ஜெயமோகன்
----
இந்திய மெய்ஞானம் என்பது அறிவை தொகுத்து வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமல்ல.  அது ஒரு மனிதனின் அக மற்றும் தரிசன மாற்றத்தையே  பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது.

"They(Hindu Philosophers) study also the visible traits of phenomenal existence, criticizing the data of external experience and drawing deductions with respect to the supporting principles. India, that is to say, has had, and still has its own disciplines of psychology, ethics, physics, and metaphysical theory. But the primary concern-in striking contrast to the interests of the modern philosophers of the West-has always been, not information, but transformation: a radicalchanging of man's nature and, therewith, a renovation of his understanding both of the outer world and of his own existence; a transformation as complete as possible, such as will amount when successful to a total conversion or rebirth"
- Page 4, Philosophies of India, Heinrich Zimmer

//தரிசனங்கள் என்பவை தத்துவ நிலைபாடுகளும் கூடத்தான். ஆகவே மெய்ஞான மரபு என்பதும் தத்துவ மரபு கூடத்தான். ஆனால் தத்துவத்திற்கு அப்பால் கற்பனையும் உள்ளுணர்வும் செல்லும் தூரம் வரை தரிசனங்கள் நீண்டு செல்கின்றன. மெய்ஞான மரபும் அப்படி நீண்டு செல்கிறது.

ஒரே வரியில் இப்படி கூறலாம். அறிவு என்பதற்கு ஞானம் என்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான்அது.//
பக்கம் 46 "இந்து ஞானமரபில்..."
----
தர்ககத்தையும் மீறி ஒரு அறிதல் நிகழ்கிறது என்றால் அது தர்ககத்தால் விளக்கபட முடியாது. அதே தரிசனத்தை நானும் அடைய வேண்டும். இதற்கான மொழி வேறு. இலக்கியத்தை இதற்கான மொழி என்று சொல்லலாமென நினைக்கிறேன். அதனால் தான் நம் மரபில் ஏராளமான கதைகளும் புராணங்களும் இருக்கிறது.

இங்கு தான் குரு நமக்கு கை கொடுப்பார்.குருவிடம் செல்லும் ஒரு மாணவனுக்கான முதல் விதி அவன் அது வரை அறிந்ததை எல்லாம் எடுத்து ஓரத்தில் வைத்து விட்டு குருவிடம் சரணடைவது. அதில் தர்ககமும் அடங்கும்.

இந்திய தரிசனங்களை தத்துவம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தத்துவத்தை விட ஆழமானவை அவை. அதனால் தான் மெய்ஞானம் என்ற வார்த்தை உபயோகிக்கபடுகிறது. அது மெய்யியலில் இருந்து மாறுப்பட்டது என்று நினைக்கிறேன். தத்துவம் என்பது முழுக்க முழுக்க தர்க்கத்தை அடிப்படையாக கொண்டது. தத்துவத்தை தர்க்கமே வழிநடத்தி செல்கிறது. தர்க்கம் என்ற தண்டவாளத்தின் மேல் தத்துவம் ரயில் போல செல்கிறது.

கற்பனையாலோ உள்ளுணர்வாலோ கண்டுபிடித்த விஷயத்தை தர்க்கம் மூலம் விளக்கமுடிகிறது. தர்க்கத்தின் மூலம் விளக்கி அது நீருபனம் செய்யப்பட்ட தத்துவமாக ஆகிவிடுகிறது. இன்னொரு தர்க்க கட்டுமானத்தை கொண்டு நீருபிக்கப்பட்ட தத்துவம் விமர்சிக்கப்படுகிறது. ஒரு தத்துவத்தில் விமர்சித்து நிராகரிக்கப்பட்ட கருத்துகளை களைந்து ஏற்புடைய கருத்துகளை கொண்டு வேறு ஒரு தத்துவம் வளரக்கூடும்.

நமது இந்திய மெய்ஞானத்தில் தரிசனத்துக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டு அதன் பின் அந்த தரிசனத்துக்கு தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டு தத்துவமாக்கப்படுகிறது.
----

இந்திய ஞானத்தை மரபை பின்பற்றும் ஒருவர் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய பாடமிது.

Monday, October 19, 2015

கிழக்கு x மேற்கு மெய்யியல் - சில கேள்வி பதில்கள்

நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டது.


மனிதனின் அறிவு எப்படி பெறப்படுகிறது?

நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
கிழக்கு மதங்கள் உடலை மீறி நான் என்ற ஒரு இருப்பை அடையாளம் காட்டுகிறதே? மேற்கத்திய மெய்யியலின் நிலை என்ன?

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

பேரியற்கையை பரப்பிரம்மம் என்று சொல்லலாமா?

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

Tuesday, September 8, 2015

இந்துத்துவமும் அதன் மீதான என் விமர்சனமும்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் மூன்று வகையான தேசிய கனவுகள் இருந்தது. அதில் நேரு கனவு கண்ட  தாராளவாத சோஷியலிச தேசம், காந்தி கனவு கண்ட ஸ்வாரஜ்யம், இந்துதவர்கள் கனவு கண்ட இந்துத்தவ தேசியம். இதில் நேரு வெண்றார், காந்தி தோற்றார். இந்துத்துவர்கள் வெல்வதற்கு அன்று ஒரு பெரிய தரப்பாக இருக்கவில்லை.

இந்துத்துவத்தும் என்ற கருத்தை முதலில் வரையறை செய்தவர் சாவர்க்கர். இந்துத்துவம் என்பது இந்துக்களை ஒட்டுமொத்தமாக திரட்டி அவர்களின் பெரும்பான்மையை கொண்டு ஒரு தேசத்தை உருவாக்குது. இவர்கள் இந்துக்கள் என்று சொல்வது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்ல என்று விளக்கபடுகிறது. இந்து என்பது இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியர்களை குறிக்கிறது. அவர்களே இந்து இணம் என்கிறது. இந்து மதம் என்பது ஒற்றை வேதநூல் கொண்ட மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதன் படி இந்திய பன்பாட்டில் வளர்ந்த எந்த மதத்துக்கும் இந்து என்ற வரையறையில் இடமுண்டு என்பது இவர்களது வாதம். ஆக இந்துத்துவ தேசியம் என்பது இந்து கலாச்சாரம் சார்ந்த தேசியம்.


