Friday, December 25, 2015

கடவுச்சொல், போய்க் கொண்டிருப்பவள் - சிறுகதை வாசிப்பனுபவம்


சிலரால் பிறருக்கு அன்பை கொடுக்க முடியாவிட்டாலும் மற்றவர் செய்யும் அன்பை கண்டு பொறுத்துகொள்ளவும் முடிவதில்லை. வாழ்க்கையில் பணம் அந்தஸ்து ஆகியவற்றுக்கு பின்னால் போய்விட்டவர்களுக்கு வாழ்க்கையின் இயல்பாக கிடைக்கும் சந்தோஷம் என்பது இல்லாமல் ஆகிவிடுகிறது. அப்படி இழந்த சந்தோஷங்களின் மதிப்பு தெரிந்தாலும் அவர்களால் தாங்கள் ஏற்படுத்தி கொண்ட அந்த பொருளை தேடும் வாழ்விலிருந்து எளிதாக வெளிவரமுடியவில்லை. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகம். ஆனால் அதை ஒன்றும் தெரியாத ஒரு கிழவி வந்து அனுபவிக்கும் போது அவர்களால் பார்த்துகொண்டு இருக்க முடியவில்லை.

கதை பாட்டி பேரன் அன்பை சொல்லும் கதையாக இருந்தாலும். இன்னொரு ஆழமான ஒரு விஷயமும் இந்த கதையிலிருக்கிறது. உண்மையான அன்பும் இன்பமும் மனிதனின் ஆழம் வரைக்கும் செல்லமுடிகிறது. மற்றவையவை எல்லாம் மேலோட்டமானவை. பாட்டியையும் பேரனையும் அந்த அன்பு ஆழமாக பாதிப்பதால் தான் பாட்டி தியானத்திற்கு அமரும் போது மனதில் பேரன் வந்து நிற்கிறான். பேரனுக்கு ரகசியமாக அவனுக்கு மட்டுமே தெரியகூடிய கடவுச்சொல்லில் பாட்டி வந்து நிற்கிறாள்.

*********************************************************************************

சாக்கடை என்பது அன்னத்தின் யதார்த்த வாழ்க்கையை குறிக்கிறது. அனைத்தும் நுகரப்பட்டு வெறும் கழிசல்கள் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடைக்கு அருகிலும் அவளுக்கென்று ஒரு வீடு இருக்கிறது. அதில் நினைவுகளும் கனவுகளும் பிணைப்புகளும் நிறைந்து அவள் வாழ்க்கைக்கு ஒளி சேர்க்கிறது. அந்த வீடு இருக்கையில் சாக்கடை என்பது எம்பி தாவி சென்றுவிட கூடிய ஒரு சின்ன தொல்லை அவ்வளவு தான்.

விருத்தாவும், கதை சொல்லியும் அன்னத்த்தின் சில கோணத்தை மட்டும் நிறுத்தி வைத்து ரசிக்கிறார்கள். ஆனால் அன்னம் இதை விட ஆழமானவள். இவர்கள் அறியாத கோணம் அவளை சுற்றியும் இருக்கிறது. ஆன்களுக்கு தெரிந்த கோணத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் இருந்து பார்க்க முடிகிறது, அந்த கோணத்தில் அவள் உடலே பிரதானம்.

ஒளிந்திருக்கும் அழகை கூட தேடி கண்டுபிடித்து பதிவு செய்யும் விருத்தா ஒரு ரசிகன். காட்சி ரசிகன். அவளிடம் அவன் ரசிப்பதும் அவளின் மயக்கம் தரும் இளமை அழகை தான். செழித்த கழுத்தும், மார்ப்புகளுமே அவனுடைய ரசனைக்கு தேவையானவை. கதை சொல்லிக்கு காட்சி குறியீடுகளும் அதில் எழும் கற்பனை எழுச்சியும் அவளை ரசிக்க வைக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல அவள். பாலுக்கு அழும் குழந்தை அன்னையிடம் ஒரு அழகை காணும். அவள் மடியில் மயங்கி கிடக்குமே அது ஒரு கோணம். டியுசன் படிக்கும் பையன் அன்னதிடம் ஒரு வித அழகை காண்பான், அது ஒரு கோணம்.

இப்படி பல் வேறு கோணங்களில் அழகை வெளிப்படுத்தி கொண்டு ஒரு பெண் போய் கொண்டிருக்கிறாள். இதில் சில அழகுகள் காலவதியாகலாம். அதனால் விரும்பியவர்கள் அவளை நிராகரிக்கலாம். ஆனால் ஒரு அழகு காலவதியாகும் போது அடுத்தகட்ட அழகு எழுந்து மிளிர தொடங்கும். இளமை உலர்ந்து ஒரு பெண் காய்ந்த பூவாகி போகும் போது அதில் தாய்மை எனும் பால் சுரந்து அடுத்தகட்ட அழகு மிளிர தொடங்குகிறது. 

நமக்கு வேண்டியவைகளை பூட்டி வைத்து கொள்வது வீடு. அது தேவையற்று போகும் போது அது சாக்கடையில் அல்லது குப்பை மேட்டில். விருத்தா அன்னத்தை வீட்டில் சென்று பார்க்கும் போது அவன் ரசனையில் சாக்கடை கலக்க தொடங்கிவிடுகிறது.

ஆனால் அன்னம் எந்த வகையில் தன் மேல் ஈர்ப்பு கொண்டவனையும் விலக்குவதில்லை. அன்னையாக அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டாலும் தன் உடலை ரசித்தவனின் ரசனையை எங்கோ ஒரு இடுக்கில் சுருட்டி வைத்திருக்கிறாள். தேவை எனும் போது அவள் மனம் பூனை போல் அதை நோன்டி எடுத்துப்பார்த்து ஏங்குகிறது. ஒரு வகையில் இன்புறுகிறது.

என்னாளும் அவளோடு ஆண்கள் நடக்க முடியாது. அவளின் வாழ்க்கை கனங்களின் உறைந்த காட்சி கோணங்களை பார்த்து நின்றுவிடுகிறார்கள். ஆனால் அவள் தொடர்ந்து நடந்து போய் கொண்டே இருக்கிறாள்.

No comments:

Post a Comment