Wednesday, October 29, 2014

கந்தபுடம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதும் மஹாபாரத மறு உருவாக்கமான வெண்முரசை சார்ந்து நான் எழுதிய ஒரு நகைச்சுவை அத்தியாயம்.


>---------->    <-----------<         >---------~~    ~~----------<         >----------{    }----------<

கந்தபுடம்:

மேற்கு வான் விளிம்பில் நீர்த்த குருதி போல் ஒளி படர்ந்திருந்தது. குளிர்ந்த காற்றில் புல்லின் மணம் கிளம்பி நாசியை அடைத்தது. துரோணர் நடந்து கொண்டே மூச்சை ஒரு முறை நன்கு இழுத்து விட்டார். அவர் எடுத்து வைத்த காலடியின் முன் இருந்து ஒரு வெட்டு கிளி புல் எய்த அம்பு போல் தவ்வி விழுந்ததை அர்ஜுனன் பார்த்தான். அதன் இட காலில் இருப்பத்தேழு கரும்புள்ளிகள் இருப்பதை அவன் எண்ணிவிட்டான். அஸ்வத்தாமன் அதை எண்ண திணறுவதை பார்த்து அர்ஜுனன் உவகை கொண்டான். துரோணர் செருமி வலப்பக்கம் திரும்பி 'தூ' என்று துப்பினார். ஏவப்பட்ட அம்பென சென்ற அவர் எச்சில் அந்த வெட்டு கிளியை வெட்டியது.

துரோணர் மீண்டும் ஒரு முறை மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு "இளைஞர்களே, இலக்கு என்பது அம்பின் ஒரு பாகமே. அம்பு என்பது நிகழ் காலத்தில் வில்லாளியின் ஒரு பகுதி. விரல்களால் இழுத்து அவன் ஆற்றல் முழுதையும் அதில் செலுத்தி அனுப்புகிறான். அம்பானது விசை மட்டுமல்ல, வில்லாளியின் எண்ணத்தையும் தன் மீது ஏற்றி கொண்டு தான் எழுகிறது. மந்தண செய்தியை ஏற்றி பறக்கும் தூது பறவை போல. அம்பு இலக்கை தைக்கும் போது அம்பின் ஒரு பகுதியாக இலக்கு மாறிவிடுகிறது. எய்தவனும், அம்பும், இலக்கும் ஒன்றே என்று ஆகிவிடும் தருணம் அது. அந்த தருணத்தை வில்லாளி தன் அகத்தில் நிகழ்த்திய பிறகே அம்பு எய்ய வேண்டும். எய்பவனும், எய்யபடுவதும், எய்படு இலக்கும் ஒன்றென உணர்பவனே சிறந்த வில்லாளி. அவ்வாறு அவன் உணர்கையிலேயே அவன் பிரம்மத்தை அறிகிறான் என்கிறது தனுர் வேதம். பிரம்மத்தை நாம் உணர வழி காட்டும் தனுர் வேதத்தை வணங்குவோம்" என்றார். மாணவர்கள் "ஓம் ஓம் ஓம்" என்று முழங்க ஒரு கௌரவன் மட்டும் நித்ர வாயு உமிழ்ந்ததால் "ஓ..ஒ...ஒ..ம்" என்றான். துரோணர் அவர் சொற்களிலேயே ஊழ்ந்திருந்ததால் அதை கவனிக்கவில்லை.

துரோணர் தொடர்ந்தார் "வில்லில் இருந்து எழுந்து இலக்கை அடையும் அம்பு ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வை முழுதாக உணர்பவனுக்கே வில் வித்தை கை கூடுகிறது. ஒளியை மட்டும் உள்வாங்குபவன் அவன் அறிதலை ஒரு திசையில் குறுக்குகிறான். ஒலியையும் உள்வாங்குபவன் ஆறு திசைகளிலும் உள்ளதை அறிகிறான். ஆனால் அவன் இருப்பை மட்டும் அறிகிறானே தவிர அங்கே இருக்கப்பட்டதை அறிவதில்லை. தனது ஐம்புலன்களாலும் சூழ்நிலையை முழுதறிபவனுக்கே வில் வெற்றியை அளிக்கிறது. மனிதன் தனது சில புலன்களின் மீதான ஆளுமையை கால போக்கில் இழந்துவிட்டான். மனிதன் மிக குறைந்த அளவில் உபயோகிக்கும் ஒரு புலன் அவனது நாசி. ஆனால் அதன் ஆற்றலை மிருகங்கள் நன்குணர்ந்திருக்கிறது. அதை கண்டு நாம் கற்று கொள்ள வேண்டும். உங்கள் நாசியை திறந்து வையுங்கள், உலகின் இன்னொரு பரிமானத்தை அது உங்களுக்கு காட்டிவிடும்."

கௌரவர்களில் சிலர் சிறிதும் தயக்கமின்றி அவர்களின் சுட்டு விரலை நாசியில் விட்டு குடைந்தனர். மற்ற சில கௌரவர் தம் இடக்கை கட்டை விரலால் ஒரு மூக்கை நன்கு அழுத்தி கறந்து சிந்தினர். அர்ஜுனன் ஒரு புல்லை எடுத்து அவன் மூக்குக்குள் வருடி சில முறை தும்மினான். அஸ்வத்தாமன் கனைக்க புதருக்குள் இருந்து பிங்கல நிற குதிரை ஒன்று தலையை சிலுப்பி ஓடி வந்து அவன் அருகில் நின்றது. அவன் அதன் குஞ்சி ரோமத்தை கொய்து நாசியில் செலுத்தி வெறி கொண்ட குதிரை கனைப்பாக தும்மினான். அவன் தும்மல் ஒலியை கேட்டு குதிரையின் கொழுத்த பின் தசை சிலிர்த்தது. அனைவரும் கைகளை மரஉரி ஆடையில் துடைத்து கொண்டு துரோணரை தொடர்ந்தனர்.

துரோணர் கங்கை கரையை அடைந்து இடக்கையால் பக்கவாட்டை சொறிந்து கொண்டு தொலைவில் நோக்கினார். "சூதர் குழு வந்துவிட்டது, அனைவரும் அமருங்கள்" என்றார். அவரை சுற்றி வட்டமாக மாணவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அஸ்வத்தாமன் துரோணரின் இடப்பக்கம் அமர அர்ஜுனன் துரோணரின் நேர் எதிரில் அமர்ந்தான். பறவைகள் கூடணய கீச்சிட்டு பறந்து கொண்டிருந்தது. அர்ஜுனன் கங்கையை பார்த்தான், கங்கை நீர் சீராக சுழித்து ஓடி கொண்டிருந்தது. அது ஏன் எப்போதும் சுழித்தே ஓடுகிறது என்று எண்ணி வியந்தான். கொம்பும், முழவும், கினையும் ஏந்தி சூதர் குழு வந்தது. அனைவரும் வந்து நிற்க முன்னால் வந்த முதுசூதர் மட்டும் குழு நின்றது அறியாமல் மேலும் முன் நகர, அவரின் இடையை வளை கொம்பால் பற்றி இழுத்தான் பின்னிருந்த சூதன். அவர் இழுபட்டு திகைத்து காலை பின் இழுத்து செருக்கடித்து நின்றார்.

துரோணர் முதுசூதரிடம் "சூதரே, தொடங்குங்கள், கந்தி கதையை மாணவர்களுக்கு சொல்லுங்கள்" என்றார். சிறு குச்சியால் கண்களை மூடி கொண்டு பல்லை நோன்டி கொண்டிருந்த முதுசூதரின் மரஉரி கொசுவத்தை ஒருவன் பின்னிருந்து இழுக்க "கள்ளி! இந்த அகவையிலும்.." என்று திரும்பி பார்த்து நிலைமையை புரிந்து கொண்டு கைகளை மேலே தூக்கி பாட தொடங்கினார். "உத்தமர்களே, அடியேன் பெயர் இளவெனில் அழுவன். திருவிட நாட்டை சேர்ந்த நான் ஏகர் குலத்துதித்தவன். இன்று கந்தி காதை பாடும் நல்லூழ் அருளப்பெற்றவன்" என்றார்.