இந்தியாவில் இந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்துகிடந்ததே காலனியதிக்கதுக்கும் இஸ்வாமிய ஆதிக்கத்துக்கும் காரணமானது. அதனால் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்த தேசத்தை ஒரு இந்து தேமாக ஆக்குவதே இவர்களின் குறிக்கோள். இந்த தேசமானது இங்கிருக்கும் மக்களின் பித்ருதேசமாகவும் புன்னிய பூமியாகவும்  இங்கு வாழும் மக்களால் கருதப்படவேண்டும். அப்படி இந்தியாவை தங்களது தந்தை தேமாக கருதமுடியாத பிற மதத்தினர்கள் இந்தியாவை தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தேசமாக கருதவேண்டும். அவர்கள் இந்து பண்பாட்டின் மீதும் இந்து மதத்தின் மீதும் மதிப்பும் பெருமிதமும் கொண்டிருக்கவேண்டும். அதை அவரகள் நிராகரிக்ககூடாது. அப்படி நிராகரிப்பவர்களுக்கு இந்த நாட்டில் குடிமை உரிமை வழங்கப்படகூடாது என்று சொல்லியிருக்கிறார் இந்துத்துவ சித்தாந்தவாதியான கோல்வால்க்கர்.

1 -
இந்துத்தவம் என்ற கருத்து உருவாக்கப்பட்ட காலத்தையும் அந்த கருத்தையும் கவனித்தால் ஒன்று புரிகிறது. அது பயத்தினால் உருவாக்கப்பட்டது என்று தெரியவரும். நாம் கடந்த ஆயிரம் வருடங்களாய் பிற தேசங்களால் தாக்கப்பட்ட நாடாய் இருந்திருக்கிறோம். இந்தியாவில் நடந்த காலணி ஆதிக்கத்துக்கும் இஸ்லாமிய படையெடுப்புக்கும் காரணம் இந்துக்கள் ஒன்றிணையாமல் இருந்ததே. அதனால் இந்துக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அவர்கள் இணைந்து வலுவான ஒரு இந்து தேசத்தை கட்டமைக்கவேண்டும் என்பது இந்துத்துவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த கருத்து ஒரு நவீன தேசம் எப்படி இயங்கும் என்ற ஒரு புரிதலில்லாமல் சொல்லப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நவீன தேசம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டால் அதற்கென்று ஒரு ராணுவம் அமையும். அது அந்த தேசத்தை படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும். இதற்காக இந்தியா இந்து நாடாக ஒன்று திரளவேண்டியது அவசியமற்றது.


2 -
இந்துத்துவர்கள் சொல்லும் பல கருத்துகளுக்கு புறவயமான வரலாற்று பின்புலம் இருப்பதில்லை. அவர்கள் புராணங்களேயே வரலாறாக சொல்லிவருகின்றனர். சாவர்க்கர் எழுதிய இந்துத்துவ புத்தகத்தில் ராமர் என்று ராவனனை வெண்று நாடு திரும்பி சிம்மாசனத்தில் அமர்ந்தாரோ அன்று தான் இந்தியா என்பது முழுமையாக உருவாக்கப்பட்டது என்கிறார். அதுவே நம் தேசிய தினம் என்கிறார். பெரும்பாலும் புராணங்களில் வரும் ஸ்லோகங்களையே ஆதாரமாக வைக்கிறார். இன்று வரையிலும் இவர்களின் வாதம் புராணங்க்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது.

3 -
இந்துத்துவர்களுள் ஒரு அறிவார்ந்த தரப்பு இருப்பதில்லை என்பது திரும்ப திரும்ப அறிஞர்களால் சொல்லபடுகிறது. இவர்கள் இந்து பெருமிதத்தை மட்டும் வைத்துகொண்டு நாங்களே தலை சிறந்ந பண்பாடு, இன்று நவீன அறிவியல் கண்டுபிடித்ததை எல்லாம் நாங்கள் என்றோ கண்டு பிடித்துவிட்டோம் என்று மார்த்தட்டிகொள்கிறார்கள். விநாயகருக்கு யானை தலை இருப்பது அந்த காலத்திலேயே ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதை காட்டுகிறது. சமஸ்கிருதமே அறிவியல் பூர்வமான மொழி என்பது போல பல நகைச்சுவைகளை செய்வது இவர்களுக்க வழக்கமாய் இருந்து வருகிறது.

அறிவியல் என்றால் என்ன என்று ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள் சொல்வது இது போன்ற கருத்துக்கள். ஆனால் உன்மையில் அறிவியல் பற்றி அறிந்த சில இந்துத்துவர்கள் இந்த பெருந்தலைவர்களின் அதிரடியான இந்த கருத்துகளுக்கு விளக்கம் கொடுகின்றனர். இவர்களுள் இருக்கும் ஒன்றிரண்டு அறிவார்ந்தவர்களும் இவர்கள் தலைவர்கள் சொல்லும் அடிப்படையில்லா கருத்துகளை நியாயப்படுத்துவதற்கென்றே இருக்கிறார்கள் போலும். இது போன்ற கருத்துக்களால் இந்தியாவில் உன்மையாகவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் வெளி கொண்டு வரப்பட்டால் கூட அது ஏளனமாகவே பார்க்கப்படும்.


4 -
ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவன் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவனது உரிமை. தன் சொந்த கலாச்சாரத்தின் மேல் பிடிப்பு இருப்பது நல்லது. ஆனால் அதை முடிவெடுப்பது அவனது உரிமையாக இருக்கவேண்டும். அதை அவனில் வலுகட்டாயமாக ஏற்க செய்ய கூடாது. அப்படி நடந்தால் அது ஜனநாயக நாடாக அமையாது. ஒரு ஜனநாயக நாட்டில் அவன் அதன் சட்டத்தின் படி நடப்பதும் வரி கட்டுவது மட்டுமே அவனது கடமைகளாக இருக்க முடியும். அதற்கு மேல் அந்த நாட்டை அவன் போற்றுவதும் விமர்சிப்பதும் அவனது தனி மனித உரிமை. அதற்கு ஜனநாயக நாட்டில் சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் இந்துவத்தின் படி இந்திய நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்திய பண்பாட்டை பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும் இந்து மதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்லுவது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தாகவே தெரிகிறது.

Sunday, August 9, 2015

அயல் வாழ்க்கை

அமெரிக்காவில் வாழக்கூடாத காரணங்கள் என்று ஐந்தை என் மனதில் உருவாக்கி வைத்துள்ளேன். அதில் ஒன்று மதத்துடன் தொர்புடையது. ஆனால் மதம் என்ற அனுபவத்தை அடைவதற்கு வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு வழிகள் குறைவு என்பது என் எண்ணம்.

