Tuesday, August 25, 2015

இரவெனும் கடல்

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி 
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே



இந்த சங்க பாடல் குறிப்பிடும் நிலைக்கு நேரெதிரான உணர்வை அடைந்திருக்கிறேன். பலரும் அடைந்திருக்கலாம், இரவு கரைகிறேதே என்று ஏங்க வைத்திருக்கிறது. பகல் - அதை நான் வெறுக்கிறேன். எங்கும் இடம். எதை வைத்து அடைப்பது இந்த இடங்களை. எவ்வளவு நிறைத்தாலும் நிறைவதில்லை. இங்கு என் முன்னே எத்தனையோ தோன்றி நிற்கின்றன. எத்தனை குழப்பங்கள் எத்தனை தடுமாற்றங்கள் எத்தனை பாவனைகள்.

ஆனால் இரவு அப்படி அல்ல. இரவெனும் இருள் பொங்கி வழியும் கடல். இருள் - அது அமிர்தமல்லவா. என்னை மூழ்கடித்து அனைத்து கொள்கிறது. எங்கும் எதுவும் இல்லை. நானே. நான் மட்டுமே. அனைத்தும் நானே. என் எண்ணங்களால் மட்டுமான நான். என் அகமே அனைத்தும். எத்தனை நிறைவு. என் அகம் விஸ்வருபம் எடுத்து எங்கும் பரவியிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு சிறு கணத்தில் இந்த பெருங்கடல் வற்றி பாலையாகிறது. பாலையில் விழுந்த மீனாய் துடிக்கிறேன். அந்த கடலில் இரு கைபிடி இருளை எடுத்து வைத்துகொள்ள முடியாதா? என் கண்களில் நான் விரும்பும் போது வைத்துகொள்ள.

ஒருவேளை இரவில் நம் அகமே அனைத்தும் ஆவதால் அகத்தில் ஊற்றெடுப்பது நம்மை அழுத்திவிடுகிறது. பகலில் நம் அகம் ஒரு சிறு பறவை என அங்கங்கு பறந்து கொண்டிருக்கிறது. 'சூ' என்று விரட்டிவிட்டு நம் வேலையை பார்க்கக முடிகிறது. ஆனால் இருளில் அதுவே பெருங்கடலாகி நம்மை மூழ்கடிக்கிறது. அதில் ஏற்படும் ஒரு சிறு சலனம் இரவில் பேரலையாய் நம்மை அழுத்திவிடுகிறது. அதில் கசியும் விஷம் பெரும் ஊற்றென பொங்கி பாய்ந்து கடலையே நஞ்சாக்கிவிடுகிறது.

நுகர்வோரின் தலைவிதி

http://www.jeyamohan.in/78043#.VdwVdZct_ZZ
http://www.jeyamohan.in/78109#.VdwVgJct_ZY

எனக்கு ஒரு வருடத்திற்கு முன்  At&t சேவையில் ஒரு பிரச்சனை நிகழ்ந்தது. அவர்களை கேட்டால் பரிசோதித்து பார்த்து விட்டு எங்கள் பிரச்சினை இல்லை என்றார்கள்.

அமெரிக்காவில் Better business bureau என்ற நுகர்வோர் அமைப்பிருக்கிறது. எழுதிப்போட்டேன். பின் At&tயே அழைத்து மன்னிப்பு கோரி நான் கேட்ட நஷ்ட ஈடு $100 கொடுத்தார்கள். அது என்னை பொருத்த வரை பெரிய வெற்றி. இது போன்ற ராட்சஷ நிறுவனங்களின் முன் ஒரு சிறு எறும்பாக தனிப்பட்ட ஒரு நுகர்வோர் நிற்கிறான். இவர்களிடம் காசு சென்று விட்டால் அது முதலை வாயில் நுழைந்த முயல் தான். எளிதில் திரும்பி வாங்க முடியாது. ஆயிரம் விதிமுறைகள் வைத்திருப்பார்கள்.