முதுசூதர் ஓங்கிய குரலில் பாடினார் "பாதாள நாகனாகிய தட்சன் தலாதலத்தில் தள்ளாடியபடி உலா சென்ற போது அங்கே தளதளா என்ற பெண் நாகத்தை கண்டு மோகம் கொண்டான். பல்லாயிரம் ஆண்டுகள் அந்த இரு நாகங்களும் அங்கு இருக பின்னி கிடந்தன. கூடல் முடிந்து நகர்ந்த தட்சனிடம் தளதளா தன்னை மணந்து அவனோடு பாதாளத்திற்கு அழைத்து செல்லும் படி சொன்னாள். மனைவியை அஞ்சிய தட்சன், "தேவி, நம் இருத்தலத்திற்கும் நீர் பாசன பிரச்சனை ஊழிக்கால தொடக்கத்தின் முன்பிருந்தே இருக்கிறது. இந்த இரு உலகில் இருந்து நாகங்கள் மண உறவு கொள்வதை குல மூத்தார் ஒப்ப மாட்டார்"என்றான். அதை கேட்ட தளதளா தளுதளுத்து "ஹிஸ்ஸ்ஸ்ஸ்" என்று ஓலமிட்டு அழுதாள். மனம் இளகிய தட்சன் "கவலை கொள்ளாதே தேவி, நான் இங்கு நினைத்த நேரம் வந்து செல்ல முடியும். ஒவ்வொரு அமாவாசையிலும் நான் இங்கு உன் முன் தோன்றுவேன்" என்று கூறி அவிழ்த்த சட்டையை மாட்டி கொண்டு பாதாளத்திற்கு இறங்கினான்.

ஆயிரம் ஆண்டுகள் கழித்து தளதளா முட்டையிட்டு தன் மகளை ஈன்றால். தன் மகளை கண்டால் ஊர் நாகங்கள் எல்லாம் நாக்கில் நரம்பில்லாமல் பேசுமென்று எண்ணிய தளதளா அந்த மகளை ரகசியமாக வளர்த்து வந்தாள். அந்த மகளின் பெயரை யாரும் அறியக்கூடாது என்பதற்காக  'அநாமி' என்று அவளுக்கு பெயரிட்டாள். அநாமி வளர்ந்து ஆதி அந்தம் கண்டறிய இயலா உடல் கொண்டவளாக மாறினாள். அவள் இருபத்து ஓராயிரம் அகவை நிரம்பிய உடன் அவளுக்கு தலாதள அரசு பரிந்துரைத்த திருமண வயதாகிவிட்டது என்று உணர்ந்தாள் தளதளா. அடுத்த முறை தட்சன் அதல அல்வாவும் மஹாதல மல்லிகையுடனும் வரும் போது அவள் புற்றின் வாசலில் துடைப்பத்துடன் நின்று சீறுவதை கண்டான். நிலைமையை உய்த்தறிந்த தட்சன், தன் வாலை வளைத்து தளதளாவின் கன்னங்களை தடவி நாக்கை சுழட்டினான். வாலை சுழற்றி அவன் வாலை தட்டிவிட்ட தளதளாவிடம் இன்று பாதாள பருப்பு வேகாது என்று அறிந்த தட்சன். அநாமியை பாதாளத்திற்கு அழைத்து சென்று மணம் நிகழ்த்தி வைப்பதாக வாக்குரைத்தான்.

பாதாளத்தில் அநாமியை மணம் முடித்து வைத்தால் அவன் குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்த தட்சன் விஷயத்தை கண்ணும் கண்ணும் வைத்தாற் போல் முடிக்க வேண்டும் என்று நினைத்தான். வின்னவர் எல்லோரும் இதை போன்ற செயல்களில் அனுபவமிக்கவர்கள் என்றென்னி அவர்களை நினைத்து ஊழ்கத்தில் அமர்ந்தான். அப்போது மின்னல் வெட்டியது போல் ஒரு என்னம் அவன் அடி மனதில் எங்கோ தோன்றி மறைந்தது. அவன் எழுந்து "ஆம் அது தான் ஒரே வழி" என்று சொல்லிக் கொண்டான். இருண்ட அறைக்குள் சென்று அங்கிருந்த ஆடி முன்  நின்ற தட்சன் மந்தண சீழ்க்கையால் அவன் யாரையோ விளித்தான். ஏழுலகம் கொண்ட வின்னில் ஏழாம் வின்னுலகான சத்ய லோகத்தில், தட்சனின் மருமகனான காசியப பிரஜாபதிக்கு அவன் அழைப்பு கணவில் கேட்டது. மாமனின் இந்த மாதிரி அழைப்புகளை நன்குனர்ந்த காசியபர் மனைவிகளிடம் சொல்லாமல் தலையில் துண்டை போட்டுக் கொண்டு ஓசையின்றி வெளிவந்து பாதாளத்திற்கு இறங்கினார்.

காசியபரை வரவேற்ற தட்சன், அவரை அமர செய்து ஆற்றுபடுத்தினான். ரசாதலத்து இன்மதுரசத்தை பருக கொடுத்தான். விதல வத்தலும், சுதல சுண்டலும் உப உண்டிகளாக கொடுத்தான். தட்சன் மெதுவாக தொடங்கினான் "மருமகனே, வின்னுலகின் ஆடிப்பிம்பம் பாதாளம். அங்கு இடமிருப்பது இங்கு வலமிருக்கும், வலமிருப்பது இடமிருக்கும். அங்கு சத்வ குணம் கொண்ட உயிர்களையெல்லாம் இங்கு தமோ குணம் கொண்டவை பிரதிபலிக்கின்றன. அங்கு முற்போக்கு சிந்தனை என்றால் இங்கு பிற்போக்கு சிந்தனை. அங்குள்ள அமைதி இங்கு கொந்தளிப்பாகவே பிரதிபலிக்கப்படுகிறது". மாமன் விஷயத்துக்கு வருகிறான் என்றறிந்த காசியபர் மெல்ல அசைந்து இடையில் இருந்த ஜனர் லோக ஃபாங்க சுருட்டை எடுத்தார். பீடத்திலிருந்த பீத நாக குஞ்சொன்றை எடுத்து வாலில் சுண்டி காசியபரின் சுருட்டை பற்ற வைத்தான் தட்சன்.

"பிரஜாபதியே நீ அறியாததில்லை, நெறி தவறிய பாம்பின் நாக்கில் வரும் வார்த்தைகளுக்கு பாதாளத்தில் மதிப்பில்லை. நெறி தவறி பிறந்த என் மகளுக்கு இங்கு வாழ்வுமில்லை. என் பிற மகள்களை மனந்து வாழ்வு தந்த பிரம்மனின் மைந்தனே. நீயே இவளை ஏற்று எனது துயர் நீக்க வேண்டும்" என்றான். வானை நோக்கி கண் மூடி புகை வெளியில் அமர்ந்திருந்த காசியபர் "யாருக்கு தான் இல்லை இந்த பிரச்சினை. உன் மகளை ஏற்பதற்கு எனக்கு மறுப்பேதுமில்லை. ஆனால் உன் இன்னொரு மகள் குரோதவசையிடம் வசை வாங்குவதை நினைத்தால் தான் சற்று கிலி கான்கிறது.. ஹும்.." என்று வின்வரை எழுந்து நின்ற தன் வெண் தாடியை நீவியபடி சிந்தனையில் ஆழ்ந்தார். "சரி. அதை நான் பார்த்து கொள்கிறேன். உன் எண்ணம் போல் நடக்கட்டும்" என்று புகை வழியும் புன்னகையுடன் சொன்னார்.

