Tuesday, October 27, 2015

இந்திய மெய்ஞானமும் தர்க்கமும்

இந்து ஞான மரபை அனுகும் போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அது மேலை தத்துவ மரபுக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம். மேலை தத்துவ மரபுகள் தர்கத்தை தன் அடிப்படையாக கொண்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்து ஞான மரபில் அப்படியல்ல.. சில வரிகளை மேற்கொள் காட்டுகிறேன்.

இந்த வரிகளை ஸிம்மர் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்.

Philosophy as the handmaid of empirical research, thought wearing the blinders of the standards of contemporary science, and metaphysics open to rational criticism from every quarter - in short, reason infallible; this is the ideal and requirement of the practical-minded thinker. Whereas the other is simply not convinced by all the plausible searching and discovering...what he wants is a response...to the primary question in his mind.

Something beyond critical reasoning is what he requires; something that someone of adequate mind should have realized intuitively as a Truth(with a capital T) about man's existence and the nature of the cosmos; something to enter the breast and pierce the heart with what Baudelaire called "the steely barb of the infinite". What he requires is a philosophy that will confront and resolve the conflict once performed by religion; and this is a need from which no number of college courses on the validity of inference can emancipate him.
- Page 16, Philosophies of India, Heinrich Zimmer (ஓழுங்குக்காக வரிகளின் வரிசை சற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது)

தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்ட ஞானம். ஒரு குறிப்பிட்ட ஞானிக்கு கிடைத்த ஒரு உள்ளுணர்வு(Intuition) - தரிசனம். அதுவே ஒரு ஒட்டு மொத்தமான பிரபஞ்ச தரிசனமாயும் அடிப்படையாயும் அமையமுடியும். தர்க்கத்தால் நிராகரிக்க முடியாத ஒரு தத்துவத்தை தேடும் ஒருவனுக்கல்ல, நெஞ்சை கிழித்து உள்ளிறங்கும் தரிசனத்தை தேடும் ஒருவனுக்கே இந்திய ஞானத்தில் விடை கிடைக்கும்.

//இந்து தத்துவ மரபு எனும்போது இந்து மரபில் உள்ள பல்வேறு சிந்தனைப்போக்குகளை மட்டுமே கூறமுடியும். ஆனால் தரிசனம் என்பது சிந்தனையினால் உருவாக்கப்பட்டது அல்ல. தர்க்கபூர்வமாக முழுமையாக விளக்கிவிடக் கூடியதும் அல்ல. தர்க்கமானது ஓர் எல்லை வரை மட்டுமே போகமுடியும். தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அதிகம்.

உதாரணமாக ‘பிரபஞ்சமே ஒரு சக்தி பிரவாகம்’ என்ற ஆதி தரிசனம், தர்க்கபூர்வமாக ஒருவர் அடையப் பெற்ற ஒன்றாக இருக்க இயலுமா என்ன? தன்னைச் சுற்றி உள்ள ஒவ்வொரு பொருளையும்  எடுத்து பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது? இல்லை. அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொத்தமான அகப்பார்வை மட்டுமே.//
பக்கம் 45, "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்", ஜெயமோகன்
----
இந்திய மெய்ஞானம் என்பது அறிவை தொகுத்து வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமல்ல.  அது ஒரு மனிதனின் அக மற்றும் தரிசன மாற்றத்தையே  பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது.

"They(Hindu Philosophers) study also the visible traits of phenomenal existence, criticizing the data of external experience and drawing deductions with respect to the supporting principles. India, that is to say, has had, and still has its own disciplines of psychology, ethics, physics, and metaphysical theory. But the primary concern-in striking contrast to the interests of the modern philosophers of the West-has always been, not information, but transformation: a radicalchanging of man's nature and, therewith, a renovation of his understanding both of the outer world and of his own existence; a transformation as complete as possible, such as will amount when successful to a total conversion or rebirth"
- Page 4, Philosophies of India, Heinrich Zimmer

//தரிசனங்கள் என்பவை தத்துவ நிலைபாடுகளும் கூடத்தான். ஆகவே மெய்ஞான மரபு என்பதும் தத்துவ மரபு கூடத்தான். ஆனால் தத்துவத்திற்கு அப்பால் கற்பனையும் உள்ளுணர்வும் செல்லும் தூரம் வரை தரிசனங்கள் நீண்டு செல்கின்றன. மெய்ஞான மரபும் அப்படி நீண்டு செல்கிறது.

