Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Saturday, December 26, 2015

முக்தியும் மறுபிறவி எனும் முன்னனுமானமும்

இந்திய மதங்களில் பெரும்பாலும் முக்தி எனும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முக்தியை அடையும் வழியாக சில யோக மார்க்கங்கள் வரையறுத்து தரப்பட்டிருக்கிறுது. கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் ஞான யோகம் போன்றவை.  மனிதன் வாழ்வின் துன்பங்களை, பந்தங்களை, பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு இந்த இன்னல்கள் இல்லாத பேரானந்த நிலையில் சென்று அமர்வதே அந்த முக்தி என்பதாகும்.

இந்த முக்தியை அடைவதற்கு வாழ்நாள் முழுதும் அல்லது வாழ்வின் ஒரு பகுதி முழுக்க சாதகம் செய்து அந்த முக்தி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். இப்படிபட்ட முக்தி என்ற கருத்தை ஏற்று கொள்வதற்கு முன்னணுமானமாக - Presupposition ஒரு கருத்து நம்முள் இருக்கிறது.  மறுபிறவி எனும் கருத்து தான் அது. ஒரு ஆத்மா அல்லது உயிர் முக்தி அடையாத வரையிலும் மறுபிறப்பு எடுத்துகொண்டே இருக்கும் என்ற கருத்து அடிப்படையாக இருப்பதாலயே இந்த முக்தி என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த மறுபிறவி என்ற கருத்தை நான் மறுத்தால். எனது வாழ்க்கை என்பது சில பத்தாண்டுகள். இந்த காலத்தை நான் ஏன் முக்திக்கு செலவழிக்க வேண்டும்? வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பதற்கே செலவு செய்துவிட்டு சென்றுவிடலாம். அது நல்ல வழியிலான இன்பமாக இருந்தாலும் சரி தீய வழியினாலான இன்பமாக இருந்தாலும் சரி. எனது வாழும் காலத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு செல்லதானே நான் பார்ப்பேன்.

ஒரு வசதிக்காக சொர்க்கம் நரகம் என்ற கருத்தையும் நிராகரிப்போம் என்றால், பாவம் எது புன்னியம் எது? மறுபிறவியும் இல்லை சொர்க்கம் நரகமும் இல்லை என்ற பின் நமது இந்த வாழ்க்கை மட்டுமே நமக்கானது. ஒவ்வொரு நொடியும் பொன் துளி அல்லவா? புலன் இன்பத்தை அளவோடோ அளவில்லாமலோ அனுபவித்து விட்டு செல்லலாமே? அறிதல் என்பதும் ஒரு புலன் இன்பமே. அதற்காக ஒருவர் அறிகிறார் என்றால் சரி. ஆனால் வீடுபேறுக்காக ஒருவர் அறிகிறார், தொழுகிறார், சாதகங்கள் செய்கிறார் என்பது எப்படி சரியாகும்.

ஆனால் மறுபிறவி என்ற கருத்து நமது இந்திய மதங்களில் ஆழமாக இருப்பதால் தான் முக்தி என்ற நிலை முக்கியமாக இருக்கிறது. அதற்காக நமது நேரத்தை செலவிட்டு செய்யும் சாதகங்கள் பொருள்படுகிறது. ஆனால் இந்த கருத்து மேற்கத்திய மதங்களில் இல்லை. அங்கு சொர்க்க நரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த கருத்தை வைத்து பாவ புன்னியங்கள் பொருள் படுகிறது. அதனால் அவர்களுக்கு இறைவழிபாடு பொருள்படுகிறது.

தன் வாழ்க்கையையே தன் முக்திக்காக அற்பனித்த ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். ஞான மார்க்கத்தை தனது பாதையாக தேர்ந்தெடுத்தவர். அவரது கருத்துகளுக்கும், முக்திக்கான ஏக்கத்திற்கும் அடிநாதமாக மறுபிறவி சங்கிலி என்னும் முன்னணுமானம் இருப்பதாக தோன்றியது.  முக்தியை தேடுபவர்கள் இந்த முன்னணுமாத்தை உணர்ந்து அதை ஏற்று கொண்டு தேடுவார்களாயின் அது ஏற்றுகொள்ளதக்கது. ஆனால் அப்படி ஒரு முன்னணுமானத்தை அறியாமலேயே வாழ்க்கையின் இலக்கை தேர்ந்தெடுப்பது என்பது சரியாகப்படவில்லை. அதுவும் குறிப்பாக ஞான மார்க்கத்தின் வழியில் செல்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

----

மேலே நான் எழுதிய அணுகுமுறையில் கொடுக்கல்-வாங்கல் என்ற தோரனை இருக்கிறது. அதில்லாமல் ஒரு உயிரானது தனது போதாமையை உணர்ந்து ஒரு முழுமைக்காக முக்தியை தேர்ந்தெடுக்கிறது என்ற கோணத்திலும் இதை அனுகலாம்.