ஆனால் இதை தொடர்ந்து செய்வது மிகவும் சலிப்பூட்டக்கூடிய ஒரு காரியம். அதில் நேரத்தை செலவு செய்யமுடியாது. காசு கொடுத்தாலும் வேலை நடப்பத்தில்லையே என்ற ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Tuesday, August 18, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு மேலே சித்தார்த் கொடுத்த கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும். சங்க இலக்கியம் பற்றிய ஜெவின் உரையில் இதை சொல்லியிருப்பார்.

அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.

Sunday, August 9, 2015

அயல் வாழ்க்கை

அமெரிக்காவில் வாழக்கூடாத காரணங்கள் என்று ஐந்தை என் மனதில் உருவாக்கி வைத்துள்ளேன். அதில் ஒன்று மதத்துடன் தொர்புடையது. ஆனால் மதம் என்ற அனுபவத்தை அடைவதற்கு வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு வழிகள் குறைவு என்பது என் எண்ணம்.

இதில் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சில கருத்துகளை சொல்கிறேன். இது வேறு இடங்களில் வேறு வகையாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டினால் எண்ணத்தை மாற்றி கொள்ள தயார்.

அமெரிக்காவில் நான் வாழும் இடத்தில் இருக்கும் இந்து மதம் என்பது வெறும் சடங்கு சார்ந்தது அல்லது நிறுவனமயமான ஒரு இயக்கம் இது இரண்டையும் தாண்டி ஒரு இயல்பான இந்து மதம் அல்லது இந்த மதத்தின் பல வழி சாத்தியங்களை கொண்ட ஒரு மதத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இயலவில்லை.

இங்கிருக்கும் இந்து கோவில்களும் வெறும் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் ஆண்டவனிடம் பேரம் பேசுவதற்குமான ஒரு இடமாக தான் இருக்கிறது. நம்மூர் கோவில்களுக்குள் நுழையும் போது தோன்றும் ஒரு ஆன்மீகமான அனுபவம் இங்கு தோன்றுவதில்லை. ஜோசப் கேம்பில் ஒரு பேட்டியில் சொன்னார் - வழிபாட்டு தளங்க்களுக்குள் அப்படி ஒரு விஷேச அனுபவம் கிடைப்பதற்கு காரணம் அங்கிருக்கும் மத குறியீடுகள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவை என்று. இங்கிருக்கும் கோவில்கள் அப்படி அமைக்கப்படுவதில்லை. ஏராளமான கோவில்கள் இருக்கிறது ஆனால் அது இங்கிருக்கும் திருமண மன்டபம் போலான ஒரு கட்டடதுக்குள் அப்படி சில அறைகளை பிரித்து சில தெய்வ சிலைகளை வைத்திருக்கிறார்கள். அது கோவிலுக்கு செல்லும் முழுமையான அனுபவத்தை தருவத்தில்லை.

இப்படி வேறு ஒரு நாட்டில் வழிப்பாட்டிடங்கள் வைக்கும் போது அப்படி முழுமையான ஆன்மீக அனுபவத்தை அடையும் வகையில் வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை ஜரோப்பியர்கள் காலனிய காலத்தில் வெளிநாட்டுக்கு சென்ற போது அங்கு அவர்கள் தங்கள் வழிப்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களின் முறையில் வழிப்பாட்டிடம் அமைத்து கொண்டார்கள். அப்படி இந்தியர்கள் நாம் செய்வதில்லை.

பண்டிகைகளும், கோவில் திருவிழாக்களும் நம் ஊரில் வாழும் போது நம்மிடமிரருந்து பிரிக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபாவளி, பொங்கல் எதுவானாலும் சரி ஊருக்குள்ளேயே ஒரு கொண்டாட்டம் தானாக புகுந்துவிடும். இப்படிப்பட்ட அனுபவங்களை வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் இழந்துவிடுகிறார்களோ என்று தோனுகிறது.