இதில் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சில கருத்துகளை சொல்கிறேன். இது வேறு இடங்களில் வேறு வகையாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டினால் எண்ணத்தை மாற்றி கொள்ள தயார்.

அமெரிக்காவில் நான் வாழும் இடத்தில் இருக்கும் இந்து மதம் என்பது வெறும் சடங்கு சார்ந்தது அல்லது நிறுவனமயமான ஒரு இயக்கம் இது இரண்டையும் தாண்டி ஒரு இயல்பான இந்து மதம் அல்லது இந்த மதத்தின் பல வழி சாத்தியங்களை கொண்ட ஒரு மதத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இயலவில்லை.

இங்கிருக்கும் இந்து கோவில்களும் வெறும் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் ஆண்டவனிடம் பேரம் பேசுவதற்குமான ஒரு இடமாக தான் இருக்கிறது. நம்மூர் கோவில்களுக்குள் நுழையும் போது தோன்றும் ஒரு ஆன்மீகமான அனுபவம் இங்கு தோன்றுவதில்லை. ஜோசப் கேம்பில் ஒரு பேட்டியில் சொன்னார் - வழிபாட்டு தளங்க்களுக்குள் அப்படி ஒரு விஷேச அனுபவம் கிடைப்பதற்கு காரணம் அங்கிருக்கும் மத குறியீடுகள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவை என்று. இங்கிருக்கும் கோவில்கள் அப்படி அமைக்கப்படுவதில்லை. ஏராளமான கோவில்கள் இருக்கிறது ஆனால் அது இங்கிருக்கும் திருமண மன்டபம் போலான ஒரு கட்டடதுக்குள் அப்படி சில அறைகளை பிரித்து சில தெய்வ சிலைகளை வைத்திருக்கிறார்கள். அது கோவிலுக்கு செல்லும் முழுமையான அனுபவத்தை தருவத்தில்லை.

இப்படி வேறு ஒரு நாட்டில் வழிப்பாட்டிடங்கள் வைக்கும் போது அப்படி முழுமையான ஆன்மீக அனுபவத்தை அடையும் வகையில் வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை ஜரோப்பியர்கள் காலனிய காலத்தில் வெளிநாட்டுக்கு சென்ற போது அங்கு அவர்கள் தங்கள் வழிப்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களின் முறையில் வழிப்பாட்டிடம் அமைத்து கொண்டார்கள். அப்படி இந்தியர்கள் நாம் செய்வதில்லை.

பண்டிகைகளும், கோவில் திருவிழாக்களும் நம் ஊரில் வாழும் போது நம்மிடமிரருந்து பிரிக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபாவளி, பொங்கல் எதுவானாலும் சரி ஊருக்குள்ளேயே ஒரு கொண்டாட்டம் தானாக புகுந்துவிடும். இப்படிப்பட்ட அனுபவங்களை வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் இழந்துவிடுகிறார்களோ என்று தோனுகிறது.

கிறிஸ்துமஸ் காலங்களில் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு கிறித்துவர்களும் குழந்தையாக மாறிவிடுவதை காணமுடிகிறது. எனது மேலாளர் அவரது அறைக்குள்ளேயே ஒரு சிறிய கிறிஸ்மஸ் மரத்தை வைத்து ஒரு சிறுவனைபோல்  அலங்கரித்து கொண்டிருந்தார். இது போன்ற கொண்டாட்டங்கள் வாழ்க்கையில் மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன். நம் அன்றாட வாழ்விலிருக்கும் சுமையை மறக்க வைக்கும் ஒரு தருணம்.

பண்டிகைகளை தவிர நான் பார்த்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரானாலும் அங்கிருக்கும் கோவில்களின் திருவிழா நடக்கும். கோவிலில் கொடியேற்றி பத்து இருபது நாள் அந்த திருவிழா தொடர்ந்து தேர் இழுப்பதோடு இது முடிவடையும். பண்டிக்கைள் ஒவ்வொருவரும் தனிதனியேயும் அருகிலிருப்பவர்களுடனும்  பகிர்ந்து கொண்டாடுவதென்றால் இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்கள் ஊரே திரண்டு கொண்டாடுவதாகும். தேர் இழுக்கும் போது அந்த ஜனக்கடலுடன் இணைந்து அதில் பங்குகொண்டு அனுபவிப்பது ஒரு உச்சம். இதை போன்ற அனுபவங்கள் இங்கு சாத்தியமில்லை.

மேல் சொன்ன பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் வெளிநாடுகளிலும் பெயரளவில் நடத்தப்படுகிறது. ஆனாலும் அதில் முழுமையான ஒரு அனுபவமில்லை.

வெளிநாடுகளில் சென்று வாழ்வது அதற்காக சில விஷயங்களை இழப்பது என்பது தேவையானதே அதற்காக நான் இதை எழுதவில்லை. மேலும் நமது சொந்த நாட்டை விட்டு பிரியும் ஏக்கத்தால் திரும்ப வருவதையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நமக்கென்றிருக்கும் வாழ்க்கை முறையை வெளிநாட்டுக்கு வந்தவுடன் துறந்துவிடுகிறோமோ என்று எண்ணுகிறேன்.

நியுயார்க் நகரத்திர்கு நான் சென்ற போது அங்கிருக்கும் சுற்றுலா தளங்களுக்கு சென்றதுடன் மன்ஹாட்டனில் சில இடங்களில் இறங்கி சுற்றினேன். அங்கு சைனா டவுன் என்ற இடத்துக்குள் போனால் நியுயார்க்குள் இருந்து வேறேங்கோ சென்றது போலிருந்தது. கடைகளின் அமைப்பு, ட்ராபிக், அங்கு சுற்றியும் தெரியும் சீன எழுத்துக்குள் எல்லாம் நீங்கள் சீனத்தில் ஏதோ ஒரு நகரத்துக்குள் சென்று விட்ட அனுபவத்தை தரும். அதற்கு அருகில் இருக்கும் லிட்டில் இட்டலி இடமும் அப்படி தான் இருந்தது ரோடு முழுவது உணவகங்கள். ரோட்டோரம் விற்கப்படும் தின்பண்டங்கள் என்று  அங்கிருக்கும் இத்தாலியர்களுக்கு ஏற்றார் போல் தான் இருந்தது.