Monday, October 19, 2015

காந்தியும் இந்திய ஆன்மீகமும்

நவகாந்தியத்தை பற்றி மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரையை படித்தேன். அதன் தமிழ் மொழியாக்கம் இங்கு

காந்தியை இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியாக வைத்து விளக்குமிடம் பிடித்திருந்தது. காந்தி அந்த மரபின் அடிப்படைகளுக்கு எப்படி தன் வழியில் விளக்கம் கொடுத்தார் அதிலிருந்து எப்படி ஒரு வாழ்வியல் வழிமுறையை வரையறுத்தார் என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். நவ இந்தியர்கள் காந்தியை பின்பற்றுபவர்களாக, காந்தியவாதிகளாக இருக்க முயற்சிக்காமல் காந்தியை-போல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியை-போல் எப்படி இருப்பது? காந்தி எங்கிருந்து தனது வழிமுறையை எடுத்து கொண்டார்? இந்திய மெய்ஞான மரபிலிருந்து. அதற்கே திரும்ப செல்வோம். அந்த மெய்ஞானத்தின் அடிப்படைகளை கொண்டு நமது காலகட்டத்திற்கும் நமது உண்மை தேடலுக்கும் ஏற்றார் போல் ஒரு வாழ்க்கை முறையை வரையறுப்போம். மேலும் முக்கியமாக அந்த வாழ்க்கை முறையை நமது வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும், அனைத்து சமயங்களிலும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

காந்தியை-போல் நாம் வாழ வேண்டுமென்றால் இரு முக்கியமான விஷயங்களை நாம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
1. அகங்காரம்
2. புலன் இன்பம்

அகங்காரத்தை சிறிதாக்கி நமக்குள் இருக்கும்  ஆன்மாவிற்கு - spirit முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புலன் இண்பமே வாழ்க்கை என்றில்லாமல் ஆன்ம இண்பத்தை மையபடுத்தவேண்டும். இந்த இரண்டையுமே நான் காந்தி தனது சிந்தனையின் செயல்பாட்டின் முக்கியமான அடிப்படையாக கொண்டார் என்று கருதுகிறேன். தாக்குபிடிக்கும் பொருளாதாரம், சுழலியல் என்று பல்வேறு தளங்களில் அவரின் சிந்தனை-செயல்முறைகளை போட்டு பார்த்தாலும் அனைத்துக்கும் வேர் இந்த ஆதார புள்ளிகளிலிருக்கிறது.   தனது ஆன்மாவின் குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.. தன் புலனடக்கம், உணவு பழக்கவழக்கங்கள் வழியாக அந்த ஆன்மாவை சுத்திகரிக்கிறார்.

அகங்கார மற்றும் புலன் இன்ப கட்டுபாடு என்ற இரு மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்த தொடங்கினால், சுயநலம்  என்பதற்கான அவசியம் குறைந்து போகிறது. சமூகத்தின் மீது அக்கரையும். உலகத்தின் மீது பொருப்புணர்வு தோன்றும். அங்கு ஆரம்பிக்கிறது நாம் செய்ய வேண்டிய சேவை. சுயநலமில்லாத, அறத்தின் அடிப்படையில், அஹிம்சையை வழிமுறையாக கொண்டு இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.

இங்கு தான் காந்தி மற்ற இந்திய மெய்ஞானிகளிடமிருந்து வெறுபடுகிறார். ஆன்ம தேடலால் முற்றிலும் தங்களுக்குள் ஆழ்ந்துவிடும் மற்ற ஆன்மீகவாதிகள் போலில்லாமல் ஆன்மாவையும் சமூகத்தையும் இணைத்து பார்க்கும் பார்வை கொண்டவர் காந்தி.

அகங்காரம், புலன் இன்பத்தை கட்டுபடுத்துதல் போன்ற விழுமியங்கள் எல்லாம் காந்தி மட்டும் முன்வைத்தது அல்ல. நம் பண்பாடே இதை வலியுறுத்துகிறது. அதனால் தான் புலன் இன்பத்தை சிற்றின்பம் என்கிறோம். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவது போல் புருஷார்த்தம் என்பதை நம் மரபு வகுத்தளிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை வாழ்க்கையின் பகுதிகளாக வரையறை செய்கிறது.

இதில் சில மகான்கள் நேரடியாக வீடுபேறு எனும் கடைசி நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் மற்ற மூன்றையும் அனுபவித்து விட்டு கடைசியில் அங்கு வந்து சேருவார்கள். வராமல் செல்பவர்களும் உண்டு. காந்தி அந்த கடைசி நிலையில் இருந்து நம்மிடம் உரையாடுகிறார். அந்த நிலைக்கு நாம் செல்லவேண்டும். இல்லை என்றால் பிற மூன்று தளத்திலிருந்து அங்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இன்பம் என்பதை விலக்கி வைப்பதாக நம் மரபு இருக்கவில்லை. அதை வாழ்வின் ஒரு பகுதியாக சொல்லி காம சுத்திரம் எழுதி வைத்தது தான் நம் மரபு. அதன்படி இன்பத்தை முற்றும் துறந்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் கட்டாயமில்லை. அளவான இன்பம் வேண்டுவோர் அடைந்து கொள்ளலாம். அந்த இன்பத்தில் கள்ளும் ஒரு பகுதியே.