ஒரே வரியில் இப்படி கூறலாம். அறிவு என்பதற்கு ஞானம் என்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான்அது.//
பக்கம் 46 "இந்து ஞானமரபில்..."
----
தர்ககத்தையும் மீறி ஒரு அறிதல் நிகழ்கிறது என்றால் அது தர்ககத்தால் விளக்கபட முடியாது. அதே தரிசனத்தை நானும் அடைய வேண்டும். இதற்கான மொழி வேறு. இலக்கியத்தை இதற்கான மொழி என்று சொல்லலாமென நினைக்கிறேன். அதனால் தான் நம் மரபில் ஏராளமான கதைகளும் புராணங்களும் இருக்கிறது.

இங்கு தான் குரு நமக்கு கை கொடுப்பார்.குருவிடம் செல்லும் ஒரு மாணவனுக்கான முதல் விதி அவன் அது வரை அறிந்ததை எல்லாம் எடுத்து ஓரத்தில் வைத்து விட்டு குருவிடம் சரணடைவது. அதில் தர்ககமும் அடங்கும்.

இந்திய தரிசனங்களை தத்துவம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தத்துவத்தை விட ஆழமானவை அவை. அதனால் தான் மெய்ஞானம் என்ற வார்த்தை உபயோகிக்கபடுகிறது. அது மெய்யியலில் இருந்து மாறுப்பட்டது என்று நினைக்கிறேன். தத்துவம் என்பது முழுக்க முழுக்க தர்க்கத்தை அடிப்படையாக கொண்டது. தத்துவத்தை தர்க்கமே வழிநடத்தி செல்கிறது. தர்க்கம் என்ற தண்டவாளத்தின் மேல் தத்துவம் ரயில் போல செல்கிறது.

கற்பனையாலோ உள்ளுணர்வாலோ கண்டுபிடித்த விஷயத்தை தர்க்கம் மூலம் விளக்கமுடிகிறது. தர்க்கத்தின் மூலம் விளக்கி அது நீருபனம் செய்யப்பட்ட தத்துவமாக ஆகிவிடுகிறது. இன்னொரு தர்க்க கட்டுமானத்தை கொண்டு நீருபிக்கப்பட்ட தத்துவம் விமர்சிக்கப்படுகிறது. ஒரு தத்துவத்தில் விமர்சித்து நிராகரிக்கப்பட்ட கருத்துகளை களைந்து ஏற்புடைய கருத்துகளை கொண்டு வேறு ஒரு தத்துவம் வளரக்கூடும்.

நமது இந்திய மெய்ஞானத்தில் தரிசனத்துக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டு அதன் பின் அந்த தரிசனத்துக்கு தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டு தத்துவமாக்கப்படுகிறது.
----

இந்திய ஞானத்தை மரபை பின்பற்றும் ஒருவர் முதலில் தெரிந்து கொள்ளவேண்டிய பாடமிது.

Monday, October 19, 2015

காந்தியும் இந்திய ஆன்மீகமும்

நவகாந்தியத்தை பற்றி மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரையை படித்தேன். அதன் தமிழ் மொழியாக்கம் இங்கு