இப்படி நாம் நமக்கு ஏற்றார் போல் ஒரு சூழ்நிலையை வெளிநாட்டில் ஏற்படுத்தி கொள்ளாமல் போய் விடுகிறோமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நாம் நம் மதக்கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் அதற்கே உன்டான கோலாகலத்துடன் செய்ய முடியும். அதுவே நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நம் பண்பாடு, மதம் சார்ந்த முழுமையான, ஒரு எழுச்சியான அனுபவத்தை கொடுக்க முடியும்.

இப்படிப்பட்ட அனுபவங்களை இழந்துவிட்டு இங்கு வாழ்வதற்கு பேசாமல் இங்குள்ள ஏதோ ஒரு மதத்திற்கே மாறி அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தோன்றியதுண்டு.

Monday, April 27, 2015

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 2

அம்பேத்காரின் கேள்விக்கு எதிர்வினையாக அவர் எதை வைத்து மதம் என்ற ஒன்றை வரையரை செய்கிறார் என்று கேட்கலாம். அவர் பிற மதங்களிடம் ஓப்பீடு செய்தே இந்து மதத்தின் மீது கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்தந்த மதங்களில் அவர் குறிப்பிடும் அம்சம் எப்படி நிலையின்மை பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதே போதும். இருந்தாலும் இந்த கேள்வியின் வழியாக நாம் உன்மையிலேயே இந்து மதம் இத்தனை பிரிவுகளையும் தன்னில் அடக்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்து மதம் ஒரு தொகுப்பு தன்மை உடையதாக உள்ளது. அந்த தன்மையே பிற மதங்களிடமிருந்து இதை பிரித்துக்காட்டுகிறது. இந்து மதத்தை ஒரு தொகுப்பு மதம் என்று கூறலாம். இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மதமும் அதனதன் பிரிவுகளுக்குள் அவர்களுக்கு ஏற்றப்படி நம்பிக்கையையும் சடங்குகளையும் நடத்தி கொள்ள சுதந்திரம் அளிக்கிறது. இந்த தன்மையினாலேயே தனிப்பட்ட முறையில் இந்து மக்கள் இந்து மதத்தில்லாத கடவுள்களையும் வணங்க தயங்குவதில்லை. இதை அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டில் பார்த்துதான். சர்ச்சில் ஏசுவை, மாதாவை வணங்குவதற்கு என் அம்மா தயங்கியதில்லை. நோயுற்றால் மசூதீயின் எதிரிருக்கும் ஒரு முஸ்லிம் முதியவரிடம் தான் என்னை மந்திரிக்க எடுத்து செல்வாள்.

இப்படிபட்ட தொகுப்பு மதம் எப்படி தொகுக்கப்பட்டது எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது? இந்த கேள்விக்கு பதில் சொல்ல போனால் அரசர்களுக்கு ஏன் மதமும் அதன் குருக்களும் முக்கியமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியும். இன்றும் இந்த விடை உலகிற்கு பொருந்தும்.

இந்தியா என்பது பல குலங்களாக பிரிந்து பிரிந்து பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது. அது இயற்கையாக மனித சமூக பரினாமத்தில் அவன் சமூகமாக வாழ ஆரம்பித்திருந்த காலம். இந்த சமூக வளர்ச்சியின் அடுத்தக்கட்டம் என்பது. குல குழுவாக இணைக்கப்பட்டு ஒரு அரசை, அரசாட்சியை நிறுவுவது. இப்படி சிறு குல குழுக்களாக இருக்கும் போது ஒவ்வொரு குலத்திற்கும் அதற்குரிய வழிப்பாட்டு முறை மற்றும் தெய்வங்கள் இருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சில குலங்கள் இதில் வளர்ச்சி பெற்று வலிமை பெற ஆரம்பிக்கிறது. அவை பிற குலங்களை அடக்கி ஆக்கிரமித்து அங்கு ஒரு சிற்றரசை நிறுவுகிறது.

இப்படிப்பட்ட சிற்றரசுகள் தங்களை பேரரசுகளாக வளர்த்து கொள்வதற்கு மதம் ஒரு கருவியாக இருந்தது. இந்த மதம் எனும் கருவியை இயக்க தெரிந்தவர்கள் மத குருக்கள், மத துறவிகள். இந்து மதத்தில் இவர்கள் வைதீகர்கள் - பிரமானர்கள். ஒரு அரசு தன்னோடு இணைக்க நினைக்கும் ஒரு தனி குலத்தை  அனுகுவதற்கு அவன் முதலில் எடுக்கும் ஒரு முயற்சி ஒரு வைதிகரையோ அல்லது துறவியையோ அந்த குலத்திடம் அனுப்புவது. அந்த வைதீகர் அந்த குலத்திடம் நன்மதிப்பு பெற்று அந்த குலம் அவரை ஒரு துறவியாக அல்லது குருவாக ஏற்று கொள்ளும் பொழுது அந்த வைதீகர் அவர்களது கடவுளை அந்த அரசனின் மதமான இந்து மதத்துடன் இணைப்பார். அந்த குல மக்கள் வணங்கி வந்த தெய்வம் இந்து மதத்தில் ஒரு கடவுளாக மாற்றப்படும்.

இப்படியாக அந்த குலம் முதலில் இந்து மதத்தில் இணையும். அதன் பிறகு இந்து மத ஆதரவோடு ஆட்சி நடத்தும் மன்னனுடன் இணையும். இப்படி தான் பேரரசுகள் உருவாகி வந்தது. இப்படி ஒரு அரசுடன் இணையாத குலங்களை தான் நாம் இன்று பழங்குடியினர் என்றும் பட்டியலிடப்பட்ட குலங்கள் என்றும் கூறுகிறோம், அவர்கள் வாழ்க்கை மேம்பட அரசு சலுகைகளை அளிக்கிறது. ஆகவே குலங்கள் அரசிடம் சேர்வது இரண்டு தரப்புக்குமே அவசியமான ஒன்று. அதை வன்முறை இன்று நடத்த மதம் ஒரு கருவியாகும். இந்த காரணத்தால் தான் இந்து மதத்தில் இத்தனை விதமான கடவுள்கள் வழிப்பாட்டு முறைகள்.

இப்படி இந்து மதம் வளர்ந்திருந்தாலும் இதை காலத்தால் சிதறிவிடாமல் கட்டி இறுத்தியது எது. இவைகளின் மையப்புள்ளி எது. இதுவே அம்பேத்காரின் முக்கியமான கேள்வி. இதற்கு பதில் இந்து மதத்தை மேலோட்டமாக பார்த்தால் கிடைக்காது.

