Monday, October 19, 2015

கிழக்கு x மேற்கு மெய்யியல் - சில கேள்வி பதில்கள்

நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டது.


மனிதனின் அறிவு எப்படி பெறப்படுகிறது?

நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
கிழக்கு மதங்கள் உடலை மீறி நான் என்ற ஒரு இருப்பை அடையாளம் காட்டுகிறதே? மேற்கத்திய மெய்யியலின் நிலை என்ன?

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

பேரியற்கையை பரப்பிரம்மம் என்று சொல்லலாமா?

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

Thursday, October 1, 2015

காந்தியின் நினைவில்

காந்தி என்னை கவர்ந்த தருணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. சில வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்தது. அந்த தருணத்தில் நான் என் அகத்தின் அஸ்திவாரங்களை உடைத்தெடுத்து மறு கட்டுமானம் செய்து கொண்ட காலம். அப்படி ஒரு அடி என் அகங்காரத்தின் மேல் விழுந்தது. அகங்காரத்தை காலடியில் போட்டு நசுக்கி தள்ளினால் ஒழிய அந்த தருண நரகத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழ்நிலை. அந்த தருணத்தில் எனது அகம் பல உண்மைகளை கண்டடைந்தது. எந்த முன் அறிவும் இல்லாமல் தத்துவார்த்தமான சில விஷயங்கள் என்னில் எழுந்தது. இந்த பிரபஞ்சத்தின் முன் நான் எத்தனை சிறியவன் என்பதை முழுதாய் உணர்ந்த காலம் அது. என் சிந்தனைகளின், வாழ்க்கை நோக்கின் அடிகட்டுமானத்தை மாற்றி அமைத்தது அந்த காலகட்டம்.

அப்போது புரிந்தது மனிதர்களின் செயல்கள் எவ்வளவு அர்த்தமற்றது என்று. பகைகளும், வெறுப்பும், கோபமும் தேவையற்றது என்று விளங்கியது. இயற்கையாக மனிதர்கள் மேல் அன்பு பிறந்தது. அதே போல் இயற்கையாக காந்தியின் மீது அபிமானம் தோன்றியது. அவரது அஹிம்சையின் மீது பெரு மதிப்பு வந்தது. அதற்கு முன்னால் காந்தியை பற்றி சிறிதளவு கூட நான் படித்ததில்லை. காந்தி என்று அனைவருக்கும் தெரிந்த பொது பிம்பமே எனக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சுபாஷ் சந்திர போஸ் தான் மிகவும் பிடித்தவர். ஆனால் அந்த தருணம் என் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றது, உலகின் மீது புது பார்வையை ஏற்படுத்தியது. என் அகம் முதிர்ச்சி அடைந்த தருணம் அது என்று நான் கருதுகிறேன். அந்த தருணத்தில் காந்தி என்னுள் நுழைந்தார்.

அதன் பிறகு சில வருடம் கழித்து ஜெவை கண்டறிந்து காந்தியை பற்றி அவ்வப்போது படிக்கும் போது அவரின் மற்ற பரிமானங்களையும் தெரிந்து கொண்டேன். என்னை பொருத்த வரை ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறான் என்பதை விட அவன் எவ்வளவு நல்ல நோக்குடனும் நேர்மையுடனும் இருக்கிறான் என்பது முக்கியம். சமீபத்தில் அந்த கருத்தை விரிவாக்கி கொண்டேன். அதை வைத்து நாம் காந்தியை அளவிடலாம் என்று நினைக்கிறேன். மக்கள் தலைவராய் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மனிதருக்கு தேவையான அடிப்படை குணங்கள்,

