Showing posts with label ஆளுமை. Show all posts
Showing posts with label ஆளுமை. Show all posts

Monday, October 19, 2015

காந்தியும் இந்திய ஆன்மீகமும்

நவகாந்தியத்தை பற்றி மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரையை படித்தேன். அதன் தமிழ் மொழியாக்கம் இங்கு

காந்தியை இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியாக வைத்து விளக்குமிடம் பிடித்திருந்தது. காந்தி அந்த மரபின் அடிப்படைகளுக்கு எப்படி தன் வழியில் விளக்கம் கொடுத்தார் அதிலிருந்து எப்படி ஒரு வாழ்வியல் வழிமுறையை வரையறுத்தார் என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். நவ இந்தியர்கள் காந்தியை பின்பற்றுபவர்களாக, காந்தியவாதிகளாக இருக்க முயற்சிக்காமல் காந்தியை-போல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியை-போல் எப்படி இருப்பது? காந்தி எங்கிருந்து தனது வழிமுறையை எடுத்து கொண்டார்? இந்திய மெய்ஞான மரபிலிருந்து. அதற்கே திரும்ப செல்வோம். அந்த மெய்ஞானத்தின் அடிப்படைகளை கொண்டு நமது காலகட்டத்திற்கும் நமது உண்மை தேடலுக்கும் ஏற்றார் போல் ஒரு வாழ்க்கை முறையை வரையறுப்போம். மேலும் முக்கியமாக அந்த வாழ்க்கை முறையை நமது வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும், அனைத்து சமயங்களிலும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

காந்தியை-போல் நாம் வாழ வேண்டுமென்றால் இரு முக்கியமான விஷயங்களை நாம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
1. அகங்காரம்
2. புலன் இன்பம்

அகங்காரத்தை சிறிதாக்கி நமக்குள் இருக்கும்  ஆன்மாவிற்கு - spirit முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புலன் இண்பமே வாழ்க்கை என்றில்லாமல் ஆன்ம இண்பத்தை மையபடுத்தவேண்டும். இந்த இரண்டையுமே நான் காந்தி தனது சிந்தனையின் செயல்பாட்டின் முக்கியமான அடிப்படையாக கொண்டார் என்று கருதுகிறேன். தாக்குபிடிக்கும் பொருளாதாரம், சுழலியல் என்று பல்வேறு தளங்களில் அவரின் சிந்தனை-செயல்முறைகளை போட்டு பார்த்தாலும் அனைத்துக்கும் வேர் இந்த ஆதார புள்ளிகளிலிருக்கிறது.   தனது ஆன்மாவின் குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.. தன் புலனடக்கம், உணவு பழக்கவழக்கங்கள் வழியாக அந்த ஆன்மாவை சுத்திகரிக்கிறார்.

அகங்கார மற்றும் புலன் இன்ப கட்டுபாடு என்ற இரு மாற்றங்களையும் நம்மில் நிகழ்த்த தொடங்கினால், சுயநலம்  என்பதற்கான அவசியம் குறைந்து போகிறது. சமூகத்தின் மீது அக்கரையும். உலகத்தின் மீது பொருப்புணர்வு தோன்றும். அங்கு ஆரம்பிக்கிறது நாம் செய்ய வேண்டிய சேவை. சுயநலமில்லாத, அறத்தின் அடிப்படையில், அஹிம்சையை வழிமுறையாக கொண்டு இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.

இங்கு தான் காந்தி மற்ற இந்திய மெய்ஞானிகளிடமிருந்து வெறுபடுகிறார். ஆன்ம தேடலால் முற்றிலும் தங்களுக்குள் ஆழ்ந்துவிடும் மற்ற ஆன்மீகவாதிகள் போலில்லாமல் ஆன்மாவையும் சமூகத்தையும் இணைத்து பார்க்கும் பார்வை கொண்டவர் காந்தி.

அகங்காரம், புலன் இன்பத்தை கட்டுபடுத்துதல் போன்ற விழுமியங்கள் எல்லாம் காந்தி மட்டும் முன்வைத்தது அல்ல. நம் பண்பாடே இதை வலியுறுத்துகிறது. அதனால் தான் புலன் இன்பத்தை சிற்றின்பம் என்கிறோம். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவது போல் புருஷார்த்தம் என்பதை நம் மரபு வகுத்தளிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதை வாழ்க்கையின் பகுதிகளாக வரையறை செய்கிறது.