முதுசூதர் கக்குவான் இருமல் வந்து கக்கி கொண்டிருக்க துரோணர் முகத்தை சுளித்து அவரை பார்த்துவிட்டு திரும்பி அவரே கதையை சொல்ல தொடங்கினார். "அநாமியை மணந்த காசியபர் அவளை நட்சத்திரமாக மாற்றி வின்னுலகுக்கு ஏற்றினார். மாமன் கண்ணிர் மல்கி நன்றி உரைக்க காசியபர் விடைபெற்று பறந்தார். காசியபரிடம் இருந்து அநாமிக்கு பன்னிரண்டு நாகங்கள் பிறந்தன காலினி, காவனி, காபரி, கடாஃபி, கலட்டி, கபடி, கபாடி, களரி, டேக் வான் டூ, கிம் கி டுக், கிக்கு ஜீரா, மிஷ்கி லாலா". "ஆம் அதுவே இளைய ராகத்தை பின்னனி..." என்று முதுசூதர் ஏதோ சொல்ல தொடங்க அவர் பின்னிருந்த சூதன் அவர் கையில் முழவு கோலால் 'பட்' என்று வைத்தான். "உத்தமரே, விடைபெறுகிறோம்" என்று சொல்லி கங்கை கரையை நோக்கி நடக்க தொடங்கினார் முதுசூதர். முன் வரிசையில் இருந்த இரு சூதர்கள் முழவையும் கொம்பையும் கீழே வைத்து விட்டு கிழவரை பிடிக்க ஓடினர்.

துரோணர் தொடர்ந்தார் "இதில் கலட்டி என்ற நாகம் இந்திரனை காமுற்று அட்டை, அரட்டை, குட்டை, குரட்டை, பட்டை, பரட்டை, செட்டை, செரட்டை என்ற எட்டு நாகங்களை ஈன்றாள். இதில் செரட்டை என்ற நாகினி ஒரு பேரழகி, அவள் அழகில் மயங்கிய கந்தர்வன் அவளுடன் இணைந்தான். கந்தர்வனால் அவளுக்கு கதி, கத்தி, கவுந்தி, காதி, கநாதி, கந்தி என்று ஆறு நாகங்கள் பிறந்தன. அதில் கந்தி வளர்ந்து பேருருவம் கொண்டாள். வின்னை முழுதும் அடைத்து சுருண்டு கிடந்தாள். அவளுக்கும் வாயு தேவனுக்கும் ஏற்பட்ட காதல் எப்படி என்று தேவர்களும் அறியோர். அவளை தினமும் மாலையில் சந்தித்து காதல் சொல்லாடி மீண்ட வாயு தேவன் சுகந்தமாய் அனைத்துலகையும் நிரப்பினான். ஆனால் அதே சமயம் கந்தியின் பேருடலை பார்த்து மோகம் கொண்ட வாசுகி என்ற பாதாள பெருநாகன், வானில் ஏறி அவளை இழுத்து வந்து ரசாதலத்தில் அடைத்து வைத்தான். ரசாதலத்தில் ஊன் மது செய்யும் பீத நாகங்களின் கிடங்கில் நொதித்து அழுகிய ஊனுக்கு அடியில் அவளை சிறு பாம்பாக மாற்றி பதுக்கி வைத்தான். செய்தியை தெரிந்து கொண்ட வாயு அவளை அந்த ஊன்கிடங்கில் சந்தித்து மீண்ட போது துர்கந்தமாய் மாறி அனைத்துலகயும் நிரப்பினான். இவ்வாறே உலகில் கந்தங்கள் பிறந்தது என்று கந்த புராணம் சொல்கிறது."

துரோணர் "போர்களம் என்பது இடி முழங்கும், பாரைகள் உராய்ந்து உருளும், பேரலைகள் எழுந்து அடங்கும் ஓரிடம். அங்கு கேட்கும் பேரோலத்தில் அம்பின் ஓசையை அறிய மனித செவிகள் ஆற்றலில்லாதவை. தன் ஆற்றல் குறைவை அறிந்து அதை வேறொரு மாற்றாற்றலால் நிறைப்பவனே சிறந்த போர் வீரன். அவனை நாகங்கள் கூட அஞ்சுகிறது. செவியால் குறைந்த ஆற்றலை நாசியால் நிரப்ப கற்று கொள்ளுங்கள். உங்களை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பொருளையும் நீங்கள் அதன் வாடையை வைத்தே அறிந்து கொள்ள முடியும். இலக்கை நீங்கள் நாசியாலேயே குறிபார்த்து அம்பு எய்ய முடியும்." என்றார்

உங்களை தாக்க வரும் அம்பை உங்கள் நாசியை கூர்மையாக்கி அதை எய்தவன் முந்தய இரவு உண்ட உணவயும் உய்த்துனர நீங்கள் அறிய வேண்டும். உணவே மனிதனின் மன நிலையை தீர்மானிக்கிறது. உணவின் தன்மையை கொண்டே அவனில் இருக்கும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஓங்கி சுருங்குகிறது. காயும் கணியும் மீனும் உண்டால் சத்வ குணம் பரவுகிறது, பறவையும் விலங்கையும்  உண்டால் ரஜோ குணம் ஓங்குகிறது. ஊர்வனவற்றையும் ஊசிப் போனதையும் உண்டால் தமோ குணம் ஆற்றல் கொள்கிறது என உரைக்கிறது தனுர் வேத குணசீலம்.

வாசங்களில் நாகங்கள் குடிகொண்டிருக்கிறது என்கிறது வேதங்கள். மூக்கை தீண்டி முகத்தை சுழிக்க செய்வது விடாய் கக்கும் வெண்நாகங்கள். நாசியில் நுழைந்து நாபியில் நிறைவது பாற்கடலில் உலவும் கருநாகங்கள். அதிலிருக்கும் நாகங்களை ஆழ்பவன் கந்தாபதி எனும் தேவன். அவன் உங்களை ஏற்றாலே நீங்கள் அவனை உய்த்தறிய முடியும். அவனை துதிப்போம். கந்தங்களை கையாள தெரிந்தவனுக்கு வில் கலையில் மிச்சமிருப்பது எண்ணங்களை அம்பில் ஏற்றவும் அறியவும் முடிவது மட்டுமே. எண்ணங்களை ஆட்சி செய்பவன் வெங்கிடுபதி. இவனை யவணத்தில் டெலிபதி என்றும் அழைக்கிறார்கள் என்று அங்கு கலவீரர்களாய் சென்று திரும்பிய என் மாணவர்கள் கூறினார்கள். "அவனை வணங்குவோம்" என்றார், மாணவர்கள் "ஓம் ஓம் ஓம்" என்று வணங்கினர்.