1. பொது நலம் மற்றும் நேர்மை
2. அணுகுமுறை
3. அறிவும் சிந்தனையும்

முதல் அம்சம் குறித்து அதிகம் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் அம்சமான அணுகுமுறை பற்றி நிறையவே சொல்லாம். ஒரு நல்ல கருத்தை லட்சியத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது. அதை எப்படி நடைமுறையில் வெல்வது என்பதை வரையறுப்பது அணுகுமுறை. இதில் பல வழிகளை பல தலைவர்கள் கடைபிடித்திருக்கிறார். அதில் இன்று வரை எனக்கு தெரிந்து காந்தியின் வழிமுறையை மிகவும் மேலானதாக கருதுகிறேன். அஹிம்சையை முன் வைத்து மக்களை பிரதானபடுத்தி போராடும் வழிமுறை அது. மார்ட்டின் லூரத் கிங் சொல்வது போல "Christ gave me the message.  Gandhi gave me the method." காந்தி மறைந்துவிட்டாலும் இன்னும் பல காலங்களுக்கு இந்த வழிமுறை பல காந்திகளை உருவாக்கும்.

மூன்றாவதாக காந்தியின் சிந்தனையும் அறிவும். காந்தி அறிவுஜீவியா என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான உலக நடப்புகளும் வரலாறும் அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதை விட அவருக்கு மக்களுடனான நேரடி உறவிருந்தது. நாள் தோறும் மக்களிடம் தொடர்பிலிருந்ததால் அவருக்கு மக்களின் உண்மை நிலவரம் தெரியும். அவர்களின் உணர்வுகள் கஷ்டங்களை அறிந்தவர். அவரது சிந்தனை முறை வருங்காலத்தையும் கணக்கில் கொண்டு சிந்திப்பதாக இருந்தது. எதை தர்க்கபூர்வமாக அணுகவேண்டுமோ அதை அந்த நோக்குடன் பார்க்கும் தன்மை அவருக்கிருந்தது. நவீன காலத்தின் மக்களுக்கும் காலத்திற்கும் உகந்த அம்சங்களை எடுத்துகொண்டு குறைபாடுகளை சுட்டிகாட்ட அவரால் முடிந்தது.

ஆனால் மேலே சொன்னவை எல்லாம் ஒரு மக்கள் தலைவரை உருவாக்கிவிடும். ஒரு மஹானை உருவாக்கிவிடாது. யோசித்து பார்த்தால் இந்த குணாம்சங்கள் ஓரளவுக்கு நேருவுக்கும் பட்டேலுக்குமே பொருந்தி வரும். இருவரும் நேர்மையும் நல்ல நோக்கமும் உடையவர்கள். காந்திக்கு பின் இந்தியாவை கட்டி எழுப்பும் திறன் கொண்டவர்கள். சில விஷயங்களில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக நிறுவினார் நேரு. 500க்கும் மேற்பட்டதாக சிதறிகிடந்த இந்திய மாநிலங்களை, குறுநிலங்களை ஒன்றினைக்கும் அறிவும் திறனும் பட்டேலுக்கு இருந்தது.

ஆனால் இதை எல்லாம் விட மேலும் ஒரு அம்சம் காந்தியிடம் இருந்தது. தன் உள்ளுணர்வுடன் உரையாடும் திறன். இறைவன் தன்னை வெளிபடுத்தி கொள்ள தேர்தெடுத்த ஒரு விஷேச மனிதர் அவர். அதுவே காந்தியை தலைவராக மட்டுமில்லாமல் ஒரு ஞானியாகவும் ஆக்கியது. அந்த ஞானமே அவரை அஹிம்சையை தேர்ந்தெடுக்க செய்தது. அந்த அஹிம்சையினாலேய அவர் மஹான். மனித குலத்துக்கு அவர் கொடுத்த நற்செய்தி அஹிம்சையே.

இன்றைய உலகுக்கு வேறு எந்த அறிஞர், தலைவர் தேவையோ இல்லையோ காந்தி மிகவும் தேவை. அவர் கருத்துக்கள் மட்டுமல்ல அவரே மீண்டும் இங்கு வர வேண்டும். அவருக்காக இந்தியாவும் உலகமும் காத்துகொண்டிருக்கிறது. 

பெரியாரின் பகுத்தறிவு

பெரியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை தற்போது படித்து முடித்தேன். அந்த புத்தகத்தில் பெரியாரை விமர்சன நோக்குடன் பார்க்காமல் புகழும் நோக்குடன் எழுதப்பட்டிருந்தது. இருந்தும் அவரது வாழ்க்கையை உள்ளபடியே பதிவு செய்திருந்ததாகதான் தோன்றியது. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களே அவரின் அணுகுமுறையை தெளிவாக நமக்கு எடுத்துகாட்டுகிறது.

