Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Monday, December 28, 2015

பிரசாதம் - சிறுகதை வாசிப்பனுபவம்


பிரசாதம் - சுந்தர ராமசாமி

மனிதன் வாழ்வில் தன்னால் சாதிக்க முடியாத விஷயங்களின் முன் நிற்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறைவு நிலையை அடைகிறான். அந்த கையறு நிலையில் இருந்து பிறக்கும் அமைதி அது. சிந்தித்து பார்த்தால் அந்த நிலையில் அவன் அடையவேண்டியது மிகுந்த வருத்தத்தையே. இருப்பினும் அந்த தருணங்களில் தான் ஒரு வகை நிம்மதி நம்மை சூழ்கிறது. அது ஒரு வகை கடந்து வந்த நிலை. ஆசைகளை பயத்தை ஆனவத்தை அனைத்தையும் கடந்த பிறகு எஞ்சும் நம்மில் சுரக்கும் அமைதி அது. இத்தனை சுமைகளை இறக்கி வைத்ததனால் வரும் நிம்மது அது.

அது ஒருவகையில் நம் அகங்காரம் முற்றிலும் ஒடுங்கும் தருணம் என்று கொள்ளலாம். என்னால் முடியும் என்னால் முடியம் என்று நாம் துரத்தி கொண்டு செல்லும் விஷயம் ஒரு தருணத்தில் நாம் என்ன முயன்றாலும் முடியாது என்று அறியும் போது நாம் நமது சிறுமையை அறிகிறோம். இந்த சிறுமை குணத்தால் சிறுமை அல்ல. இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச வெளியின் முன் சுழன்று சுழன்று ஏறி செல்லும் இந்த காலத்தின் முன் சிறு துகளினும் கோடி பங்கில் ஒருவனாய் நம்மை பார்த்து உணரும் சிறுமை அது. இந்த சமயத்தில் தான் சரணாகதி என்பது முழு அர்த்தம் கொள்கிறது. நதிகிருஷ்ணன் கால்களில் சென்று பணிவதன் மேன்மை புரிகிறது. இவை எதற்கும் நான் பொறுப்பல்ல நீயே என்று அவன் மீது சுமைகளை இறக்கி வைத்து பஞ்சு போல் பறக்கும் இலகு தன்மை கூடுகிறது. அதற்கு பின் எதுவும் செய்யலாம். நக்கல், நையான்டி, சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்த கதையில் அந்த அர்ச்சகரும் போலிஸ்காரரும் உருமாறும் நுட்பமான தருணத்தில் நிகழ்ந்தது இதுவென்றும் சொல்லலாம்.

இன்னொரு வகையில் காவலன் என்ற பொறுப்பில் இருப்பவன் மீது எழும் பயம். அவன் மீது ஒரு சிறு கலங்கம் தெரியும் போது அவன் கேலிக்குறியவன் ஆகிவிடுகிறான். அதற்கு மேல் அவன் கொடுரமான தன்டனை வாங்கி கொடுத்தாலும். அதன் பொருள் இழந்துவிடுகிறது. அந்த தன்டனை உடலுக்கு மட்டும் தான். உள்ளத்தளவில் அந்த தன்டனையின் கீழ்மை அர்ச்சகருக்கு தெரியும்.அவருக்கு அதனால் எந்த அவமானமும் நிகழப்போவதில்லை.

இந்த கதையில் படிப்படியாக இரண்டு பாத்திரங்களும் மாறி வருவதை கவணிக்கலாம். முதலில் அர்ச்சகர் காவலன் என்ற அவர்களின் தொழில் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். அப்போது தான் பயம், மிரட்டல் ஆகியவை செல்லுபடியாகிறது. அடுத்த நிலையில் மனிதர்கள் என்ற அளவில் பேசிகொள்கிறார்கள். ஒருவரின் கீழ்மையும் ஒருவரின் நக்கலும் சேர்ந்த உரையாடலில் இருவரும் சிரித்து நாம் இருவரும் சமமான மனிதர்கள் என்ற நிலையை அடைகிறார்கள். அடுத்த நிலையில் உணர்வின் அடிப்படையில் இருவரும் உரையாடுகிறார்கள். பசித்து ஏங்கும், உறவுகளின் சிறு சிறு சந்தோஷங்களுக்கும் கூட கூட பல வகையான சமரசங்கள் செய்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களின் உணர்வுகளை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

அந்த உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் போதே அங்கு மனிதர்கள் தங்கள் உயர்வை காட்டுகிறார்கள். தன்னை காத்துக்கொள்ள ஒருவனுக்கு கொடுக்கபடாத காசை அந்த உணர்வுகளுக்காக அந்த காவலனுக்கு கொடுக்கிறார் அர்ச்சகர். உணர்வுகள் மட்டுமல்ல கணவுகளும் சேர்ந்துதான். நதிகிருஷ்ணன் அர்ச்சகரின் கணவு. கண்ணம்மா காவலனின் கணவு. இதை நிறைவேற்றி பார்ப்பதற்க்காகவும் தான் அவர்கள் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். இது போன்ற உணர்வுகளும் கணவுகளும் தான் நம் வாழ்க்கையை இன்பமாக்குகிறது. அனைத்தையும துறந்து கிருஷ்ணனின் காலில் விழுவது ஒரு இன்பம் என்றால். அனைத்து பந்தங்கலுடனும் கிருஷ்ணனைஅனைத்து கொள்வதும் ஒரு இன்பம் தான்.

****

இதே கதையை பாலு மகேந்திரா குறும்படமாக எடுத்திருக்கிறார்.



Friday, December 25, 2015

கடவுச்சொல், போய்க் கொண்டிருப்பவள் - சிறுகதை வாசிப்பனுபவம்


சிலரால் பிறருக்கு அன்பை கொடுக்க முடியாவிட்டாலும் மற்றவர் செய்யும் அன்பை கண்டு பொறுத்துகொள்ளவும் முடிவதில்லை. வாழ்க்கையில் பணம் அந்தஸ்து ஆகியவற்றுக்கு பின்னால் போய்விட்டவர்களுக்கு வாழ்க்கையின் இயல்பாக கிடைக்கும் சந்தோஷம் என்பது இல்லாமல் ஆகிவிடுகிறது. அப்படி இழந்த சந்தோஷங்களின் மதிப்பு தெரிந்தாலும் அவர்களால் தாங்கள் ஏற்படுத்தி கொண்ட அந்த பொருளை தேடும் வாழ்விலிருந்து எளிதாக வெளிவரமுடியவில்லை. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகம். ஆனால் அதை ஒன்றும் தெரியாத ஒரு கிழவி வந்து அனுபவிக்கும் போது அவர்களால் பார்த்துகொண்டு இருக்க முடியவில்லை.

கதை பாட்டி பேரன் அன்பை சொல்லும் கதையாக இருந்தாலும். இன்னொரு ஆழமான ஒரு விஷயமும் இந்த கதையிலிருக்கிறது. உண்மையான அன்பும் இன்பமும் மனிதனின் ஆழம் வரைக்கும் செல்லமுடிகிறது. மற்றவையவை எல்லாம் மேலோட்டமானவை. பாட்டியையும் பேரனையும் அந்த அன்பு ஆழமாக பாதிப்பதால் தான் பாட்டி தியானத்திற்கு அமரும் போது மனதில் பேரன் வந்து நிற்கிறான். பேரனுக்கு ரகசியமாக அவனுக்கு மட்டுமே தெரியகூடிய கடவுச்சொல்லில் பாட்டி வந்து நிற்கிறாள்.

*********************************************************************************

சாக்கடை என்பது அன்னத்தின் யதார்த்த வாழ்க்கையை குறிக்கிறது. அனைத்தும் நுகரப்பட்டு வெறும் கழிசல்கள் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடைக்கு அருகிலும் அவளுக்கென்று ஒரு வீடு இருக்கிறது. அதில் நினைவுகளும் கனவுகளும் பிணைப்புகளும் நிறைந்து அவள் வாழ்க்கைக்கு ஒளி சேர்க்கிறது. அந்த வீடு இருக்கையில் சாக்கடை என்பது எம்பி தாவி சென்றுவிட கூடிய ஒரு சின்ன தொல்லை அவ்வளவு தான்.

விருத்தாவும், கதை சொல்லியும் அன்னத்த்தின் சில கோணத்தை மட்டும் நிறுத்தி வைத்து ரசிக்கிறார்கள். ஆனால் அன்னம் இதை விட ஆழமானவள். இவர்கள் அறியாத கோணம் அவளை சுற்றியும் இருக்கிறது. ஆன்களுக்கு தெரிந்த கோணத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் இருந்து பார்க்க முடிகிறது, அந்த கோணத்தில் அவள் உடலே பிரதானம்.

ஒளிந்திருக்கும் அழகை கூட தேடி கண்டுபிடித்து பதிவு செய்யும் விருத்தா ஒரு ரசிகன். காட்சி ரசிகன். அவளிடம் அவன் ரசிப்பதும் அவளின் மயக்கம் தரும் இளமை அழகை தான். செழித்த கழுத்தும், மார்ப்புகளுமே அவனுடைய ரசனைக்கு தேவையானவை. கதை சொல்லிக்கு காட்சி குறியீடுகளும் அதில் எழும் கற்பனை எழுச்சியும் அவளை ரசிக்க வைக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல அவள். பாலுக்கு அழும் குழந்தை அன்னையிடம் ஒரு அழகை காணும். அவள் மடியில் மயங்கி கிடக்குமே அது ஒரு கோணம். டியுசன் படிக்கும் பையன் அன்னதிடம் ஒரு வித அழகை காண்பான், அது ஒரு கோணம்.

இப்படி பல் வேறு கோணங்களில் அழகை வெளிப்படுத்தி கொண்டு ஒரு பெண் போய் கொண்டிருக்கிறாள். இதில் சில அழகுகள் காலவதியாகலாம். அதனால் விரும்பியவர்கள் அவளை நிராகரிக்கலாம். ஆனால் ஒரு அழகு காலவதியாகும் போது அடுத்தகட்ட அழகு எழுந்து மிளிர தொடங்கும். இளமை உலர்ந்து ஒரு பெண் காய்ந்த பூவாகி போகும் போது அதில் தாய்மை எனும் பால் சுரந்து அடுத்தகட்ட அழகு மிளிர தொடங்குகிறது. 

நமக்கு வேண்டியவைகளை பூட்டி வைத்து கொள்வது வீடு. அது தேவையற்று போகும் போது அது சாக்கடையில் அல்லது குப்பை மேட்டில். விருத்தா அன்னத்தை வீட்டில் சென்று பார்க்கும் போது அவன் ரசனையில் சாக்கடை கலக்க தொடங்கிவிடுகிறது.

ஆனால் அன்னம் எந்த வகையில் தன் மேல் ஈர்ப்பு கொண்டவனையும் விலக்குவதில்லை. அன்னையாக அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டாலும் தன் உடலை ரசித்தவனின் ரசனையை எங்கோ ஒரு இடுக்கில் சுருட்டி வைத்திருக்கிறாள். தேவை எனும் போது அவள் மனம் பூனை போல் அதை நோன்டி எடுத்துப்பார்த்து ஏங்குகிறது. ஒரு வகையில் இன்புறுகிறது.