காந்தியை இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியாக வைத்து விளக்குமிடம் பிடித்திருந்தது. காந்தி அந்த மரபின் அடிப்படைகளுக்கு எப்படி தன் வழியில் விளக்கம் கொடுத்தார் அதிலிருந்து எப்படி ஒரு வாழ்வியல் வழிமுறையை வரையறுத்தார் என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். நவ இந்தியர்கள் காந்தியை பின்பற்றுபவர்களாக, காந்தியவாதிகளாக இருக்க முயற்சிக்காமல் காந்தியை-போல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியை-போல் எப்படி இருப்பது? காந்தி எங்கிருந்து தனது வழிமுறையை எடுத்து கொண்டார்? இந்திய மெய்ஞான மரபிலிருந்து. அதற்கே திரும்ப செல்வோம். அந்த மெய்ஞானத்தின் அடிப்படைகளை கொண்டு நமது காலகட்டத்திற்கும் நமது உண்மை தேடலுக்கும் ஏற்றார் போல் ஒரு வாழ்க்கை முறையை வரையறுப்போம். மேலும் முக்கியமாக அந்த வாழ்க்கை முறையை நமது வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும், அனைத்து சமயங்களிலும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

காந்தியை-போல் நாம் வாழ வேண்டுமென்றால் இரு முக்கியமான விஷயங்களை நாம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
1. அகங்காரம்
2. புலன் இன்பம்

அகங்காரத்தை சிறிதாக்கி நமக்குள் இருக்கும்  ஆன்மாவிற்கு - spirit முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புலன் இண்பமே வாழ்க்கை என்றில்லாமல் ஆன்ம இண்பத்தை மையபடுத்தவேண்டும். இந்த இரண்டையுமே நான் காந்தி தனது சிந்தனையின் செயல்பாட்டின் முக்கியமான அடிப்படையாக கொண்டார் என்று கருதுகிறேன். தாக்குபிடிக்கும் பொருளாதாரம், சுழலியல் என்று பல்வேறு தளங்களில் அவரின் சிந்தனை-செயல்முறைகளை போட்டு பார்த்தாலும் அனைத்துக்கும் வேர் இந்த ஆதார புள்ளிகளிலிருக்கிறது.   தனது ஆன்மாவின் குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.. தன் புலனடக்கம், உணவு பழக்கவழக்கங்கள் வழியாக அந்த ஆன்மாவை சுத்திகரிக்கிறார்.

அகங்கார மற்றும் புலன் இன்ப கட்டுபாடு என்ற இரு மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்த தொடங்கினால், சுயநலம்  என்பதற்கான அவசியம் குறைந்து போகிறது. சமூகத்தின் மீது அக்கரையும். உலகத்தின் மீது பொருப்புணர்வு தோன்றும். அங்கு ஆரம்பிக்கிறது நாம் செய்ய வேண்டிய சேவை. சுயநலமில்லாத, அறத்தின் அடிப்படையில், அஹிம்சையை வழிமுறையாக கொண்டு இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.

இங்கு தான் காந்தி மற்ற இந்திய மெய்ஞானிகளிடமிருந்து வெறுபடுகிறார். ஆன்ம தேடலால் முற்றிலும் தங்களுக்குள் ஆழ்ந்துவிடும் மற்ற ஆன்மீகவாதிகள் போலில்லாமல் ஆன்மாவையும் சமூகத்தையும் இணைத்து பார்க்கும் பார்வை கொண்டவர் காந்தி.

அகங்காரம், புலன் இன்பத்தை கட்டுபடுத்துதல் போன்ற விழுமியங்கள் எல்லாம் காந்தி மட்டும் முன்வைத்தது அல்ல. நம் பண்பாடே இதை வலியுறுத்துகிறது. அதனால் தான் புலன் இன்பத்தை சிற்றின்பம் என்கிறோம். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவது போல் புருஷார்த்தம் என்பதை நம் மரபு வகுத்தளிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை வாழ்க்கையின் பகுதிகளாக வரையறை செய்கிறது.

இதில் சில மகான்கள் நேரடியாக வீடுபேறு எனும் கடைசி நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் மற்ற மூன்றையும் அனுபவித்து விட்டு கடைசியில் அங்கு வந்து சேருவார்கள். வராமல் செல்பவர்களும் உண்டு. காந்தி அந்த கடைசி நிலையில் இருந்து நம்மிடம் உரையாடுகிறார். அந்த நிலைக்கு நாம் செல்லவேண்டும். இல்லை என்றால் பிற மூன்று தளத்திலிருந்து அங்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இன்பம் என்பதை விலக்கி வைப்பதாக நம் மரபு இருக்கவில்லை. அதை வாழ்வின் ஒரு பகுதியாக சொல்லி காம சுத்திரம் எழுதி வைத்தது தான் நம் மரபு. அதன்படி இன்பத்தை முற்றும் துறந்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் கட்டாயமில்லை. அளவான இன்பம் வேண்டுவோர் அடைந்து கொள்ளலாம். அந்த இன்பத்தில் கள்ளும் ஒரு பகுதியே.