கௌரவர்களில் ஐவர் புல்லை மென்று கொண்டிருப்பதை ஓர கண்ணால் பார்த்த துரோணர் "உணவு பரிமாறுங்கள்" என்றார். ஏவலர்கள் உணவு பரிமாறினர். ஆமை ஊனை அகத்தே கொண்ட அப்பங்கள். பாலில் வேகவைத்து பசும் நெய்யில் பொறிக்கப்பட்ட கிழங்குகள். காட்டு ஆட்டை காத தூரம் விரட்டி சென்று பிடித்து மஞ்சள், மிளகாய், இஞ்சி, கிராம்பு, பட்டை, தெங்கு, கடலை ஆகியவற்றை செக்கிலிட்டு அரைத்து. சுட்ட ஊனை அதிலிட்டு நாற்பத்தி இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து சவ்வு பதம் பார்த்து இறக்கி. அதில் கொத்த மல்லி, கருவேப்பில்லை, ஆடாதோடா, நெடு மூங்கில் நடுங்குறுத்து, வண்டு துளைத்த மாம்பழச்சாறு ஆகியவைகளை சேர்த்து. உப்பும், மிளகும், ஜாதிகாய் துகளும் பத்து சிட்டிகை முறையே தூவப்பட்டு சமைத்த ஆட்டு குழம்பு அவர்கள் முன் ஆவிபறக்க வைக்கப்பட்டது. வேகவைத்த காய்களிட்ட கூட்டும் பரிமாறப்பட்டது. துரோணருக்கு காயும் கிழங்கும் பழரசமும் பரிமாறப்பட்டது. குந்தியின் ஆணையின் பேரில் அர்ஜுனனுக்கு மட்டும் பாசகஞானி மந்தரர் புதிதாய் கண்டடைந்த ஆரோக்கிய நாலரை பால் வைக்கப்பட்டது.

துரோணரின் சொற்களை அகத்தில் அசை போட்டு, அப்பங்களை வாயில் அசை போட்ட அர்ஜுனன், தாலத்தில் புது வகையான காய்கள் தட்டுபட்டதை பார்த்தான். பணிவுடன் துரோணரை பார்த்து "குருவே" என்றான். சிறு நாணல் குழாயை வாயின் இட விளிம்பில் வைத்து பழரசத்தை உறிந்து குடித்து கொண்டிருந்த துரோணர் அர்ஜுனனை பார்த்து புருவங்களை மட்டும் உயர்த்தி இறக்கினார். "இன்று உணவில் புது வகையான காய்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதே" என்றான். வாயிலிருப்பதை விழுங்கிவிட்டு செருமியபின் "ஆம், அதை நான் தான் சேர்க்க சொன்னேன். அது வில் வீரனுக்கு தேவையான ஊட்ட சத்து" என்றார். அர்ஜுனன் "குருவே, இதை நான் இதுவரை எந்த பந்தியிலும் உண்டதில்லை. என் தமையன் பீமன் சமையல் கலையை மந்தரரிடம் பயின்று வருகிறார். நான் சமையல் கொட்டகைக்கு சென்றிருந்த போது என் தமையன் எனக்கு எல்லாவற்றையும் விளக்கியிருக்கிறார். அஷ்டஃபலத்தையும் அதிலிடும் மூவகை காய் வகை பற்றியும் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு காயை நான் இன்று தான் ருசிக்கிறேன்"

"பார்த்தா ஒன்று புரிந்து கொள், படகின் காலமும், ரதங்களின் காலமும் பழையது. இன்றைய காலம் பெருங்கலங்களுடையது. வானில் பருந்து வட்டமிடுவது போல இன்று ஆழியில் பெருங்கலங்கள் கோலமிடுகிறது. பாரதவர்ஷத்து துறைமுகங்களை காணாத பெருங்கலங்கள் பூவுலகில் எங்கும் இல்லை. மொழியும், உணவும், கலையும், காதலும் இன்று நாளும் ஒன்றுடன் ஒன்று கலந்து புதுமை கொள்கிறது. யவன மதுவை அருந்தும் நாம், பீத பட்டும் காப்பிலி வைரமும் அணியும் நாம், ஏண் புது உணவை பார்த்து மட்டும் திகைக்க வேண்டும்? இந்த காய்கள் அஸ்திர வடிவிலிருப்பதால் இது அஸ்திரங்களை அறிய உதவுகிறது அதனாலேயே இதை சேர்க்க சொன்னேன் என்றார். இதை ஆரியவர்த்த பாசகர்கள் சற்று சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். தட்சினத்திலேயே இதை பெரிதும் புழங்குகிறார்கள். நீர் தன்மை, விழுது தன்மை, மாவு தன்மை கொண்ட காய் வகைகளை போல் இவை விரைப்புத்தன்மை கொண்டது என்று வகுத்திருக்கிறார் அகத்தியர்.

தலையை தூக்கிய முதுசூதர் "ஆம் இளவரசே, நீண்டு வளரும் இந்த காய்கள் யவனத்திலிருந்து வந்து தென்னாட்டில் பயிரிடப்படுகிறது. முறுக்கேறிய முருங்கைக்காயும், சிவந்து விரைத்த கேரிட்டங்காய், சிறிதே நீண்ட வெண்டைக்காய், வளையும் தன்மை கொண்ட பீன்ஸாரங்காய். இந்த காய்களே தென்னகத்தில் பலருக்கு இஷ்டஃபலமாக இருக்கிறது. ஆனால் முறுங்கை என்பது வீரியமிக்கது என்று அங்கிருக்கும் கூத்து கலைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்திரன் மைந்தரே, முருங்கை சமாச்சாரத்தில் தாங்கள் சற்றே கவனமாக இருத்தல் நன்று, இல்லையேல் பாரதவர்ஷத்தின் ஜனபதங்கள் போதாது." என்று முதுசூதர் சொன்னவுடன் சூதர்கள் அனைவரும் வெடித்து சிரித்தனர்.

முதுசூதர் தொடர்ந்தார் "இளவரசே, மனிதனின் நாக்கு உலகை அள்ளி விழுங்க நினைக்கும் நாகம். நாக்கை எண்வகையாக வகுக்கிறார் குமரி கோட்டு தொல் தமிழ் புலவர் நீலமேகர். அவை நாக நாக்கு, காக நாக்கு, தாக நாக்கு, யாக நாக்கு, வேக நாக்கு, மேக நாக்கு, போக நாக்கு, ரோக நாக்கு எனப்படுகிறது. இதிலடங்காத புன்னாக்கு உன்னும் ரிஷப நாக்கு கொண்ட நிஷாதர்களும் வணங்களில் உண்டு. அவர் நாக நாக்கை மேலும் நிறங்களின் அடிப்படையில் "கறி நாக்கு, கபில நாக்கு.." என்று தொடர, தெற்கு நோக்கி அமர்ந்திருந்த துரோணர் தன் வடக்கு வாயிலை கையால் மூடி சூதர்களுக்கு சைகை காட்டினார். முழவு சூதன் ஒருவன் முதுசூதரின் தலையில் கோலால் 'நொட்' என்று அடிக்க, முதுசூதர் "வக்காள.." என்று பச்சை தமிழில் ஏதோ சொல்ல வாயெடுக்க ஒரு சூதன் அவர் வாயை விரைந்து மூடினான்.

உண்டு முடித்ததும் துரோணர் "பயிற்சியை தொடங்கலாம், மானவர்களே நாசிகளை கொண்டு இவ்விடத்தை பாருங்கள்" என்றார். சூதர்கள் முதுசூதர் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் எழுந்தார் "இளவரசர்களே, தாளம் நாற்பத்து ஏழு வகை, இதில் தப்பு தாளங்கள்..." என்று அவர் தொடங்க, துரோணர் "சூதரே" என்று கூவினார். முதுசூதர் துரோணர் இல்லாத திசையை நோக்கி திரும்பி "சொல்லுங்கள் உத்தமரே" என்றார். "தாளங்கள் பாடத்திட்டதில் இல்லை. பயிற்சியை தொடங்கலாம்" என்றார். முதுசூதர் தோளில் இருந்த துண்டை உதறி "அஆ" என்று முனகியபடி கக்கத்தில் வைத்தார். கங்கை நோக்கி திரும்பி வாசிக்க சொல்லி கைகளை காட்டினார். முரசு அதிர, கொம்பு பிளிர பேரொலி எழுந்தது. துரோணர் பந்தங்களை அனைக்க சொல்லி கையை காட்டினார். இருளில் ஒலி சூழ்ந்து அழுத்த மாணவர்கள் அந்த இடத்தை நாசியால் அறிய முயன்றனர்.