காந்தியிடம் இருக்கும் அந்த விஷேச கலவை குணம் ஆன்ம விடுதலை + உலக நலம் என்பதில் இரண்டாம் பகுதியான உலக நலம் என்னும் கூறு காந்தியை-போல் வாழ நினைப்பவரின் அனைத்து வாழ்க்கை தளத்திலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும். அதன்படி நாம் கள் குடித்தாலும் அந்த குடிக்கும் முறையும் அமைப்பும் உலக நலம் கருதுவதாக கட்டுப்பாடு உடையதாக இருக்கவேண்டும். நம் இண்பத்துக்காக எதையும் அழிப்பதாக இருக்ககூடாது. நமது இலக்கு காந்தி நின்று பேசும் அந்த தளத்தை சென்றடைவது என்ற உணர்வு எப்போதும் நமக்கிருக்கவேண்டும்.

கிழக்கு x மேற்கு மெய்யியல் - சில கேள்வி பதில்கள்

நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டது.


மனிதனின் அறிவு எப்படி பெறப்படுகிறது?

நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
கிழக்கு மதங்கள் உடலை மீறி நான் என்ற ஒரு இருப்பை அடையாளம் காட்டுகிறதே? மேற்கத்திய மெய்யியலின் நிலை என்ன?

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

பேரியற்கையை பரப்பிரம்மம் என்று சொல்லலாமா?

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

Tuesday, September 8, 2015

இந்துத்துவமும் அதன் மீதான என் விமர்சனமும்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் மூன்று வகையான தேசிய கனவுகள் இருந்தது. அதில் நேரு கனவு கண்ட  தாராளவாத சோஷியலிச தேசம், காந்தி கனவு கண்ட ஸ்வாரஜ்யம், இந்துதவர்கள் கனவு கண்ட இந்துத்தவ தேசியம். இதில் நேரு வெண்றார், காந்தி தோற்றார். இந்துத்துவர்கள் வெல்வதற்கு அன்று ஒரு பெரிய தரப்பாக இருக்கவில்லை.

இந்துத்துவத்தும் என்ற கருத்தை முதலில் வரையறை செய்தவர் சாவர்க்கர். இந்துத்துவம் என்பது இந்துக்களை ஒட்டுமொத்தமாக திரட்டி அவர்களின் பெரும்பான்மையை கொண்டு ஒரு தேசத்தை உருவாக்குது. இவர்கள் இந்துக்கள் என்று சொல்வது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்ல என்று விளக்கபடுகிறது. இந்து என்பது இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியர்களை குறிக்கிறது. அவர்களே இந்து இணம் என்கிறது. இந்து மதம் என்பது ஒற்றை வேதநூல் கொண்ட மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதன் படி இந்திய பன்பாட்டில் வளர்ந்த எந்த மதத்துக்கும் இந்து என்ற வரையறையில் இடமுண்டு என்பது இவர்களது வாதம். ஆக இந்துத்துவ தேசியம் என்பது இந்து கலாச்சாரம் சார்ந்த தேசியம்.


இந்தியாவில் இந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்துகிடந்ததே காலனியதிக்கதுக்கும் இஸ்வாமிய ஆதிக்கத்துக்கும் காரணமானது. அதனால் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்த தேசத்தை ஒரு இந்து தேமாக ஆக்குவதே இவர்களின் குறிக்கோள். இந்த தேசமானது இங்கிருக்கும் மக்களின் பித்ருதேசமாகவும் புன்னிய பூமியாகவும்  இங்கு வாழும் மக்களால் கருதப்படவேண்டும். அப்படி இந்தியாவை தங்களது தந்தை தேமாக கருதமுடியாத பிற மதத்தினர்கள் இந்தியாவை தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தேசமாக கருதவேண்டும். அவர்கள் இந்து பண்பாட்டின் மீதும் இந்து மதத்தின் மீதும் மதிப்பும் பெருமிதமும் கொண்டிருக்கவேண்டும். அதை அவரகள் நிராகரிக்ககூடாது. அப்படி நிராகரிப்பவர்களுக்கு இந்த நாட்டில் குடிமை உரிமை வழங்கப்படகூடாது என்று சொல்லியிருக்கிறார் இந்துத்துவ சித்தாந்தவாதியான கோல்வால்க்கர்.

1 -
இந்துத்தவம் என்ற கருத்து உருவாக்கப்பட்ட காலத்தையும் அந்த கருத்தையும் கவனித்தால் ஒன்று புரிகிறது. அது பயத்தினால் உருவாக்கப்பட்டது என்று தெரியவரும். நாம் கடந்த ஆயிரம் வருடங்களாய் பிற தேசங்களால் தாக்கப்பட்ட நாடாய் இருந்திருக்கிறோம். இந்தியாவில் நடந்த காலணி ஆதிக்கத்துக்கும் இஸ்லாமிய படையெடுப்புக்கும் காரணம் இந்துக்கள் ஒன்றிணையாமல் இருந்ததே. அதனால் இந்துக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அவர்கள் இணைந்து வலுவான ஒரு இந்து தேசத்தை கட்டமைக்கவேண்டும் என்பது இந்துத்துவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த கருத்து ஒரு நவீன தேசம் எப்படி இயங்கும் என்ற ஒரு புரிதலில்லாமல் சொல்லப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நவீன தேசம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டால் அதற்கென்று ஒரு ராணுவம் அமையும். அது அந்த தேசத்தை படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும். இதற்காக இந்தியா இந்து நாடாக ஒன்று திரளவேண்டியது அவசியமற்றது.