கிறிஸ்துமஸ் காலங்களில் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு கிறித்துவர்களும் குழந்தையாக மாறிவிடுவதை காணமுடிகிறது. எனது மேலாளர் அவரது அறைக்குள்ளேயே ஒரு சிறிய கிறிஸ்மஸ் மரத்தை வைத்து ஒரு சிறுவனைபோல்  அலங்கரித்து கொண்டிருந்தார். இது போன்ற கொண்டாட்டங்கள் வாழ்க்கையில் மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன். நம் அன்றாட வாழ்விலிருக்கும் சுமையை மறக்க வைக்கும் ஒரு தருணம்.

பண்டிகைகளை தவிர நான் பார்த்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரானாலும் அங்கிருக்கும் கோவில்களின் திருவிழா நடக்கும். கோவிலில் கொடியேற்றி பத்து இருபது நாள் அந்த திருவிழா தொடர்ந்து தேர் இழுப்பதோடு இது முடிவடையும். பண்டிக்கைள் ஒவ்வொருவரும் தனிதனியேயும் அருகிலிருப்பவர்களுடனும்  பகிர்ந்து கொண்டாடுவதென்றால் இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்கள் ஊரே திரண்டு கொண்டாடுவதாகும். தேர் இழுக்கும் போது அந்த ஜனக்கடலுடன் இணைந்து அதில் பங்குகொண்டு அனுபவிப்பது ஒரு உச்சம். இதை போன்ற அனுபவங்கள் இங்கு சாத்தியமில்லை.

மேல் சொன்ன பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் வெளிநாடுகளிலும் பெயரளவில் நடத்தப்படுகிறது. ஆனாலும் அதில் முழுமையான ஒரு அனுபவமில்லை.

வெளிநாடுகளில் சென்று வாழ்வது அதற்காக சில விஷயங்களை இழப்பது என்பது தேவையானதே அதற்காக நான் இதை எழுதவில்லை. மேலும் நமது சொந்த நாட்டை விட்டு பிரியும் ஏக்கத்தால் திரும்ப வருவதையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நமக்கென்றிருக்கும் வாழ்க்கை முறையை வெளிநாட்டுக்கு வந்தவுடன் துறந்துவிடுகிறோமோ என்று எண்ணுகிறேன்.

நியுயார்க் நகரத்திர்கு நான் சென்ற போது அங்கிருக்கும் சுற்றுலா தளங்களுக்கு சென்றதுடன் மன்ஹாட்டனில் சில இடங்களில் இறங்கி சுற்றினேன். அங்கு சைனா டவுன் என்ற இடத்துக்குள் போனால் நியுயார்க்குள் இருந்து வேறேங்கோ சென்றது போலிருந்தது. கடைகளின் அமைப்பு, ட்ராபிக், அங்கு சுற்றியும் தெரியும் சீன எழுத்துக்குள் எல்லாம் நீங்கள் சீனத்தில் ஏதோ ஒரு நகரத்துக்குள் சென்று விட்ட அனுபவத்தை தரும். அதற்கு அருகில் இருக்கும் லிட்டில் இட்டலி இடமும் அப்படி தான் இருந்தது ரோடு முழுவது உணவகங்கள். ரோட்டோரம் விற்கப்படும் தின்பண்டங்கள் என்று  அங்கிருக்கும் இத்தாலியர்களுக்கு ஏற்றார் போல் தான் இருந்தது.

இப்படி நாம் நமக்கு ஏற்றார் போல் ஒரு சூழ்நிலையை வெளிநாட்டில் ஏற்படுத்தி கொள்ளாமல் போய் விடுகிறோமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நாம் நம் மதக்கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் அதற்கே உன்டான கோலாகலத்துடன் செய்ய முடியும். அதுவே நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நம் பண்பாடு, மதம் சார்ந்த முழுமையான, ஒரு எழுச்சியான அனுபவத்தை கொடுக்க முடியும்.

இப்படிப்பட்ட அனுபவங்களை இழந்துவிட்டு இங்கு வாழ்வதற்கு பேசாமல் இங்குள்ள ஏதோ ஒரு மதத்திற்கே மாறி அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தோன்றியதுண்டு.