என்னாளும் அவளோடு ஆண்கள் நடக்க முடியாது. அவளின் வாழ்க்கை கனங்களின் உறைந்த காட்சி கோணங்களை பார்த்து நின்றுவிடுகிறார்கள். ஆனால் அவள் தொடர்ந்து நடந்து போய் கொண்டே இருக்கிறாள்.

Thursday, December 24, 2015

நாடகக்காரி, ரீதி - சிறுகதை வாசிப்பனுபவம்



நாடகக்காரி: ஆண்டன் செக்காவ், மொழிபெயர்ப்பு - புதுமைபித்தன்
ஆங்கில வடிவம் - The Chorus Girl

வாழ்க்கையில் எதையும் அடையாமல் யாருக்காவோ வாழ்ந்து தனது வாழ்க்கையையும் சந்தோஷங்களையும் சமுதாய அந்தஸ்தையும் பெறாமல் இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்த கதை எனக்கு நினைவுப்படுத்துகிறது.

இந்த நாடக்காரி அழகானவள் ஆனால் தன் அழகை நினைத்துக்கூட பெருமிதம் அடையாத அளவுக்கு அவளுக்கு தாழ்வுணர்ச்சியிருக்கிறது. இவளிடம் வந்து செல்லும் ஆண்களுக்கு இவள் மேல் எந்த காதலுமில்லை. நாய்க்கு ரொட்டி துண்டுகள் வாங்கி வருவது போல் இவளுக்கு இனிப்புகள் வாங்கி வருகிறான் கோல்ப்பக்கோ. ஏதோ சமுதாய காரணங்களுக்காக கோல்ப்பக்கோவுடன் இவள் இணங்கிபோகிறாள்.

பெருந்தன்மையுடன் அவள் தனது நகைகளை விட்டுகொடுத்தபோதிலும் அவளுக்கு வெறுப்பும் வசைகளும் தான் கிடைக்கிறது. கோல்ப்பக்கோவினின் மனைவியிடமிருந்து எந்த நன்றியணர்வும் இவளுக்கு கிடைப்பதில்லை. எந்தவிதமான அங்கிகாரம் இவளுக்கு கிடைப்பதில்லை. ஆனால் இவள் தான் பிறருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறாள்.

“மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது” என்ற இந்த வரி எந்த பாவமும் செய்யாத இவளை இந்த நிலையில் வைத்திருக்க முடிவெடுத்தது எதுவோ எனும் கேள்வியை எழுப்புகிறது.

*******************************************************************************************************************

ரீதி - பூமணி

இயற்கை அன்னை மனிதர்களுக்கு துயரங்களை வைத்தாலும் ஏதோ வகையில் அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறாள். பாலை வனத்திலும் சோலை என்ற இடம் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை துயர் நிறைந்த நிலமாக இருந்தாலும் மனிதர்கள் காலப்போக்கில் அவர்களின் வாழ்க்கை முறையை அந்த இடத்துக்கு ஏற்றார் போல் அமைத்துக்கொள்கிறார்கள்.

இயற்கைக்கு எந்த பேதமும் இல்லை. எல்லா உயிரினங்களையும் அரவனைத்து செல்கிறது. ஆனால் மனிதர்கள் தன் வளர்ச்சி போக்கில் அவரவர் களஞ்சியத்தை நிரப்பி கொள்ள எத்தனிக்கிறார்கள். அப்படி அளவுக்கு மீறி அவர்கள் அள்ளிப்போடும் போது அதில் அடுத்தவர்க்கு உண்டான பொருட்களும் சென்று விழுந்துவிடுகிறது. இப்படி வளத்தை குவிப்பவர்களுக்கென்றே இந்த நவீன உலகம் கருவிகளை ஏராளமாக உருவாக்கி தருகிறது.

இந்த கருவிகளை உபயோகிக்கும் தோறும் இயற்கையின் அரவனைத்து செல்லும் போக்கை இழக்க செய்கிறோம். அணைகள் கட்ட கட்ட அது இயற்கை சுழலை பல விதமான உயிர்களை பாதிக்கிறது. வசதியான ஆழ்குழாய் நீர் வசதி செய்யும் தோறும் மக்களுக்கென்று பொதுவாக இருக்கும் நீரை நமக்கென நம் சக்திக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறோம் அல்லது வீணடிக்கிறோம்.

இந்த கதையில் வரும் பையன்களும் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தான். மழையில்லா பூமி என்றாலும் மக்கள் குறைந்தபட்ச அளவில் உயிர்வாழ்வதற்கு இயற்கையில் வழியிருக்கும். ஆனால் ஒரு கிராமம் நவீனமயம் ஆகும் தோறும் அந்த வாசல்கள் எல்லாம் மூடப்படுகிறது. பலம் படைத்தவர்கள் கருவிகளின் உதவியினால் மேலும் பலம் கொள்கிறார்கள். இயற்கையின் வளங்களை ஒரு சொட்டு கூட “வீணடிக்காமல்” எடுத்து தங்கள் களஞ்சியங்களை நிரப்புகிறார்கள்.

ஒரு சமுதாயம் அன்றாடம் சோற்றை திங்க இன்னொன்று பனை மரத்தின் உச்சியிலிருக்கும் அணில்களை தேடுகிறது. மனிதனின் வளர்ச்சியில் வேட்டை சமுகத்திலிருந்து விவசாயம் நோக்கி நகர்ந்தது வளர்ச்சியாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு சமுதாயம் மீண்டும் வேட்டை சமுகத்தை நோக்கி தள்ளப்படுகிறது. இயற்கை என்பது அனைவருக்கும் பொது என்பது மாறிவிட்டது.

கிராமத்துக்குள் முரட்டு தனமாக வரும் காரை பார்த்து பயந்து ஓடும் ஆடுகளை போல, பிற உயிரினங்களும் மனிதர்களில் சிலரும் நவீனத்துவம் என்ற இந்த ராட்சச பலத்தை கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். 

Friday, November 27, 2015

அன்பளிப்பு - சிறுகதை வாசிப்பனுபவம்

அன்பளிப்பு - கு அழகிரிசாமி

http://azhiyasudargal.blogspot.in/2011/04/blog-post.html


நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நமது அன்பு ஏதோ வகையில் சார்புடையதாக ஆகிவிடுகிறது. ஆனால் நாம் கண்டுகொள்ளாவிட்டாலும் நமது அன்பை கோரிக்கும் உயிர்கள் எப்போதும் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ளமுடியாதபடி அவர்களின் உணர்வுகள் நமக்கு தெரியாதபடி நம்மை ஏதோ மறைக்கிறது.

ஆனால் இந்த மாதிரி ஏமாற்றத்தை இந்த கதையில் வரும் சாரங்கன் குழந்தையாக இருந்தாலும் மிக கௌரவமாக கையான்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அன்புக்காக ஏங்கி தோற்று சென்றும், கடைசியில் வாய் விட்டு கேட்டும் அவமானமடைந்தும் தோல்வியுற்றாலும் பெரும் தன்மையுடன் கதை சொல்லியை தன் வீட்டுக்கு ஆழைத்து அவன் கையாலயே அன்பளிப்பு பெருவது போல் பாவனை செய்து கொள்கிறான்.

சாரங்கன் போன்ற மனிதர்களுக்கு இந்த உலகம் ஏமாற்றங்களை தொடர்ந்து தந்தாலும் அதை வென்று செல்வதற்கான பாவனையை கையான்டு இந்த உலகத்தை இன்பமையமாக ஆக்கிகொள்ளும் உயிர்துடிப்பு கொண்டவர்கள். எல்லாரும் ஏதோ ஒரு வகை பாவனை செய்து தானே இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நாம் அடையும் ஏமாற்றங்களையும் ஏன் அதே பாவனையால் தான்டி செல்ல கூடாது?

புத்தகம், படிப்பு, கவிதை என்று முழுவதும் அறிவு உலகிலும் கற்பனை உலகிலும் மயங்கி கிடக்கும் கதை சொல்லிக்கு சாரங்கன் ஒரு அதிர்ச்சி கொடுத்து அவன் கண்களை திறக்கிறான். அந்த வரலாற்று புத்தகத்தை தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிளுகிளுப்பையை மெதுவாக எடுத்துவைப்பது போல் கதை சொல்லியின் புத்தகங்களினால் ஆன உலகத்திலிருந்து அவனை மீட்டு உணர்வுகள் நிரம்பிய இந்த மனிதர்களின் உலகத்திற்கு அழைத்து வருகிறான் சாரங்கன்.

மாப்பஸானின் - The Necklace

Maupassant's The Necklace

http://americanliterature.com/author/guy-de-maupassant/short-story/the-necklace
இந்த கதையை படித்தவுடன் தோன்றிய பழமொழி - மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது தான். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கிறோம். அதனை அடைவதற்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து கொள்கிறோம். ஆனால் நாம் கனவுகானும் அந்த விஷயம் உண்மையிலேயே மதிப்புள்ளதா இல்லையா என்று நமக்கு எப்படி தெரியும். அதன் மதிப்பை உண்மையிலேயே பரிசீலித்து தான் அதனை அடைய முயல்கிறோமா. இல்லை ஏதோ ஒரு வகை மயக்கத்தில் அதன் மீது விருப்பத்தை வளர்த்து கொண்டு அதனால் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துகொள்கிறோமா? இது போன்ற கேள்விகளை இந்த சிறுகதை எழுப்புகிறது.

இந்த கதை  ஒரு டிவிஸ்டுடன் முடிகிறது.

-----

நான் மத்தில்டேவை மானிடர்களுக்கான ஒரு குறியீடாக தான் பார்த்தேன்.

1. அவள் ஆசைப்படும் விஷயத்தின் மதிப்பு என்ன என்று தெரியாமலேயே அந்த விஷயத்துக்காக தன் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறாள். எந்த விஷயங்கள் அவளிடம் நிறைவாக இருக்கிறதோ அதை அந்த ஆசையினால் கெடுத்து கொள்கிறாள். இது எல்லா மானுடருக்குமே பொருந்தும். நாம் எண்ணி ஏங்கும் விஷயங்களை அடைய நினைப்பவைகளை மறுபரிசீலனை செய்துபார்க்கவேண்டும்.

2.அவள் தன்னிடம் நிறைவாக இருக்கும் விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதில்லை. அந்த நிறைவான விஷயத்திலிருந்து மேலும் மேலும் எதிர்பார்ப்புகளை வளர்த்துகொள்கிறாள். அழகாக இருக்கிறோமே என்று நிறைவடையவில்லை அந்த அழகுக்கு ஏற்ற அந்தஸ்தில் இல்லையே என்று நினைக்கிறாள். புது கவுன் கிடைத்ததே என்று நினைக்கவில்லை அதற்கு மேலும் நகைகளை எதிர்பார்க்கிறாள். இப்படியே போனால் என்று தான் நிறைவடைவது? இப்படி தானே மனிதர்கள் ஓடி கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் நாம் இருக்கும் நிலையை நினைத்து மகிழ்வடையும் பக்குவம் அனைவருக்கும் இருப்பதில்லை.