காந்தியிடம் இருக்கும் அந்த விஷேச கலவை குணம் ஆன்ம விடுதலை + உலக நலம் என்பதில் இரண்டாம் பகுதியான உலக நலம் என்னும் கூறு காந்தியை-போல் வாழ நினைப்பவரின் அனைத்து வாழ்க்கை தளத்திலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும். அதன்படி நாம் கள் குடித்தாலும் அந்த குடிக்கும் முறையும் அமைப்பும் உலக நலம் கருதுவதாக கட்டுப்பாடு உடையதாக இருக்கவேண்டும். நம் இண்பத்துக்காக எதையும் அழிப்பதாக இருக்ககூடாது. நமது இலக்கு காந்தி நின்று பேசும் அந்த தளத்தை சென்றடைவது என்ற உணர்வு எப்போதும் நமக்கிருக்கவேண்டும்.

கிழக்கு x மேற்கு மெய்யியல் - சில கேள்வி பதில்கள்

நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டது.


மனிதனின் அறிவு எப்படி பெறப்படுகிறது?

நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
கிழக்கு மதங்கள் உடலை மீறி நான் என்ற ஒரு இருப்பை அடையாளம் காட்டுகிறதே? மேற்கத்திய மெய்யியலின் நிலை என்ன?

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

பேரியற்கையை பரப்பிரம்மம் என்று சொல்லலாமா?

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

Thursday, October 1, 2015

காந்தியின் நினைவில்

காந்தி என்னை கவர்ந்த தருணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. சில வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்தது. அந்த தருணத்தில் நான் என் அகத்தின் அஸ்திவாரங்களை உடைத்தெடுத்து மறு கட்டுமானம் செய்து கொண்ட காலம். அப்படி ஒரு அடி என் அகங்காரத்தின் மேல் விழுந்தது. அகங்காரத்தை காலடியில் போட்டு நசுக்கி தள்ளினால் ஒழிய அந்த தருண நரகத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழ்நிலை. அந்த தருணத்தில் எனது அகம் பல உண்மைகளை கண்டடைந்தது. எந்த முன் அறிவும் இல்லாமல் தத்துவார்த்தமான சில விஷயங்கள் என்னில் எழுந்தது. இந்த பிரபஞ்சத்தின் முன் நான் எத்தனை சிறியவன் என்பதை முழுதாய் உணர்ந்த காலம் அது. என் சிந்தனைகளின், வாழ்க்கை நோக்கின் அடிகட்டுமானத்தை மாற்றி அமைத்தது அந்த காலகட்டம்.

அப்போது புரிந்தது மனிதர்களின் செயல்கள் எவ்வளவு அர்த்தமற்றது என்று. பகைகளும், வெறுப்பும், கோபமும் தேவையற்றது என்று விளங்கியது. இயற்கையாக மனிதர்கள் மேல் அன்பு பிறந்தது. அதே போல் இயற்கையாக காந்தியின் மீது அபிமானம் தோன்றியது. அவரது அஹிம்சையின் மீது பெரு மதிப்பு வந்தது. அதற்கு முன்னால் காந்தியை பற்றி சிறிதளவு கூட நான் படித்ததில்லை. காந்தி என்று அனைவருக்கும் தெரிந்த பொது பிம்பமே எனக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சுபாஷ் சந்திர போஸ் தான் மிகவும் பிடித்தவர். ஆனால் அந்த தருணம் என் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றது, உலகின் மீது புது பார்வையை ஏற்படுத்தியது. என் அகம் முதிர்ச்சி அடைந்த தருணம் அது என்று நான் கருதுகிறேன். அந்த தருணத்தில் காந்தி என்னுள் நுழைந்தார்.