Tuesday, August 4, 2015

சிறியதே அழகு

சிறியதே அழகு -  Small is Beautiful - E.F.Schumacher, Technology with Human Face என்ற கட்டுரையின் சுருக்கம்

தொழில் நுட்பத்தால் நாம் இயற்க்கை வளங்களை அழிப்பது மட்டுமின்றி  அது மனிதர்களின் படைப்பு திறனையும் முடக்கிவிடுகிறது என்கிறார் ஷூமாக்கர்.  ஒருவன் தன் சொந்த உழைப்பால் ஒரு பொருளை தயாரிப்பான் எனில் அதிலிருக்கும் படைப்பு செயல்பாடும், நுட்பங்களும் அவனுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. இன்று அந்த வேலைகளை தொழில்நுட்பம் பிடுங்கி கொள்வதால் அவன் முழுதாக ஒரு பொருளை தயாரிக்கும் வாய்ப்பை இழக்கிறான்.அவன் மிக பெரிதான ஒரு பொருளின் பாகங்களை தயாரிக்கும் தொழில்களில் ஈடுபடுகிறான். அப்படிபட்ட வேலையில் மனிதன் நிறைவடவதில்லை. அப்படி நிறைவடையாத மக்கள் இருக்கும் சமூகத்தில் தான் கேளிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Mass production என்பதற்கு மாற்றாக அவர் காந்தி சொன்ன production by mass என்ற உற்பத்தி முறையை வைக்கிறார். பெரும் உற்பத்தி முறைகளில் பெரிய அளவிலான மூதலீடும், ஆற்றலும், தொழில்நுட்பமும் தேவைபடுகிறது. பெரும் உற்பத்தி முறைகளில் இயல்பாகவே ஒரு வன்முறை இருக்கிறது. அதன் அளவுக்கும், வேகத்துக்கும் எல்லையில்லாமல் இருக்கிறது. அது மிக முக்கியமான அதன் மூல தனத்தையே அழிக்கிறது. அந்த மூலதனம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாத இயற்க்கை.

அதனால் மக்களை கொண்டே உற்பத்தி செய்யும் முறையை முன் மொழிகிறார். இதில் பெரிய முதலீடோ, ஆற்றலோ, தொழில்நுட்பங்களோ தேவையில்லை. மக்களின் உழைப்பு, அந்த உழைப்பே பெரும் முதலீடு, சில கருவிகளை கொண்டு உற்பத்தி செய்வோம் என்கிறார். மையமற்ற தன்மையும், இயற்கையுடனான ஒத்திசைவும், சிக்கனமாக வளங்களை உபயோகிக்கும் தன்மையும் இந்த முறையின் சிறப்புகளாகும். மேலும் இந்த முறையில் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை பங்கு வகிக்கலாம். மனிதர்களின் திறமையை, படைப்பூக்கத்தை, நுட்பங்களை வெளி கொண்டுவரும் இதை போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கு கேளிக்கை என்று தனியாக ஒன்று தேவையில்லை. தொழிலே ஒரு இன்பமான அனுபவமாக மாறிவிடுகிறது.

தொழில் நுட்பத்தை புதிய பாதையில் நம்மால் கொண்டு செல்ல முடியும் என்கிறார். பெரிய அளவிலான உற்பத்தி அழிவை நோக்கியே கொண்டு செல்லும். அதில் சுற்று சுழல் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. பிரச்சினைகளை ஒன்றை இன்னொன்றாக அதை மேலும் பெரிதாக தான் மாற்றி கொள்கிறோம். மனிதனின் உன்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழில் நுட்பம் தேவை. அவனை இயந்திரங்களுக்கு அடிமையாக்குபவை அல்ல. மனிதனின் அளவுக்கு ஏற்றார் போல் தொழில்நுட்பம் இருந்தால் போதும். மனிதன் சிறியவன், சிறியதே அழகு.