Monday, November 16, 2015

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

மாபெரும் பயணம் – சிறுகதை வாசிப்பு

http://www.jeyamohan.in/22604#.VkEVKytqmFc

முன்னே செல்லும் மாட்டின் தலையில் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது. அதன் வழி பின்னே மாட்டு மந்தை செல்கிறது. முன்னே செல்லும் மாட்டின் ஒரு சிறு இடறல் தயங்கள் கூட இந்த மந்தை எனும் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அதன் முன்னே புல்லும் பின்னே சவுக்கும் அதை நிறுத்தாமல் வழி நடத்துகிறது. கதை சொல்லும் இந்த புரட்சியாளன் அல்லது தீவிரவாதி பார்த்த அந்த முன் செல்லும் மாடு என்ன? இவன் பின் தொடர்ந்து செல்லும் சேகுவாராவோ பிரபாகரனோ போன்ற ஒரு தலைவன் தானே அது. முன்னே லட்சியவாதமும்(அல்லது சுய லாபமும்) பின்னே இக வாழ்க்கை நெருக்கடிகளும்(அல்லது ஆயுதங்களும்) செலுத்தும் ஒரு சுடரெந்திய தலைவன் தானே.

மாட்டை போல் தொடர்ந்து சென்று இந்த புரட்சியாளர்கள் தங்கள் உயிரை பலியாக்குகிறார்கள். அரசாங்கத்தின் காலடி நெஞ்சில் ஏறி ஏறி மிதிக்க நசுங்கி சாகிறார்கள். அப்படி பட்ட பயணத்தில் தானே இந்த கதை சொல்லியும் இருக்கிறான். சென்று சென்று முடியாத பயணம். யார் இந்த மந்தையை நடத்தி செல்வது. முன்னே புல்லும் பின்னே சவுக்கும் கொண்டு வழிநடத்தும் இந்த மனிதர்கள் யார்? இந்த உலகின் இயக்கத்திற்கு காரணமாய் விளங்கும் நாமறியா ’அது’ தான் இவர்களா? ஒவ்வொரு நாளும் மனிதர்களை அந்த அறுப்புகூடத்திற்கு அழைத்து செல்வது அதன் சிறு விளையாட்டா? இந்த உக்கிரமான பலிகளில் இன்பம் நுகர்வது அதன் குணமா?

வழியில் விழும் மாடுகளின் தோலையும் கரியையும் வாங்க பின்னே வரும் கூட்டம் யார். இந்த வன்முறை பயணத்தில் லாபம் காண வரும் குள்ளநரிகளா? செல்லும் வழியில் புன்னகைத்து இறந்து விழுந்தவன் தான் கோபாலா? கதை சொல்லி அறுப்பு கூடத்துக்கு சென்று சேருவானா? பயணத்தின் இலக்கு சாவு! என்ன கொடுமை? செல்ல செல்ல தீராத பயணம். சென்று சென்று உடலணுக்களில் ஊறிப்போன பயணம். தினம் தினம் ஒருமாடு விளக்கு ஏந்தி முன் செல்கிறது. மாட்டின் தலையில் விளக்கின் பகுதியாய் இருக்கும் அந்த டயர் தான் கால சக்கரமா?

அறுவை கூடத்தில் நடக்கும் அந்த பலியை நினைத்துபாருங்கள். போர் வெறியல்ல அங்கு இருப்பது. அமைதியான கொலைகள். ஒரு நிமிடத்திற்கு எத்தனை விழும்? சிறு ஈசல் பூச்சிகள் தானே நாம் அந்த பெரும் சுடரின் முன் என்ன செய்ய முடியும்?

----

இது ஒரு விதமான வாசிப்பு. வேறுவகையிலும் அர்த்தபடுத்தி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்த கதையை பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணுகிறேன். விவாதம் தொடங்கினால் மேலும் பல கேள்விகள் உள்ளன கேட்பதற்கு,

Sunday, November 15, 2015

புலிக்கலைஞன் சிறுகதை வாசிப்பனுபவம்

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

 

புலிக்கலைஞன் கதையை இரு முறை படித்தேன். இந்த சிறுகதை கலைக்காக வாழ்க்கையை அற்பனித்த ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு காட்டுகிறது. அந்த கலைஞனின் உச்சமான கலை வெளிப்பாட்டை சித்தரித்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட கலைஞனை இந்த காலத்தில் இந்த சமுதாயம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று உணர்த்துகிறது.

இதுவே இந்த கதையின் கரு. ஆனால் இந்த கதை பல செறிவான விஷயங்களை நுட்பமாக உள்ளடக்கி இருக்கிறது. இந்த கதை மூன்று விதமான மனிதர்களை சித்தரித்து காட்டுகிறது. கதையின் தொடக்கமே சோற்றில் தான் ஆரம்பிக்கிறது. சோற்று நேரம் அன்றாட அலுவல். அதன் வேலை பளு, அதன் வெட்டி நேரங்கள் என்று விவரித்து செல்கிறான் கதை சொல்லி. சோற்றையும் அன்றாட வாழ்க்கையையும் பற்றியே கவலைபடும் ஒரு வித மனிதர்கள்.

அடுத்தவகை மனிதர் சர்மா போன்றவர்கள். உண்மையில் இவரும் ஒரு வகை கலைஞர் தான். கதைகள் எழுதுகிறவர். காக்கி ட்ரௌசரிலிருந்து வேட்டிக்கு உருமாறியவர். தன்னுடைய இயல்புக்கு காக்கி சட்டை உரியதல்ல என்றுணர்ந்து இந்த ஸ்டுடியோவின் கதை இலக்காவில் வந்தமர்ந்தவர். இந்த ஸ்டுடியோவின் தேவையின் போது தனது கலை மனதை தூண்டி விட்டு தேவையில்லாத நேரம் அனைத்துவிட்டு குடை ரிப்பேர் போன்ற லௌகீக விஷயங்களில் ஈடுபடுபவர். இதை போன்ற மத்திம மனிதர்களுக்கு வாழ்க்கையின் பாதுகாப்பு முதல் அதன் பின்னே தான் கலை.

இந்த இருவகை மனிதர்கள் முன் வந்து நிற்கிறான் புலிக்கலைஞன். ஆம் அவன் புலிக்கலைஞன் தான் - உள்ளுக்குள்ளும். அவன் வந்து நிற்பது முதலே அவனை பற்றி நுட்பமாக சித்தரிக்க ஆரம்பித்துவிடுகிறார் எழுத்தாளர். முதலில் அவன் “க்ரவுடில்” ஒருவனாக இருக்க விரும்பவில்லை. அவனுக்கென்று ஒரு திறன் இருக்கிறது  அதனை வெளிக்காட்டவே காதர் விரும்புகிறான். பின் அவன் மற்ற புலிஆட்டகாரர்கள் போல அல்ல என்று கூறிக்கொள்கிறான். புலியை அப்படியே அசலாக கொண்டு வந்து காட்ட கூடிய கலைஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்கிறான்.

“ஐயாவெல்லாம் எங்க புலியாட்டம் பார்த்துருப்பீங்க” என்று சொல்லி அசல் புலி போல் நடித்து அவர்களை மிரள செய்கிறான். தன் கலைத்திறனை அவர்களுக்கு உணர்த்துகிறான். மற்ற புலிஆட்டகாரர்களிலிருந்து அவன் எப்படி வித்தியாசப்படுகிறான் என்று உணர்த்துமிடம் மூலம் நாம் உன்மையான கலை என்பது என்ன என்று புரிந்து கொள்ளலாம். சாதாரன வாழ்க்கையின் காணக்கிடைக்காத வாழ்க்கையின் பிரபஞ்சத்தின் ரசமான விஷயங்களை எடுத்து அடுத்தவர்கள் முன் வைப்பவனே கலைஞன் அல்லவா? இந்த புலிக்கலைஞன் பயம் என்ற ஒரு அடிப்படையான உணர்வை அவர்களில் தூண்டி தன் கலையை உணர்த்துகிறான்.

ஆனால் இன்னும் இந்த புலிகலைஞன் முழுமையடையவில்லை. இதுவரையிலும் நமக்கு தெரிந்தது ஒரு கலைஞன் தான். அவன் எப்படி புலிகலைஞனாகிறான் என்று நுட்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. காதர் ஒன்றும் முட்டாள் அல்ல. அந்த அறையில் அவர்களிடம் 5 நிமிடம் பேசும் போதே அவர்களில் யார் முக்கியம் என்று நன்கு உணர்ந்து கொள்கிறான். தொடர்ந்து அவர்களை தன் எண்ணத்திற்கு இணங்க வைப்பதில் வெற்றியடைகிறான்.

மேலும் யாருக்குமே இருக்கமுடியாத ஒரு அசாதாரனமான லாவகமும் கச்சிதமும் அவன் புலியாட்டத்தில் இருக்கிறது. இப்படி சாமர்த்தியமும் திறனும் கொண்ட ஒருவனுக்கு இந்த லௌகீக உலகில் வாழத்தெரியாதா? அது அவனுக்கு வாழைபழத்தை போல் எளிமையாக சாப்பிடும் விஷயமாக அல்லவா இருக்கும்? ஆனால் அவன் வறுமையில் வாடுகிறான். அது ஏன்? அவன் நினைத்தால் அவன் ஒரு ஸ்டன்ட் நடிகனாக எளிதாக ஆக முடியாதா? ஆம் முடியும். அவனுக்கு நீச்சல் கூட நன்கு தெரிந்திருக்கலாம்.

அவன் அந்த நீச்சல் காட்சியை மறைமுகமாக தட்டிகழிக்கிறான் என்று நினைக்கிறேன். அவன் செய்ய விரும்புவது கூட்டத்தில் ஒருவனாக நடிப்பது அல்ல. தெருவில் ரம்சானுக்கும் மொஹரத்துக்கும் புலிவேஷமிட்டு மக்களிடம் கைத்தட்டு வாங்குவதல்ல. அவன் புலிக்கலைஞனாகவே எப்போதும் இருக்கவிரும்புகிறான். அந்த புலியாட்டத்தை தவிர அவனுக்கு வேறு எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவன் செய்திருக்கமாட்டான். அதனாலேயே அவன் திரும்ப திரும்ப ரோல் ரோல் என்று கேட்டு கொண்டு இருக்கிறான்.

இந்த கதையில் அவன் புலியாக மாறும் தருணம் தான் பலருக்கும் உச்சமாக தெரியும். அது சரிதான். ஆனால் நான் அவன் முகமூடி அனிவதை அவன் வேஷமாக நினைக்கவில்லை. அவன் அந்த புலி முகமூடியை கழற்றும் போது தான் முகமூடியை போட்டுகொள்கிறான். ஆம். அவன் புலிதான். அவன் அகத்தில் எப்போதும் அந்த புலிதான் உலாவி கொண்டிருக்கிறது. இந்த உலகத்திற்கும் சமூதாயத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் ஒரு முகமூடி அணிந்து கொள்கிறான் அதுவே காதர். காலில் விழுபவன் அந்த காதரே புலி அல்ல. அவனுக்கு அந்த புலிதான் முக்கியம் காதர் அல்ல.