தி.கவிற்குள் அண்ணாவின் தனிப்பட்ட போக்கினால் எரிச்சலடைந்த பெரியார் இப்படி சொல்கிறார்(எனது வார்த்தைகளில்). "உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் கொண்டு நான் முன்வைக்கும் கொள்கைகளை சிந்தித்து பாருங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானால் எடுத்துகொள்ளுங்கள். கொள்கை ஏற்புடையதாக இருந்தால் கட்சியில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த மறுநொடியில் உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் எடுத்து ஓரமாக வைத்துவிடுங்கள். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், செய்யுங்கள். இது சர்வாதிகாரம் தான். ஆனால் அதை கொண்டு தான் கட்சியை நடத்த முடியும்" என்கிறார்.

இது பகுத்தறிவுக்கே எதிரான நிலைபாடு. நவீன ஐரோப்பாவில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகி சில காலங்களிலேயே அங்கே தனித்துவவாதம் -individualism என்ற கருத்து தோன்றிவிட்டது. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அனைவருக்கும் அவரவர் தர்க்க புத்தியை உபயோகிக்கும் உரிமை உண்டு என்று அடக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். இதன் விளைவாக பிறந்ததே ஜனநாயகம்.

பகுத்தறிவின் வரலாறு இப்படி இருக்க பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை என்றெல்லாம் பேசிய பெரியார் மக்கள் அவர் கட்சியில் சேர்ந்த பிறகு பகுத்தறிவை ஓரமாக வைத்துவிடுங்கள், நான் சிந்திக்கிறேன் உங்களுக்காக என்று சொல்வது பெரும் அபத்தமாக தெரிகிறது. இதற்கும் மத நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மாநிலத்து மக்களிலேயே தனக்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்பது போல் அவர் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பெரியாரிடம் பொது நல நோக்கும், நேர்மையும் இருந்ததாக நான் கருதுகிறேன். அது ஒரு ஆளுமைக்கு தேவையான முக்கியமான அடிப்படை தகுதி. அவர் பகுத்தறிவு என்ற பிரச்சாரம் செய்ததும் அன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அந்த பகுத்தறிவின் ஆழம் எவ்வளவு என்பது பற்றிய விவாதம் தனி என்றாலும் அவர் அப்படி ஒரு கருத்தை பரப்பினார் என்பதற்காக அவருக்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் தனக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என்பது போல் பேசியிருக்கும் அளவுக்கு அவரது பகுத்தறிவு அணுகுமுறைகள் அறிவுபூர்வமாகவும் இல்லை, ஆழமானதாகவும் இல்லை, நடைமுறைக்கு ஏற்றதாகவும் இல்லை.

Tuesday, September 8, 2015

இந்துத்துவமும் அதன் மீதான என் விமர்சனமும்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் மூன்று வகையான தேசிய கனவுகள் இருந்தது. அதில் நேரு கனவு கண்ட  தாராளவாத சோஷியலிச தேசம், காந்தி கனவு கண்ட ஸ்வாரஜ்யம், இந்துதவர்கள் கனவு கண்ட இந்துத்தவ தேசியம். இதில் நேரு வெண்றார், காந்தி தோற்றார். இந்துத்துவர்கள் வெல்வதற்கு அன்று ஒரு பெரிய தரப்பாக இருக்கவில்லை.

இந்துத்துவத்தும் என்ற கருத்தை முதலில் வரையறை செய்தவர் சாவர்க்கர். இந்துத்துவம் என்பது இந்துக்களை ஒட்டுமொத்தமாக திரட்டி அவர்களின் பெரும்பான்மையை கொண்டு ஒரு தேசத்தை உருவாக்குது. இவர்கள் இந்துக்கள் என்று சொல்வது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்ல என்று விளக்கபடுகிறது. இந்து என்பது இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியர்களை குறிக்கிறது. அவர்களே இந்து இணம் என்கிறது. இந்து மதம் என்பது ஒற்றை வேதநூல் கொண்ட மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதன் படி இந்திய பன்பாட்டில் வளர்ந்த எந்த மதத்துக்கும் இந்து என்ற வரையறையில் இடமுண்டு என்பது இவர்களது வாதம். ஆக இந்துத்துவ தேசியம் என்பது இந்து கலாச்சாரம் சார்ந்த தேசியம்.