எந்த ஒரு மதத்திற்க்குமே அதில் இருவகை தளங்கள் இருக்கும் என்று சொல்லலாம். ஒன்று அதன் வழிப்பாடு மற்றும் சடங்குள் சார்ந்து ஒரு தளம். இது எந்த ஒரு எளிய மனிதனுக்கும் புரிய கூடியதாய், மிகவும் அத்தியாவசியமனதாய் இருக்கும். இன்னொரு தளம், அந்த மதத்தின் தத்துவ சார்ந்தது.  இந்த மதத்தின் மைய புள்ளி அதன் சடங்குகளிலும் வழிப்பாட்டு முறைகளிலும் இல்லை, அது தத்துவ தளத்திலு இருக்கிறது.

இந்த மதத்தின் தத்துவ தளம் என்பது பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற மதங்களான் பௌத்தம் சமஞம் ஆகியவைகளுடன் விவாதித்து வளர்ந்து வந்தது. இந்த தத்துவ தளத்தின் தொடக்கம் வேதங்களிலிருந்தே ஆரம்பமாகிறது. பிறகு அது வேதாந்தமாக வளர்ச்சி பெறுகிறது. அதிலிருந்து அத்வைதம் த்வைதம் போன்ற பல வேதாந்த தளங்கள் உருவாகி வந்திருக்கிறது.

இன்று நாம் காணும் எந்த இந்து பிரிவுக்குள்ளும் அதன் புரணங்களிலும் இந்த தத்துவங்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. இன்று மதங்கள் முன்பு ஆறு பிரிவுகளாக இருந்தது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணப்பத்யம், சௌர்யம். இது காலபோக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இன்று சைவமும் வைணவமும் நம்மிடையே இருக்கிறது ஓரளவு சாக்தமும்.

இன்று நம்மிடையே இருக்கும் இந்த சைவம் வைணவம் போன்ற பெருமதங்களில் இந்த தத்துவங்களின் கருதுகோள்கள் வலுவாக ஊடுருவியிருக்கிறது. அந்த தெய்வங்கள் இந்த தத்துவங்களை கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. 'மகமாயி' என்று நாம் சொல்வதில் மாயி என்பது மாயை என்ற வேதாந்த சொல்லாகும்.
'என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க' என்ற பாடலில் வரும் பிரம்மம் என்ற வார்த்தை வேதாந்தாம் கூறும் முழுமுதல் நிலையாகும். சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் மும்மலங்களான ஆணவம், கன்ம்ம், மாயை எனப்படுவது அகங்காரம், கர்மா, மாயை என்ற வேதாந்த கருதுகோள்களாகும்.

இப்படி இன்று இந்து மதமானது அதன் தத்துவ தளத்தின் மூலம் சடங்கு மற்றும் வழிப்பாட்டு தளத்தில் இருக்கும் பிரிவுகளை வலுவாக பினைத்து வைத்திருக்கிறது. அம்பேத்கார் தளுவிய புத்த மதமே கூட வேதாந்தத்திலிருந்து எடுத்து கொண்டு மேலே வளர்ந்த தத்துவம் மதம். புத்த தத்துவங்களிலுருந்து எடுத்துகொண்டு இந்து மதத்தில் வளர்ந்து அத்வைதம். இப்படி பல நூறு ஆண்டுகளாக அறிவான விவாதங்களாலும் அஹிம்ஸை வழிகளாலும் வளர்ந்து வந்தது இந்து மதம். இதுவே இந்தியாவில் பிறந்த மற்ற அவைதிக மதங்களான புத்த மதத்திற்கும், சமன மதத்திற்கும் பொருந்தும். கிறித்துவம், இஸ்லாம் போன்ற ஆப்ரஹாமிய மதங்கள் இங்கு கற்றுகொள்வதற்கு நிறையவே உள்ளது.

Sunday, April 19, 2015

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 1

எனது நண்பர் ஒருவர் இந்து மதத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்து மதம் சுத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டியது என வாதிட்டார். திராவிட இயக்க சார்புடையவர். நான் இந்து மதத்தில் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ஆனால் மொத்தமாகவே தூக்கி போட எந்த தேவையும் இல்லை என்றேன். நமது வாகனத்தில் ஒரு பழுது ஏற்பட்டால் எப்படி சரி செய்து உபயோகித்து கொள்கிறோமோ அதை போலவே இந்து மதத்திலும் உன்மையாகவே பிழைகளாக இருப்பதை சரி செய்யவேண்டும் என்றேன். அதற்கு அவர் இந்து மதத்தின் வேரிலேயே பழுது என்றார். இப்படி விவாதம் இரண்டு மூன்று நாட்கள் விட்டு விட்டு தொடர்ந்தது.


கடைசியில் இந்து மதத்தை பற்றி விமர்சிப்பவர்கள் இந்து மதத்தை பற்றி முழுதாக அல்லது மதிக்கதக்க அளவிலாவது தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். அப்படியில்லாமல் காதில் கேட்ட விஷயங்களை வைத்து கொண்டெல்லாம் அவதூறு சொல்ல கூடாது என்றேன். மேலும் விவாதம் தொடர்ந்து ஒரு இடத்தில் அம்பேத்காரிடம் வந்து நின்றது. அம்பேத்கார் சாட்டிய குற்றங்களை பற்றி சொன்னார். அந்த புத்தகத்தையும் எடுத்துக்காட்டினார். அதன்படி அந்த புத்தகத்தை, அல்லது சில அத்தியாயங்களையாவது படித்துவிட்டு வருகிறேன். பின்பு அவரது இந்து மதத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலுரைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன்படி முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு அதற்கு எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.


இந்து மதத்தின் மீது அம்பேத்கார் "Riddle in  hinduism" என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அல்லது முதல் புதிரில் இந்து மதத்தின் மீது எழுப்பும் கேள்விகள் என்று இவைகளை சொல்லலாம். இந்துக்கள் அனைவரும் தங்கள் கடவுள் என்று சொல்லி கொள்வது ஒற்றை கடவுள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுகிறார்கள். சிலர் எல்லா தெய்வத்தையும் வழிபடுகிறார்கள் - பலதெய்வமுறை வழிபாடு. பலர் மரம், மாடு, நதி ஆகியவைகளை வணங்குகிறார்கள் - பிரபஞ்ச தெய்வ முறை(pantheism). பலர் தங்களது கடவுளை தவிர மற்ற எந்த கடவுளையும் வணங்க மறுக்கிறார்கள் - ஒருதெய்வமுறை. இப்படி இருக்கும் போது ஒரு இந்துவை நீ எதனால் இந்துவாக இருக்கிறாய் என்று கேட்டால் அவன் பதில் சொல்ல முடியாமல் தினறுவான் என்கிறார்.