இவன் அகத்தில் எப்படி அந்த புலி எப்போதும் விழிப்புடனிருக்கிறது என்று மிக நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு கால் குட்டையான நாற்காலியை ஏன் விவரிக்கிறார் எழுத்தாளர்? வந்தமர்பவர்கள் வயிறை ஒரு நொடி கலக்க வைக்கும் அந்த நாற்காலியை அவன் முதுகை பிடித்து கொண்டு நிற்கிறான். இது போதாதா அவனில் அந்த புலி எப்போதும் விழித்திருக்கிறது என்று சொல்வதற்கு. ஆம் அவனுக்கு ஒரு பார்வை போதும் அவன் இருக்கும் இடத்தை அவன் அறிந்து கொள்ள. முகமூடி அணிந்து அறையை அங்குமிங்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேசையிலிருக்கும் ஒரு பொருள் மீது கூட கால்படாமல் அவனால் பாய்ந்தும் குதித்தும் பற்றியும் புலியாட்டம் செய்ய முடியும்.

இங்கு புலி என்பது ஒரு குறியீடு. கலைஞனுக்குளிருக்கும் கலைக்கண் என்றும் மூடுவதில்லை. அதன் வழியாகவே அவன் உலகை பார்க்கிறான். சாமனியர்களுக்கு தெரியாத பல உண்மை கலைஞனுக்கு தெரிகிறது. அதிலிருந்தே தரிசனங்கள் பிறக்கிறது. இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. கீழே நான் கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஜெ புலிக்கலைஞன் என்ற தலைப்பில் இருக்கும் கலைஞனை அடிக்கோடிட்டு காண்பித்திருப்பார். நான் அதோடு அந்த புலியையும் அடிகோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன்.

புலி என்பது நமது பண்பாட்டில் அதன் தனித்தன்மைக்காகவே அறியப்படுகிறது. புலி பசித்தாலும் புல்லை திங்காது என்பார்கள். ஆடுகளுடன் சேர்ந்து ஆடு போல் கத்தி கொண்டிருக்கும் புலியை ஒரு பெரும் புலி வந்து மீட்டு கர்ஜிக்க வைத்த கதையை நாம் படித்திருப்போம். இந்த கதையில் வரும் கலைஞன் புலி வேடமிடுவதால் மட்டும் அவன் புலிக்கலைஞனல்ல. அவன் அந்த கலையை தவிர வேறு எதையும் எதற்காகவும் எந்த காலத்திலும் செய்ய தயாராக இல்லாதவன் என்பதாலேயே அவன் புலிக்கலைஞன். புலி பசித்தாலும் புல்லை திங்காது. அவன் செத்தாலும் அந்த கலையை தவிர வேறு ஒன்றை செய்யமாட்டான்.

அவன் வந்து ஆடும் அந்த அறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பல மாதங்களாக வேலையில்லாமல் ஊளை சதையை சுமந்து கொண்டு வெட்டியாய் அமர்ந்திருக்கும் மனிதர்கள். பல்லை நோன்டி கொண்டும், வடையை தின்று கொண்டும் அரட்டையும் வாயுவும் உலாவும் அந்த அறையில் ஒரு தீ தழல் போல ஆடிவிட்டு போகிறான் அந்த கலைஞன். இருண்ட அறை ஜோதி மயம் அணிந்தெழுவது போல் அந்த அறையில் கலை ஒளியை பரவவிடுகிறான்.

சர்மாவுக்கும் இவனுக்குமான வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள்.ஒன்றரை வருடம் எந்த வேலையும் இல்லை என்றாலும் தன் படைப்பை தேவை எனும் போது வெகுஜன மக்களுக்காக தூண்டி விட்டுகொண்டு ஏதோ செய்ய கூடியவர் சர்மா. ஆனால் இவனோ தனது கலையை  வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடித்து கொண்டிருக்கும் கலைஞன். ஆஹாம் வேணாம் வேணாம் என்று சொல்ல சொல்ல முகமூடியை எடுத்து அணிந்து கொள்கிறான் இவன். எப்போதும் தனது முகமூடியை அணிந்து கொண்டு தன் உண்மையான இருப்பை வெளிக்காட்ட துடிக்கிறான் இந்த புலிக்கலைஞன்.

இவனுக்கு என்ன பசியானாலும் குடும்பத்தை இழந்தாலும் இவன் இப்படி தான் இருப்பான். இவனது இயல்பு இது. பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் பசி விதைக்கப்பட்டு பிறப்பிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதுவே பிரதானம். ஆனால் லட்சத்தில் ஒருவன் கலை விதைக்கப்பட்டு பிறப்பிக்கபடுகிறான். முன்னவர்களுக்கு உணவு என்பது செடிகள் எப்போதும் நினைத்து கைகூப்பி காத்திருக்கும் சூரியன் போன்றது. ஆனால் நமது புலிக்கலைஞர்கள் போன்றவருக்கோ அது கொடிகள் பற்றி ஏறும் ஒரு கிளை மட்டுமே. அவர்கள் தங்கள் கலையை நிதமும் வெளிப்படுத்துவதையே தர்மமாக கொண்டவர்கள்.

சாப்பிட காசு கொடுத்தாலும் ஏதாவது ரோல் கொடுங்க ரோல் கொடுங்க என்று இரைகிறான். அதுவே சர்மாவை நுட்பமாக சீண்டுகிறது. வர்ர லஷ்மிய வேண்டான்னு சொன்னா எப்டி காசு வரும் என்று கேட்கிறார். அவனுக்கு லஷ்மி இரண்டாம் பட்சம் தான். அவனுள் சரஸ்வதி என்றும் உறைந்திருக்கிறாள். இதை போல எத்தனையோ புலிக்கலைஞர்கள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் போலும். நான்கு தபால் அனுப்பினால் மூன்று இல்லை என்று திரும்பி வருவது இதை போன்ற புலிக்கலைஞர்களால் தானா? குடும்பத்தை இழந்து சுயமரியாதை இழந்து பசியிலும் தன் இயல்பை விட்டுகொடுக்க இயலாத உயர்ந்த கலைஞர்கள் எங்கோ தங்களுக்கான பார்வையாளர்களை தேடி சுற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்த கலையை தவிர வேறு எதுவும் பிணைத்து வைப்பதில்லை போலும்.

நிலப்பிரபுத்துவ காலத்தில் இந்த கலைஞர்களுக்கென்று ஒரு களமிருந்திருக்கும். அவர்கள் சுயமரியாதை இழந்திருந்தாலும் அவர்களின் கலையை வெளிக்காட்ட அதிலேயே திளைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நுகர்வையே பிரதானப்படுத்தும் இந்த நவீன யுகத்தில் கலைக்கென்று ஒரு தரப்பு அறிதாகவே இருக்கிறது. அதுவும் சோறு சோறு என்று ஓடி கொண்டிருக்கும் நம்மை போன்ற ஏழை நாடுகளில் அதற்கான தரப்பே இல்லை போலும். வெகுஜன விஷயங்களே இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது
. மக்கள் அதிகமாக விரும்பி பார்த்த அந்த காவடி காட்சியே புலியாட்டத்தின் இடத்தை பிடித்து கொள்கிறது. இந்த புலிகள் எல்லாம் இறையின்றி மடிகின்றது. புலியில்லா காடு எத்தனை வெறுமையானது?

http://www.jeyamohan.in/37090#.VklciL9qnMs

http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D – இந்த பதிவுக்காக இந்த இணைப்பை கொடுக்கவில்லை. இதன் கீழே இருக்கும் ஜெ அவர்களின் கமென்டை படித்துபார்க்கவும்

Wednesday, November 11, 2015

வாசகனின் இலக்கு

வாசிப்பு என்பது அகவயமானது. ஓரளவுக்கு மேல் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. கற்பனையை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்கயில் ஒவ்வொரு வாசகனின் கற்பனை சக்திக்கு ஏற்பவும் அவனது இயல்புக்கு ஏற்பவும் படைப்பிலிருந்து தனக்கான அனுபவங்களை பெற்றுகொள்கிறான். அதிலிருந்து கருத்துக்களை உருவாக்கி கொள்கிறான்.
வெறும் கதை ஓட்டத்தை மட்டும் படித்து செல்லாமல் அந்த கதை தருணங்களை பற்றி தன்னுள் கேள்விகளையும் கற்பனைகளையும் எழுப்பி கொண்டு தனக்கென ஒரு பார்வையை கதை முழுதும் தொகுத்து கொண்டு வருபவன் நல்ல இலக்கிய வாசகன் என்று கருதுகிறேன்.

இது நல்ல வாசகனின் முதல் நிலை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு படைப்பில் இருந்து எடுக்கப்படும் கருத்தை தன் வாழ்வு மட்டும் பிரபஞ்சம் என்ற Phenomenon மீது தனக்கான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள கூடியதாக இருப்பின் அது தரிசனமாக அமைகிறது. இப்படி ஒரு கருத்தை படைப்பிலிருந்து எடுப்பவன் மேலே சொன்ன வாசகனை விட ஒரு படி மேல்.
அதே சமயம் ஒரு நல்ல இலக்கியம் என்பது(நாவல் போன்றவை) இந்த ஒட்டு மொத்த தரிசனத்தை தருபவையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படைப்புகள் உலகியல் தளத்திலும் எளிய உணர்வு தளத்திலும் பேசும் படைப்புகளை விட உயர்ந்தது.

எழுத்தாளர் எழுதியதையே தான் வாசகனும் சென்று அடையவேண்டும் என்று இல்லை. வாசகன் தனக்குண்டான அனுபவத்தை எடுத்துகொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் எந்த அளவுக்கு ஆழமான ஒரு கதை கருவை அடிப்படையாக கொண்டு எழுதியிருக்கிறாரோ அந்த ஆழம் வரை வாசகன் செல்லக்கூடியவனாக இருக்கவேண்டும். அதை விட ஆழமாக சென்று கூட அதை விளக்கி கொள்ளலாம். அவன் சிறந்த வாசகன்.

அதே சமயம் இன்னொரு விஷயமிருக்கிறது. ஒரு படைப்பு என்பது அந்த படைப்பாளி உருவாக்குவதால் அவர் எழுத நினைத்த சாரம்சத்தை நோக்கி நம்மை அழைத்து சொல்கிறார். இலக்கிய வாசிப்பை ஒரு பயணமாக உருவகித்து பார்க்கலாம். வாசகர்கள் அனைவரும் ஒரு இடத்துக்கு பயணம் செல்கிறார்கள். பயணத்தின் இலக்கு என்பது அந்த படைப்பின் சாராம்சம். போகும் பாதை என்பது அந்த படைப்பு. நம்மை அந்த இலக்கை நோக்கி வண்டி ஓட்டி செல்வது எழுத்தாளர்.

இந்த பயணத்தில் அனைவருக்கும் ஒரே புறவெளிதான் இருக்கிறது. எங்கு, எந்த வழியே செல்கிறோம் என்பதை எழுத்தாளரே முடிவெடுக்கிறார். அங்கு கொண்டும் சேர்க்கிறார். ஆனால் இந்த பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமிருந்திருக்கலாம். அவரவரின் அக ஓட்டம், கற்பனை, நுண்ணுணர்வு பொருத்தது அது. இருந்தும் சென்ற பயணம் ஒன்றே. அதனால் கிட்டத்தட்ட எழுத்தாளர் உட்பட அனைத்து நல்ல வாசகர்களும் – பயணத்தில் தூங்காமல் வந்தவர்கள்! – ஒரு பொதுவான அனுபவத்தையும் அடைந்திருப்பார்கள்.