இந்தியாவில் இந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்துகிடந்ததே காலனியதிக்கதுக்கும் இஸ்வாமிய ஆதிக்கத்துக்கும் காரணமானது. அதனால் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்த தேசத்தை ஒரு இந்து தேமாக ஆக்குவதே இவர்களின் குறிக்கோள். இந்த தேசமானது இங்கிருக்கும் மக்களின் பித்ருதேசமாகவும் புன்னிய பூமியாகவும்  இங்கு வாழும் மக்களால் கருதப்படவேண்டும். அப்படி இந்தியாவை தங்களது தந்தை தேமாக கருதமுடியாத பிற மதத்தினர்கள் இந்தியாவை தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தேசமாக கருதவேண்டும். அவர்கள் இந்து பண்பாட்டின் மீதும் இந்து மதத்தின் மீதும் மதிப்பும் பெருமிதமும் கொண்டிருக்கவேண்டும். அதை அவரகள் நிராகரிக்ககூடாது. அப்படி நிராகரிப்பவர்களுக்கு இந்த நாட்டில் குடிமை உரிமை வழங்கப்படகூடாது என்று சொல்லியிருக்கிறார் இந்துத்துவ சித்தாந்தவாதியான கோல்வால்க்கர்.

1 -
இந்துத்தவம் என்ற கருத்து உருவாக்கப்பட்ட காலத்தையும் அந்த கருத்தையும் கவனித்தால் ஒன்று புரிகிறது. அது பயத்தினால் உருவாக்கப்பட்டது என்று தெரியவரும். நாம் கடந்த ஆயிரம் வருடங்களாய் பிற தேசங்களால் தாக்கப்பட்ட நாடாய் இருந்திருக்கிறோம். இந்தியாவில் நடந்த காலணி ஆதிக்கத்துக்கும் இஸ்லாமிய படையெடுப்புக்கும் காரணம் இந்துக்கள் ஒன்றிணையாமல் இருந்ததே. அதனால் இந்துக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அவர்கள் இணைந்து வலுவான ஒரு இந்து தேசத்தை கட்டமைக்கவேண்டும் என்பது இந்துத்துவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த கருத்து ஒரு நவீன தேசம் எப்படி இயங்கும் என்ற ஒரு புரிதலில்லாமல் சொல்லப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நவீன தேசம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டால் அதற்கென்று ஒரு ராணுவம் அமையும். அது அந்த தேசத்தை படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும். இதற்காக இந்தியா இந்து நாடாக ஒன்று திரளவேண்டியது அவசியமற்றது.


2 -
இந்துத்துவர்கள் சொல்லும் பல கருத்துகளுக்கு புறவயமான வரலாற்று பின்புலம் இருப்பதில்லை. அவர்கள் புராணங்களேயே வரலாறாக சொல்லிவருகின்றனர். சாவர்க்கர் எழுதிய இந்துத்துவ புத்தகத்தில் ராமர் என்று ராவனனை வெண்று நாடு திரும்பி சிம்மாசனத்தில் அமர்ந்தாரோ அன்று தான் இந்தியா என்பது முழுமையாக உருவாக்கப்பட்டது என்கிறார். அதுவே நம் தேசிய தினம் என்கிறார். பெரும்பாலும் புராணங்களில் வரும் ஸ்லோகங்களையே ஆதாரமாக வைக்கிறார். இன்று வரையிலும் இவர்களின் வாதம் புராணங்க்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது.