இதில் சில மகான்கள் நேரடியாக வீடுபேறு எனும் கடைசி நிலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் மற்ற மூன்றையும் அனுபவித்து விட்டு கடைசியில் அங்கு வந்து சேருவார்கள். வராமல் செல்பவர்களும் உண்டு. காந்தி அந்த கடைசி நிலையில் இருந்து நம்மிடம் உரையாடுகிறார். அந்த நிலைக்கு நாம் செல்லவேண்டும். இல்லை என்றால் பிற மூன்று தளத்திலிருந்து அங்கு செல்ல முயற்சி செய்யவேண்டும்.

இன்பம் என்பதை விலக்கி வைப்பதாக நம் மரபு இருக்கவில்லை. அதை வாழ்வின் ஒரு பகுதியாக சொல்லி காம சுத்திரம் எழுதி வைத்தது தான் நம் மரபு. அதன்படி இன்பத்தை முற்றும் துறந்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் கட்டாயமில்லை. அளவான இன்பம் வேண்டுவோர் அடைந்து கொள்ளலாம். அந்த இன்பத்தில் கள்ளும் ஒரு பகுதியே.

காந்தியிடம் இருக்கும் அந்த விஷேச கலவை குணம் ஆன்ம விடுதலை + உலக நலம் என்பதில் இரண்டாம் பகுதியான உலக நலம் என்னும் கூறு காந்தியை-போல் வாழ நினைப்பவரின் அனைத்து வாழ்க்கை தளத்திலும் செயல்களிலும் தாக்கம் செலுத்தும். அதன்படி நாம் கள் குடித்தாலும் அந்த குடிக்கும் முறையும் அமைப்பும் உலக நலம் கருதுவதாக கட்டுப்பாடு உடையதாக இருக்கவேண்டும். நம் இண்பத்துக்காக எதையும் அழிப்பதாக இருக்ககூடாது. நமது இலக்கு காந்தி நின்று பேசும் அந்த தளத்தை சென்றடைவது என்ற உணர்வு எப்போதும் நமக்கிருக்கவேண்டும்.

Thursday, October 1, 2015

காந்தியின் நினைவில்

காந்தி என்னை கவர்ந்த தருணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. சில வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்தது. அந்த தருணத்தில் நான் என் அகத்தின் அஸ்திவாரங்களை உடைத்தெடுத்து மறு கட்டுமானம் செய்து கொண்ட காலம். அப்படி ஒரு அடி என் அகங்காரத்தின் மேல் விழுந்தது. அகங்காரத்தை காலடியில் போட்டு நசுக்கி தள்ளினால் ஒழிய அந்த தருண நரகத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழ்நிலை. அந்த தருணத்தில் எனது அகம் பல உண்மைகளை கண்டடைந்தது. எந்த முன் அறிவும் இல்லாமல் தத்துவார்த்தமான சில விஷயங்கள் என்னில் எழுந்தது. இந்த பிரபஞ்சத்தின் முன் நான் எத்தனை சிறியவன் என்பதை முழுதாய் உணர்ந்த காலம் அது. என் சிந்தனைகளின், வாழ்க்கை நோக்கின் அடிகட்டுமானத்தை மாற்றி அமைத்தது அந்த காலகட்டம்.

அப்போது புரிந்தது மனிதர்களின் செயல்கள் எவ்வளவு அர்த்தமற்றது என்று. பகைகளும், வெறுப்பும், கோபமும் தேவையற்றது என்று விளங்கியது. இயற்கையாக மனிதர்கள் மேல் அன்பு பிறந்தது. அதே போல் இயற்கையாக காந்தியின் மீது அபிமானம் தோன்றியது. அவரது அஹிம்சையின் மீது பெரு மதிப்பு வந்தது. அதற்கு முன்னால் காந்தியை பற்றி சிறிதளவு கூட நான் படித்ததில்லை. காந்தி என்று அனைவருக்கும் தெரிந்த பொது பிம்பமே எனக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சுபாஷ் சந்திர போஸ் தான் மிகவும் பிடித்தவர். ஆனால் அந்த தருணம் என் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றது, உலகின் மீது புது பார்வையை ஏற்படுத்தியது. என் அகம் முதிர்ச்சி அடைந்த தருணம் அது என்று நான் கருதுகிறேன். அந்த தருணத்தில் காந்தி என்னுள் நுழைந்தார்.