ஆனால் இந்த பிரச்சனை இந்தியாவில் வாழும் ஒரு கிறித்துவருக்கோ, இஸ்லாமியருக்கோ, பார்ஸிக்கோ கிடையாது என்கிறார். அவர்கள் முறையே கிறித்து, அல்லா, ஜரதுஷ்டரர் என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் இந்து அப்படி சொல்ல குழம்புவான் என்கிறார். மேலும் இந்துக்களுக்கு என்று பொதுவான ஒரு நூல் கிடையாது என்கிறார். சிலர் வேதங்களையே அவர்களின் புனித நூல்கள் என்பார்கள். சிலர் தாந்திரீக நூல்களை சொல்வர். சிலர் பாகவதத்தை சுட்டுவர்.


மூன்று, இந்து மதத்தினர் ஒரே பண்பாட்டை சார்ந்தவர்கள் அல்ல. பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் மற்றும் கல்யானம் செய்ய கூடாத உறவுகள் என்பவை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்து மத சாதிகளில் ஒருவராக ஒருவர் இருந்தால் தான் அவர் இந்துவாகிறார். இது இந்து மதத்தின் முக்கிய பண்பு. ஒவ்வொரு இந்துவுக்கும் தனக்கு நிகரான சாதியில்லாதவருடன் சாப்பிடுவதோ, திருமண பந்தம் வைத்து கொள்வதோ கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த நான்கு வாதங்களையும் தான் அவர் முதல் புதிராக இந்து மதத்தின் மீது வைக்கிறார்.

முதலில் தெய்வ வழிபாடு பற்றிய வாதத்தை எடுத்து கொள்வோம். ஒரு மதம் ஒரு தெய்வத்தை தான் கொண்டிருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? அதிலும் ஒரு மதத்தில் ஒரு தெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடும் சேர்ந்திருந்தால் அது ஒரு மதமென ஏன் இருக்ககூடாது. ஒரு மதம் அதற்குள் எவ்வளவு பாகுபாடுகளை அனுமதிக்கிறதோ அது அத்தனை மதிப்பை மற்ற நம்பிக்கைகளுக்கு கொடுக்கிறது என்று அர்த்தம். அது அத்தனை வழிபாட்டு முறைகளையும் வன்முறையில்லாமல் ஏதோ ஒரு தருனத்தில் தன்னுடன் இணைத்திருக்கிறது என்று அர்த்தம்.


அவர் சுட்டிக்காட்டும் மதங்களில் பார்ஸி மதத்தை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால அந்த மதம் இன்று இரானில் கிட்டத்தட்ட முழுதும் இஸ்லாமியர்களால் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த மதத்தில் இருக்கும் உலக அளவிலான மக்களில் இந்தியாவில் தான் கணிசமானவர்கள் உள்ளார்கள். அவர் சுட்டிக்காட்டும் மற்ற இரண்டு மதங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. வரலாற்றில் ரத்த ஆற்றை ஓட விட்டவர்கள்.


கிறித்துவ மதம் ஐரோப்பாவின் ஆயிரம் மதங்களில் ஒரு மதமாக இருந்த காலகட்டம் ஒன்றுண்டு. ஒரு காலகட்டத்தில் அந்த மத குருக்கள் ரோம மன்னனை சம்மதிக்க வைத்து மதமாற்றினார்கள். அதன் பின் அது அரச மதமானது. அதற்கு அரசு அங்கிகாரம் வந்தவுடன் ஐரோப்பாவில் உள்ள தாய் தெய்வ வழிபாட்டு மதங்கள் மற்றும் பல மதங்களை அழித்தார்கள். வற்புறுத்தி வன்முறையினால் கிறித்துவதத்திற்கு மாற்றினார்கள். அவ்வாறு தான் இன்று ஐரோப்பா முழுவதும் இன்று கிறித்துவமாக இருக்கிறது. இன்று கிறித்துவத்தில் இருக்கும் பல மத சடங்குகளுக்கு பூர்விக ஐரோப்ப மதத்தில் வேர்கள் உண்டு அதற்கு கிறித்துவ சாயம் பூசப்பட்டு இன்றும் கொண்டாடுகிறார்கள்.


அதே போல கிறித்துவ மதத்தின் தெய்வ கோட்பாடு. கிறித்துவர்கள் கிறித்துவை தவிர யாரையும் வழிபடகூடாது என்று திட்டவட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. கிறித்து ஒருவனே உங்களை பாவத்தில் இருந்து விடுவிப்பவர். அவர் ஒருவரே கடவுளின் மகன். அவரிடம் வராமல் போனால் நரகம் நிச்சயம் என்று ஒரு அச்சத்தினூடாக கிறித்துவர்கள் அனைவரும் ஒற்றை வழிப்பாட்டு முறைக்குள்ளானார்கள். Inquisition என்ற முறையை வைத்து கொண்டு காலனியாக்கம் நடந்த நாடுகளில் எல்லாம் பல மக்கள் சித்ர வதைக்கும் மரணத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள். அமெரிக்க பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தொழிக்கபட்டதர்கான காரணங்களில் இந்த மதமாற்ற நிபந்தனையும் ஒன்று.


இஸ்லாம் மதம் உன்டான போதிலிருந்து வன்முறையால் பல மக்கள் மாற்றம் செய்யபட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற நாட்டுக்கு படையுடன் சென்று மதமாற்றி அந்த நாடுகளில் ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள். தொடர்ந்து வன்முறையையே வழியாக கொண்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அல்லாவை தவிர வேறு ஒரு கடவுளை தொழுபவன் காஃபிர் என்று கூறுகிறது. இஸ்லாமிய மதத்தை பரப்ப அவன் மீது போர்தொடுப்பதையும் ஒரு வழியாக சொல்கிறது. இன்றும் இந்த விவகாரங்கள் ஓய்ந்தபாடில்லை.