2 -
இந்துத்துவர்கள் சொல்லும் பல கருத்துகளுக்கு புறவயமான வரலாற்று பின்புலம் இருப்பதில்லை. அவர்கள் புராணங்களேயே வரலாறாக சொல்லிவருகின்றனர். சாவர்க்கர் எழுதிய இந்துத்துவ புத்தகத்தில் ராமர் என்று ராவனனை வெண்று நாடு திரும்பி சிம்மாசனத்தில் அமர்ந்தாரோ அன்று தான் இந்தியா என்பது முழுமையாக உருவாக்கப்பட்டது என்கிறார். அதுவே நம் தேசிய தினம் என்கிறார். பெரும்பாலும் புராணங்களில் வரும் ஸ்லோகங்களையே ஆதாரமாக வைக்கிறார். இன்று வரையிலும் இவர்களின் வாதம் புராணங்க்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது.

3 -
இந்துத்துவர்களுள் ஒரு அறிவார்ந்த தரப்பு இருப்பதில்லை என்பது திரும்ப திரும்ப அறிஞர்களால் சொல்லபடுகிறது. இவர்கள் இந்து பெருமிதத்தை மட்டும் வைத்துகொண்டு நாங்களே தலை சிறந்ந பண்பாடு, இன்று நவீன அறிவியல் கண்டுபிடித்ததை எல்லாம் நாங்கள் என்றோ கண்டு பிடித்துவிட்டோம் என்று மார்த்தட்டிகொள்கிறார்கள். விநாயகருக்கு யானை தலை இருப்பது அந்த காலத்திலேயே ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதை காட்டுகிறது. சமஸ்கிருதமே அறிவியல் பூர்வமான மொழி என்பது போல பல நகைச்சுவைகளை செய்வது இவர்களுக்க வழக்கமாய் இருந்து வருகிறது.

அறிவியல் என்றால் என்ன என்று ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள் சொல்வது இது போன்ற கருத்துக்கள். ஆனால் உன்மையில் அறிவியல் பற்றி அறிந்த சில இந்துத்துவர்கள் இந்த பெருந்தலைவர்களின் அதிரடியான இந்த கருத்துகளுக்கு விளக்கம் கொடுகின்றனர். இவர்களுள் இருக்கும் ஒன்றிரண்டு அறிவார்ந்தவர்களும் இவர்கள் தலைவர்கள் சொல்லும் அடிப்படையில்லா கருத்துகளை நியாயப்படுத்துவதற்கென்றே இருக்கிறார்கள் போலும். இது போன்ற கருத்துக்களால் இந்தியாவில் உன்மையாகவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் வெளி கொண்டு வரப்பட்டால் கூட அது ஏளனமாகவே பார்க்கப்படும்.


4 -
ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவன் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவனது உரிமை. தன் சொந்த கலாச்சாரத்தின் மேல் பிடிப்பு இருப்பது நல்லது. ஆனால் அதை முடிவெடுப்பது அவனது உரிமையாக இருக்கவேண்டும். அதை அவனில் வலுகட்டாயமாக ஏற்க செய்ய கூடாது. அப்படி நடந்தால் அது ஜனநாயக நாடாக அமையாது. ஒரு ஜனநாயக நாட்டில் அவன் அதன் சட்டத்தின் படி நடப்பதும் வரி கட்டுவது மட்டுமே அவனது கடமைகளாக இருக்க முடியும். அதற்கு மேல் அந்த நாட்டை அவன் போற்றுவதும் விமர்சிப்பதும் அவனது தனி மனித உரிமை. அதற்கு ஜனநாயக நாட்டில் சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் இந்துவத்தின் படி இந்திய நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்திய பண்பாட்டை பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும் இந்து மதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்லுவது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தாகவே தெரிகிறது.

Tuesday, August 4, 2015

சிறியதே அழகு

சிறியதே அழகு -  Small is Beautiful - E.F.Schumacher, Technology with Human Face என்ற கட்டுரையின் சுருக்கம்