அதனால் இந்த விஷயத்திற்கு Binary இல் பதில் சொல்ல முடியாது. இரண்டுமே முக்கியம்.

Silicon shelf என்ற தளத்தில் நடந்த விவாதத்தில் நான் எழுதியது.

Thursday, October 1, 2015

பெரியாரின் பகுத்தறிவு

பெரியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை தற்போது படித்து முடித்தேன். அந்த புத்தகத்தில் பெரியாரை விமர்சன நோக்குடன் பார்க்காமல் புகழும் நோக்குடன் எழுதப்பட்டிருந்தது. இருந்தும் அவரது வாழ்க்கையை உள்ளபடியே பதிவு செய்திருந்ததாகதான் தோன்றியது. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களே அவரின் அணுகுமுறையை தெளிவாக நமக்கு எடுத்துகாட்டுகிறது.

தி.கவிற்குள் அண்ணாவின் தனிப்பட்ட போக்கினால் எரிச்சலடைந்த பெரியார் இப்படி சொல்கிறார்(எனது வார்த்தைகளில்). "உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் கொண்டு நான் முன்வைக்கும் கொள்கைகளை சிந்தித்து பாருங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானால் எடுத்துகொள்ளுங்கள். கொள்கை ஏற்புடையதாக இருந்தால் கட்சியில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த மறுநொடியில் உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் எடுத்து ஓரமாக வைத்துவிடுங்கள். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், செய்யுங்கள். இது சர்வாதிகாரம் தான். ஆனால் அதை கொண்டு தான் கட்சியை நடத்த முடியும்" என்கிறார்.

இது பகுத்தறிவுக்கே எதிரான நிலைபாடு. நவீன ஐரோப்பாவில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகி சில காலங்களிலேயே அங்கே தனித்துவவாதம் -individualism என்ற கருத்து தோன்றிவிட்டது. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அனைவருக்கும் அவரவர் தர்க்க புத்தியை உபயோகிக்கும் உரிமை உண்டு என்று அடக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். இதன் விளைவாக பிறந்ததே ஜனநாயகம்.

பகுத்தறிவின் வரலாறு இப்படி இருக்க பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை என்றெல்லாம் பேசிய பெரியார் மக்கள் அவர் கட்சியில் சேர்ந்த பிறகு பகுத்தறிவை ஓரமாக வைத்துவிடுங்கள், நான் சிந்திக்கிறேன் உங்களுக்காக என்று சொல்வது பெரும் அபத்தமாக தெரிகிறது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மாநிலத்து மக்களிலேயே தனக்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்பது போல் அவர் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பெரியாரிடம் பொது நல நோக்கும், நேர்மையும் இருந்ததாக நான் கருதுகிறேன். அது ஒரு ஆளுமைக்கு தேவையான முக்கியமான அடிப்படை தகுதி. அவர் பகுத்தறிவு என்ற பிரச்சாரம் செய்ததும் அன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அந்த பகுத்தறிவின் ஆழம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் தனி என்றாலும் அவர் அப்படி ஒரு கருத்தை பரப்பினார் என்பதற்காக அவருக்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் தனக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என்பது போல் பேசியிருக்கும் அளவுக்கு அவரது பகுத்தறிவு அணுகுமுறைகள் அறிவுபூர்வமாகவும் இல்லை, ஆழமானதாகவும் இல்லை, நடைமுறைக்கு ஏற்றதாகவும் இல்லை.

Tuesday, July 14, 2015

ஜே ஜே சில குறிப்புகள்

ஜே ஜே சில குறிப்புகள் இப்போது தான் படித்து முடித்தேன். ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது. அதில் கதை என்று ஒன்று இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். முழுக்க முழுக்க தத்துவார்த்த தளத்திலான பிரச்சனைகளை பேசுகிறது. அதை படிக்கும் போதே இது தான் இருத்தலியல் பிரச்சினைகளை பேசுகிறதோ என்று தோன்றியது. பின்பு இணையத்தில் தேடி உறுதி செய்து கொண்டேன்.

மனிதன் இது வரையிலும் புரிந்து கொள்ள முயன்று தோற்று கொண்டிருக்கும். இதுவரை முழுமையான விடையை அறிந்திடாத இந்த உலகை, அதன் இயக்கத்தை பற்றி பேசுகிறது. அதன் நாயகனான  ஜே ஜேயின் சிக்கலும் இதுவே. இந்த கேள்விகளால், வியப்புகளாள், தேடல்களால் அலைக்களிக்கப்படுகிறான்.   தான் செய்யும் காரியத்தை மன ஊசலாட்டம் இல்லாமல் முடிவு எடுப்பதற்கான விடையை தேடி கொண்டே இருக்கிறான்.

ஒரு பசுமாட்டின் மேல் எச்சில் உமிழும் ஒரு மனிதனை பார்த்து அவனின் இந்த கீழ்மை குணத்திற்கு எது காரணம் என ஆராய்கிறான். ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிடுவது பற்றி தீவிரமாக பல மணி நேரம் யோசித்துவிட்டு அவனை தேடி சென்று பிச்சையிடுகிறான். இப்படி வாழ்க்கையை முழுதும் தேடலுக்கும் சிந்தனைக்கும் கொடுத்துவிட்ட மனிதனை பற்றிய நாவல் இது.

நாவல் பேசும் காலத்திய இலக்கிய போக்கும் கருத்தியல் சூழ்நிலையை தெரிந்திருந்தால இன்னும் நன்றாக பிடி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தும் பல இடங்கள் சிந்திக்க வைத்தது, பரவசமூட்டியது.

கதாப்பாத்திரங்கள் ஒரு விஷேச தளத்தில் உரையாடுவது போல் தோன்றியது. பெரும்பாலும் தத்துவார்தமான, கருத்தியல் பற்றிய உரையாடல் தான். அது அவர்களை ஒற்றைப்படையாக சித்தரிப்பதாக தோன்றியது. கதாப்பாத்திரங்களில் சிக்கல் இல்லை. அது ஒரு குறைபாடாக தோன்றியது.

சிந்திக்க வைத்த சில குறிப்புகள்:
  • ஜே ஜேயிடம் இன்னொரு முற்போக்குவாதி கூறும் ஒரு  கருத்து. சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றால் அதில அவ்வப்போது கூச்சலிட்டு விமர்சனம் செய்வது உதவாது. சமூகம் இயங்கும் நிலைகளை அறிவியல் பூர்வமாக ஆராயவேண்டும். அதன் நியதிகளை கண்டடைந்து அதை கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியம் என்று சொல்வது போல் வரும். இது ஒரு சதிகார வழிமுறை என்று தோன்றியது. அப்போது மக்கள் என்ன ஆராய்ச்சி மிருகங்களா?
  • நான் ஏவியதை செய்ய ஒரு குட்டி பூதம் வேண்டும். நான் ஏவும் சிறு காரியங்களை செய்ய. பெரிய காரியங்களை நான் பார்த்து கொள்வேன்.
  • ஒற்றை கருத்தை அனைத்தற்குமான தீர்வு என்று பிடித்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் கண்மூடிதனமாக அந்த தீர்வையே போட்டு பார்த்தல். முல்லைக்கள் ஜே ஜேவுடனான விவாதம்.
  • சுதந்திர போரட்டத்தை வரும் ஒரு குறிப்பு. இந்தியர்கள் ஆளமுடியும் என்று இந்தியர்களுக்கு நம்பிக்கையின்மை. குறிப்பாக பெண்களுக்கு.
  • மனம் என்ற மனிதனின் புதிரான அங்கத்தை பற்றி பல்வேறு கதாப்பாத்திரங்களுக்கு தோன்றும் சிந்தனைகள்.

Thursday, August 28, 2014

தண்டவாளம்

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதை ஒன்று,

தன்டவாளம் (Tracks)

இரவு 2 மணி, ரயில் ஒரு வயக்காட்டில் நின்றது
தொலைவில் ஒரு சிறு நகரத்தில் இருந்து ஒளி பொறிகள்,
வின் விளிம்பில் உணர்வின்றி சிதறுகிறது.

ஒரு மனிதன் கனவின் ஆழத்திற்கு செல்லும் போது
அவன் அங்கு இருந்தது,
அவன் அறைக்கு அவன் மீன்டும் திரும்பும் போது நினைவிருக்காது.

அல்லது ஒரு நபர் நோயின் ஆழத்திற்கு செல்லும் போது
அவனது எல்லா நாட்களும் சிதறும் பொறிகளாய், பறவை கூட்டமாய்
வலுவிழந்து, உனர்வற்றதாய் மாறிவிடுகிறது.

ரயில் முற்றிலும் நகர்வற்று போயிற்று
இரன்டு மணி, திடமான நிலவு, சில நட்சத்திரங்கள்.


இந்த கவிதை ரயில் பயனத்தை ஒரு படிமமாக வைக்கிறது. 

ஒரு வயலில் நின்று விட்ட ரயிலில் இருந்து தொலைவில் தெரியும் ஒரு காட்சி, ஓளி சிதறல்கள், என்று கவிதை தொடங்குகிறது. அந்த ஒளி சிதறல்கள் உணர்வின்றி சிதறுகிறது என்கிறார். ஒளிக்கு உணர்வு உண்டா என்ன? ஒளியின் உணர்வு அது பிரதிபலிக்கும் மனிதனின் மனதில் உண்டாவது. ஒரு வாண வேடிக்கை கண்டால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் ஒரு ஆனந்தம், ஒரு ஆச்சரியம் எழும். அதுவே அந்த ஒளியின் உணர்வு. ஆனால் இங்கு உணர்வில்லா ஒளி, அந்த ஒளி பயணியின் உள்ளத்தையே பிரதிபலிக்கிறது. எப்படி அந்த ஒளி சிதறல் பயணியின் உள்ளத்தில் எந்த ஒரு உணர்வையும் தோற்றுவிக்கவில்லை என்று காட்டுகிறது. ஏதோ துயரத்தில், இக்கட்டில் ஆழ்ந்த ஒரு பயணி. அதே சமயம் அதே காட்சியை வேறு ஒரு மூலையில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு அது உவகையை அளித்திருக்கும். மகிழ்ச்சி தான் எத்தனை சார்ப்புடையது. அது எதை சார்ந்திருக்கிறது?

கனவில் ஆழ்ந்த ஒருவன் கனவில் இருந்து வெளிவந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது, அந்த கனவு நினைவில் இருக்கபோவதில்லை. கனவு - அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கமுடியுமா? நம் உன்மை வாழ்க்கையில் கனவு காண்பதன் மூலம் தான் எத்தனை உவகை கொள்கிறோம். அகத்தளத்தில் நாமே நம்மை நிகழ்த்தி கொள்ளும் ஒரு வாழ்க்கை, ஒரு சில மனி துளிகளில் தொடங்கி முடியும் ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை முடிந்தவுடன் ஒரு பெருமூச்சுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். அந்த கனவளித்த மகிழ்ச்சியை நம் அன்றாட உலைச்சல்கள் மூழ்கடித்துவிடும்.