திடீர் என்று 'ஆ...' என்ற அபஸ்வரத்துடன் இசை நின்றது. "பந்தத்தை கொளுத்துங்கள் என்றார்" துரோணர். ஒளி வந்ததும் முது சூதர் இடையாடை கலைந்து கிடக்க இருசூதர்களால் தாங்கி எழுப்ப பட்டார். துரோணர் "மானவர்களே இதோ இந்த சூதரை நான் என் நாசியால் நோக்கியே தாக்கினேன். "குருவே" என்றான் ஒரு கௌரவன் "என்ன குண்டூசி" என்றார் துரோணர். "எப்படி துள்ளியமாக அவரது நாசியை தாக்கினீ்ர்கள்" என்றான் குண்டூசி. "அது மிக எளிது. அந்த சூதர் நாசி பஸ்பம் இழுக்கும் பழக்கம் கொண்டவர், அதை நான் அவர் இங்கு வந்து நிற்கும் போதே அறிய முடிந்தது" என்றார். "அவரை உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் என்னால் தாக்கியிருக்க முடியும். அவரின் குடுமியில் நீலி பிருங்காதி தைல வாடை வருகிறது, வாயில் மாலை அருந்திய புளித்த கள் வாடை குதம்புகிறது, மடியில் கட்டியிருக்கும் புகையிலை வாடை கமழ்கிறது. காலில் கண்ட கண்ட வாடை வருகிறது." என்றார். அஸ்வத்தாமன் "குருவே தாங்கள் எதை கொண்டு அவரை தாக்கினீர்கள்" என்றான். துரோணர் புன்னகைத்து தான் உண்ட தாலத்தை காட்டி "இதோ நான் வழித்து உண்ட இந்த முருங்கை பட்டையால் தான்." என்றார். துரோணர் இருமுறை சிறுமூச்சுகளை உள்ளிழுத்து, "ஆனால்.. இங்கு புதிதாய் ஏதோ ஒரு வீச்சம் எழுகிறதே" என்றார். கௌரவர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் திரும்பி ஒரே கௌரவனை பார்க்க அவன் குளம்பி விழித்தான்.

அர்ஜுனன் எழுந்து "மன்னிக்க வேண்டும் குருவே' என்றான். அப்போது அங்கு திரும்பிய துரோணர் அதை கண்டார். அங்கு ஒரு கரடி வாயிலும் குதத்திலும் அம்பு தைத்து வீழ்ந்திருந்தது. துரோணர் "அர்ஜுனா இதை எப்படி வீழ்த்தினாய் சொல்" என்றார். "குருவே பயிற்சியின் போது நான் நாசியால் உற்று நோக்கினேன். எனக்கு பின் பச்சை ஊன் வாடை எழுந்தது தெரிந்தது. அதன் மணத்தை வைத்து அது ஒரு மிருகம், மேலும் அது தமோ குணம் படைத்தது என்றறிந்தேன். எதிரிலிருந்த அப்பத்தை அம்பால் குத்தி பின்னால் வீசினேன். வாடை மேலும் கடுமையான போது இலக்கு தன் உடலை திருப்பி விட்டது என்றறிந்தேன். வில்லில் அம்பு கோர்த்து காத்து நின்றேன். அம்பை கடித்த மிருகம் உருமுவது மந்தமாக கேட்டது. வாடை எழுந்த இடத்தில் அம்பை தொடுத்தேன்" என்றான் அர்ஜுனன்.

துரோணர் புன்னகைத்து "வில் விஜயன் நீ. இனி நீ கற்க மிச்சமிருப்பது பஞ்ச பூதங்களையும் உன் வில்லால் ஆள்வதை மட்டும் தான்" என்றார். அர்ஜுனன் வணங்கி "தங்கள் தயை குருவே" என்றான். துரோணரின் வெண்தாடியில் வழிந்திருந்த ஒரு துளி நீரை அர்ஜுனன் உற்று நோக்கினான். அதன் வழியாக அவன் அஸ்வத்தாமன் முகத்தை பார்த்தான். அஸ்வத்தாமன் கண்ணுக்குள் ஒரு நாகம் நாநீட்டி தலை சொடுக்கி இமையா விழிகளுடன் நிற்பதை கண்டு திகைத்தான்.


 >---------->    <-----------<         >---------~~    ~~----------<         >----------{    }----------<


(ஹரீஷ்)

Sunday, October 26, 2014

சில மலையாள வார்த்தைகள்

  1. பரணம் - ஆட்சி
  2. ரோமாஞ்சனம் - புல்லரிப்பு
  3. வெப்பராளம் - கோவம்,கொதிப்பு
  4. எரப்பாளி - பிச்சைகாரன்
  5. சீத்தை - மோசம்
  6. நொம்பரம் - வலி
  7. பூச்சை - பூனை
  8. விஜாரம் - நினைப்பு
  9. அன்வஷிக்கனம் - விசாரிக்கனும்
  10. நொனா - பொய்
  11. வல்லதும் - ஏதாவது
  12. காயல் - கடல்
  13. அம்பலம் - கோயில்
  14. தரவாடு - ஒரு குடும்பத்தின் பெரிய வீடு
  15. தம்புராட்டி, தம்புராண் - ராணி, ராஜா
  16. முண்டனம் - மொட்டை
  17. வட்டு, பிராந்து - பைத்தியம்
  18. பஞ்ச சாரம் - சர்க்கரை
  19. சம்பாரம் - மோர்
  20. சக்கா - பலா
  21. கச்சவடம் - தொழில்
  22. சக்கரம் - காசு
  23. வெஷப்பு - பசி
  24. களி - விளையாட்டு
  25. ஓர்மை - ஞாபகம்
  26. தெளிவு - சாட்சி
  27. தாக்கோலு - சாவி
  28. ஒக்க - எல்லாம்
  29. முறி - அரை
  30. ஒழிமுறி - விவாகரத்து
  31. பராதி - புகார்
  32. பினக்கம் - கோவம்
  33. ஆத்யம் - முதலில்
  34. அவசானம் - கடைசி
  35. சிக்ஷா - தன்டனை
  36. ஆய்ட்சா - வாரம், கிழமை
  37. திவசம்  - நாள்
  38. கொள்ளம் - வருடம்
  39. மணிக்கூறு - மணி நேரம்
  40. சல்லியம் - தொந்தரவு
  41. வைய்யான் - முடியாது, இயலாது
  42. உச்சி - மதியம்
  43. புலரி - காலை
  44. பக்ஷனம் - உணவு
  45. அணியன், அணியத்தி - தம்பி, தங்கச்சி
  46. அம்மாவன் - மாமன்
  47. சுண்டு - உதடு
  48. சேலு - அழகு
  49. மின்டு - பேசு
  50. ஆக்ரஹம் - ஆசை
  51. செராய் - பேன்ட்
  52. சம்ஷயம் - சந்தேகம்
  53. கத்து - கடிதம்
  54. விளி - அழை
  55. தெற்று - தவறு
  56. ஷெமிக்கனும்/மாப்பு தரனும் - மன்னிக்கனும்
  57. ஷீனம் - நோய்
  58. தத்தா - கிளி
  59. பஹுமானம் - மரியாதை, மதிப்பு 
  60. வாதில் - கதவு
  61. ஏமான் - எஜமான் 
  62. சம்ஸ்காரம் - கலாச்சாரம்
  63. ஆத்மஹத்தி - தற்கொலை 
  64.  ஆலோஷனா - யோசனை
  65. தள்ளு - அடி
  66. வழக்கு - சன்டை
  67. கோடதி - நீதிமன்றம்
  68. ஒரப்பு - நீச்சயம்
  69. தோக்கு - துப்பாக்கி
  70. வைகும் - தாமதமாக

Thursday, September 18, 2014

ஒளியின் இருள்



ஒளியின் இருள்

என் வீட்டின் கூரையில்
ஒரு சிலந்தி வலையின் அறுந்த கீற்று
காற்றை குறிகாட்டி அசைந்தாடுகிறது
ஆனால் அன்றொரு நாள்,

விளக்கினொளி வீடு முழுதும் பரவியிருந்தது
அந்த கீற்றுக்கு பின்னால் விழும் நிழலை
இந்த ஒளி வெள்ளம் கரைத்துவிட்டது
இருப்பினும் அந்த கீற்றுக்கு பின்னால் ஒரு நுண்ணிய நிழல்.