தொழில் நுட்பத்தால் நாம் இயற்க்கை வளங்களை அழிப்பது மட்டுமின்றி  அது மனிதர்களின் படைப்பு திறனையும் முடக்கிவிடுகிறது என்கிறார் ஷூமாக்கர்.  ஒருவன் தன் சொந்த உழைப்பால் ஒரு பொருளை தயாரிப்பான் எனில் அதிலிருக்கும் படைப்பு செயல்பாடும், நுட்பங்களும் அவனுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. இன்று அந்த வேலைகளை தொழில்நுட்பம் பிடுங்கி கொள்வதால் அவன் முழுதாக ஒரு பொருளை தயாரிக்கும் வாய்ப்பை இழக்கிறான்.அவன் மிக பெரிதான ஒரு பொருளின் பாகங்களை தயாரிக்கும் தொழில்களில் ஈடுபடுகிறான். அப்படிபட்ட வேலையில் மனிதன் நிறைவடவதில்லை. அப்படி நிறைவடையாத மக்கள் இருக்கும் சமூகத்தில் தான் கேளிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Mass production என்பதற்கு மாற்றாக அவர் காந்தி சொன்ன production by mass என்ற உற்பத்தி முறையை வைக்கிறார். பெரும் உற்பத்தி முறைகளில் பெரிய அளவிலான மூதலீடும், ஆற்றலும், தொழில்நுட்பமும் தேவைபடுகிறது. பெரும் உற்பத்தி முறைகளில் இயல்பாகவே ஒரு வன்முறை இருக்கிறது. அதன் அளவுக்கும், வேகத்துக்கும் எல்லையில்லாமல் இருக்கிறது. அது மிக முக்கியமான அதன் மூல தனத்தையே அழிக்கிறது. அந்த மூலதனம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாத இயற்க்கை.

அதனால் மக்களை கொண்டே உற்பத்தி செய்யும் முறையை முன் மொழிகிறார். இதில் பெரிய முதலீடோ, ஆற்றலோ, தொழில்நுட்பங்களோ தேவையில்லை. மக்களின் உழைப்பு, அந்த உழைப்பே பெரும் முதலீடு, சில கருவிகளை கொண்டு உற்பத்தி செய்வோம் என்கிறார். மையமற்ற தன்மையும், இயற்கையுடனான ஒத்திசைவும், சிக்கனமாக வளங்களை உபயோகிக்கும் தன்மையும் இந்த முறையின் சிறப்புகளாகும். மேலும் இந்த முறையில் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை பங்கு வகிக்கலாம். மனிதர்களின் திறமையை, படைப்பூக்கத்தை, நுட்பங்களை வெளி கொண்டுவரும் இதை போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கு கேளிக்கை என்று தனியாக ஒன்று தேவையில்லை. தொழிலே ஒரு இன்பமான அனுபவமாக மாறிவிடுகிறது.

தொழில் நுட்பத்தை புதிய பாதையில் நம்மால் கொண்டு செல்ல முடியும் என்கிறார். பெரிய அளவிலான உற்பத்தி அழிவை நோக்கியே கொண்டு செல்லும். அதில் சுற்று சுழல் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. பிரச்சினைகளை ஒன்றை இன்னொன்றாக அதை மேலும் பெரிதாக தான் மாற்றி கொள்கிறோம். மனிதனின் உன்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழில் நுட்பம் தேவை. அவனை இயந்திரங்களுக்கு அடிமையாக்குபவை அல்ல. மனிதனின் அளவுக்கு ஏற்றார் போல் தொழில்நுட்பம் இருந்தால் போதும். மனிதன் சிறியவன், சிறியதே அழகு.

Tuesday, September 16, 2014

தேவைக்கு மீறிய அறிவியல் வளர்ச்சி

சில நாட்களுக்கு முன்னால் மின்சாரத்தின் கண்டுபிடிப்பு பற்றி ஒரு பிபிசி டாக்குமெண்டரி யூட்யூபில் பார்த்தேன். அது படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு துறை. அதை பார்த்து முடித்து சில நாட்கள் கழித்து இந்த எண்ணம் தோன்றியது.

"Neccesity is the mother of invention" என்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இன்று நாம் புழங்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் தேவையின் அடிப்படையில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தேவை, கனவு, ஆர்வம். தேவைக்கு உதாரணமாக அனைத்து விதமான வாகனங்களையும் சொல்லலாம், காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறை. கனவிற்கு உதாரணமாக விமானத்தை சொல்லலாம், இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இது தேவையே இல்லாதது. மோட்டார் வாகனங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் புழக்கத்தில் வர ஆரம்பித்தது, அந்த வாகனங்களின் ஆச்சரியத்தில் இருந்து மக்கள் வெளிவருவதற்கு முன்னரே பறக்கும் வாகனம் காலத்தை மீறிய கண்டுபிடிப்பு, முற்றிலும் கனவினால் உந்தப்பட்டது. ஆர்வத்திற்கு உதாரணமாக மின்சாரம், அணு அறிவியல் ஆகியவற்றை சொல்லலாம். இயற்கையில் நாம் காணும் ஒரு வெளிப்பாடு ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு கண்டுபிடிக்கபட்டவை. இந்த ஆர்வத்தின் காரணமாக தான் இன்று நாம் உபயோகிக்கும் அனைத்து அதி நவீன தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்திருக்கிறோம்.

மனிதன் தன் தேவைக்கு வேண்டிய கண்டுபிடிப்புகளை எப்போதோ கண்டுபிடித்தாகிவிட்டது என்றே நினைக்கிறேன். சராசரி மனிதனுக்கு இன்றிருக்கும் வசதிகள் மிக மிக அதிகம். இபோலா போன்ற விஷயங்கள் திடீர் தேவையை உண்டு செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இன்று அறிவியலும், விஞ்ஞான சமுகமும் மனித தேவைக்கு அதிகமான விஷயங்களை உருவாக்கவே பெரும்பாலும் உதவி வருகின்றன. இன்று தேவைகள் பல விதமான உத்திகளால் நம் மீது தினிக்கப்படுகிறது. எந்த விதமான எல்லையும் இல்லாமல் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவை நடக்கும் தோறும் செயற்கையை நாடி இயற்கையை அழிக்கிறோம்.