நோயில் மூழ்கிய ஒருவனுக்கு தன் மொத்த வாழ்நாளும் ஒரு கனவாய் தான் தெரியும். மகிழ்ச்சியான ஒரு நினைவு, ஆனால் அது இந்த தருணத்தின் வேதனையில் பொருளிழந்தது, வலுவிழந்தது, உணர்விழந்தது. மிஞ்சினால் ஒரு சோர்ந்த புன்னகையை எழுப்ப கூடியது. நமது மகிழ்ச்சி ஒரு தருணத்தில் நாம் வாழும் சூழ்நிலைக்குட்பட்டது. அந்த சூழ்நிலைகள் நமது வாழ்க்கை பயணத்தில் காணும் காட்சிகள். நமது பயணமோ ரயில் வண்டியில், தண்டவாளங்களுக்கு உட்பட்டது. ஆனால் தண்டவாளங்களை தாண்டியும் நம் கனவுகள் ஓட கூடியது. அது கனவு மட்டுமே. அதை ஏற்பத்தும் மறுப்பதும் இந்த சிறைப்பட்ட பயணியே.

Monday, June 2, 2014

இந்தியாவின் மாபெரும் வேலி

ராய் மாக்ஸெம் - Roy moxham எழுதிய 'தீ க்ரேட் ஹெட்ஜ் ஆஃப் இந்தியா' இந்தியாவின் மாபெரும் வேலி என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் வாசித்து முடித்தேன். ராய் மாக்ஸாம் ஒரு பிரித்தானியர். நூலகத்தில் வேலை செய்யும் அவர், ஒரு பழைய புத்தக கடைக்கு செல்கிறார். அங்கு பழைய பிரிட்டிஷ் இந்தியா அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தை பார்க்கிறார். ஒரு நூற்றான்டுகளுக்கு முன் தனது இந்திய வேலை அனுபவத்தை பற்றி அந்த அதிகாரி அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு விஷயம் ராயிற்கு ஆச்சரியமும் ஆர்வமும் அளிக்கிறது. அந்த புத்தகத்தை வாங்கி வந்து மேலும் படிக்கிறார்.


அதில் இந்தியாவை காஷ்மீரில் இருந்து ஒரிசா வரைக்கும் சரி பாதியாக  பிரிக்கும் உயிர் வேலியை பற்றிய குறிப்பு வருகிறது. அப்படிபட்ட விஷயமே தான் இதுவரை கேள்விபட்டதில்லையே, அப்படி ஒரு வேலி இருக்குமாயின் உலகின் மாபெரும் வேலி அதுவாகவே அமையுமே என அதை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக பிரிட்டிஷ் நூலகங்களில் பல புத்தகங்களையும், கணக்கு வழக்குகளையும் தேடுகிறார். அவருக்கு அந்த வேலியை பற்றி எந்த தகவலும் கிடைப்பதில்லை. விடாமல் தேடுகிறார், கடைசியில் 1870க்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம்  ஒன்றில் அதை பற்றிய குறிப்புகளை கண்டுப்பிடிக்கிறார்.

அந்த மாபெரும் வேலி, உப்பு வரியினால் உப்பு கடத்தபடுவதை தடுப்பதற்காக போடப்பட்ட உயிர் வேலி. ஆங்காங்கே உதிரி பாகங்களாய் காய்ந்த முள்ளாள் உருவான வேலி, ஒரு காலத்தில் ஆக்டேவியன் ஹ்யும் என்பவரின் யோசனையின் பேரில் முள் செடிகளாள் பல அடி உயரமான மாபெரும் உயிர் வேலியாய் இந்தியாவை இரண்டாக பிரிக்கிறது. இந்த வேலியை பற்றிய விஷயங்களை கடும் உழைப்பின் மூலம் சேகர்க்கிறார் ராய் மாக்ஸெம். இந்ந வேலி இந்தியா கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில் இருந்து நேரடி பிரித்தானிய ஆட்சிக்கு வந்த பின் விலக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிக ஆவனங்களிலும், மேப்களிளும் அந்த வேலியை பற்றிய தகவல் இல்லை. அந்த வேலி இருக்கும் போது உருவாக்கப்பட்ட ஆவனங்களிலும், வரைபடத்திலும் தான் அந்த வேலியின் இருந்த வழியும், அதன் தகவல்களும் கிடைக்கிறது. சேர்த்த அந்த தகவல்களுடன் அந்ய வேலியை எப்படியும் கண்டுபிடிப்பது என இந்தியா வருகிறார்.

அவர் சாதாரன நூலக காப்பாளர், இந்த ஆராய்ச்சிக்கு அவர் சொந்த வருவாயிலிருந்து தான் காசு செலவு செய்கிறார். இந்தியாவுக்கு விடுமுறைகளில் வருகிறார். இரண்டாம் ரக ரயில் பெட்டிகளில் பயனக்கிறார். தெரிந்த இந்திய நன்பர்களின் வீடுகளில் தங்குகிறார். உத்திர பிரதேசத்தில் கிராமம், கிராமமாக அந்த வேலியை தேடுகிறார். பல கிராம வாசிகளுடன் அதை பற்றி விசாரிக்கிறார். அதை பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒன்ற்றல்ல இரண்டல்ல, மூன்று முறை அதை தேடி இந்தியாவுக்கு வருகிறார். பழைய ஆவனங்களில் இருந்து அவர் குறித்து கொன்ட வேலியின் பாதையில் எல்லாம் வேலி இருந்தற்கு தடையமே இல்லை. சுதந்திரத்துக்கு பின் இந்தியா வளர்ச்சிக்கும், மாற்றதிற்கும் உள்ளானதால் அந்த வேலி இருந்த இடத்தில் சாலைகளும், வீடுகளும் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த மூள் செடியின் ஆயுள் அத்தனை வருடம் தாங்காது என்கிறார்கள் சிலர்.

இந்த விஷயத்தை மனதில் போட்டு புரட்டி கொன்டுருக்கிறார். நண்பர்களால் வித்தியானமாக பார்க்க படுகிறார். அவரால் விட்டு விட முடியவில்லை. மூன்றாம் முறை கடைசி முறை என இந்திய வருகிறார். இந்த முறை கிடைக்கவில்லை என்றால தேடலை விட்டு விடுவது என்று முடிவெடுக்கிறார். மூன்றும் முறையும் தன் நன்பரின் உறவுகார பையன் ஒருவன் அவருக்கு உதவிக்கு அவருடன வருகிறான். இந்த முறை ஒரு ஜீ.பி.ஸ் கருவியையும் உபயோகிக்கிறார். ஆபத்து நிறைந்த சம்பல் பகுதியின் கிராமங்களில் சென்று தேடுகிறார். கடைசியாக அவர் ஒரு கிராமத்தின் அருகில் அந்த வேலியின் உதிரி பாகங்களை அந்த கிராம வாசியின் உதவியுடன் கண்டு பிடிக்கிறார்.

உப்புக்கு வரியா? எதற்காக உப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் லாபம் வருமா? என்றால் வரும் என்பது தான் பதில். இந்தியாவில் அந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்துக்கு தேவையான உணவு பொருட்கள் எல்லாம் அந்த கிராமத்தாலேயே விளைவிக்கப்படுகிறது. ஆனால் உப்பிற்கு கடலை நம்பி தான் இருக்க வேன்டும். இதற்கு விதி விலக்கு ராஜஸ்தானின் சாம்பார் லேக். அதனால் உப்புக்கு அந்த காலத்தில் அதிக விலையுள்ள ஒரு பொருள்.  இந்தியா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகம், அதனால் வியர்வையில் உப்பு அதிகமாக வெளியேறுகிறது. அதனால் உப்பு ஒரு அத்தியாவசிய பொருளாகிறது. உப்பிற்கு வரி விதிப்பதன் மூலம் ஒவ்வொரு கைப்பிடி சோற்றிலிருந்தும் வரி வசுலிக்க முடியும். அதே நேரத்தில் உப்பை கடலோரங்களில் முடக்கி வரி வசுலிப்பது மிகவும் சுலபம்.

இந்த வரி வசுலினால் உப்பின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு இந்திய விவசாயின் சம்பளம் அந்த காலத்தில் மிக மிக குறைவு. ஒரு மாதத்திற்கு ஓரிரு ரூபாய் தான். ஆனால் ஒரு மூட்டை உப்பின் விலை மூன்றறை ரூபாய். அதன் படி ஒரு விவசாயி தன் குடும்பத்தின் ஒரு வருட உப்பு செலவிற்கு கிட்டதட்ட அவன் இரண்டு மாத சம்பளத்தை செலவு செய்ய வேண்டும். இது பணம் படைத்தவருக்கு ஒரு கவலையாக இருக்கவில்லை, நில வரி ஏராமல் இருந்த்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். ஏழைகள் தான் இதில் முற்றாக சுரண்டப்பட்டார்கள்.

அதன் விளைவாக அவர்கள் உணவில் உப்பு சேர்பதை குறைத்து கொன்டார்கள். வியர்வை சிந்தி தினமும் குறிப்பிட்ட அளவு உப்பை வெளியேற்றும் அவர்களுக்கு உப்பு மிக மிக முக்கியம். உப்பை குறைவினால் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ரத்த அழுத்தம் கூடுகிறது மயக்கம் அடைகிறார்கள். சிலர் மரணத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வியாதியின் தன்மை மருத்துவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரன காய்சலுக்கு தரும் சிகச்சையையே இதற்கும் தருகிறார்கள்.