இருளாலான அந்த நிழல்
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஓர் இருள் தீவு
அந்த தீவில் கிடந்தது ஒரு நீண்ட முள்
அதுவரை அதிர்ஷ்டத்தால் தப்பிய நான்
அன்று அதை ஏற்றி கொண்டேன் என் உடலில்.

இருளை மறைக்கும் இருள் கொண்டது ஒளி
ஒளி ஏதோ ஒன்றின் மேல் பூசப்பட்ட ஒரு பொய் பூச்சு
ஒளி மறைக்கும் வெளி ஒன்று உள்ளது
அதை எப்படி பார்ப்பது?

*******************************************************************

Tuesday, September 16, 2014

தேவைக்கு மீறிய அறிவியல் வளர்ச்சி

சில நாட்களுக்கு முன்னால் மின்சாரத்தின் கண்டுபிடிப்பு பற்றி ஒரு பிபிசி டாக்குமெண்டரி யூட்யூபில் பார்த்தேன். அது படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு துறை. அதை பார்த்து முடித்து சில நாட்கள் கழித்து இந்த எண்ணம் தோன்றியது.

"Neccesity is the mother of invention" என்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இன்று நாம் புழங்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் தேவையின் அடிப்படையில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தேவை, கனவு, ஆர்வம். தேவைக்கு உதாரணமாக அனைத்து விதமான வாகனங்களையும் சொல்லலாம், காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறை. கனவிற்கு உதாரணமாக விமானத்தை சொல்லலாம், இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இது தேவையே இல்லாதது. மோட்டார் வாகனங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் புழக்கத்தில் வர ஆரம்பித்தது, அந்த வாகனங்களின் ஆச்சரியத்தில் இருந்து மக்கள் வெளிவருவதற்கு முன்னரே பறக்கும் வாகனம் காலத்தை மீறிய கண்டுபிடிப்பு, முற்றிலும் கனவினால் உந்தப்பட்டது. ஆர்வத்திற்கு உதாரணமாக மின்சாரம், அணு அறிவியல் ஆகியவற்றை சொல்லலாம். இயற்கையில் நாம் காணும் ஒரு வெளிப்பாடு ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு கண்டுபிடிக்கபட்டவை. இந்த ஆர்வத்தின் காரணமாக தான் இன்று நாம் உபயோகிக்கும் அனைத்து அதி நவீன தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்திருக்கிறோம்.

மனிதன் தன் தேவைக்கு வேண்டிய கண்டுபிடிப்புகளை எப்போதோ கண்டுபிடித்தாகிவிட்டது என்றே நினைக்கிறேன். சராசரி மனிதனுக்கு இன்றிருக்கும் வசதிகள் மிக மிக அதிகம். இபோலா போன்ற விஷயங்கள் திடீர் தேவையை உண்டு செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இன்று அறிவியலும், விஞ்ஞான சமுகமும் மனித தேவைக்கு அதிகமான விஷயங்களை உருவாக்கவே பெரும்பாலும் உதவி வருகின்றன. இன்று தேவைகள் பல விதமான உத்திகளால் நம் மீது தினிக்கப்படுகிறது. எந்த விதமான எல்லையும் இல்லாமல் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவை நடக்கும் தோறும் செயற்கையை நாடி இயற்கையை அழிக்கிறோம்.

அறிவியல் இன்று முதலாளித்துவத்தின் மற்றும் அரசாங்கங்களின் கருவியாக மாறிவிட்டது. போட்டி போட்டு கொண்டு எந்த வித அற உணர்வும் இன்றி அதை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த அமைப்புகள் ஆட்டி வைக்கும் பொம்மைகளாக மாறிவிட்டனர். அவர்களின் அறிதலின் சுகமும், அடையும் புகழும் அவர்களை மறு பரிசீலனை இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு உதவ செய்கிறது. விளைவாக இயற்கை நாள் தோறும் நாசாமாகிறது, மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி கொன்டே இருக்கிறார்கள். முன்னர் செய்த தவறுகளை எல்லாம் திருத்துவதற்காக விஞ்ஞானம் உபயோகிக்கபடாமல் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே போகிறோம் என்று தோன்றுகிறது. மாற்று சக்தி (alternative energy) போன்ற ஆராய்ச்சிகள் இதற்கு விதி விலக்கு.

அறிவியல் வளர்ச்சியே இருக்க கூடாது என்று சொல்ல வரவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறம் சார்ந்தும், உலக நன்மை சார்ந்தும் பரிசீலிக்க பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் மகத்தான கனவுகளும் ஆர்வங்களும் அர்த்தமற்று தவறுகளுக்கு துனை செல்லவே கூடும். இப்படியே நாள் தோறும் சென்றால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. மனித இனம் எப்போது இதை உணர்ந்து தன் பாதையில் இருந்து திரும்பி நடந்து இயற்கையுடன் ஒரு சமரச புள்ளியில் வந்து நிற்கும் என்றும் தெரியவில்லை.

Thursday, August 28, 2014

தண்டவாளம்

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதை ஒன்று,

தன்டவாளம் (Tracks)

இரவு 2 மணி, ரயில் ஒரு வயக்காட்டில் நின்றது
தொலைவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து ஒளி பொறிகள்,
வின் விளிம்பில் உணர்வின்றி சிதறுகிறது.

ஒரு மனிதன் கனவின் ஆழத்திற்கு செல்லும் போது
அவன் அங்கு இருந்தது,
அவன் அறைக்கு அவன் மீன்டும் திரும்பும் போது நினைவிருக்காது.

அல்லது ஒரு நபர் நோயின் ஆழத்திற்கு செல்லும் போது
அவனது எல்லா நாட்களும் சிதறும் பொறிகளாய், பறவை கூட்டமாய்
வலுவிழந்து, உனர்வற்றதாய் மாறிவிடுகிறது.

ரயில் முற்றிலும் நகர்வற்று போயிற்று
இரன்டு மணி, திடமான நிலவு, சில நட்சத்திரங்கள்.


இந்த கவிதை ரயில் பயனத்தை ஒரு படிமமாக வைக்கிறது. 

ஒரு வயலில் நின்று விட்ட ரயிலில் இருந்து தொலைவில் தெரியும் ஒரு காட்சி, ஓளி சிதறல்கள், என்று கவிதை தொடங்குகிறது. அந்த ஒளி சிதறல்கள் உணர்வின்றி சிதறுகிறது என்கிறார். ஒளிக்கு உணர்வு உண்டா என்ன? ஒளியின் உணர்வு அது பிரதிபலிக்கும் மனிதனின் மனதில் உண்டாவது. ஒரு வாண வேடிக்கை கண்டால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் ஒரு ஆனந்தம், ஒரு ஆச்சரியம் எழும். அதுவே அந்த ஒளியின் உணர்வு. ஆனால் இங்கு உணர்வில்லா ஒளி, அந்த ஒளி பயணியின் உள்ளத்தையே பிரதிபலிக்கிறது. எப்படி அந்த ஒளி சிதறல் பயணியின் உள்ளத்தில் எந்த ஒரு உணர்வையும் தோற்றுவிக்கவில்லை என்று காட்டுகிறது. ஏதோ துயரத்தில், இக்கட்டில் ஆழ்ந்த ஒரு பயணி. அதே சமயம் அதே காட்சியை வேறு ஒரு மூலையில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு அது உவகையை அளித்திருக்கும். மகிழ்ச்சி தான் எத்தனை சார்ப்புடையது. அது எதை சார்ந்திருக்கிறது?

கனவில் ஆழ்ந்த ஒருவன் கனவில் இருந்து வெளிவந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது, அந்த கனவு நினைவில் இருக்கபோவதில்லை. கனவு - அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கமுடியுமா? நம் உன்மை வாழ்க்கையில் கனவு காண்பதன் மூலம் தான் எத்தனை உவகை கொள்கிறோம். அகத்தளத்தில் நாமே நம்மை நிகழ்த்தி கொள்ளும் ஒரு வாழ்க்கை, ஒரு சில மனி துளிகளில் தொடங்கி முடியும் ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை முடிந்தவுடன் ஒரு பெருமூச்சுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். அந்த கனவளித்த மகிழ்ச்சியை நம் அன்றாட உலைச்சல்கள் மூழ்கடித்துவிடும்.

நோயில் மூழ்கிய ஒருவனுக்கு தன் மொத்த வாழ்நாளும் ஒரு கனவாய் தான் தெரியும். மகிழ்ச்சியான ஒரு நினைவு, ஆனால் அது இந்த தருணத்தின் வேதனையில் பொருளிழந்தது, வலுவிழந்தது, உணர்விழந்தது. மிஞ்சினால் ஒரு சோர்ந்த புன்னகையை எழுப்ப கூடியது. நமது மகிழ்ச்சி ஒரு தருணத்தில் நாம் வாழும் சூழ்நிலைக்குட்பட்டது. அந்த சூழ்நிலைகள் நமது வாழ்க்கை பயணத்தில் காணும் காட்சிகள். நமது பயணமோ ரயில் வண்டியில், தண்டவாளங்களுக்கு உட்பட்டது. ஆனால் தண்டவாளங்களை தாண்டியும் நம் கனவுகள் ஓட கூடியது. அது கனவு மட்டுமே. அதை ஏற்பத்தும் மறுப்பதும் இந்த சிறைப்பட்ட பயணியே.

Monday, June 23, 2014

மனித வளர்ச்சியும், இயற்கையின் அழிவும்

முதலாளித்துவம் முதலாளியின் லாபத்தின் மேல் உள்ள நாட்டத்தால் இயங்கும் பொருளியல் முறை. தொழிலாளித்துவம் அல்லது சோஷயலிசம், முதலாளி லாபத்தை குவித்து தொழிலாளிகளை சுரண்டுகிறார்களே, தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், தொழிலாளி புரட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ஆகிய லட்சியங்களை கொண்ட கருத்து. இந்த இரு தரப்பும் ஒரு முக்கியமான பொருளை மறந்துவிடுகிறது அல்லது பொருட்படுத்துவதில்லை.

இன்று ஒரு மர கதவு செய்யப்படுகிறது என்றால் அதற்கான மூலதனத்தை முதலாளி போடுகிறான், மரத்தை வாங்கி தருகிறான், அதற்கு வேண்டிய உபகரணங்களயும், தொழிற்சாலையும் அமைத்து தருகிறான். தொழிலாளி மரக்கதவை செய்கிறான். இந்ந மரக்கததவின் விலையானது மூல பொருட்கள் வாங்குவதற்கான செலவு, தொழிலாளி சம்பளம், தொழிற்சாலை செலவுகள், முதலாளி லாபம், வரி ஆகியவற்றின் கூட்டு தொகை. அதுவே மக்கள் கையில் வந்து சேரும் பொழுது, இடை தரகு, போக்குவரத்து என்று இன்னும் விலை ஏற்றப்பட்டு விற்கப்படும். இந்த விலையில், அந்த மரத்தின் விலை என்ன? மூல பொருள் வாங்குவதற்கான விலை. இந்த மூல பொருளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? மேலே சொன்ன அதே வகையில் தான். மரத்தை வெட்டும் செலவு, போக்குவரத்து, மரம் வெட்ட அனுமதி வாங்கும் செலவு அல்லது தோட்ட பரமாரிப்பு, லாபம் ஆகியவற்றின் கூட்டு தொகையே அந்த மரத்தின் விலை.அப்போது உண்மையாக மரத்திற்கான விலை எவ்வளவு? ஒன்றுமே இல்லை. மீண்டும், மீண்டும் எந்த ஒரு பொருளின் விலையும், மனித உழைப்புக்கும் மனித முதலுக்கும் தான் தரப்படுகிறதே தவிர அந்த மரத்திற்கு அல்ல. வளத்திற்காக என்று அரசாங்கத்துக்கு ஒரு பகுதி போகலாம். ஆனால் அந்த மரத்திற்கு என்று எந்த மதிப்பும் அளிக்கபடுவதில்லை.
அந்த மரத்திற்கு விலை தேவையா? தேவையில்லை, அந்த பணத்தை வைத்து அம்மரம் என்ன செய்ய இயலும். ஆனால் அந்த மரத்தை மண்ணில் சாய்த்ததற்கு என்ன திருப்பி தரப்படுகிறது? உழைப்புக்கு ஊதியம், முதலுக்கு லாபம், வளத்திற்கு ? சரி என்னதான் திருப்பி தர வேண்டும்? அதிக மரம் வளர்கலாமா? வளர்க்கலாம், ஆனால் எத்தனை மரத்தை வாங்கும் வணிகர்கள் அதை செய்கிறார்கள். இல்லை எத்தனை மக்கள் அதை செய்கிறார்கள். சேவை மனப்பான்மை, சுற்று சூழலை மதிப்பவர்கள் சிலரே அதை செய்கிறார்கள். அப்படி மரத்தை நட்டாலும் அது வெட்டப்பட்ட மரத்திற்கு நிகரல்ல. இருந்தும் அந்த சிறு வேலையை கூட எந்த நிறுவனமும் செய்வதில்லை.இந்த வணிகம் எப்படி இருக்கிறது என்றால்,ஒரு குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் போயிருக்கிறது, அதில் சுலபமாய் எட்டி குதித்து அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை திருடும் கூட்டம் அதை சந்தையில் கொண்டு வந்து பாதி விலையில் விற்பது போல தான் உள்ளது.

இது மரங்களுக்கு மட்டும் இல்லை, இயற்கையில் இருக்கும் எல்லா வளங்களுக்கும் இந்த கேள்வி பொருந்தும். இதனால் என்ன விளைவு என்றால், ஒரு பொருள் விலை குறைவாக கிடைக்கும் என்றால் அதை வீனாக்கப்பட்டால் யாரும் கவலை கொள்வதில்லை. உதாரனம், உணவு பொருட்கள், இன்றைய நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க செலவு அவ்வளவாக ஆகி விடாது. அதனால் அந்த உணவு வீணாக்கபட்டால் அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. நிறுவனங்களில் வீணாகும் மின்சாரத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். காகிதங்களை இஷ்டத்திற்கு செலவளிப்பார்கள். பிளாஸ்டிக் காகிதங்களை தூக்கி குப்பையில் வெகு சுலபமாக போடுவார்கள். மதிப்பு என்பது பொருளுக்கு அல்ல, பணத்திற்கு தான். அதற்காக எல்லா பொருளையும் விலை அதிகமாக விற்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு வணிக பொருளும் உருவாக்குவதற்கு இயற்கை வளங்கள் எவ்வளவு செலவாகிறது என்ற பிரக்ஞை மனிதர்களுக்கு தேவை.

இயற்கையில் இருந்து எடுக்கும் வளத்திற்க்காக திருப்பி இயற்கைக்கு என்ன செய்கிறோம். பெரும்பாலும் ஒன்றுமில்லை பதிலுக்கு அதே இயற்கையை இன்னும் நாசம் செய்யும் வகையாக ப்ளாஸ்டிக போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறோம், உலக தட்ப வெட்ப நிலையை மாற்றும் வகையில் பல விதமான நச்சு வாயுவை உமிழ செய்கிறோம். எதற்கு இப்படி ஒரு வெறி ஆட்டம். இதன் மூலம் என்ன சாதிக்கிறோம். மனிதன் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால் இப்படி நடக்குமா? மனிதனுக்கு ஏன் அதிகம் தேவைபடுகிறது? இந்த தேவையின் ஊற்று முகம் எது? தேவை அவனில் நிகழ்கிறதா இல்லை அவன் மேல் திணிக்கப்படுகிறதா?

தொழில்நுட்பம் மக்களின் உடல் உழைப்பை குறைப்பதற்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது. சைக்கிளிள் 10 மைல் போகும் நேரம் 1 மணி நேரம் என்றால் பைக்கில் அதை அரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம். காரில் அதை விட விரைவாக சொகுசாக போய் சேரலாம். ஆக இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனுக்கு நேரம் மிச்சமாகிறது. வேலை செய்யும் வேகத்தை தொழில்நுட்பம் அதிகம் செய்திருக்கிறது ஆனால் வேலை செய்யும் நேரம் இன்னும் 8 மணி நேரம் தான். மணிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் தயாரிக்க தேவையான ஆட்களும் நேரமும் குறைகிறது. இன்று மணிதனின் முக்கியமான தொழிலில் ஒன்றாக விவசாயம் கிடையாது, அது படிக்காதவர்களுக்கான தொழிலாகிவிட்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட நூறு வருடங்களுக்கு முன் விவசாயத்தில் 80% மக்கள் ஈடுபட்டிருந்தனர், ஆனால் இன்று வெறும் 3% மக்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் மக்கள் தொகை பெருக்கமும், அந்த நாட்டுக்கு அன்றாடம் நடக்கும் குடியேற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆயினும் விவசாயத்தில் குறைந்த சதவிகித மக்களே வேலை செய்கின்றனர் என்றால் மீதமிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள். அத்தியாவசிய சேவை, அத்தியாவசிய பொருள் உற்பத்தியில் ஒரு கணிசமான சதவிகித மக்கள் வேலை செய்வார்கள். ஆனால் கட்டாயம் 50% சதவிகித மக்கள் அத்தியவசிய தேவைக்கு அதிகமான ஏதோ ஒரு பொருளின் உற்பத்தியிலோ அல்லது சேவையிலோ தான் ஈடுபட்டிருப்பார்கள். இப்படி தேவைக்கு அதிகமான உற்பத்தியில் தான் இயற்கை வளங்கள் தேவையில்லாமல் அழிக்கப்படுகிறது, மாசு படுத்தப்படுகிறது.
அப்போது இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவது தவறா? தவறில்லை இயற்கையில் இருக்கும் அனைத்துமே உயிரினங்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்து ஒன்று வாழ்கிறது. புலி மானை தின்று தான் உயிர் வாழ்கிறது. அது பத்து வருடம் உயிர் வாழும் என்றால் எத்தனை மான் அழிக்கப்படும்? ஆனால் அதன் தேவை அது, அதற்கு ஏற்ப அதை இயற்கையிலிருந்து எடுத்து கொள்ளகிறது. ஆனால் மனிதர்களான நாம் இயற்கையை தேவைக்கு மேலாக நுகர்வுக்காக அழிக்கிறோம். என் எண்ணத்தில் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை உண்டாக்கும் கண்டுபிடிப்புகள் என்றோ நடந்து முடிந்துவிட்டது. இன்று கண்டுபிடித்து கொண்டிருப்பதெல்லாம் தேவையில்லாத, முதலாளிக்கு லாபம் ஈட்டி தரும் விஷயங்கள் தான். அப்போது ஏன் நாம் கண்டுபிடிப்பதை நிறுத்தி கொள்ளக்கூடாது. எதற்காக புதிதான பொருளுக்கான ஆராய்ச்சி. இன்று புதிய பொருட்கள் கண்டு பிடிக்கும் தோறும் அது முதலாளி வர்க்கத்தின் அசுர வளர்ச்சிக்கு உதவுகிறது, அந்த புதிய கண்டுபிடிப்புகளின் வசதிகளால் மக்கள் அதற்கு அடிமையாகி உடல் உழைப்பு இல்லாத பூஞ்சைகளாகி வருகிறார்கள். அந்த புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இத்தனை கெடுதல்கள், இயற்கை வளங்களை விடுங்கள், மக்களுக்கே ஏற்படும் போது ஏன் இதை நாம் இன்னும் தொடர்கிறோம். நிறுத்திவிடலாமல்லாவா? இதுவரை கண்டுபிடிக்கபட்ட உபகரணங்கள், சக்திகள் ஆகியவையை செம்மை படுத்துவதோடு நிறுத்தி கொள்ளலாமல்லவா?

இதில் பிரச்சனை என்னவென்றால், நிறுத்துவது என்றால் யார் நிறுத்துவது? எந்த நாடு இதற்கு முன் வரும். ஒன்றுமில்லை, உலகெங்கும் அதி ஆபத்தானது என்று பொதுவாக ஒத்து கொள்ளப்பட்ட அணு அயுதங்களை எல்லா தேசங்களும் கைவிட்டுவிட்டதா? தேசங்களுக்கு இடையில் போட்டி இருக்கும் தோறும் இந்த 'வளர்ச்சிக்கான' தேடலும் ஓட்டமும் தொடரும். வரலாறு தோறும் நாம் காண்பது, எந்த ஒரு சமுகம், ஆட்சி, நாடு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அல்லது உலகின் பொதுபோக்குக்கு தன்னை தயார்படுத்தி கொள்ளவில்லயோ அவையெல்லாம் பின் தங்கி ஒடுக்கப்படுகிறது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்கள், நாட்டில் வாழும் மக்களால் தாழ்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத நாடுகள் வளர்ச்சி அடைந்த நாட்டு மக்களால் அடக்கி அழிக்கப்படுகிறார்கள. உதாரணம், அமெரிக்க பழங்குடிகள் ஸ்பானிய மற்றும் பிற காலனிய படைகளால் கிட்டதட்ட முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டார்கள். அப்படி இருக்கையில் எந்த நாடு தன் தொழில்நுட்ப நிலையை கைவிட தயாராகும்? அது மட்டுமில்லாம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்த மக்கள் தொகைக்கு வேலை தர முடிகிறது. அதனால் இந்த வளர்ச்சிகளை நிறுத்தினால் பல்வாறான பின் விளைவுகளிருக்கும்.

இது ஒரு சுழற்சி போலாகி விட்டது. மனிதன் தன்னை பிற மனிதனிடம் இருந்து காப்பாற்றி கொள்ள வளர்ச்சி அடைந்தாக வேண்டும், ஆனால் அவன் வளர்ச்சி அடையும் தோறும் அவன் வாழும் இந்த உலகம் படி படியாக அழிகிறது. ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்து மேலும் தளங்கள் கட்ட உபயோகிப்பது போன்றது இந்த வளர்ச்சி. காந்திய பொருளாதார முறை இயற்கையை கணக்கில் கொள்கிறது,அதை வீணடிக்க கூடாது என்று வாதிடுகிறது. ஆனால் அதை யார் நடைமுறைக்கு கொண்டுவருவது? மனிதனுக்குள் போட்டி விலகி மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Friday, June 13, 2014

கவிதை வாசிப்பு

கவிதை வாசிப்பு குறித்த என் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் பதில். படிமம், கவிதையின் மொழி குறித்த எனது ஐயத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.