அதன் பிறகு சில வருடம் கழித்து ஜெவை கண்டறிந்து காந்தியை பற்றி அவ்வப்போது படிக்கும் போது அவரின் மற்ற பரிமானங்களையும் தெரிந்து கொண்டேன். என்னை பொருத்த வரை ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறான் என்பதை விட அவன் எவ்வளவு நல்ல நோக்குடனும் நேர்மையுடனும் இருக்கிறான் என்பது முக்கியம். சமீபத்தில் அந்த கருத்தை விரிவாக்கி கொண்டேன். அதை வைத்து நாம் காந்தியை அளவிடலாம் என்று நினைக்கிறேன். மக்கள் தலைவராய் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மனிதருக்கு தேவையான அடிப்படை குணங்கள்,

1. பொது நலம் மற்றும் நேர்மை
2. அணுகுமுறை
3. அறிவும் சிந்தனையும்

முதல் அம்சம் குறித்து அதிகம் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் அம்சமான அணுகுமுறை பற்றி நிறையவே சொல்லாம். ஒரு நல்ல கருத்தை லட்சியத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது. அதை எப்படி நடைமுறையில் வெல்வது என்பதை வரையறுப்பது அணுகுமுறை. இதில் பல வழிகளை பல தலைவர்கள் கடைபிடித்திருக்கிறார். அதில் இன்று வரை எனக்கு தெரிந்து காந்தியின் வழிமுறையை மிகவும் மேலானதாக கருதுகிறேன். அஹிம்சையை முன் வைத்து மக்களை பிரதானபடுத்தி போராடும் வழிமுறை அது. மார்ட்டின் லூரத் கிங் சொல்வது போல "Christ gave me the message.  Gandhi gave me the method." காந்தி மறைந்துவிட்டாலும் இன்னும் பல காலங்களுக்கு இந்த வழிமுறை பல காந்திகளை உருவாக்கும்.

மூன்றாவதாக காந்தியின் சிந்தனையும் அறிவும். காந்தி அறிவுஜீவியா என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான உலக நடப்புகளும் வரலாறும் அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதை விட அவருக்கு மக்களுடனான நேரடி உறவிருந்தது. நாள் தோறும் மக்களிடம் தொடர்பிலிருந்ததால் அவருக்கு மக்களின் உண்மை நிலவரம் தெரியும். அவர்களின் உணர்வுகள் கஷ்டங்களை அறிந்தவர். அவரது சிந்தனை முறை வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு சிந்திப்பதாக இருந்தது. எதை தர்க்கபூர்வமாக அணுகவேண்டுமோ அதை அந்த நோக்குடன் பார்க்கும் தன்மை அவருக்கிருந்தது. நவீன காலத்தின் மக்களுக்கும் காலத்திற்கும் உகந்த அம்சங்களை எடுத்துகொண்டு குறைபாடுகளை சுட்டிகாட்ட அவரால் முடிந்தது.

ஆனால் மேலே சொன்னவை எல்லாம் ஒரு மக்கள் தலைவரை உருவாக்கிவிடும். ஒரு மஹானை உருவாக்கிவிடாது. யோசித்து பார்த்தால் இந்த குணாம்சங்கள் ஓரளவுக்கு நேருவுக்கும் பட்டேலுக்குமே பொருந்தி வரும். இருவரும் நேர்மையும் நல்ல நோக்கமும் உடையவர்கள். காந்திக்கு பின் இந்தியாவை கட்டி எழுப்பும் திறன் கொண்டவர்கள். சில விஷயங்களில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக நிறுவினார் நேரு. 500க்கும் மேற்பட்டதாக சிதறிகிடந்த இந்திய மாநிலங்களை, குறுநிலங்களை ஒன்றினைக்கும் அறிவும் திறனும் பட்டேலுக்கு இருந்தது.