அறிவியல் இன்று முதலாளித்துவத்தின் மற்றும் அரசாங்கங்களின் கருவியாக மாறிவிட்டது. போட்டி போட்டு கொண்டு எந்த வித அற உணர்வும் இன்றி அதை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த அமைப்புகள் ஆட்டி வைக்கும் பொம்மைகளாக மாறிவிட்டனர். அவர்களின் அறிதலின் சுகமும், அடையும் புகழும் அவர்களை மறு பரிசீலனை இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு உதவ செய்கிறது. விளைவாக இயற்கை நாள் தோறும் நாசாமாகிறது, மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி கொன்டே இருக்கிறார்கள். முன்னர் செய்த தவறுகளை எல்லாம் திருத்துவதற்காக விஞ்ஞானம் உபயோகிக்கபடாமல் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே போகிறோம் என்று தோன்றுகிறது. மாற்று சக்தி (alternative energy) போன்ற ஆராய்ச்சிகள் இதற்கு விதி விலக்கு.

அறிவியல் வளர்ச்சியே இருக்க கூடாது என்று சொல்ல வரவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறம் சார்ந்தும், உலக நன்மை சார்ந்தும் பரிசீலிக்க பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் மகத்தான கனவுகளும் ஆர்வங்களும் அர்த்தமற்று தவறுகளுக்கு துனை செல்லவே கூடும். இப்படியே நாள் தோறும் சென்றால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. மனித இனம் எப்போது இதை உணர்ந்து தன் பாதையில் இருந்து திரும்பி நடந்து இயற்கையுடன் ஒரு சமரச புள்ளியில் வந்து நிற்கும் என்றும் தெரியவில்லை.

Monday, June 23, 2014

மனித வளர்ச்சியும், இயற்கையின் அழிவும்

முதலாளித்துவம் முதலாளியின் லாபத்தின் மேல் உள்ள நாட்டத்தால் இயங்கும் பொருளியல் முறை. தொழிலாளித்துவம் அல்லது சோஷயலிசம், முதலாளி லாபத்தை குவித்து தொழிலாளிகளை சுரண்டுகிறார்களே, தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், தொழிலாளி புரட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ஆகிய லட்சியங்களை கொண்ட கருத்து. இந்த இரு தரப்பும் ஒரு முக்கியமான பொருளை மறந்துவிடுகிறது அல்லது பொருட்படுத்துவதில்லை.

இன்று ஒரு மர கதவு செய்யப்படுகிறது என்றால் அதற்கான மூலதனத்தை முதலாளி போடுகிறான், மரத்தை வாங்கி தருகிறான், அதற்கு வேண்டிய உபகரணங்களயும், தொழிற்சாலையும் அமைத்து தருகிறான். தொழிலாளி மரக்கதவை செய்கிறான். இந்ந மரக்கததவின் விலையானது மூல பொருட்கள் வாங்குவதற்கான செலவு, தொழிலாளி சம்பளம், தொழிற்சாலை செலவுகள், முதலாளி லாபம், வரி ஆகியவற்றின் கூட்டு தொகை. அதுவே மக்கள் கையில் வந்து சேரும் பொழுது, இடை தரகு, போக்குவரத்து என்று இன்னும் விலை ஏற்றப்பட்டு விற்கப்படும். இந்த விலையில், அந்த மரத்தின் விலை என்ன? மூல பொருள் வாங்குவதற்கான விலை. இந்த மூல பொருளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்? மேலே சொன்ன அதே வகையில் தான். மரத்தை வெட்டும் செலவு, போக்குவரத்து, மரம் வெட்ட அனுமதி வாங்கும் செலவு அல்லது தோட்ட பரமாரிப்பு, லாபம் ஆகியவற்றின் கூட்டு தொகையே அந்த மரத்தின் விலை.அப்போது உண்மையாக மரத்திற்கான விலை எவ்வளவு? ஒன்றுமே இல்லை. மீண்டும், மீண்டும் எந்த ஒரு பொருளின் விலையும், மனித உழைப்புக்கும் மனித முதலுக்கும் தான் தரப்படுகிறதே தவிர அந்த மரத்திற்கு அல்ல. வளத்திற்காக என்று அரசாங்கத்துக்கு ஒரு பகுதி போகலாம். ஆனால் அந்த மரத்திற்கு என்று எந்த மதிப்பும் அளிக்கபடுவதில்லை.
அந்த மரத்திற்கு விலை தேவையா? தேவையில்லை, அந்த பணத்தை வைத்து அம்மரம் என்ன செய்ய இயலும். ஆனால் அந்த மரத்தை மண்ணில் சாய்த்ததற்கு என்ன திருப்பி தரப்படுகிறது? உழைப்புக்கு ஊதியம், முதலுக்கு லாபம், வளத்திற்கு ? சரி என்னதான் திருப்பி தர வேண்டும்? அதிக மரம் வளர்கலாமா? வளர்க்கலாம், ஆனால் எத்தனை மரத்தை வாங்கும் வணிகர்கள் அதை செய்கிறார்கள். இல்லை எத்தனை மக்கள் அதை செய்கிறார்கள். சேவை மனப்பான்மை, சுற்று சூழலை மதிப்பவர்கள் சிலரே அதை செய்கிறார்கள். அப்படி மரத்தை நட்டாலும் அது வெட்டப்பட்ட மரத்திற்கு நிகரல்ல. இருந்தும் அந்த சிறு வேலையை கூட எந்த நிறுவனமும் செய்வதில்லை.இந்த வணிகம் எப்படி இருக்கிறது என்றால்,ஒரு குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் போயிருக்கிறது, அதில் சுலபமாய் எட்டி குதித்து அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை திருடும் கூட்டம் அதை சந்தையில் கொண்டு வந்து பாதி விலையில் விற்பது போல தான் உள்ளது.