அதன் பிறகு சில வருடம் கழித்து ஜெவை கண்டறிந்து காந்தியை பற்றி அவ்வப்போது படிக்கும் போது அவரின் மற்ற பரிமானங்களையும் தெரிந்து கொண்டேன். என்னை பொருத்த வரை ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறான் என்பதை விட அவன் எவ்வளவு நல்ல நோக்குடனும் நேர்மையுடனும் இருக்கிறான் என்பது முக்கியம். சமீபத்தில் அந்த கருத்தை விரிவாக்கி கொண்டேன். அதை வைத்து நாம் காந்தியை அளவிடலாம் என்று நினைக்கிறேன். மக்கள் தலைவராய் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மனிதருக்கு தேவையான அடிப்படை குணங்கள்,

1. பொது நலம் மற்றும் நேர்மை
2. அணுகுமுறை
3. அறிவும் சிந்தனையும்

முதல் அம்சம் குறித்து அதிகம் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் அம்சமான அணுகுமுறை பற்றி நிறையவே சொல்லாம். ஒரு நல்ல கருத்தை லட்சியத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது. அதை எப்படி நடைமுறையில் வெல்வது என்பதை வரையறுப்பது அணுகுமுறை. இதில் பல வழிகளை பல தலைவர்கள் கடைபிடித்திருக்கிறார். அதில் இன்று வரை எனக்கு தெரிந்து காந்தியின் வழிமுறையை மிகவும் மேலானதாக கருதுகிறேன். அஹிம்சையை முன் வைத்து மக்களை பிரதானபடுத்தி போராடும் வழிமுறை அது. மார்ட்டின் லூரத் கிங் சொல்வது போல "Christ gave me the message.  Gandhi gave me the method." காந்தி மறைந்துவிட்டாலும் இன்னும் பல காலங்களுக்கு இந்த வழிமுறை பல காந்திகளை உருவாக்கும்.

மூன்றாவதாக காந்தியின் சிந்தனையும் அறிவும். காந்தி அறிவுஜீவியா என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான உலக நடப்புகளும் வரலாறும் அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதை விட அவருக்கு மக்களுடனான நேரடி உறவிருந்தது. நாள் தோறும் மக்களிடம் தொடர்பிலிருந்ததால் அவருக்கு மக்களின் உண்மை நிலவரம் தெரியும். அவர்களின் உணர்வுகள் கஷ்டங்களை அறிந்தவர். அவரது சிந்தனை முறை வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு சிந்திப்பதாக இருந்தது. எதை தர்க்கபூர்வமாக அணுகவேண்டுமோ அதை அந்த நோக்குடன் பார்க்கும் தன்மை அவருக்கிருந்தது. நவீன காலத்தின் மக்களுக்கும் காலத்திற்கும் உகந்த அம்சங்களை எடுத்துகொண்டு குறைபாடுகளை சுட்டிகாட்ட அவரால் முடிந்தது.

ஆனால் மேலே சொன்னவை எல்லாம் ஒரு மக்கள் தலைவரை உருவாக்கிவிடும். ஒரு மஹானை உருவாக்கிவிடாது. யோசித்து பார்த்தால் இந்த குணாம்சங்கள் ஓரளவுக்கு நேருவுக்கும் பட்டேலுக்குமே பொருந்தி வரும். இருவரும் நேர்மையும் நல்ல நோக்கமும் உடையவர்கள். காந்திக்கு பின் இந்தியாவை கட்டி எழுப்பும் திறன் கொண்டவர்கள். சில விஷயங்களில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக நிறுவினார் நேரு. 500க்கும் மேற்பட்டதாக சிதறிகிடந்த இந்திய மாநிலங்களை, குறுநிலங்களை ஒன்றினைக்கும் அறிவும் திறனும் பட்டேலுக்கு இருந்தது.

ஆனால் இதை எல்லாம் விட மேலும் ஒரு அம்சம் காந்தியிடம் இருந்தது. தன் உள்ளுணர்வுடன் உரையாடும் திறன். இறைவன் தன்னை வெளிபடுத்தி கொள்ள தேர்தெடுத்த ஒரு விஷேச மனிதர் அவர். அதுவே காந்தியை தலைவராக மட்டுமில்லாமல் ஒரு ஞானியாகவும் ஆக்கியது. அந்த ஞானமே அவரை அஹிம்சையை தேர்ந்தெடுக்க செய்தது. அந்த அஹிம்சையினாலேய அவர் மஹான். மனித குலத்துக்கு அவர் கொடுத்த நற்செய்தி அஹிம்சையே.

இன்றைய உலகுக்கு வேறு எந்த அறிஞர், தலைவர் தேவையோ இல்லையோ காந்தி மிகவும் தேவை. அவர் கருத்துக்கள் மட்டுமல்ல அவரே மீண்டும் இங்கு வர வேண்டும். அவருக்காக இந்தியாவும் உலகமும் காத்துகொண்டிருக்கிறது.