இப்படி மற்ற மதங்கள் எல்லாம் அதை தவிர பிற மதங்கள் மீது கடும் வன்முறை செலுத்தியிருக்கும் போது. இன்றும் இந்து மதத்தில் இத்தனை வேறுபாடுகளுடன் பல பிரிவுகள் இருக்கிறதென்றால். உன்மையில் அது நல்ல விஷயம். இத்தனை பிரிவுகளையும் இந்து மதம் ஒருங்கினைத்திருக்கிறது. வன்முறையில்லாமல். ஒரு வேளை வன்முறை உபயோகிப்பட்டிருந்தால் நாம் இந்த வித்தியாசங்களை பார்க்க மாட்டோம். அப்ராஹமிய மதங்களை போல் ஓரே கடவுள் என்ற முறையில் இருந்திருக்கும். ஆனால் அப்படி வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதற்கு அதில் உள்ள இத்தனை பிரிவுகளும் அதில் உள்ள வித்தியாசங்களுமே காரணம். இந்து மதத்துக்குள் இருக்கும் உட்பிரிவுகளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


இரண்டாவது காரணமாக அம்பேத்கார் சொல்லுவது இந்து மதத்தில் பொதுவான ஒரு நூலோ, வழிமுறைகளோ இல்லை என்று. எந்த மதத்தில் தான் இருக்கிறது. கிறித்துவம் என்று எடுத்து கொண்டால் அதில் எத்தனை கிளைகள். ரோமன் கத்தோலிக்க மதம், ப்ரோடஸ்டான்டுகள், ஓரியின்டல் ஆர்த்தடக்ஸ், பென்டா கொஸ்டுகள் என்று எத்தனையோ உட்பிறிவுகள். உலகம் முழுதும் பரவியிருக்கும் கிறித்துவ மதத்தினர் எல்லாம் ஒரே முறையை பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் இருக்கும் கிறித்துவர்கள் பலர் இந்திய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறார்கள் சாதி உட்பட. அது கண்டிப்பாக அமெரிக்க கிறித்துவனிடம் இருந்து மாறுபடும். அதற்காக கிறித்துவம் ஒரு மதம் இல்லை  என்று சொல்லி விட முடியுமா.


அதே போல் இஸ்லாமியத்திலும் சுன்னி, ஷியா, சூஃபி, அஹமதியர் என்று பல பிரிவுகள் உள்ளது. இன்று மத்திய அரபு நாடுகளில் நடக்கும் கொலைகள் எல்லாம் சுன்னி பிரிவினர் ஷியாக்களின் மீது நடத்துவது தானே? கொலை செய்யும் அளவுக்கு போகிறது என்றால் அவை இரண்டுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் எவ்வளவு. இல்லை ஆக்கிரமிப்பு செலுத்தும் பிரிவிடம் இருக்கும் சகிப்புதன்மை எவ்வளவு. ஏன் அம்பேத்கார் தழுவிய புத்தமதத்திலேயே எத்தனை பிரிவுகள். தேராவாதம், மஹாயானம், வஜ்ராயனா என்று உட்பிரிவுகளுடன் பல வகை இருக்கிறது.


அப்போது இந்து மதத்தில் மட்டும் இருந்தால் என்ன பிரச்சனை? அப்படி இல்லாமல் ஒரே பிரிவாக இருந்தால் தான் பிரச்சனை. அப்படி இருந்தால் ஒரு வழிமுறை, நூல் எல்லார் மீதும் வலுகட்டாயமாக சுமத்த பட்டிருக்கிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எல்லோரும் அவரவர் முறைகளை நூல்களை இன்றும் பேன அனுமதி இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் பெரும்பாலான இந்து மதம் இந்த முறையிலேயே வேலை செய்கிறது.


மூன்றாவதாக அவர் காரணத்துக்கும் மேலே சொன்ன பதில் தான். இன்று உலகம் முழுதும் பரவி வரும் கிறித்துவ மதத்துக்கு ஒரே பண்பாட்டு அடித்தளம் இருக்கிறதா? ஜெர்மனியில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும், கோயம்புத்துரில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும் எப்படி ஒரு பொது பண்பாடு இருக்க முடியும். என்ன தான் வலுகட்டாயமாக அவன் அந்த மதத்தை பின் பற்றினாலும் அவன் அன்றாடம் வாழும் சமுகம் அல்லவா அவன் பண்பாட்டை கட்டமைக்கிறது. மஹாபாரத கதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பல கிறித்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஏன் என்றால் இந்து கதை என்பதை விட இந்தியாவின் கதை. அதை விட்டு விட்டு அவர் ஹெர்குலஸ் கதை சொல்ல முடியுமா? சொன்னால் சற்று செயற்கையாக இருக்கும்.


நான்காவதாக சாதி. சாதி இந்தியாவிலிருந்து மறைய வேண்டும் என்பது என் கருத்து. அது தானாகவே நடக்கும் என்று தான் நான் நினைக்கிறேன். கல்வியும், நவினமயமும் அதை தானாக இந்தியாவிற்கு ஓரிரு நூற்றாண்டுகளில் முழுமையாக கொண்டு வரும். எந்த இந்துவும் நான் இந்த சாதியில் இருப்பதால் நான் இந்து என்று சொல்வானா என்று தெரியாது. இந்து மதம் சாதி சார்ந்த தனது கோட்பாடுகளை மறுபரிசிலனை செய்து சமத்துவம் நிலைக்குமாறு மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இந்து மதம் மாற்றினால் சாதி பிடிப்புள்ளவர்கள் கேட்பார்களா? மாட்டார்கள். ஏனேனில் அவர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் இல்லாவிடிலும் அவர்களுக்கு சாதி என்ற ஒரு பிடிப்பு எப்போதுமே உண்டு.


தொடரும்...

Monday, April 21, 2014

இந்து மதமும் அதன் உட்பிரிவுகளும்

இந்து மதம் என்றால் நாம் இன்று பெரும்பாலும் பக்தி விஷயங்களையே சொல்லுகிறோம். இந்து பெரும் கடவுள்கள், சடங்குகள் இவை அனைத்துக்கும் பக்தி சார்ந்த அர்த்ததையே சொல்கிறோம். இந்து மதம் இன்று நாம் அனுகுவது போல் மிக குறுகிய அளவில் ஒற்றைப்படையாக இருந்ததில்லை. அதில் பக்தி, தத்துவம், யோகம் என்று பல தளங்கள் இருக்கிறது.

இதில் பக்தி தளம் கூட இன்று பார்ப்பது போல் ஒற்றைபடையாக இருக்கவில்லை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல் வேறு வழிபாட்டு முறைகள் இருந்திருக்கிறது. சைவம், வைனவம் என்பது இன்றும் கூட பெரும்பாலோருக்கு தெரிந்ததே. சைவம் சிவனை பிரதான தெய்வமாக கொண்ட வழிபாட்டு முறை. வைனவத்துக்கு விஷ்னுவே பிரதான தெய்வம். இந்த இரு தளங்களை கூட இன்று அவ்வளவு கட்டுபாட்டுடன் கடைபிடிக்கும் மக்கள் இல்லை. ஒரு காலத்தில் சைவ மரபை சேர்ந்தவர்கள் சைவ தெய்வங்களை தவிர வேறு தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அப்படியே வைனவத்திலும். நான் சொல்லும் காலம் அப்பரும், ஞான சபமந்தரும், ஆள்வார்களும் வாழ்ந்த காலம். கால போக்கில் இது கரைந்து மக்களிடையே எல்லா தெய்வங்களும் கலந்து போனது. 