பல்வேறு கோனங்களில் இந்த வேலியை ஆராய்கிறார் ராய். உப்பு வரியால் வெள்ளயர் அடையும் லாபம், அந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது, மக்கள் எப்படி பாதிக்கபட்டார்கள், நோய்களும் அதன் காரனங்களும். எப்படி அந்த வேலி பேனி படி படியாக வளர்க்கப்பட்டது, அந்த வேலி எப்படி மேற்பார்வையிட்டனர் என்று எவ்வளவோ தகவல்கள் தருகிறார். 200 பக்கங்கள் கொன்ட இந்த புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூன்டுவதாய், வெள்ளய ஆட்சியை பற்றிய பல தகவல் தருவதாய் இருக்கிறது. ஒரு பிரிட்டிஷ்காராய் இருந்தும் வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சியை அம்பலபடுத்தி இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

Saturday, April 19, 2014

ஒரு புளிய மரத்தின் கதை - வாசிப்பு அனுபவம் - 2

அந்த காற்றாடி மரங்கள் எல்லாம் வெட்டி அங்கு உண்டாகும் பார்க்கில் நடக்கும் சம்பவங்களை வெகு ஸ்வாரஸ்யமாக சொல்கிறார் ஆசிரியர். முதலில் அங்கு வந்து உட்கார்ந்து அரசியல், இலக்கியம் ஊர்வம்பு பேசும் முதியவர்கள் எல்லாரும் நன்கு படித்தவர்கள். கல்லூரிகளிளும், அரசாங்க துறைகளிளும் வேலைக்கு இருப்பவர்கள். அனைவருக்கும் ஏதோ ஒர் நோய் குறைந்தப்பட்சம். ரத்த அழுத்தம், சர்க்கரை, நெஞ்சு வலி என பல உபாதைகளுடன் இவர்களை சித்திரித்திருக்கும் விதத்தை கவனித்தால், இவர்கள் ஆசான் கதாபாத்திரத்திற்கும் நேர் எதிராக இருப்பதை காணலாம் திடகாத்திரமான தன் கைகளில் பசங்களை தொங்க சொல்லும் ஆசான். நடப்பதற்கு முடியாத பார்க் முதியவர்களின். நினைத்ததை இஷ்டம் போல் சாப்பிடும் ஆசான், நோய் நொடியினால் எதையுமே சாப்பிட முடியாமல் வாய் கட்டி போடப்பட்ட முதியவர்கள். உரக்க சிரிக்கும் ஆசான், பல் வலியினாலும், பிற உபாதைகளாலும் சிரிக்க கூட முடியாத முதியவர்கள். 80 வயதிலும் 60 வயது என்று சொல்லும் ஆசான். எப்படா சாவெனும் விடுதலை வரும் என்று ஏங்கும் முதியவர்கள். எவ்வளவு வித்தியாசம் ஒரு தலைமுறையில் அப்படி என்ன சமுதாயாத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது, மனிதன் மனிதனுக்கேன்று விதிக்கப்பட்ட அல்லது செய்யவேண்டிய விஷயங்களை செய்ய அவன் மூளை வளர்ந்திருக்கலாம் உடல் மாறவில்லை.

சுந்தர ராமசாமி


அந்த பார்க்கில் இருக்கும் ஒரு காந்தி சிலை. அந்த சிலையில் அருகில் செருப்பு போட்டு கொண்டோ, புகை பொருள்களையோ யாரும் உபயோகிக்காமல் பார்த்து கொள்ள ஒரு காவலாளி . இந்த கதை எழுதப்பட்டது 1960களில். சுதந்திரம் வாங்கி 20 வருடத்திற்குள்ளாகவா தேசபக்தி மங்கிவிட்டது, காந்தி சிலையை அவமதிக்காமல் பாரத்து கொள்ள ஓர் ஆளை போடும் அளவிற்கு என்று யோசிக்க வைக்கிறது. பூங்காவில் விளையாட வரும் கான்வென்ட் குழந்தைகளுக்கு ஏழை குழந்தைகளுக்கும் நடக்கும் பூங்கா ஊஞ்சல், சருக்கு மரங்களை உபயேகிக்க உருவாகும் போட்டியும், அதை சரி செய்ய பெரியவர்கள் விதிக்கும் விதி முறைகளும் அப்படியும் எந்த குழந்தையும் சந்தோஷமடையாமல் போகும் நிலையும், இந்த உலகில் எந்த ஒரு செயல் முறையும், கொள்கையும் முழுமை அல்ல என்பதை காட்டுகிறது.

இதற்கு மேல் கதை கடை வீதியை சுற்றி நடக்க ஆரம்பித்து விடுகிறது, அதை பற்றி நான் அதிகம் எழுத போவதில்லை. ஆனால் ஞாபகத்தில் இருக்கும் சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கதையில் ஒரு கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் வாக்கு வெல்ல சாதி, மத வகையில் என்னென்ன வேலைகள் நடக்கிறது. பத்திரிக்கை எப்படி இதற்கு  உதவுகிறது என்று விரிவாக நமக்கு காண்பிக்கிறது. புளிய மரத்தை வெட்டாமல் நிறுத்த மரத்தின் கீழ் ஒரு  சிலை பிரதிஷ்டை செய்து ஒரே நாளில் ஒரு பெரும் பக்தர் கூட்டம் சேர்த்து விடுகிறது. மூன்று மாதங்களாக பத்திரிக்கையில் எழுதி பல வேலைகள் செய்து மரத்தை வெட்ட முயற்சித்தால், அதை தடுக்க ஒரே நாளில் மதத்தின் பெயரால் ஒரு பெருங்கூட்டம்  கூட்டப்பட முடிகிறது. மதத்தின் சக்தி அப்படி. வியாபரிகளின் வாழ்கையும், அவர்கள் முன்னேறும் மற்றும் நஷ்டமடையும் தருணங்களையும் பல கதாபாத்திரம் மூலம் எடுத்துரைக்கிறது இந்த கதை.


இந்த கதையை படிக்கும் போது இது வாசகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அறிந்த அத்தனை மரங்களையும் நினைவூட்டும். அதில் இன்று முக்கால் வாசி மரங்கள் வெட்ட பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்த்தி கசப்புட்டும். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு நமது வாழ்க்கை முறை, அதாவது இந்திய வாழ்க்கை முறை இப்படி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். என் தாத்தா மரங்களையும், செடிகளையும் பேணி பாதுகாத்து வளர்த்தார், உடல் நிலை சரியில்லா கடைசி காலத்தில் மருத்துவமனையில் இருக்கும் போதும், அந்த செடிகளுக்கெல்லாம் யார் தண்ணீர் ஊற்றுவார் என்று அழுதார். நாலு பெரும் வேப்ப மரம் அவர் வீட்டருகே இருப்பதால், அவரை வேப்ப மரத்துக்காரர் என்று தான் அவர் கிராமத்தில் அழைப்பார்கள். ஆனால் அதற்கடுத்த தலைமுறை அப்படி இல்லை. அந்த தலைமுறைக்கு தான் தான் முக்கியம். தனக்கு முக்கியமில்லாத, தனக்கு தொல்லை கொடுத்த எதையும் அது விட்டு வைக்காது. என் வீட்டில் கொத்து கொத்தாக பூத்து, வாசனை பொங்கும் சென்பக மரம், கட்டெறும்பு வருகிறது என்ற காரணத்துக்காக வெட்டப்பட்டது.


மதுரையில் எங்கள் வீட்டின் முன் இருந்த வேப்ப மரம், அந்த வீதியிலே அது ஒன்று தான் மரம் என்று இருந்தது என்று நினைக்கிறேன், என் பாட்டி அந்த மரக்காலில் சிறு சிறு தெய்வ சிலைகள் வைத்து வழிப்பட்ட மரம். வீடு பெரிதாக கட்டும் போது அந்த மரம் இல்லாமல் ஆனது சென்னையில் சூளைமேட்டில் ஒரு பூங்காவிற்கு மதிய அளவில் போயிருந்தேன். ஊரே வெந்து தகித்து கொண்டிருக்கும் போது, அந்த பூங்கா மட்டும் சில் என்ற தென்றலுடன் இருந்தது. ஆனந்தமாய் தூங்க அழைப்பு விடுத்தது. காரணம்? மரங்கள், எப்படியோ தப்பித்து அது வரை உயிர் வாழ்ந்து கொண்டிருந்த  பெருமரங்கள். அப்படி அந்த மதுரை வீட்டின் முன் இருந்த வேப்ப மரம் ஒரு நாலு வீட்டிற்காவது நல்ல காற்றை தந்திருக்கும். என் பெற்றோர்கள் அதை வெட்ட எண்ணம் இல்லாமல் வீட்டின் முன் கெஞ்சம் இடம் விட்டு கட்டிக் கொள்ளாம் என்ற எண்ணத்தில் தான் இருந்திருக்கிறார்கள். வேப்பமரம் தெய்விக மரமாய் கருதபடுவதாயிற்றே, அதுவும் வீட்டின் முன் அத்தனை வருடம் நின்றது. ஆனால் வீட்டை கட்டும் போது கட்டட தொழிலாளிகள் மரத்தின் வேர் அஸ்திவாரம் தோண்டுவதற்கு தடையாக இருக்கிறது, மரத்தை வெட்டாமல் மேலே தோண்ட முடியாது என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்கள், பொறியாளர்களும் அதையே வழிமொழிந்திருகிறார்கள். உடனே ஒரு 5000 ரூபாய் செலவில் மரம் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த மரம் உண்மையிலே அகற்றப்பட வேண்டிய அளவுக்கு தடையாக இருந்தாதா? இல்லை வேரின் ஊடாக குழியை தோண்டுவது கடினம், மேலும் கூலி வாங்கி மரத்தையும் வெட்டி அதன் பின் குழியை சுலபாமாக தோண்டிவிடலாம் என்ற எண்ணத்தில் மரம் அகற்றப்பட்டதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு மரத்தை அரவணைத்து வீடோ, சாலையோ அமைக்கும் அளவிற்கு நம்மிடம் தொழில் நுடபம் இல்லை, அப்படியே இருந்தாலும் அது நம் சராசரி பொறியாளர்களுக்கு தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் அதை அவ்வளவு சிரத்தை எடுத்து பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை. அந்த மரத்தை வெட்டி வீட்டை கட்டி விட்டு, வீட்டின் நடுவில் மேல் வெளியில் இருந்து கீழ் தளம் வரை நான்கு அடி சதுரமாய் ஒரு பெரிய ஓட்டை சந்து விட்டிருக்கிறார்கள், காற்றோட்டதிற்காக! 


கோவையில் என் பாட்டி வீட்டில் பல வருஷங்களுக்கு முன்னால் பல செடிகளையும் விதைகளையும் ஊன்றியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. போன வருடம் அங்கு சென்றிருந்த போது, நாங்கள் விதைத்து/நட்ட பவள மல்லி என்னை விட இரு மடங்கு வளர்ந்திருந்தது. தன்னளவில் அது ஒரு மரம். வீதி முழுதும் காலையில் முத்தும், பவளமும் போல அதன் மலர்கள் இரைந்து கடக்கும். ஆனால் அது சாலை புதுப்பிக்கும் போது யாரையும் கேட்காமலே வெட்டப்பட்டுவிட்டதாம். அந்த சாலையின் விளிம்பில் எத்தனை வண்டி போகபோகிறதோ? இந்த சிறு இயற்கைகளை நகரமெனும் நரகத்திற்குள் அனுமதிக்க நம் தொழில் நுட்பம் வளர்க்கபடவில்லை. இயற்கையை அழித்து அது கொடுக்கும் அதே பலனை செயற்கையாக உற்பத்தி செய்வோம். நாம் போகும் வழி கவலைக்கிடமாகவே உள்ளது.

Thursday, April 10, 2014

ஒரு புளிய மரத்தின் கதை - வாசிப்பு அனுபவம் - 1

"ஒரு புளிய மரத்தின் கதை" ஒரு தமிழ் புனைவு, 1960களில்  முன்னொடி எழுத்தாளரான சுந்தர ராமசாமி எழுதப்பட்ட நாவல். இந்நாவல்  பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹீப்ருவில் மொழி பெயர்க்கப்பட்ட இந்திய மொழி ஒன்றில் எழுதப்பட்ட முதல் நூல் இது.