ஆனால் இதை எல்லாம் விட மேலும் ஒரு அம்சம் காந்தியிடம் இருந்தது. தன் உள்ளுணர்வுடன் உரையாடும் திறன். இறைவன் தன்னை வெளிபடுத்தி கொள்ள தேர்தெடுத்த ஒரு விஷேச மனிதர் அவர். அதுவே காந்தியை தலைவராக மட்டுமில்லாமல் ஒரு ஞானியாகவும் ஆக்கியது. அந்த ஞானமே அவரை அஹிம்சையை தேர்ந்தெடுக்க செய்தது. அந்த அஹிம்சையினாலேய அவர் மஹான். மனித குலத்துக்கு அவர் கொடுத்த நற்செய்தி அஹிம்சையே.

இன்றைய உலகுக்கு வேறு எந்த அறிஞர், தலைவர் தேவையோ இல்லையோ காந்தி மிகவும் தேவை. அவர் கருத்துக்கள் மட்டுமல்ல அவரே மீண்டும் இங்கு வர வேண்டும். அவருக்காக இந்தியாவும் உலகமும் காத்துகொண்டிருக்கிறது. 

பெரியாரின் பகுத்தறிவு

பெரியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை தற்போது படித்து முடித்தேன். அந்த புத்தகத்தில் பெரியாரை விமர்சன நோக்குடன் பார்க்காமல் புகழும் நோக்குடன் எழுதப்பட்டிருந்தது. இருந்தும் அவரது வாழ்க்கையை உள்ளபடியே பதிவு செய்திருந்ததாகதான் தோன்றியது. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களே அவரின் அணுகுமுறையை தெளிவாக நமக்கு எடுத்துகாட்டுகிறது.

தி.கவிற்குள் அண்ணாவின் தனிப்பட்ட போக்கினால் எரிச்சலடைந்த பெரியார் இப்படி சொல்கிறார்(எனது வார்த்தைகளில்). "உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் கொண்டு நான் முன்வைக்கும் கொள்கைகளை சிந்தித்து பாருங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானால் எடுத்துகொள்ளுங்கள். கொள்கை ஏற்புடையதாக இருந்தால் கட்சியில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த மறுநொடியில் உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் எடுத்து ஓரமாக வைத்துவிடுங்கள். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், செய்யுங்கள். இது சர்வாதிகாரம் தான். ஆனால் அதை கொண்டு தான் கட்சியை நடத்த முடியும்" என்கிறார்.

இது பகுத்தறிவுக்கே எதிரான நிலைபாடு. நவீன ஐரோப்பாவில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகி சில காலங்களிலேயே அங்கே தனித்துவவாதம் -individualism என்ற கருத்து தோன்றிவிட்டது. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அனைவருக்கும் அவரவர் தர்க்க புத்தியை உபயோகிக்கும் உரிமை உண்டு என்று அடக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். இதன் விளைவாக பிறந்ததே ஜனநாயகம்.

பகுத்தறிவின் வரலாறு இப்படி இருக்க பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை என்றெல்லாம் பேசிய பெரியார் மக்கள் அவர் கட்சியில் சேர்ந்த பிறகு பகுத்தறிவை ஓரமாக வைத்துவிடுங்கள், நான் சிந்திக்கிறேன் உங்களுக்காக என்று சொல்வது பெரும் அபத்தமாக தெரிகிறது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மாநிலத்து மக்களிலேயே தனக்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்பது போல் அவர் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பெரியாரிடம் பொது நல நோக்கும், நேர்மையும் இருந்ததாக நான் கருதுகிறேன். அது ஒரு ஆளுமைக்கு தேவையான முக்கியமான அடிப்படை தகுதி. அவர் பகுத்தறிவு என்ற பிரச்சாரம் செய்ததும் அன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அந்த பகுத்தறிவின் ஆழம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் தனி என்றாலும் அவர் அப்படி ஒரு கருத்தை பரப்பினார் என்பதற்காக அவருக்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் தனக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என்பது போல் பேசியிருக்கும் அளவுக்கு அவரது பகுத்தறிவு அணுகுமுறைகள் அறிவுபூர்வமாகவும் இல்லை, ஆழமானதாகவும் இல்லை, நடைமுறைக்கு ஏற்றதாகவும் இல்லை.