வைனவ மடத்தில் படித்த ஒருவருக்கு சைவ தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிமுகமே இருக்காது. சைவ பள்ளியில் படித்த உ.வே.ஸ்வாமிநாத ஐயருக்கு சீவக சிந்தாமனியை பற்றி கேள்வியே பட்டிராத காலம் ஒன்று இருந்தது. அதை ஒருவர் சுட்டி காட்டிய பின்னர் தான், அவர் அப்படி பல தமிழ் இலக்கியங்களை தேடி சென்று இருக்கிறார்.இன்று இந்த வேறுபாட்டை அழுத்தமாக கடை பிடிப்பது சில சாதிகளே, வைனவத்தை ஐயங்கார்களும், சைவத்தை சைவ பிள்ளைகளும், நாட்டு கோட்டை செட்டியார்களும். 

இந்த சைவம் வைனவம் மரபுகள் தவிர வேறு மரபுகளும் இருந்தன. சாக்தம், சக்தியே இதன் பிரதான தெய்வம், பெண் தெய்வங்களாளான மரபு. கௌமாரம், முருகனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு.காணபத்யம், கணபதியை பிரதானமாக கொன்ட மரபு. சூரியனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு சௌரம். இது போக தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறை உண்டு, குறியிட்டு வழிபாட்டு முறை. இது சாக்த்தத்தில் பெரும்பங்கு ஆற்றியது. 

இந்த எல்லா மரபுகளும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த பழங்குடி வழிபாட்டு முறையிலிருந்து படி படியாக வளர்க்கப்பட்டது. இந்து மதம் தவிர இன்ன பிற மதங்களான சமனம், பெளத்தம் ஆகியவையுடனும் உரையாடி வளர்ந்தது. எட்டாம் நூற்றான்றில் தொடங்கிய பக்தி இயக்கம் சைவத்தையும், வைனவத்தையும் பெருமளவில் வளர்தது. கால போக்கில் பிற மதங்கள் சைவம் மற்றும் வைனவத்தின் உள் இழுக்கப்பட்டன, அந்த பெரு மதங்களில் உள்ளிளுக்கபட்ட தெய்வங்கள் உப தெய்வங்களாகின, சடங்குகளும், சிலை அமைப்புகளும் உள் இழுக்கப்பட்டன. 


இந்த பிரதான மற்றும் உப தெய்வங்கள் எல்லாம் பெரு தெய்வங்கள். இவை போக நாட்டார் தெய்வங்கள் பல உள்ளன. நாட்டார் தெய்வங்கள் உக்கிரமான தெய்வங்கள். அவற்றின் உக்கிரத்தை தனிக்க தான் பல் வேறு சடங்குகளும், பலிகளும். அவை அருள் பாலிக்கும் தெய்வங்கள் அல்ல, பயமுறுத்தும் தெய்வங்கள். அவற்றின் வரலாற்று பாடல்களில் கோழி கறி, ஆட்டு கறி, பன்றி, மாடு, நர பலி, சூலிப் பெண்னை பலியாக கேட்பதே அதற்கு சான்று.  இப்படி எல்லா ஊருக்கும் பல நாட்டார் தெய்வங்கள் உள்ளன. சுடலை மாடன், பன்றி மாடன், கழு மாடன், இசக்கி, நீலி, சொறி முத்து, பாண்டி, அய்யனார், முனிஸ்வரன் என்று பல.


இந்து மதத்தின் ஒரு தளம் பக்தி மரபு என்றால் இன்னோரு தளம் தத்துவம். தத்துவம் அறிவு சார்ந்த தளம். தர்க்கதாலும், வியாக்யானத்தாலும் கட்டமைக்கபட்டது. 'நான் யார்?', 'உலகம் எப்படி உருவாகியது?' போன்ற அடிப்படையான ஆழமான கேள்விகளுக்கு பதில் தருவது அல்லது அது சார்ந்து சிந்திக்க செய்வது. அந்த தத்துவ தளத்தில் பல வகை உண்டு. வேதாந்தம், பூர்வ மிமாம்சம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம். வேதாந்தமும், பூர்வ மிமாம்சமும் வைதிக மரபுகள். பிற நான்கும் அவைதிக மரபில் அடங்கும். சார்வாகம் என்னும் கடவுளை மறுக்கும் நாத்திக மரபும் இந்து மதத்தில் அடக்கம்.

இது போக இந்து அல்லாத மதங்களான சமனம், பெளத்தம், ஆசிவகம் மற்றும் மேல சொன்ன சார்வாகமும் நாத்திக மதங்களாகும். இந்த ஆத்திக, நாத்திக தத்துவ தளங்கள் அனைத்துமே நடைமுறையில் முக்தியை உணர்வதற்கு யோக முறை பின்பற்றப்பட்டது.

இந்து மதம் பல மரபுகள், வழிப்பாட்டு முறைகளுடன் வளர்ந்து அவை அனைத்தையும் ஒருங்கினைத்து தனக்குள் அடக்கி கொன்டது. அதில் முக்தி பெருவதற்கு ஒருவன் எந்த வழியையும் தேர்ந்து எடுக்கலாம், அல்லது அவனே ஒரு புது மார்க்கத்தை கண்டடையளாம்.

இத்தனை பன்முக தன்மையுடன் இருந்த இந்து மதத்தை பற்றி இன்று மிக எளிமையான புரிதலே பெரும்பாலான இந்துகளுக்கு இருக்கின்றது. இந்த அறிவு தளங்கள் எல்லாம் கால காலமாக வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது. அதன் வளர்ச்சி இப்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னே முடங்கி போய்விட்டது. இப்படியே போனால் இந்ந தத்துவ மரபுகளில் இருக்கும் நம் முன்னோரின் ஞானத்தையும் அதை சார்ந்து நாம் மாற்றி அமைக்க வேண்டிய திருத்தங்களையும் நம் வருங்கால தலைமுறைக்கு இல்லாமலாக்கிவிடுவோம்.