காலத்தால் ஏற்படும் மாற்றங்களை பார்த்து கொன்டிருக்கும் ஒரு புளிய மரத்தின் கதை இது. இரண்டு தலைமுறையின் மாற்றங்களை கவனித்து கொன்டிருக்கும் புளிய மரத்தின் கதை இது. காரி உமிழ்ந்த போதிலும் நம்மை சலைக்காமல் தாங்கி கொன்டிருக்கும் பூமி மாதாவின் ஒரு ரோம காலாய் முளைத்து அதே பண்பை வெளிக்காட்டும் ஒரு புளிய மரத்தின் கதை. உலகெங்கும் எத்தனையோ மரங்களுக்கு நடந்தேரும் இந்த கதையை பிரதிநிதியாக வைத்து சொல்லப்பட்ட ஒரு புளி்ய மரத்தின் கதை.

கதையின் ஆரம்பத்தில் புளிய மரத்தின் பூர்வீகத்தை பற்றி கூறும் போதே புளிய மரம் பல பழைய ஞாபகங்களை என்னுள் தூன்டியது. புளிய குளம் என்ற குளத்தில் தீவு போன்ற ஒரு திட்டின் மேல் எழுந்திருந்தது இந்த புளிய மரம். இது கிட்டத்தட்ட நான் கல்லூரி காலங்களில் சில நேரம் சென்றமரும் மரங்களை ஞாபகபடுத்தியது. உடுமலைப்பேட்டை ஒரு டவுன். அங்கிருந்தி இரண்டு கிலோமீட்டர் ஊருக்கு வெளியே சென்றால் விவசாய நிலங்கள். அதற்னிடையே ஒரு குளம், 'ஒட்டுக்குளம்'. குளத்தை ஒட்டி ஒரு 20 அடி உயர மேடான மன்பாதை . அதில் சைக்கிளில் செல்லும் போது தொலைவில் இரு கருவேல மரம். பச்சை தளத்தில் கருத்த மரமாய், ஊசி இலைகளுடன் தன்னிருக்கு நடுவில் கணவுலகம் போல இருந்தது. இரண்டு மூன்று முறை போகும் போதும் வரும் போதும் அதை பார்த்த படியே சென்று வந்தேன். சென்றடைய முடியாத இடம் போலவே தெரிந்தது. ஒரு நாள் சென்று தான் பார்ப்போமே என்று தோன்றியது. குளத்தின் மறுகரையின் கீழே ஒரு அகல மண்பாதை மேடும் பள்ளமுமாக குளத்தை நோக்கி நுழைந்தது. முதலில் இரு கூரை வீடுகள், அதை மரத்தாலான பட்டியில் அடைக்கபட்ட பண்ணி மந்தை. அதிலிருந்து இரண்டு நாய்கள் துரத்தி கொன்டு வந்தது. வேகமாக சைக்கிளை உருட்டி கொன்டு அந்த மரங்களை நோக்கி சென்றேன். அந்த மரங்கள் இருந்த இடம் ஒரு தீபகற்பம். நடுவில் புல்வெளியில் இந்த மரங்கள். ஊருக்கு வெளியே அனுகமுடியாத இருக்கும் இதை போன்ற மரங்கள் கொடுக்கும் அனுபவங்களே வித்தியாசமானது. கண்னகளுக்கு குளிர்ச்சி, மனதிற்கு அமைதி, எவ்வளவு கத்தினாலும் யாருமே கேட்க முடியாத தனிமை என்று அனைவருக்கும் கிடைத்திடாது. ஆனால் இதையும் தான்டி அங்கு கிடைத்த விநோதமான காட்சிகள் திடுக்கிடவே வைத்தது. தலை அறுக்கப்பட்டு முன்டமாய் குளியில் தூக்கி எரியப்பட்ட ஒரு நாய். ஓரினசேர்க்கையரின் அனுகல், அந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த தாலி கயிறு.

இதே போன்று சென்ற நூற்றான்டில் இருந்த மரம் தான் அந்த புளிய மரம். கால போக்கில் அதை சுற்றி இருந்த குளம் ரோடாகிறது, புளியமரம் பேருந்து நிறுத்துமிடம் ஆகிறது, அங்கே பல கடைகள் தோன்றுகின்றன மரத்தை சுற்றி பல் வேறு மாற்றங்கள். இறுதியில் அந்த மரம் அற்ப மணித சுய நலத்தால் வீழ்த்தபடுகிறது. இந்த புளிய மரத்தாலேயே புளிய குளம் என்று பெயர் பெற்ற ஊர் படிபடியாக வளரும் வளர்ச்சியும், அங்குள்ள வியாபாரிகளின் போட்டியினாலும் பொறாமையானாலும் உன்டாகும் விளைவுகளே இக்கதை. ஆசிரியர், தன்னயே ஒரு பாத்திரமாய் வைத்து கதை சொல்லி செல்கிறார், கதையின் மூன்றில் ஒரு பங்கு ஊரை பற்றியும் ஆசான் என்பவர் சொல்லும் கதைகளிலுமே நகர்கிறது. கிராமத்தை மையமாக வைத்து உலகலாவிய பல விஷயங்களை உனர்த்ததுகிறது. அதன் பிறகு பெரிய பரப்பில் பேசி கொன்டிருந்த கதை சுருங்கி ஊரின் நடுவில் இருக்கும் கடை தெருவும் , வியாபாரிகளும், முனுசிபாலிடியையும் சுற்றி வருகிறது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை புளிய மரம் கதையின் முதுகெழும்பாய் வந்து கொன்டிருக்கிறது.

ஆசான் கதையில் ஒரு முக்கிய கதா பாத்திரம். பழைய மனிதர். எண்பது வயதிலும் திடகாத்திரமான ஆள், கற்பனை நிறைந்த ஒரு கதை சொல்லி, எவ்வளவு கதை சொன்னாலும் தன்னை பற்றிய வீஷயங்களை வெளி சொல்லாத இறுக்கமான மணிதர். அவரே புளிய மரத்தின் கதையை ஆசிரியருக்கும் அவர் நன்பர்களுக்கும் சொல்கிறார். தூர்வாரப்படாமல் நாறும் குளமாய் இருந்த இடம் திருவிதாங்குர் மகாராஜாவால் எப்படி ஒரே வாரத்தில் ராஸ்தாவக மாறுகிறது என்று சொல்கிறார். புளிய மரத்தில் ஒருத்தி தூக்கு மாட்டி செத்து போன கதையை சொல்கிறார். அதனால் கோபமடைந்த அவள் மாமனான பூசாரி மரத்தை வெட்ட வரும் நேரத்தில் யுக்தியாக மரத்தை காத்த கதையை பெருமையுடன் சொல்கிறார்.

ஆசிரியர் வேலைக்காக வெளியுர் சென்று சில வருடங்கள் கழித்து வரும் போது ஆசானை ஊரில் கானவில்லை. அவர் என்ன ஆனார் என்பதற்கு பல விதமான கதைகள் இருந்தது. அதே சமயத்தில் ஊர் பல மாற்றங்களை அடைகிறது. அந்த காற்றாடி தோப்பு அழித்து ஒழிக்கப்பட்டு ஒரு பூங்கா உருவாக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு க்ரோடன்ஸ் செடிகள் நடப்படுகிறது. அதை பார்த்து கொன்டு இருந்த ஒர் கிழவர், கிட்டத்தட்ட ஆசான் போல மனநிலை உடையவர், அருகில் இருந்த இளைஞரை பார்த்து கேட்கிறார், 'எதுக்கு மரத்த வெட்ரானுவ?' இளைஞர் சொல்கிறார் 'மரத்த வெட்டிட்டு அழகான செடி நடத்தான்', 'ஏன் மரம் அழகில்லயோ?', 'இல்ல, செடி தான் அழகு', 'அப்ப அந்த செடி வளந்து மரமாகதோ?' இளைஞகன் கிழவரை முறைத்து விட்டு 'செடிய மரமாகாம வெட்டி வெட்டி உடுவாங்க' என்று கடுப்புடன் சொல்லி செல்கிறான். இது தான் இந்த இரு தலைமுறைக்கும் உள்ள வித்யாசம். கிழவரின் தலைமுறை இயற்கையை தங்களை போலவே கருதியது. இயர்கையை இயர்கையாகவே மிளிர செயத்து அதில் இருந்து இயற்கையாய் கிடைக்கும் பலன்களில் திருப்தி அடைந்தது. ஆனால் அந்த இளைஞகனின் தலைமுறை, கிட்டத்தட்ட நம் பெற்றொரின் காலத்தை சேர்ந்தவர்கள், அந்த தலைமுறைக்கு இயற்கையை சுய நலத்தையே பிரதானமாக கொன்டு அனுகப்பட வேண்டிய ஒரு பொருளாக மாறிவிட்டது. அந்த தலைமுறைக்கு இயற்கை ஒரு அழகு பொருளாகவும், தன் தேவைக்கு உபயோகித்து கொள்ளும் ஒரு மூல பொருளாகவுமே தெரிகிறது. அதற்கு இயற்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை, ஸ்விட்சை போட்டால் ஃபேன் ஓடும் போது அதற்கு மரத்தின் அருமை புரியவில்லை, குழாயை திருகினால் தன்னிர் வரும் போது குளங்களின் தேவை தெரிவதில்லை. மரங்களையும், அதன் மேல் அமரும் பறவைகளையும், அது வீசும் தென்றலையும் அனுபவிக்க தெரியாது. அதன் கண்னுக்கு செயற்கையாய் செய்யப்படும் அழகு தான் அழகாய் தெரிகிறது. அதுவும் நம் ஊர் செடிகளாலான மல்லி, முல்லை போன்ற செடிகள் அழகாய் தெரியாது. வெளிநாட்டு செடிதான் அழகாய் தெரியும். அதை பரமரிக்க இரண்டு ஆட்களை போட்டு பேனி பாதுகாப்போம். இலை அழகில் ஒரு பலனும் இருக்காது. பூக்காது, காய்காது, நிழல் தராது, தென்றல் வீசாது. ஆனால் அதை தான் வெள்ளை காரன் ரசிக்கிறான் அதனால் நாமும் ரசித்தாக வேண்டும், அதுவே நவநாகரிகம், அதுவே அறிவு பூர்வமான ரசனை. அன்று முதல் இன்று வரை இதே முட்டாள் தனம் தான். மணிதனை மையமாக வைத்து, மற்ற அனைத்து வளங்களும் மனிதனின் தேவைக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பது மேற்கத்திய சிந்தனை. காலனிய காலத்தின் ஆரம்பத்தில் ஒரு கப்பல் செய்ய 2000 மரங்கள் தேவைப்பட்டிருக்கிறது. உலகம் முழுதும் சென்று காலனி ஆதிக்கம் புரிந்த அந்த ஐரோப்பியர்கள் எத்தனை மரங்களை அழித்து ஒழித்திருப்பார்கள்? ஆனால் கீழை சிந்தனைகள் இயற்கையோடு ஒன்றி வாழவே முயன்றிருக்கிறது. தேவைகேற்ப இயற்கையிடம் எடுத்திருக்கிறதே தவிர பேராசையால் அதை அழித்தொழிக்கவில்லை. ஆனால் இந்த காலனி ஆதிக்கத்தால் நமது பன்பாட்டின் பல்வேறு விழுமியங்கள் நம்மிடம் இருந்து நழுவி சென்றுவிட்டது.