3 -
இந்துத்துவர்களுள் ஒரு அறிவார்ந்த தரப்பு இருப்பதில்லை என்பது திரும்ப திரும்ப அறிஞர்களால் சொல்லபடுகிறது. இவர்கள் இந்து பெருமிதத்தை மட்டும் வைத்துகொண்டு நாங்களே தலை சிறந்ந பண்பாடு, இன்று நவீன அறிவியல் கண்டுபிடித்ததை எல்லாம் நாங்கள் என்றோ கண்டு பிடித்துவிட்டோம் என்று மார்த்தட்டிகொள்கிறார்கள். விநாயகருக்கு யானை தலை இருப்பது அந்த காலத்திலேயே ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதை காட்டுகிறது. சமஸ்கிருதமே அறிவியல் பூர்வமான மொழி என்பது போல பல நகைச்சுவைகளை செய்வது இவர்களுக்க வழக்கமாய் இருந்து வருகிறது.

அறிவியல் என்றால் என்ன என்று ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள் சொல்வது இது போன்ற கருத்துக்கள். ஆனால் உன்மையில் அறிவியல் பற்றி அறிந்த சில இந்துத்துவர்கள் இந்த பெருந்தலைவர்களின் அதிரடியான இந்த கருத்துகளுக்கு விளக்கம் கொடுகின்றனர். இவர்களுள் இருக்கும் ஒன்றிரண்டு அறிவார்ந்தவர்களும் இவர்கள் தலைவர்கள் சொல்லும் அடிப்படையில்லா கருத்துகளை நியாயப்படுத்துவதற்கென்றே இருக்கிறார்கள் போலும். இது போன்ற கருத்துக்களால் இந்தியாவில் உன்மையாகவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் வெளி கொண்டு வரப்பட்டால் கூட அது ஏளனமாகவே பார்க்கப்படும்.


4 -
ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவன் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவனது உரிமை. தன் சொந்த கலாச்சாரத்தின் மேல் பிடிப்பு இருப்பது நல்லது. ஆனால் அதை முடிவெடுப்பது அவனது உரிமையாக இருக்கவேண்டும். அதை அவனில் வலுகட்டாயமாக ஏற்க செய்ய கூடாது. அப்படி நடந்தால் அது ஜனநாயக நாடாக அமையாது. ஒரு ஜனநாயக நாட்டில் அவன் அதன் சட்டத்தின் படி நடப்பதும் வரி கட்டுவது மட்டுமே அவனது கடமைகளாக இருக்க முடியும். அதற்கு மேல் அந்த நாட்டை அவன் போற்றுவதும் விமர்சிப்பதும் அவனது தனி மனித உரிமை. அதற்கு ஜனநாயக நாட்டில் சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் இந்துவத்தின் படி இந்திய நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்திய பண்பாட்டை பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும் இந்து மதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்லுவது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தாகவே தெரிகிறது.

Tuesday, August 25, 2015

இரவெனும் கடல்

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி 
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே



இந்த சங்க பாடல் குறிப்பிடும் நிலைக்கு நேரெதிரான உணர்வை அடைந்திருக்கிறேன். பலரும் அடைந்திருக்கலாம், இரவு கரைகிறேதே என்று ஏங்க வைத்திருக்கிறது. பகல் - அதை நான் வெறுக்கிறேன். எங்கும் இடம். எதை வைத்து அடைப்பது இந்த இடங்களை. எவ்வளவு நிறைத்தாலும் நிறைவதில்லை. இங்கு என் முன்னே எத்தனையோ தோன்றி நிற்கின்றன. எத்தனை குழப்பங்கள் எத்தனை தடுமாற்றங்கள் எத்தனை பாவனைகள்.

ஆனால் இரவு அப்படி அல்ல. இரவெனும் இருள் பொங்கி வழியும் கடல். இருள் - அது அமிர்தமல்லவா. என்னை மூழ்கடித்து அனைத்து கொள்கிறது. எங்கும் எதுவும் இல்லை. நானே. நான் மட்டுமே. அனைத்தும் நானே. என் எண்ணங்களால் மட்டுமான நான். என் அகமே அனைத்தும். எத்தனை நிறைவு. என் அகம் விஸ்வருபம் எடுத்து எங்கும் பரவியிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு சிறு கணத்தில் இந்த பெருங்கடல் வற்றி பாலையாகிறது. பாலையில் விழுந்த மீனாய் துடிக்கிறேன். அந்த கடலில் இரு கைபிடி இருளை எடுத்து வைத்துகொள்ள முடியாதா? என் கண்களில் நான் விரும்பும் போது வைத்துகொள்ள.