இது மரங்களுக்கு மட்டும் இல்லை, இயற்கையில் இருக்கும் எல்லா வளங்களுக்கும் இந்த கேள்வி பொருந்தும். இதனால் என்ன விளைவு என்றால், ஒரு பொருள் விலை குறைவாக கிடைக்கும் என்றால் அதை வீனாக்கப்பட்டால் யாரும் கவலை கொள்வதில்லை. உதாரனம், உணவு பொருட்கள், இன்றைய நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க செலவு அவ்வளவாக ஆகி விடாது. அதனால் அந்த உணவு வீணாக்கபட்டால் அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. நிறுவனங்களில் வீணாகும் மின்சாரத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். காகிதங்களை இஷ்டத்திற்கு செலவளிப்பார்கள். பிளாஸ்டிக் காகிதங்களை தூக்கி குப்பையில் வெகு சுலபமாக போடுவார்கள். மதிப்பு என்பது பொருளுக்கு அல்ல, பணத்திற்கு தான். அதற்காக எல்லா பொருளையும் விலை அதிகமாக விற்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு வணிக பொருளும் உருவாக்குவதற்கு இயற்கை வளங்கள் எவ்வளவு செலவாகிறது என்ற பிரக்ஞை மனிதர்களுக்கு தேவை.

இயற்கையில் இருந்து எடுக்கும் வளத்திற்க்காக திருப்பி இயற்கைக்கு என்ன செய்கிறோம். பெரும்பாலும் ஒன்றுமில்லை பதிலுக்கு அதே இயற்கையை இன்னும் நாசம் செய்யும் வகையாக ப்ளாஸ்டிக போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறோம், உலக தட்ப வெட்ப நிலையை மாற்றும் வகையில் பல விதமான நச்சு வாயுவை உமிழ செய்கிறோம். எதற்கு இப்படி ஒரு வெறி ஆட்டம். இதன் மூலம் என்ன சாதிக்கிறோம். மனிதன் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால் இப்படி நடக்குமா? மனிதனுக்கு ஏன் அதிகம் தேவைபடுகிறது? இந்த தேவையின் ஊற்று முகம் எது? தேவை அவனில் நிகழ்கிறதா இல்லை அவன் மேல் திணிக்கப்படுகிறதா?

தொழில்நுட்பம் மக்களின் உடல் உழைப்பை குறைப்பதற்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது. சைக்கிளிள் 10 மைல் போகும் நேரம் 1 மணி நேரம் என்றால் பைக்கில் அதை அரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம். காரில் அதை விட விரைவாக சொகுசாக போய் சேரலாம். ஆக இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனுக்கு நேரம் மிச்சமாகிறது. வேலை செய்யும் வேகத்தை தொழில்நுட்பம் அதிகம் செய்திருக்கிறது ஆனால் வேலை செய்யும் நேரம் இன்னும் 8 மணி நேரம் தான். மணிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் தயாரிக்க தேவையான ஆட்களும் நேரமும் குறைகிறது. இன்று மணிதனின் முக்கியமான தொழிலில் ஒன்றாக விவசாயம் கிடையாது, அது படிக்காதவர்களுக்கான தொழிலாகிவிட்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட நூறு வருடங்களுக்கு முன் விவசாயத்தில் 80% மக்கள் ஈடுபட்டிருந்தனர், ஆனால் இன்று வெறும் 3% மக்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் மக்கள் தொகை பெருக்கமும், அந்த நாட்டுக்கு அன்றாடம் நடக்கும் குடியேற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆயினும் விவசாயத்தில் குறைந்த சதவிகித மக்களே வேலை செய்கின்றனர் என்றால் மீதமிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள். அத்தியாவசிய சேவை, அத்தியாவசிய பொருள் உற்பத்தியில் ஒரு கணிசமான சதவிகித மக்கள் வேலை செய்வார்கள். ஆனால் கட்டாயம் 50% சதவிகித மக்கள் அத்தியவசிய தேவைக்கு அதிகமான ஏதோ ஒரு பொருளின் உற்பத்தியிலோ அல்லது சேவையிலோ தான் ஈடுபட்டிருப்பார்கள். இப்படி தேவைக்கு அதிகமான உற்பத்தியில் தான் இயற்கை வளங்கள் தேவையில்லாமல் அழிக்கப்படுகிறது, மாசு படுத்தப்படுகிறது.
அப்போது இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவது தவறா? தவறில்லை இயற்கையில் இருக்கும் அனைத்துமே உயிரினங்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்து ஒன்று வாழ்கிறது. புலி மானை தின்று தான் உயிர் வாழ்கிறது. அது பத்து வருடம் உயிர் வாழும் என்றால் எத்தனை மான் அழிக்கப்படும்? ஆனால் அதன் தேவை அது, அதற்கு ஏற்ப அதை இயற்கையிலிருந்து எடுத்து கொள்ளகிறது. ஆனால் மனிதர்களான நாம் இயற்கையை தேவைக்கு மேலாக நுகர்வுக்காக அழிக்கிறோம். என் எண்ணத்தில் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை உண்டாக்கும் கண்டுபிடிப்புகள் என்றோ நடந்து முடிந்துவிட்டது. இன்று கண்டுபிடித்து கொண்டிருப்பதெல்லாம் தேவையில்லாத, முதலாளிக்கு லாபம் ஈட்டி தரும் விஷயங்கள் தான். அப்போது ஏன் நாம் கண்டுபிடிப்பதை நிறுத்தி கொள்ளக்கூடாது. எதற்காக புதிதான பொருளுக்கான ஆராய்ச்சி. இன்று புதிய பொருட்கள் கண்டு பிடிக்கும் தோறும் அது முதலாளி வர்க்கத்தின் அசுர வளர்ச்சிக்கு உதவுகிறது, அந்த புதிய கண்டுபிடிப்புகளின் வசதிகளால் மக்கள் அதற்கு அடிமையாகி உடல் உழைப்பு இல்லாத பூஞ்சைகளாகி வருகிறார்கள். அந்த புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இத்தனை கெடுதல்கள், இயற்கை வளங்களை விடுங்கள், மக்களுக்கே ஏற்படும் போது ஏன் இதை நாம் இன்னும் தொடர்கிறோம். நிறுத்திவிடலாமல்லாவா? இதுவரை கண்டுபிடிக்கபட்ட உபகரணங்கள், சக்திகள் ஆகியவையை செம்மை படுத்துவதோடு நிறுத்தி கொள்ளலாமல்லவா?

இதில் பிரச்சனை என்னவென்றால், நிறுத்துவது என்றால் யார் நிறுத்துவது? எந்த நாடு இதற்கு முன் வரும். ஒன்றுமில்லை, உலகெங்கும் அதி ஆபத்தானது என்று பொதுவாக ஒத்து கொள்ளப்பட்ட அணு அயுதங்களை எல்லா தேசங்களும் கைவிட்டுவிட்டதா? தேசங்களுக்கு இடையில் போட்டி இருக்கும் தோறும் இந்த 'வளர்ச்சிக்கான' தேடலும் ஓட்டமும் தொடரும். வரலாறு தோறும் நாம் காண்பது, எந்த ஒரு சமுகம், ஆட்சி, நாடு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அல்லது உலகின் பொதுபோக்குக்கு தன்னை தயார்படுத்தி கொள்ளவில்லயோ அவையெல்லாம் பின் தங்கி ஒடுக்கப்படுகிறது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்கள், நாட்டில் வாழும் மக்களால் தாழ்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத நாடுகள் வளர்ச்சி அடைந்த நாட்டு மக்களால் அடக்கி அழிக்கப்படுகிறார்கள. உதாரணம், அமெரிக்க பழங்குடிகள் ஸ்பானிய மற்றும் பிற காலனிய படைகளால் கிட்டதட்ட முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டார்கள். அப்படி இருக்கையில் எந்த நாடு தன் தொழில்நுட்ப நிலையை கைவிட தயாராகும்? அது மட்டுமில்லாம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்த மக்கள் தொகைக்கு வேலை தர முடிகிறது. அதனால் இந்த வளர்ச்சிகளை நிறுத்தினால் பல்வாறான பின் விளைவுகளிருக்கும்.

இது ஒரு சுழற்சி போலாகி விட்டது. மனிதன் தன்னை பிற மனிதனிடம் இருந்து காப்பாற்றி கொள்ள வளர்ச்சி அடைந்தாக வேண்டும், ஆனால் அவன் வளர்ச்சி அடையும் தோறும் அவன் வாழும் இந்த உலகம் படி படியாக அழிகிறது. ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்து மேலும் தளங்கள் கட்ட உபயோகிப்பது போன்றது இந்த வளர்ச்சி. காந்திய பொருளாதார முறை இயற்கையை கணக்கில் கொள்கிறது,அதை வீணடிக்க கூடாது என்று வாதிடுகிறது. ஆனால் அதை யார் நடைமுறைக்கு கொண்டுவருவது? மனிதனுக்குள் போட்டி விலகி மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.