ஒருவேளை இரவில் நம் அகமே அனைத்தும் ஆவதால் அகத்தில் ஊற்றெடுப்பது நம்மை அழுத்திவிடுகிறது. பகலில் நம் அகம் ஒரு சிறு பறவை என அங்கங்கு பறந்து கொண்டிருக்கிறது. 'சூ' என்று விரட்டிவிட்டு நம் வேலையை பார்க்கக முடிகிறது. ஆனால் இருளில் அதுவே பெருங்கடலாகி நம்மை மூழ்கடிக்கிறது. அதில் ஏற்படும் ஒரு சிறு சலனம் இரவில் பேரலையாய் நம்மை அழுத்திவிடுகிறது. அதில் கசியும் விஷம் பெரும் ஊற்றென பொங்கி பாய்ந்து கடலையே நஞ்சாக்கிவிடுகிறது.

நுகர்வோரின் தலைவிதி

http://www.jeyamohan.in/78043#.VdwVdZct_ZZ
http://www.jeyamohan.in/78109#.VdwVgJct_ZY

எனக்கு ஒரு வருடத்திற்கு முன்  At&t சேவையில் ஒரு பிரச்சனை நிகழ்ந்தது. அவர்களை கேட்டால் பரிசோதித்து பார்த்து விட்டு எங்கள் பிரச்சினை இல்லை என்றார்கள்.

அமெரிக்காவில் Better business bureau என்ற நுகர்வோர் அமைப்பிருக்கிறது. எழுதிப்போட்டேன். பின் At&tயே அழைத்து மன்னிப்பு கோரி நான் கேட்ட நஷ்ட ஈடு $100 கொடுத்தார்கள். அது என்னை பொருத்த வரை பெரிய வெற்றி. இது போன்ற ராட்சஷ நிறுவனங்களின் முன் ஒரு சிறு எறும்பாக தனிப்பட்ட ஒரு நுகர்வோர் நிற்கிறான். இவர்களிடம் காசு சென்று விட்டால் அது முதலை வாயில் நுழைந்த முயல் தான். எளிதில் திரும்பி வாங்க முடியாது. ஆயிரம் விதிமுறைகள் வைத்திருப்பார்கள்.

ஆனால் இதை தொடர்ந்து செய்வது மிகவும் சலிப்பூட்டக்கூடிய ஒரு காரியம். அதில் நேரத்தை செலவு செய்யமுடியாது. காசு கொடுத்தாலும் வேலை நடப்பத்தில்லையே என்ற ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Tuesday, August 18, 2015

சங்க இலக்கியத் தாவரங்கள்

கவிதையில் கூறப்படும் உவமைகளின் இயல்புகளை வைத்துதான் அந்த கவிதையின் அனுபவத்தை நாம் அடைய முடியும் என்பது நான் சமீபமாக அறிந்து கொண்டது. உதாரணத்துக்கு மேலே சித்தார்த் கொடுத்த கவிதையில் குவளை மலரையும் அதன் இயல்புகளும் ஓரளவுக்கு தெரிந்தால் தான் அந்த கவிதையை உள்வாங்க முடியும். சங்க இலக்கியம் பற்றிய ஜெவின் உரையில் இதை சொல்லியிருப்பார்.

அதனால் சங்கபாடல்களில் சொல்லப்படும் மலர்கள் தாவரங்கள் ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வது அந்த பாடலை உள்வாங்குவது உதவியாக இருக்கும். 'சங்க இலக்கியத் தாவரங்கள்' என்ற இந்த புத்தகம் அந்த வகையில் முக்கியமாகிறது.

https://archive.org/details/SangaIlakkiyaThavarangal

இந்த புத்தகத்தை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை.