Sunday, August 9, 2015

அயல் வாழ்க்கை

அமெரிக்காவில் வாழக்கூடாத காரணங்கள் என்று ஐந்தை என் மனதில் உருவாக்கி வைத்துள்ளேன். அதில் ஒன்று மதத்துடன் தொர்புடையது. ஆனால் மதம் என்ற அனுபவத்தை அடைவதற்கு வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு வழிகள் குறைவு என்பது என் எண்ணம்.

இதில் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சில கருத்துகளை சொல்கிறேன். இது வேறு இடங்களில் வேறு வகையாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டினால் எண்ணத்தை மாற்றி கொள்ள தயார்.

அமெரிக்காவில் நான் வாழும் இடத்தில் இருக்கும் இந்து மதம் என்பது வெறும் சடங்கு சார்ந்தது அல்லது நிறுவனமயமான ஒரு இயக்கம் இது இரண்டையும் தாண்டி ஒரு இயல்பான இந்து மதம் அல்லது இந்த மதத்தின் பல வழி சாத்தியங்களை கொண்ட ஒரு மதத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இயலவில்லை.

இங்கிருக்கும் இந்து கோவில்களும் வெறும் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் ஆண்டவனிடம் பேரம் பேசுவதற்குமான ஒரு இடமாக தான் இருக்கிறது. நம்மூர் கோவில்களுக்குள் நுழையும் போது தோன்றும் ஒரு ஆன்மீகமான அனுபவம் இங்கு தோன்றுவதில்லை. ஜோசப் கேம்பில் ஒரு பேட்டியில் சொன்னார் - வழிபாட்டு தளங்க்களுக்குள் அப்படி ஒரு விஷேச அனுபவம் கிடைப்பதற்கு காரணம் அங்கிருக்கும் மத குறியீடுகள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவை என்று. இங்கிருக்கும் கோவில்கள் அப்படி அமைக்கப்படுவதில்லை. ஏராளமான கோவில்கள் இருக்கிறது ஆனால் அது இங்கிருக்கும் திருமண மன்டபம் போலான ஒரு கட்டடதுக்குள் அப்படி சில அறைகளை பிரித்து சில தெய்வ சிலைகளை வைத்திருக்கிறார்கள். அது கோவிலுக்கு செல்லும் முழுமையான அனுபவத்தை தருவத்தில்லை.

இப்படி வேறு ஒரு நாட்டில் வழிப்பாட்டிடங்கள் வைக்கும் போது அப்படி முழுமையான ஆன்மீக அனுபவத்தை அடையும் வகையில் வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை ஜரோப்பியர்கள் காலனிய காலத்தில் வெளிநாட்டுக்கு சென்ற போது அங்கு அவர்கள் தங்கள் வழிப்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களின் முறையில் வழிப்பாட்டிடம் அமைத்து கொண்டார்கள். அப்படி இந்தியர்கள் நாம் செய்வதில்லை.

பண்டிகைகளும், கோவில் திருவிழாக்களும் நம் ஊரில் வாழும் போது நம்மிடமிரருந்து பிரிக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபாவளி, பொங்கல் எதுவானாலும் சரி ஊருக்குள்ளேயே ஒரு கொண்டாட்டம் தானாக புகுந்துவிடும். இப்படிப்பட்ட அனுபவங்களை வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் இழந்துவிடுகிறார்களோ என்று தோனுகிறது.

கிறிஸ்துமஸ் காலங்களில் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு கிறித்துவர்களும் குழந்தையாக மாறிவிடுவதை காணமுடிகிறது. எனது மேலாளர் அவரது அறைக்குள்ளேயே ஒரு சிறிய கிறிஸ்மஸ் மரத்தை வைத்து ஒரு சிறுவனைபோல்  அலங்கரித்து கொண்டிருந்தார். இது போன்ற கொண்டாட்டங்கள் வாழ்க்கையில் மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன். நம் அன்றாட வாழ்விலிருக்கும் சுமையை மறக்க வைக்கும் ஒரு தருணம்.

பண்டிகைகளை தவிர நான் பார்த்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரானாலும் அங்கிருக்கும் கோவில்களின் திருவிழா நடக்கும். கோவிலில் கொடியேற்றி பத்து இருபது நாள் அந்த திருவிழா தொடர்ந்து தேர் இழுப்பதோடு இது முடிவடையும். பண்டிக்கைள் ஒவ்வொருவரும் தனிதனியேயும் அருகிலிருப்பவர்களுடனும்  பகிர்ந்து கொண்டாடுவதென்றால் இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்கள் ஊரே திரண்டு கொண்டாடுவதாகும். தேர் இழுக்கும் போது அந்த ஜனக்கடலுடன் இணைந்து அதில் பங்குகொண்டு அனுபவிப்பது ஒரு உச்சம். இதை போன்ற அனுபவங்கள் இங்கு சாத்தியமில்லை.

மேல் சொன்ன பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் வெளிநாடுகளிலும் பெயரளவில் நடத்தப்படுகிறது. ஆனாலும் அதில் முழுமையான ஒரு அனுபவமில்லை.

வெளிநாடுகளில் சென்று வாழ்வது அதற்காக சில விஷயங்களை இழப்பது என்பது தேவையானதே அதற்காக நான் இதை எழுதவில்லை. மேலும் நமது சொந்த நாட்டை விட்டு பிரியும் ஏக்கத்தால் திரும்ப வருவதையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நமக்கென்றிருக்கும் வாழ்க்கை முறையை வெளிநாட்டுக்கு வந்தவுடன் துறந்துவிடுகிறோமோ என்று எண்ணுகிறேன்.

நியுயார்க் நகரத்திர்கு நான் சென்ற போது அங்கிருக்கும் சுற்றுலா தளங்களுக்கு சென்றதுடன் மன்ஹாட்டனில் சில இடங்களில் இறங்கி சுற்றினேன். அங்கு சைனா டவுன் என்ற இடத்துக்குள் போனால் நியுயார்க்குள் இருந்து வேறேங்கோ சென்றது போலிருந்தது. கடைகளின் அமைப்பு, ட்ராபிக், அங்கு சுற்றியும் தெரியும் சீன எழுத்துக்குள் எல்லாம் நீங்கள் சீனத்தில் ஏதோ ஒரு நகரத்துக்குள் சென்று விட்ட அனுபவத்தை தரும். அதற்கு அருகில் இருக்கும் லிட்டில் இட்டலி இடமும் அப்படி தான் இருந்தது ரோடு முழுவது உணவகங்கள். ரோட்டோரம் விற்கப்படும் தின்பண்டங்கள் என்று  அங்கிருக்கும் இத்தாலியர்களுக்கு ஏற்றார் போல் தான் இருந்தது.

இப்படி நாம் நமக்கு ஏற்றார் போல் ஒரு சூழ்நிலையை வெளிநாட்டில் ஏற்படுத்தி கொள்ளாமல் போய் விடுகிறோமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நாம் நம் மதக்கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் அதற்கே உன்டான கோலாகலத்துடன் செய்ய முடியும். அதுவே நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நம் பண்பாடு, மதம் சார்ந்த முழுமையான, ஒரு எழுச்சியான அனுபவத்தை கொடுக்க முடியும்.

இப்படிப்பட்ட அனுபவங்களை இழந்துவிட்டு இங்கு வாழ்வதற்கு பேசாமல் இங்குள்ள ஏதோ ஒரு மதத்திற்கே மாறி அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தோன்றியதுண்டு.

Tuesday, August 4, 2015

சிறியதே அழகு

சிறியதே அழகு -  Small is Beautiful - E.F.Schumacher, Technology with Human Face என்ற கட்டுரையின் சுருக்கம்

தொழில் நுட்பத்தால் நாம் இயற்க்கை வளங்களை அழிப்பது மட்டுமின்றி  அது மனிதர்களின் படைப்பு திறனையும் முடக்கிவிடுகிறது என்கிறார் ஷூமாக்கர்.  ஒருவன் தன் சொந்த உழைப்பால் ஒரு பொருளை தயாரிப்பான் எனில் அதிலிருக்கும் படைப்பு செயல்பாடும், நுட்பங்களும் அவனுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. இன்று அந்த வேலைகளை தொழில்நுட்பம் பிடுங்கி கொள்வதால் அவன் முழுதாக ஒரு பொருளை தயாரிக்கும் வாய்ப்பை இழக்கிறான்.அவன் மிக பெரிதான ஒரு பொருளின் பாகங்களை தயாரிக்கும் தொழில்களில் ஈடுபடுகிறான். அப்படிபட்ட வேலையில் மனிதன் நிறைவடவதில்லை. அப்படி நிறைவடையாத மக்கள் இருக்கும் சமூகத்தில் தான் கேளிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Mass production என்பதற்கு மாற்றாக அவர் காந்தி சொன்ன production by mass என்ற உற்பத்தி முறையை வைக்கிறார். பெரும் உற்பத்தி முறைகளில் பெரிய அளவிலான மூதலீடும், ஆற்றலும், தொழில்நுட்பமும் தேவைபடுகிறது. பெரும் உற்பத்தி முறைகளில் இயல்பாகவே ஒரு வன்முறை இருக்கிறது. அதன் அளவுக்கும், வேகத்துக்கும் எல்லையில்லாமல் இருக்கிறது. அது மிக முக்கியமான அதன் மூல தனத்தையே அழிக்கிறது. அந்த மூலதனம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாத இயற்க்கை.

அதனால் மக்களை கொண்டே உற்பத்தி செய்யும் முறையை முன் மொழிகிறார். இதில் பெரிய முதலீடோ, ஆற்றலோ, தொழில்நுட்பங்களோ தேவையில்லை. மக்களின் உழைப்பு, அந்த உழைப்பே பெரும் முதலீடு, சில கருவிகளை கொண்டு உற்பத்தி செய்வோம் என்கிறார். மையமற்ற தன்மையும், இயற்கையுடனான ஒத்திசைவும், சிக்கனமாக வளங்களை உபயோகிக்கும் தன்மையும் இந்த முறையின் சிறப்புகளாகும். மேலும் இந்த முறையில் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை பங்கு வகிக்கலாம். மனிதர்களின் திறமையை, படைப்பூக்கத்தை, நுட்பங்களை வெளி கொண்டுவரும் இதை போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கு கேளிக்கை என்று தனியாக ஒன்று தேவையில்லை. தொழிலே ஒரு இன்பமான அனுபவமாக மாறிவிடுகிறது.

தொழில் நுட்பத்தை புதிய பாதையில் நம்மால் கொண்டு செல்ல முடியும் என்கிறார். பெரிய அளவிலான உற்பத்தி அழிவை நோக்கியே கொண்டு செல்லும். அதில் சுற்று சுழல் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. பிரச்சினைகளை ஒன்றை இன்னொன்றாக அதை மேலும் பெரிதாக தான் மாற்றி கொள்கிறோம். மனிதனின் உன்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழில் நுட்பம் தேவை. அவனை இயந்திரங்களுக்கு அடிமையாக்குபவை அல்ல. மனிதனின் அளவுக்கு ஏற்றார் போல் தொழில்நுட்பம் இருந்தால் போதும். மனிதன் சிறியவன், சிறியதே அழகு.

Tuesday, July 14, 2015

ஜே ஜே சில குறிப்புகள்

ஜே ஜே சில குறிப்புகள் இப்போது தான் படித்து முடித்தேன். ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது. அதில் கதை என்று ஒன்று இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். முழுக்க முழுக்க தத்துவார்த்த தளத்திலான பிரச்சனைகளை பேசுகிறது. அதை படிக்கும் போதே இது தான் இருத்தலியல் பிரச்சினைகளை பேசுகிறதோ என்று தோன்றியது. பின்பு இணையத்தில் தேடி உறுதி செய்து கொண்டேன்.

மனிதன் இது வரையிலும் புரிந்து கொள்ள முயன்று தோற்று கொண்டிருக்கும். இதுவரை முழுமையான விடையை அறிந்திடாத இந்த உலகை, அதன் இயக்கத்தை பற்றி பேசுகிறது. அதன் நாயகனான  ஜே ஜேயின் சிக்கலும் இதுவே. இந்த கேள்விகளால், வியப்புகளாள், தேடல்களால் அலைக்களிக்கப்படுகிறான்.   தான் செய்யும் காரியத்தை மன ஊசலாட்டம் இல்லாமல் முடிவு எடுப்பதற்கான விடையை தேடி கொண்டே இருக்கிறான்.

ஒரு பசுமாட்டின் மேல் எச்சில் உமிழும் ஒரு மனிதனை பார்த்து அவனின் இந்த கீழ்மை குணத்திற்கு எது காரணம் என ஆராய்கிறான். ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிடுவது பற்றி தீவிரமாக பல மணி நேரம் யோசித்துவிட்டு அவனை தேடி சென்று பிச்சையிடுகிறான். இப்படி வாழ்க்கையை முழுதும் தேடலுக்கும் சிந்தனைக்கும் கொடுத்துவிட்ட மனிதனை பற்றிய நாவல் இது.

நாவல் பேசும் காலத்திய இலக்கிய போக்கும் கருத்தியல் சூழ்நிலையை தெரிந்திருந்தால இன்னும் நன்றாக பிடி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தும் பல இடங்கள் சிந்திக்க வைத்தது, பரவசமூட்டியது.

கதாப்பாத்திரங்கள் ஒரு விஷேச தளத்தில் உரையாடுவது போல் தோன்றியது. பெரும்பாலும் தத்துவார்தமான, கருத்தியல் பற்றிய உரையாடல் தான். அது அவர்களை ஒற்றைப்படையாக சித்தரிப்பதாக தோன்றியது. கதாப்பாத்திரங்களில் சிக்கல் இல்லை. அது ஒரு குறைபாடாக தோன்றியது.

சிந்திக்க வைத்த சில குறிப்புகள்:
  • ஜே ஜேயிடம் இன்னொரு முற்போக்குவாதி கூறும் ஒரு  கருத்து. சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றால் அதில அவ்வப்போது கூச்சலிட்டு விமர்சனம் செய்வது உதவாது. சமூகம் இயங்கும் நிலைகளை அறிவியல் பூர்வமாக ஆராயவேண்டும். அதன் நியதிகளை கண்டடைந்து அதை கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியம் என்று சொல்வது போல் வரும். இது ஒரு சதிகார வழிமுறை என்று தோன்றியது. அப்போது மக்கள் என்ன ஆராய்ச்சி மிருகங்களா?
  • நான் ஏவியதை செய்ய ஒரு குட்டி பூதம் வேண்டும். நான் ஏவும் சிறு காரியங்களை செய்ய. பெரிய காரியங்களை நான் பார்த்து கொள்வேன்.
  • ஒற்றை கருத்தை அனைத்தற்குமான தீர்வு என்று பிடித்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் கண்மூடிதனமாக அந்த தீர்வையே போட்டு பார்த்தல். முல்லைக்கள் ஜே ஜேவுடனான விவாதம்.
  • சுதந்திர போரட்டத்தை வரும் ஒரு குறிப்பு. இந்தியர்கள் ஆளமுடியும் என்று இந்தியர்களுக்கு நம்பிக்கையின்மை. குறிப்பாக பெண்களுக்கு.
  • மனம் என்ற மனிதனின் புதிரான அங்கத்தை பற்றி பல்வேறு கதாப்பாத்திரங்களுக்கு தோன்றும் சிந்தனைகள்.

Monday, July 13, 2015

எழுத்தாளர் ஜெயமோனுடன் ஒரு சந்திப்பு - அனுபவ குறிப்பு

ஜூலை 5 2015 அன்று ஒஹாயோ டொலிடோ நகரத்துக்கு அருகில் இருக்கும் சிவா சக்திவேல் அவர்களின் இல்லத்தில் 3:30 மணிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் இருக்கும் ஃபார்மிங்டன், மிஷிகனிலிருந்து  95 மைல் தூரத்தில் இருந்தது அந்த இடம். ஒன்றரை மணி நேர பயணம்.  மதியம் 3:20க்கு அங்கு சென்று சேர்ந்தோம். புகைக்கும் நண்பர்கள் கடனை முடித்தவுடன் 3:25க்கு வீட்டிற்க்குள் நுழைந்தோம். கனிவான வரவேற்புடன் எங்களை அழைத்து உபசரித்தார் சிவா அவர்கள். நமஸ்காரம் என்று வரவேற்றதற்கு சில திராவிட நண்பர்கள் வணக்கம் என்று பதிலளித்தனர்.

ஜெயமோகன் அவர்கள் களைத்து வந்ததாகவும். தற்சமயம் சிறிது உறங்கி எழுந்து தயாராகி கீழே வருவார் என்று சொன்னார்கள். நாங்கள் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். வீட்டில் பல உலோக சிற்பங்கள் ஓவியங்கள் என்று கலை அழகோடு இருந்தது. கொலம்பஸ் நகரிலிருந்து இருந்து மூன்று வாசகர்கள் வந்திருந்தார்கள். அடுத்த நாள் ஜெவுக்கு டப்ளின் என்ற ஊரில் நூலகத்தில் ஒரு கலந்துரையாடல் இருப்பதாக சொன்னார்கள. என்னுடன் வந்த நண்பர்கள் மீண்டும் காற்றுக்கு வெண்மை தூவக் கிளம்பினார்கள்.

ஒரு 4:15 மணி அளவில் ஜெயமோகன் அவர்களும் அருண்மொழி அவர்களும் இறங்கி வந்தார்கள். ஜெ புத்துணர்ச்சியுடன் தெரிந்தார். அவர் அறையில் நுழைந்தவுடன் அங்கு அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்கள் எல்லாம் தன்னியல்பாக எழுந்து கொண்டனர். அவர் எல்லா முகங்களையும் பார்த்தார். கைகளை கோர்த்து இடை அளவு உயர்த்தி இறக்கினார். அவருக்கு அங்கு வந்த வாசகர்கள் எவரையும் தெரியவில்லை என்று தெரிந்தது.

மெதுவாக நடந்து வந்து ஒவ்வொருவருடனும் அறிமுகம் செய்து கொண்டார். காணொளிகள், புகைப்படங்களில் பார்த்தது போன்ற அதே வெண்பட்டை கண்ணாடி. முழுக்கை சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தாரர். தலையை எண்ணையிட்டு படிய வாரியிருந்தார். ஒவ்வொருவரும் பெயரை சொல்லி கை குலுக்கினர். நானும் "நான் ஹரீஷ்" என்றேன். ஒரு நொடி பார்த்தார். பின் "வெண்முரசு விவாதக்கு..." என்றவுடன் "ஓ" என்று சொல்லிவிட்டு சிரித்தார்.கைகுலுக்கலில் சற்று இருக்கம் கூடியது. பின் அருண்மொழி அவர்களிடம் அறிமுகம் செய்தார்.

சில வாசகர்கள் எப்போதிருந்து அவரது படைப்புகளை படிக்கிறார்கள் என்று சொன்ன போது தொப்பி திலகம் பற்றிய உரையாடல் வந்தது. இன்றிருக்கும் 90 சதவிகித வாசகர்கள் அப்படி தன்னை அறிந்தவர்கள் என்று ஜெ சொன்னார். இதை ஒட்டி எழுத்தினால் தான் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை பற்றி அவர் சொன்னார். அப்போது அரசியல் தலைவர்கள் பற்றி பேச்சு நடந்தது.  அவர்களின் இலக்கிய அறிவு, வாசிப்பு போன்ற சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை சொன்னார்.

அப்போது நான் கேட்டேன் "பிரச்சார கவிதைகளை எல்லாம் இலக்கியம் என்று சொல்வதா இல்லை அது ஒரு தனி வகையா? ஏனென்றால் சமீபத்தில் மலையாளத்து அரசியல் கவிஞர் ஒருவர் பற்றி எழுதியிருந்தீர்கள்". பிரச்சார கவிதைகள் என்பது வேறு, இலக்கிய அம்சம் கொண்ட பிரச்சார கவிதைகள் என்பது வேறு என்றார்.

அப்போது ஒருவர் அவர் பங்கு வகித்து பின் வெளியேறிய அரசியல் கட்சிகளை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு ஜெ அவருக்கு அரசியல் கட்சிகளில் கொள்கை பிடிக்காமல் வெளிவந்ததாகவும், ஆனால் அந்த கட்சிகளில் இருப்பவர்களிடம் தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த முரண்பாடும் இல்லை என்றார். அவரின் இளமை பருவத்தில் அவரிருந்த ஊரில் நடந்த சில விஷயங்களே அவரை ஆர்.எஸ்.எஸில் சென்று சேர தூண்டியதாகவும். தான் எதில் ஈடுப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றும் அதையே அந்த கட்சியிலும் செய்ததாக சொன்னார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் பிடிக்காமலான போது அதன் நேரெதிர் கட்சியான கம்யூனிஸ்டில் சென்று சேர்ந்ததாக சொன்னார்.

நான் கேட்டேன், "இந்து மதம் இந்தியாவில் தன்னுள் பல மதங்களை சேர்த்து கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. இதை இந்து மதம் அராஜகம் இன்றியே சாதித்திருக்கிறது. பிற மதங்களான சமணம் பெளத்தம் போன்ற மதங்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவினிலேயே இருந்திருக்கிறது. அப்படி இருக்கையில், இந்து மதம் இன்றிருக்கும் கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுடன் ஆரோக்கியமாக இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும். பிற மதங்களை, தெய்வங்களை தன்னுடன் இணைத்து கொண்ட இந்து மதம் இந்த மதங்களுடனும் அதை செய்ய இயலுமா?" என்று கேட்டேன்.

அதற்கு அவர் விரிவான பதிலை சொன்னார்.  அப்படி செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சொன்னார். ஒரு ஜனநாயக நாடான இந்தியா எல்லா மதத்தினருக்கும் அவர்களின் மதத்தை கடைபிடிக்க சுதந்திரம் தர வேண்டும் என்றார். மதங்களின் தத்துவ முரண்களை பற்றி பேசினார். மெல்ல மெல்ல கேள்வி பதில் பொது விவாதமாக மாறியது. அனைவரும் அவரவர் கருத்துகளை சொல்ல தொடங்கினர். கேள்வியிலிருந்து மெல்ல நகர்ந்து யூத மதமும் அமெரிக்க லிபரல்களும் என்ற அளவில் பேச்சு திசை திரும்பியது.

விவாதத்தின் Frame of reference தனக்கு மிகவும் முக்கியம் அதில் தான் எப்போதும் கவனமாக இருப்பதாக சொல்லி மீண்டும் கேள்விக்கு வந்து பதிலளித்தார். நான் மேலும் மேலும் கேள்விகளை அதில் கேட்க, அவர் "நான் என் கருத்தை சொல்லிவிட்டேன். அதை ஏற்றுகொள்வது உங்கள் விருப்பம், ஆனால் என் பதில் இவ்வளவு தான். வேறு கேள்விகளுக்கு நகர்வோம்" என்றார். எனது கேள்வியை வைத்து எனது அரசியல் நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொண்டுவிட்டாரோ என்று தோன்றியது. அதை மட்டும் தெளிவுப்படுத்தினேன்.

இலக்கியம் சார்ந்த கேள்விகளுக்குள் நகர்ந்தோம். "ஒரு நாவலில் வரும் கதாப்பாத்திரம் அந்த எழுத்தாளரின் பார்வையை கொண்டிருக்கிறதா? அதாவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு வகையில் நுண்ணுணர்வு இருக்கும் என்று சொல்லியிருந்தீர்கள் அது கதாப்பாத்திரங்களிலும் வெளிப்படுமா? " என்று கேட்டேன். "ஆம். அது எழுத்தாளனின் தனிதன்மை அது அவனது படைப்பில் வெளிப்படும். எனது படைப்பில் காட்சி வடிவமாக அதிகம் வரும், மணம் சார்ந்த குறிப்புகள் அதிகம் வரும்" என்றார்.

அவரது எழுத்துமுறையை பற்றி பேசினோம். அதை அவர் Ride into unconsciousness என்று சொன்னார். ஒரு கனவுக்குள் நுழைந்ததை போல் சென்று அந்த கனவுலகை எழுதுவது என்றார். இப்படி பட்ட எழுத்து முறைக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று கேட்டேன். எல்லா வகையான creative writing-ம் இதை போன்றது தான் என்றார். "ஒரு பொம்மையை தொடர்ந்து சில மணி நேரம் பார்த்து கொண்டிருந்துவிட்டு சென்று தூங்கினால் அது நம் கனவில் வரும் அதை போல தான் என் எழுத்தும், ஒரு விதமாக கனவை தூண்டிவிட்டு கொண்டு எழுதுவேன்" என்றார்.

ஒரு நண்பர் கேட்டார், "இந்த creative writing என்பதை ஒருவர் பயிற்சியின் மூலம் வளர்த்து கொள்ள முடியுமா?" என்று.  நிச்சயம் முடியாது என்றார். இது மனிதர்களின் தனித்தன்மை சார்ந்து விஷயம். பிறப்பிலேயே அந்த தன்மை இருந்திருந்தால் தான் அது சாத்தியம் என்றார். முன்பு அப்படி நினைத்து கொண்டிருந்தார்கள் Behaviorist என்ற தரப்பு ஒரு குழந்தை எந்த சூழ்நிலையில் வளருகிறதோ அதை பொறுத்து அதன் திறன் வளர்கிறது என்று சொல்லிவந்தார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இதை குறித்து Piaget மற்றும் Chomsky என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் விவாதம் செய்திருக்கிறார்கள். இணையத்தில் இந்த விவாதம் கிடைக்கும். அதன்படி குழந்தையின் திறன்கள் பிறப்பிலேயே முடிவாகிவிடுகிறது என்று வாதிட்டார் Noam Chomsky" என்றார்.

"Fine arts வகையான இசை ஓவியம் போன்ற விஷயங்களை வெறும் பழக்கத்தின் மூலம் அடைந்துவிட முடியும். அது ஒரு craft தான். ஆனால் அந்த craftக்கு மேல் creativityயை கொண்டு வர முடிவது தான் ஒருவரை கலைஞனாக செய்கிறது" என்றார். ஒரு உதாரணம் சொன்னார், இவரும் சுந்தர ராமசாமியும் ஒரு இசை கச்சேரிக்கு போகும் போது. இவர்கள் நுழைவதற்கு முன் இசை கச்சேரி தொடங்கி பாடி கொண்டிருந்தார்களாம். அரங்கின் வெளியே நடந்து வரும் போதே பாடலை கேட்டு, அரங்கில் நுழைவதற்கு முன்னரே "இவ இவ்வளோதான், இனி எத்தனை நாள் சாதகம் பன்னாலும் இவ இதுக்கு மேல பாடமாட்டா" என்றாராம் சு.ரா. அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்ககூடியது ஒரு கலைக்கும் craftக்கும் உள்ள வித்தியாசத்தை என்றார் அந்த நண்பர் கேட்டார் அப்போது உங்களுக்கு சிறு வயதிலேயே உங்கள் திறன் தெரிந்ததா என்று. ஆம் என்றார்.

இசை உருவாக்கும்  உணர்வு நிலைகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது நான் கேட்டேன், உணர்வுகளை தொட்டெழுப்பும் ஆக்கங்களை கலை என்று சொல்லலாமா என்று. அப்படி இல்லை என்றார். கலை என்பதற்கு ஒரு definition கிடையாது என்றார். அதில் ஒரு creativity இருக்கவேண்டும். அந்த creativity மூலமாக உணர்வுகளை தூண்டும் படைப்புகள் கலைப்படைப்பாகும் என்றார்.

பேசி கொண்டே கூட்டத்தில் யாரையோ பார்த்து விஷமமாக சிரித்தார். "சொல்லுங்க வேணு" என்றார். வேணு தயாநிதி வந்திருந்தார். அவரை அறிமுகம் செய்தார் . கிறிஸ்டோபர் ஆன்டனி வந்திருந்தார் அவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் புதிய படைப்புகளை பற்றி சொன்னார். சிறிது நேரம் கழித்து விவாதம் தொடர்ந்தது. நவீன படைப்புகள் அதன் பலவீனங்கள், பின் நவீனத்துவ படைப்புகள் என்று நீண்ட நேரம் பேசினோம். வெண்முரசை பற்றி பேசினோம். அதன் பின் இயங்கும் குழுவை பற்றி சொன்னார். சினிமா பற்றி கேள்விகள் வந்தது. அவரது ஆண்மீக அனுபவங்களை பற்றியும் குரு நித்ய சைதன்ய யதி பற்றியும் கூறினார். திடீர் என்று மணியை பார்த்தால் 7 ஆகியிருந்தது. நேரம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை.

நான் உட்பட வாசகர்கள் சிலர் அடிக்கடி எழுந்து வெளியே சென்று திரும்பி வந்து அமர்ந்தனர். அவர் தொடர்ந்து 3 மணி நேரம் பேசி கொண்டிருந்தார். சில நெருக்கமான வாசகர்கள் கிளம்புவதால் அவர்களை வழியனுப்புவதற்க்காக எழுந்து வெளியே சென்றார். அந்த சமயத்தில் இரவு உணவு சாப்பிட தொடங்கினோம். சிவா சக்திவேல் அவர்களே உணவு ஏற்பாடு செய்திருந்தார். சாப்பிட்டு கொண்டே புது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தோம்.

எனது நண்பர் ஒருவர் வந்திருந்தார். கடந்த ஒரு வருடமாக ஜெவை படிக்கிறார். அவரிடம் சென்று "சார், என்னா, எப்டி பேசரார்?" என்று கேட்டேன். அவர் சாப்பிட்டு கொண்டே "நான் நென்சத விட நல்லா பேசரார்" என்றார். "ஆனா யாரயோ நடூல திட்டினுருந்தாரு" என்றார்., "யார திட்டினாரு!?" என்றேன். "அதான் சூதகர் பற்றி கேட்டப்போ கெட்ட வார்த்தலெ திட்னாரே". "யாரு சுதாகர்?", "சுதாகர் இல்லப்பா, வெண்முரசுல வர்மே, கதைலாம் சொல்வாங்கலே" "அது சூதர்ங்க", "ஆன், அதான், அத பத்தி கேட்டேன், பாடு, பாடுனு யாரயோ திட்டினாரு.". "சார், அது இங்கிலிஷ் Bard சார், குலப்பாடகன்னு சொல்வாங்க, குலக்கதைகள சொல்லுவான்". "ஓ, எனக்கு இன்னா தெரியும்" என்றார் சாப்பிட்டு கொண்டே.

திராவிட நண்பர் ஒருவர் பாயசம் ஆரிய உணவு அதை சாப்பிடமாட்டேனென்று கேக் எடுத்து கொண்டார். நாசூக்காக முள்கரண்டியில் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து நின்று கொண்டு இருந்தபோது ஜெ உள்ளே வந்தார். பசியில்லை சிறிது நேரம் கழித்து சாப்பிடுவதாக சொன்னார். அப்போது பேசி கொண்டிருந்த போது அவரிடம் சொன்னேன்.  "என்ன விட உயரமா இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா ஒரே உயரம் இல்ல கம்மியா இருப்பீங்க போலருக்கு" என்று சொன்னேன். அப்படியா என்று நெஞ்சை நிமிர்த்தி என் தோள் அருகில் வந்து நின்று பார்த்தார்.

பின் "நான் இவ்ளோ உயரம்னு தெரியாதா" என்றார். "இல்ல வீடியோல பாக்கும் போது உயரமா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. ஏன் தம்பி உங்களோட நின்னு போட்டோ எடுத்திருக்கான். அவன் என்னவிட உயரம் அதுல நீங்க உயரமா இருக்கிற மாதிரி தெரிஞ்சது. அதான் அப்படி நெனச்சேன்" என்றேன். 'ஓ' என்று விட்டு. "போன தலை முறைல எல்லாரும் இந்த உயரம் தான். ஆனா இப்போ ஏன் பையன் என்ன விட நல்ல உயரம்".

தொடர்ந்தார் "பொதுவா போன தலை முறைல இந்த ப்ரோடின் இன்டேக் இவ்ளோ இல்ல, இப்பதான் ப்ரோட்டின் புரட்சி நடக்குது - கோழி ஆடுன்னு." என்றார். சாதாரணமான ஒரு சின்ன குறிப்புக்கு கூட வரலாற்று ரீதியான ஒரு பார்வை, ஒரு விளக்கம். இந்த சந்திப்பில் பலர் சொன்ன சிறு குறிப்பிலிருந்து அவர் கலாச்சார வரலாற்று கோணத்திலான விளக்கங்களுக்குள் நுழைந்ததை பார்த்தேன்.

அதன் பின் அமர்ந்து மேலும் பேசினோம். எந்த குறிப்பிட்ட கேள்விகளும் இல்லாமல் தன்னியல்பாக உரையாடல் நகர்ந்தது. வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் சங்கங்களை பற்றி பேச்சு வந்தது. குழந்தைகளை தமிழ் கலாச்சார தொடர்பு அறுந்துவிடாமல் வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது போல் கேள்வி வந்தது. பெற்றோர்கள் தங்கள் சொந்த நாட்டை எப்படி மதிப்பிடுகிறார்களோ, அதன் அடையாளமாக எதை முன்னிறுத்துகிறார்களோ அதை பொறுத்தே குழந்தைகள் அந்த நாட்டின் மீது மதிப்பு வைக்கிறது. தன் தாய் நாட்டை பற்றி பெற்றோர்கள் தாழ்வுணர்வு கொண்டிருந்தாள் குழந்தைகளுக்கு இயல்பாகவே அந்த நாட்டின் மீது மதிப்பு வராது. மேலும் பெற்றோர் மீதும் மதிப்பு குறையும்.

இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சார பாரம்பரியம் நன்றாக சொல்லி வளர்க்கப்படுகிறது. ஒரு வெள்ளையனின் இந்திய கலாச்சராத்தை, மதத்தை பற்றிய நக்கலுக்கு தத்துவத்தை கொண்டும் வரலாற்றை கொண்டும் எளிதாக பதில் கொடுக்க அந்த குழந்தைகளுக்கு தெரிந்திருக்கிறது. அந்த குழந்தைகள் வளரும் போது அவர்களின் மதம் சார்ந்த சடங்குகள் செய்ய கூச்சப்படுவதில்லை. நெற்றியில் திருநீறு வைத்து செல்ல வெட்கப்படுவதில்லை என்றார்,

"ஆனால் நம் தமிழ் குழந்தைகளுக்கு நாம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் சரியாக அறிமுகம் செய்வதில்லை. அவர்களுக்கு நாம் தமிழின் கேளிக்கை கலைஞர்களையே அறிமுகப்படுத்துகிறோம்.  அதனால் அவர்களுக்கு தங்களின் வேரை பற்றி பெருமிதம் உருவாவதில்லை. ஆனால் கர்நாடக சங்கிதம் போன்றவற்றை கற்ப்பிக்கப்படும் குழந்தைகளுக்கு ஓரளவு தாய்நாட்டின் மீது மரியாதை இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் வணங்குதற்குரிய சிலர் அங்கிருக்கிறார்கள்" என்றார்.

பின் தமிழ் சினிமா துறை சார்ந்து ஸ்வாரஸ்யமான சில விஷயங்களை சொன்னார். அறிவுக்கு அங்கிருக்கும் மதிப்பை பற்றி சொன்னார். "தாய் மொழி வழி கல்வி சிறந்ததா?" என்று கேட்டேன். "அவ்வளவு எளிதாக பதில் சொல்ல முடியாது, இன்னைக்கு தமிழில் ஒரு மானவன் படித்தால், அவன் பாடத்தை தவிர பிற துறைகளில் படிக்கவேண்டும் என்றால் அவனுக்கு இலக்கியம் தவிர வேறு எந்த துறையிலும் புத்தகங்கள் அதிகம் கிடையாது. அதை எல்லாம் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர முடியும்" என்றார்.

கல்வி துறை சார்ந்து உரையாடல் நகர்ந்தது. அவர் சொன்னார் "ஒரு கருத்தை நாம் அறிந்து கொள்ளும் போது அதை முழுதாக உள்வாங்கியிருந்தால் அதற்கு ஒரு உவமை சொல்ல தெரிய வேண்டும். நான் ஒரு கல்லூரியில் சென்று புவியீர்ப்பு விசைக்கு உவமை சொல்ல முடியுமா என்று மாணவர்களை பார்த்து கேட்டேன் அவர்களிடம் பதிலில்லை. ஆசிரியர்களிடம் கேட்டேன் அவர்களிடமும் பதிலில்லை. அப்படிப்பட்ட படிப்பு உதவாது. அப்படிப்பட்ட படிப்பு நமது மாணவர்கள் அறிவியல் துறையில் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். இங்கு வந்து ஆராய்ச்சி துறையில் ஈடுபடுபவர்கள் கடும் உழைப்புக்கு பின்னரே அதை கடந்து வர முடியும். இதை போன்ற கல்வியை வைத்து கொண்டு நாம் இரண்டாம் தர ஆராய்ச்சியாளர்களையே உருவாக்கமுடியும்" என்றார்.

மீண்டும் வெண்முரசை பற்றி பேச்சு வந்தது. நீலம் பற்றி பேசி கொண்டிருந்தபோது தமிழ் மொழி பற்றி பேசினார். "தமிழ் மொழிக்கு என்று ஒரு ஓசையிருக்கிறது - ஒரு இசை. இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் உருண்டு வந்து நமக்கு கிடைத்தது. ஆற்றில் எங்கோயிருந்து அடித்து வரப்படும் கூழாங்கல்லை போல. பல மைல் உருண்டு வந்து அந்த கல்லின் புறம்  மொழுழொழுப்பாக வடிவம் பெற்றுவிடுகிறது. அது போல் தான் தமிழ் வார்த்தைகளும்."

சில நண்பர்கள் அவரிடம் ஆசி வாங்கி கிளம்பினார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நானும் எடுத்துகொண்டேன். புகைபடங்களுக்கு ஜீன்ஸ் பேண்டுக்குள் கை விட்டு  நிற்பதன் பலன்களை பற்றி சொன்னார்.  அவ,ரை அடுத்தநாள் ஹாகிங் ஹில்ஸ் என்ற இடத்திற்கு ஹைக்கிங் அழைத்து செல்வதாக சொன்னார்கள். அவரே போதும் என்பது போல் சொல்வது வரை அவரிடம் உரையாடினோம். விடை பெற்று வீட்டை விட்டு வெளியே வரும் போது இரவு 9:50 மணி. கிட்டத்தட்ட 5:30 மணி நேரம் பேசியிருக்கிறோம். இருந்தும் போதாமல் தான் இருந்தது.

எழுத்தில் அவர் பேச்சைவிட நிதானமாகவும் ஆழமாகவும் இருப்பதாக தோன்றியது. அவருக்குள்ளேயே ஒரு பேச்சு ஓடி கொண்டிருப்பது போல் இருந்தது. கேள்வி என்ற ஒன்று அவருக்க தேவையில்லை. சில வரிகளை சொல்லிவிட்டு இரண்டு மூன்று நொடி அமைதிக்கு பிறகு அவரே மேலும் தகவல்களை சொல்ல தொடங்கிவிடுவார். ஒரு முறை என் முகத்தை பார்த்தே நான் கேட்க நினைப்பதை அவரே சொல்ல தொடங்கினார். கேள்விகள் அரைகுறையாக கேட்டாலும் அதற்குன்டான பதிலை சரியாக சொன்னார். அவ்வப்போது பேச்சுக்கிடையில் பேசாதவர்களின் பேரை கேட்டு அறிமுகம் செய்து கொண்டார்.

முதல் முறை அவரை சந்திக்கிறேன் என்றாலும். நான் அப்படி உணரவில்லை, அப்படி நடந்து கொள்ளவும் இல்லை. காணொளிகளில் காண்பது போலவே தான் இருந்தார். அதே பிசிறுடைய குரல். மிகவும் பழகிய ஒருவரிடம் பேசுவது போல் தான் பேசினேன். அவரிடத்திலும் அப்படி ஒரு அணுகுமுறை தெரிந்தது. எந்தவிதமான சம்பிரதாயமான சொற்களையும் நான் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு அசாதாரணமான மனிதரிடம் இருந்து கொண்டிருக்கும் உணர்விருந்தது. ஒரு தருணத்தில் அவர் அருகில் அமர்ந்திருந்த எனக்கு அவரின் கனம் அந்த அறை முழுதும் நிரம்பியிருந்ததாக தோன்றியது.

பின்குறிப்பு: முற்றிலும் நினைவிலிருந்து எழுதிய குறிப்பு. தவறிருக்குமாயினும் அவை எனது பிழைகளே.

Monday, April 27, 2015

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 2

அம்பேத்காரின் கேள்விக்கு எதிர்வினையாக அவர் எதை வைத்து மதம் என்ற ஒன்றை வரையரை செய்கிறார் என்று கேட்கலாம். அவர் பிற மதங்களிடம் ஓப்பீடு செய்தே இந்து மதத்தின் மீது கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்தந்த மதங்களில் அவர் குறிப்பிடும் அம்சம் எப்படி நிலையின்மை பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதே போதும். இருந்தாலும் இந்த கேள்வியின் வழியாக நாம் உன்மையிலேயே இந்து மதம் இத்தனை பிரிவுகளையும் தன்னில் அடக்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்து மதம் ஒரு தொகுப்பு தன்மை உடையதாக உள்ளது. அந்த தன்மையே பிற மதங்களிடமிருந்து இதை பிரித்துக்காட்டுகிறது. இந்து மதத்தை ஒரு தொகுப்பு மதம் என்று கூறலாம். இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மதமும் அதனதன் பிரிவுகளுக்குள் அவர்களுக்கு ஏற்றப்படி நம்பிக்கையையும் சடங்குகளையும் நடத்தி கொள்ள சுதந்திரம் அளிக்கிறது. இந்த தன்மையினாலேயே தனிப்பட்ட முறையில் இந்து மக்கள் இந்து மதத்தில்லாத கடவுள்களையும் வணங்க தயங்குவதில்லை. இதை அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டில் பார்த்துதான். சர்ச்சில் ஏசுவை, மாதாவை வணங்குவதற்கு என் அம்மா தயங்கியதில்லை. நோயுற்றால் மசூதீயின் எதிரிருக்கும் ஒரு முஸ்லிம் முதியவரிடம் தான் என்னை மந்திரிக்க எடுத்து செல்வாள்.

இப்படிபட்ட தொகுப்பு மதம் எப்படி தொகுக்கப்பட்டது எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது? இந்த கேள்விக்கு பதில் சொல்ல போனால் அரசர்களுக்கு ஏன் மதமும் அதன் குருக்களும் முக்கியமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியும். இன்றும் இந்த விடை உலகிற்கு பொருந்தும்.

இந்தியா என்பது பல குலங்களாக பிரிந்து பிரிந்து பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது. அது இயற்கையாக மனித சமூக பரினாமத்தில் அவன் சமூகமாக வாழ ஆரம்பித்திருந்த காலம். இந்த சமூக வளர்ச்சியின் அடுத்தக்கட்டம் என்பது. குல குழுவாக இணைக்கப்பட்டு ஒரு அரசை, அரசாட்சியை நிறுவுவது. இப்படி சிறு குல குழுக்களாக இருக்கும் போது ஒவ்வொரு குலத்திற்கும் அதற்குரிய வழிப்பாட்டு முறை மற்றும் தெய்வங்கள் இருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சில குலங்கள் இதில் வளர்ச்சி பெற்று வலிமை பெற ஆரம்பிக்கிறது. அவை பிற குலங்களை அடக்கி ஆக்கிரமித்து அங்கு ஒரு சிற்றரசை நிறுவுகிறது.

இப்படிப்பட்ட சிற்றரசுகள் தங்களை பேரரசுகளாக வளர்த்து கொள்வதற்கு மதம் ஒரு கருவியாக இருந்தது. இந்த மதம் எனும் கருவியை இயக்க தெரிந்தவர்கள் மத குருக்கள், மத துறவிகள். இந்து மதத்தில் இவர்கள் வைதீகர்கள் - பிரமானர்கள். ஒரு அரசு தன்னோடு இணைக்க நினைக்கும் ஒரு தனி குலத்தை  அனுகுவதற்கு அவன் முதலில் எடுக்கும் ஒரு முயற்சி ஒரு வைதிகரையோ அல்லது துறவியையோ அந்த குலத்திடம் அனுப்புவது. அந்த வைதீகர் அந்த குலத்திடம் நன்மதிப்பு பெற்று அந்த குலம் அவரை ஒரு துறவியாக அல்லது குருவாக ஏற்று கொள்ளும் பொழுது அந்த வைதீகர் அவர்களது கடவுளை அந்த அரசனின் மதமான இந்து மதத்துடன் இணைப்பார். அந்த குல மக்கள் வணங்கி வந்த தெய்வம் இந்து மதத்தில் ஒரு கடவுளாக மாற்றப்படும்.

இப்படியாக அந்த குலம் முதலில் இந்து மதத்தில் இணையும். அதன் பிறகு இந்து மத ஆதரவோடு ஆட்சி நடத்தும் மன்னனுடன் இணையும். இப்படி தான் பேரரசுகள் உருவாகி வந்தது. இப்படி ஒரு அரசுடன் இணையாத குலங்களை தான் நாம் இன்று பழங்குடியினர் என்றும் பட்டியலிடப்பட்ட குலங்கள் என்றும் கூறுகிறோம், அவர்கள் வாழ்க்கை மேம்பட அரசு சலுகைகளை அளிக்கிறது. ஆகவே குலங்கள் அரசிடம் சேர்வது இரண்டு தரப்புக்குமே அவசியமான ஒன்று. அதை வன்முறை இன்று நடத்த மதம் ஒரு கருவியாகும். இந்த காரணத்தால் தான் இந்து மதத்தில் இத்தனை விதமான கடவுள்கள் வழிப்பாட்டு முறைகள்.

இப்படி இந்து மதம் வளர்ந்திருந்தாலும் இதை காலத்தால் சிதறிவிடாமல் கட்டி இறுத்தியது எது. இவைகளின் மையப்புள்ளி எது. இதுவே அம்பேத்காரின் முக்கியமான கேள்வி. இதற்கு பதில் இந்து மதத்தை மேலோட்டமாக பார்த்தால் கிடைக்காது.

எந்த ஒரு மதத்திற்க்குமே அதில் இருவகை தளங்கள் இருக்கும் என்று சொல்லலாம். ஒன்று அதன் வழிப்பாடு மற்றும் சடங்குள் சார்ந்து ஒரு தளம். இது எந்த ஒரு எளிய மனிதனுக்கும் புரிய கூடியதாய், மிகவும் அத்தியாவசியமனதாய் இருக்கும். இன்னொரு தளம், அந்த மதத்தின் தத்துவ சார்ந்தது.  இந்த மதத்தின் மைய புள்ளி அதன் சடங்குகளிலும் வழிப்பாட்டு முறைகளிலும் இல்லை, அது தத்துவ தளத்திலு இருக்கிறது.

இந்த மதத்தின் தத்துவ தளம் என்பது பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற மதங்களான் பௌத்தம் சமஞம் ஆகியவைகளுடன் விவாதித்து வளர்ந்து வந்தது. இந்த தத்துவ தளத்தின் தொடக்கம் வேதங்களிலிருந்தே ஆரம்பமாகிறது. பிறகு அது வேதாந்தமாக வளர்ச்சி பெறுகிறது. அதிலிருந்து அத்வைதம் த்வைதம் போன்ற பல வேதாந்த தளங்கள் உருவாகி வந்திருக்கிறது.

இன்று நாம் காணும் எந்த இந்து பிரிவுக்குள்ளும் அதன் புரணங்களிலும் இந்த தத்துவங்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. இன்று மதங்கள் முன்பு ஆறு பிரிவுகளாக இருந்தது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணப்பத்யம், சௌர்யம். இது காலபோக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இன்று சைவமும் வைணவமும் நம்மிடையே இருக்கிறது ஓரளவு சாக்தமும்.

இன்று நம்மிடையே இருக்கும் இந்த சைவம் வைணவம் போன்ற பெருமதங்களில் இந்த தத்துவங்களின் கருதுகோள்கள் வலுவாக ஊடுருவியிருக்கிறது. அந்த தெய்வங்கள் இந்த தத்துவங்களை கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. 'மகமாயி' என்று நாம் சொல்வதில் மாயி என்பது மாயை என்ற வேதாந்த சொல்லாகும்.
'என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க' என்ற பாடலில் வரும் பிரம்மம் என்ற வார்த்தை வேதாந்தாம் கூறும் முழுமுதல் நிலையாகும். சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் மும்மலங்களான ஆணவம், கன்ம்ம், மாயை எனப்படுவது அகங்காரம், கர்மா, மாயை என்ற வேதாந்த கருதுகோள்களாகும்.

இப்படி இன்று இந்து மதமானது அதன் தத்துவ தளத்தின் மூலம் சடங்கு மற்றும் வழிப்பாட்டு தளத்தில் இருக்கும் பிரிவுகளை வலுவாக பினைத்து வைத்திருக்கிறது. அம்பேத்கார் தளுவிய புத்த மதமே கூட வேதாந்தத்திலிருந்து எடுத்து கொண்டு மேலே வளர்ந்த தத்துவம் மதம். புத்த தத்துவங்களிலுருந்து எடுத்துகொண்டு இந்து மதத்தில் வளர்ந்து அத்வைதம். இப்படி பல நூறு ஆண்டுகளாக அறிவான விவாதங்களாலும் அஹிம்ஸை வழிகளாலும் வளர்ந்து வந்தது இந்து மதம். இதுவே இந்தியாவில் பிறந்த மற்ற அவைதிக மதங்களான புத்த மதத்திற்கும், சமன மதத்திற்கும் பொருந்தும். கிறித்துவம், இஸ்லாம் போன்ற ஆப்ரஹாமிய மதங்கள் இங்கு கற்றுகொள்வதற்கு நிறையவே உள்ளது.

Sunday, April 19, 2015

ஞான யோகமும் விவாதமும்

அன்புள்ள ஜெ,
ஞான யோகத்தை பின்பற்றுபவர்களுக்கு பிற தரிசனங்கள் உள்ளவர்களுடன் விவாதிப்பது அவசியம் இல்லையா? விவாதிப்பது அறிதலின் ஒரு வழியாக அது சொல்லவில்லையா?
அவசரமான கேள்வி. ஒரு வரி பதில் கூட போதும், இப்போதைக்கு.
நன்றி,
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,
ஞானநூல்களை தத்துவத்தை விவாதிப்பது வேறு ஞானத்தை விவாதிப்பது வேறு. ஞானநூல்களை விவாதிக்காமல் கற்கமுடியாது. நூல்களிலிருந்து மேலே சென்று அடையும் ஞானத்தை விவாதிப்பதன் மூலம் நிறுவவோ மறுக்கவோ முடியாது.
தத்துவப்பயிற்சியின் ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவர் ஒரு ஞானநூல்களை பயிலும்போது விவாதம் இன்றியமையாதது. இது எல்லா குருகுலங்களிலும் உள்ள ஒன்றுதான். இதன் மூலம் பலகோணங்கள் திறக்கின்றன. ஒரு கருத்தை ஐந்துபேர் அமர்ந்து விவாதித்தால் ஐந்துமடங்கு அறிவு அந்தக்கருத்தை ஆராயகுடிகிறது.

ஆனால் இந்த விவாதம் ஏறத்தாழ இணையான அறிவுத்திறனும் இணையான அறிதல் ஆர்வமும் கொண்டவர்கள் நடுவே நிகழவேண்டும். நோக்கம் அறிபடுபொருளை மேலும் கூர்மைப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். ஆகவே உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் ஏதாவது ஒரு தரப்பைச் சார்ந்து நின்று விவாதிப்பது தீங்கிழைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தவிவாதம் புறவயமான விவாதமுறைமையைச் சார்ந்ததாக மட்டுமே நிகழவேண்டும் என்று சொல்லப்படுவது த உணர்ச்சிகரமான விவாதம் நிகழாமலிருக்கும்பொருட்டு மட்டுமே. அதில் அகங்காரம் கலக்கலாகாது. வெற்றிதோல்வியல்ல உண்மை விளங்குவதே முதன்மையாக இருக்கவேண்டும். இல்லையேல் அது வீண்சொற்களாகவே முடியும்.

அந்தக் கல்விமூலம் தத்துவத்தை அறியும் ஒருவர் அதை கற்பனையாலும் உள்ளுணர்வாலும் முன்னெடுத்துச்சென்று தன் அந்தரங்க தரிசனத்தை அடைகிறார். அதையே ஞானம் என்கிறோம். அது கடல்போல, முகில் போல, மழைபோல, நிலத்தடி நீர் போல எங்குமுள்ள நீர். அதை அவர் தன் நிலத்தில் ஊற்றாக அடைகிறார். ஞானம் அவ்வகையில் முழுமையில் பொதுமையும் அறிதலில் அந்தரங்கத்தன்மையும் ஒருங்கே கொண்டதாகும்

அந்த ஞானத்தை அடைந்தவர்களில் குரு என்னும் நிலையை அடைந்தவர் அதை தகுதிகொண்ட மாணவர்களிடம் மட்டும் பகிரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குருநாதர்கள் பொதுவாக விவாதிப்பதில்லை.ஆனால் தன் மாணவர்களை வழிநடத்தவும் தன் ஞானத்தை முழுமைசெய்துகொள்ளவும் விவாதிக்கலாம்

அவர்களுக்கும் அப்பால் செல்பவர்கள் உலககுருநாதர்கள். மானுடத்தை நோக்கிப் பேசுபவர்கள். மகாவீரர் போல புத்தர் போல சங்கரர் போல.ஏசு போல. அவர்கள் ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் அல்ல. ஞானமேயாக ஆனவர்கள். அதை சாக்‌ஷாத்காரம் என நம் மரபு சொல்கிறது. ஞானத்தை நிகழ்த்தியவர்கள். அவர்களில் விவாதிப்பவர்களும் விவாதிக்காதவர்களும் உண்டு. அவர்களின் வழியை அவர்களே கண்டடைகிறார்கள்

ஜெ

http://www.jeyamohan.in/74235#.VTRXE010z3g

அம்பேத்காரின் "இந்து மதத்தின் புதிர்" - எதிர்வினை 1

எனது நண்பர் ஒருவர் இந்து மதத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்து மதம் சுத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டியது என வாதிட்டார். திராவிட இயக்க சார்புடையவர். நான் இந்து மதத்தில் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ஆனால் மொத்தமாகவே தூக்கி போட எந்த தேவையும் இல்லை என்றேன். நமது வாகனத்தில் ஒரு பழுது ஏற்பட்டால் எப்படி சரி செய்து உபயோகித்து கொள்கிறோமோ அதை போலவே இந்து மதத்திலும் உன்மையாகவே பிழைகளாக இருப்பதை சரி செய்யவேண்டும் என்றேன். அதற்கு அவர் இந்து மதத்தின் வேரிலேயே பழுது என்றார். இப்படி விவாதம் இரண்டு மூன்று நாட்கள் விட்டு விட்டு தொடர்ந்தது.


கடைசியில் இந்து மதத்தை பற்றி விமர்சிப்பவர்கள் இந்து மதத்தை பற்றி முழுதாக அல்லது மதிக்கதக்க அளவிலாவது தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். அப்படியில்லாமல் காதில் கேட்ட விஷயங்களை வைத்து கொண்டெல்லாம் அவதூறு சொல்ல கூடாது என்றேன். மேலும் விவாதம் தொடர்ந்து ஒரு இடத்தில் அம்பேத்காரிடம் வந்து நின்றது. அம்பேத்கார் சாட்டிய குற்றங்களை பற்றி சொன்னார். அந்த புத்தகத்தையும் எடுத்துக்காட்டினார். அதன்படி அந்த புத்தகத்தை, அல்லது சில அத்தியாயங்களையாவது படித்துவிட்டு வருகிறேன். பின்பு அவரது இந்து மதத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலுரைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன்படி முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு அதற்கு எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.


இந்து மதத்தின் மீது அம்பேத்கார் "Riddle in  hinduism" என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அல்லது முதல் புதிரில் இந்து மதத்தின் மீது எழுப்பும் கேள்விகள் என்று இவைகளை சொல்லலாம். இந்துக்கள் அனைவரும் தங்கள் கடவுள் என்று சொல்லி கொள்வது ஒற்றை கடவுள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுகிறார்கள். சிலர் எல்லா தெய்வத்தையும் வழிபடுகிறார்கள் - பலதெய்வமுறை வழிபாடு. பலர் மரம், மாடு, நதி ஆகியவைகளை வணங்குகிறார்கள் - பிரபஞ்ச தெய்வ முறை(pantheism). பலர் தங்களது கடவுளை தவிர மற்ற எந்த கடவுளையும் வணங்க மறுக்கிறார்கள் - ஒருதெய்வமுறை. இப்படி இருக்கும் போது ஒரு இந்துவை நீ எதனால் இந்துவாக இருக்கிறாய் என்று கேட்டால் அவன் பதில் சொல்ல முடியாமல் தினறுவான் என்கிறார்.


ஆனால் இந்த பிரச்சனை இந்தியாவில் வாழும் ஒரு கிறித்துவருக்கோ, இஸ்லாமியருக்கோ, பார்ஸிக்கோ கிடையாது என்கிறார். அவர்கள் முறையே கிறித்து, அல்லா, ஜரதுஷ்டரர் என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் இந்து அப்படி சொல்ல குழம்புவான் என்கிறார். மேலும் இந்துக்களுக்கு என்று பொதுவான ஒரு நூல் கிடையாது என்கிறார். சிலர் வேதங்களையே அவர்களின் புனித நூல்கள் என்பார்கள். சிலர் தாந்திரீக நூல்களை சொல்வர். சிலர் பாகவதத்தை சுட்டுவர்.


மூன்று, இந்து மதத்தினர் ஒரே பண்பாட்டை சார்ந்தவர்கள் அல்ல. பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் மற்றும் கல்யானம் செய்ய கூடாத உறவுகள் என்பவை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்து மத சாதிகளில் ஒருவராக ஒருவர் இருந்தால் தான் அவர் இந்துவாகிறார். இது இந்து மதத்தின் முக்கிய பண்பு. ஒவ்வொரு இந்துவுக்கும் தனக்கு நிகரான சாதியில்லாதவருடன் சாப்பிடுவதோ, திருமண பந்தம் வைத்து கொள்வதோ கூடாது என்று கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த நான்கு வாதங்களையும் தான் அவர் முதல் புதிராக இந்து மதத்தின் மீது வைக்கிறார்.

முதலில் தெய்வ வழிபாடு பற்றிய வாதத்தை எடுத்து கொள்வோம். ஒரு மதம் ஒரு தெய்வத்தை தான் கொண்டிருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? அதிலும் ஒரு மதத்தில் ஒரு தெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடும் சேர்ந்திருந்தால் அது ஒரு மதமென ஏன் இருக்ககூடாது. ஒரு மதம் அதற்குள் எவ்வளவு பாகுபாடுகளை அனுமதிக்கிறதோ அது அத்தனை மதிப்பை மற்ற நம்பிக்கைகளுக்கு கொடுக்கிறது என்று அர்த்தம். அது அத்தனை வழிபாட்டு முறைகளையும் வன்முறையில்லாமல் ஏதோ ஒரு தருனத்தில் தன்னுடன் இணைத்திருக்கிறது என்று அர்த்தம்.


அவர் சுட்டிக்காட்டும் மதங்களில் பார்ஸி மதத்தை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால அந்த மதம் இன்று இரானில் கிட்டத்தட்ட முழுதும் இஸ்லாமியர்களால் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த மதத்தில் இருக்கும் உலக அளவிலான மக்களில் இந்தியாவில் தான் கணிசமானவர்கள் உள்ளார்கள். அவர் சுட்டிக்காட்டும் மற்ற இரண்டு மதங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. வரலாற்றில் ரத்த ஆற்றை ஓட விட்டவர்கள்.


கிறித்துவ மதம் ஐரோப்பாவின் ஆயிரம் மதங்களில் ஒரு மதமாக இருந்த காலகட்டம் ஒன்றுண்டு. ஒரு காலகட்டத்தில் அந்த மத குருக்கள் ரோம மன்னனை சம்மதிக்க வைத்து மதமாற்றினார்கள். அதன் பின் அது அரச மதமானது. அதற்கு அரசு அங்கிகாரம் வந்தவுடன் ஐரோப்பாவில் உள்ள தாய் தெய்வ வழிபாட்டு மதங்கள் மற்றும் பல மதங்களை அழித்தார்கள். வற்புறுத்தி வன்முறையினால் கிறித்துவதத்திற்கு மாற்றினார்கள். அவ்வாறு தான் இன்று ஐரோப்பா முழுவதும் இன்று கிறித்துவமாக இருக்கிறது. இன்று கிறித்துவத்தில் இருக்கும் பல மத சடங்குகளுக்கு பூர்விக ஐரோப்ப மதத்தில் வேர்கள் உண்டு அதற்கு கிறித்துவ சாயம் பூசப்பட்டு இன்றும் கொண்டாடுகிறார்கள்.


அதே போல கிறித்துவ மதத்தின் தெய்வ கோட்பாடு. கிறித்துவர்கள் கிறித்துவை தவிர யாரையும் வழிபடகூடாது என்று திட்டவட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. கிறித்து ஒருவனே உங்களை பாவத்தில் இருந்து விடுவிப்பவர். அவர் ஒருவரே கடவுளின் மகன். அவரிடம் வராமல் போனால் நரகம் நிச்சயம் என்று ஒரு அச்சத்தினூடாக கிறித்துவர்கள் அனைவரும் ஒற்றை வழிப்பாட்டு முறைக்குள்ளானார்கள். Inquisition என்ற முறையை வைத்து கொண்டு காலனியாக்கம் நடந்த நாடுகளில் எல்லாம் பல மக்கள் சித்ர வதைக்கும் மரணத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள். அமெரிக்க பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தொழிக்கபட்டதர்கான காரணங்களில் இந்த மதமாற்ற நிபந்தனையும் ஒன்று.


இஸ்லாம் மதம் உன்டான போதிலிருந்து வன்முறையால் பல மக்கள் மாற்றம் செய்யபட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற நாட்டுக்கு படையுடன் சென்று மதமாற்றி அந்த நாடுகளில் ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள். தொடர்ந்து வன்முறையையே வழியாக கொண்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அல்லாவை தவிர வேறு ஒரு கடவுளை தொழுபவன் காஃபிர் என்று கூறுகிறது. இஸ்லாமிய மதத்தை பரப்ப அவன் மீது போர்தொடுப்பதையும் ஒரு வழியாக சொல்கிறது. இன்றும் இந்த விவகாரங்கள் ஓய்ந்தபாடில்லை.


இப்படி மற்ற மதங்கள் எல்லாம் அதை தவிர பிற மதங்கள் மீது கடும் வன்முறை செலுத்தியிருக்கும் போது. இன்றும் இந்து மதத்தில் இத்தனை வேறுபாடுகளுடன் பல பிரிவுகள் இருக்கிறதென்றால். உன்மையில் அது நல்ல விஷயம். இத்தனை பிரிவுகளையும் இந்து மதம் ஒருங்கினைத்திருக்கிறது. வன்முறையில்லாமல். ஒரு வேளை வன்முறை உபயோகிப்பட்டிருந்தால் நாம் இந்த வித்தியாசங்களை பார்க்க மாட்டோம். அப்ராஹமிய மதங்களை போல் ஓரே கடவுள் என்ற முறையில் இருந்திருக்கும். ஆனால் அப்படி வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதற்கு அதில் உள்ள இத்தனை பிரிவுகளும் அதில் உள்ள வித்தியாசங்களுமே காரணம். இந்து மதத்துக்குள் இருக்கும் உட்பிரிவுகளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


இரண்டாவது காரணமாக அம்பேத்கார் சொல்லுவது இந்து மதத்தில் பொதுவான ஒரு நூலோ, வழிமுறைகளோ இல்லை என்று. எந்த மதத்தில் தான் இருக்கிறது. கிறித்துவம் என்று எடுத்து கொண்டால் அதில் எத்தனை கிளைகள். ரோமன் கத்தோலிக்க மதம், ப்ரோடஸ்டான்டுகள், ஓரியின்டல் ஆர்த்தடக்ஸ், பென்டா கொஸ்டுகள் என்று எத்தனையோ உட்பிறிவுகள். உலகம் முழுதும் பரவியிருக்கும் கிறித்துவ மதத்தினர் எல்லாம் ஒரே முறையை பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் இருக்கும் கிறித்துவர்கள் பலர் இந்திய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறார்கள் சாதி உட்பட. அது கண்டிப்பாக அமெரிக்க கிறித்துவனிடம் இருந்து மாறுபடும். அதற்காக கிறித்துவம் ஒரு மதம் இல்லை  என்று சொல்லி விட முடியுமா.


அதே போல் இஸ்லாமியத்திலும் சுன்னி, ஷியா, சூஃபி, அஹமதியர் என்று பல பிரிவுகள் உள்ளது. இன்று மத்திய அரபு நாடுகளில் நடக்கும் கொலைகள் எல்லாம் சுன்னி பிரிவினர் ஷியாக்களின் மீது நடத்துவது தானே? கொலை செய்யும் அளவுக்கு போகிறது என்றால் அவை இரண்டுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் எவ்வளவு. இல்லை ஆக்கிரமிப்பு செலுத்தும் பிரிவிடம் இருக்கும் சகிப்புதன்மை எவ்வளவு. ஏன் அம்பேத்கார் தழுவிய புத்தமதத்திலேயே எத்தனை பிரிவுகள். தேராவாதம், மஹாயானம், வஜ்ராயனா என்று உட்பிரிவுகளுடன் பல வகை இருக்கிறது.


அப்போது இந்து மதத்தில் மட்டும் இருந்தால் என்ன பிரச்சனை? அப்படி இல்லாமல் ஒரே பிரிவாக இருந்தால் தான் பிரச்சனை. அப்படி இருந்தால் ஒரு வழிமுறை, நூல் எல்லார் மீதும் வலுகட்டாயமாக சுமத்த பட்டிருக்கிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எல்லோரும் அவரவர் முறைகளை நூல்களை இன்றும் பேன அனுமதி இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் பெரும்பாலான இந்து மதம் இந்த முறையிலேயே வேலை செய்கிறது.


மூன்றாவதாக அவர் காரணத்துக்கும் மேலே சொன்ன பதில் தான். இன்று உலகம் முழுதும் பரவி வரும் கிறித்துவ மதத்துக்கு ஒரே பண்பாட்டு அடித்தளம் இருக்கிறதா? ஜெர்மனியில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும், கோயம்புத்துரில் இருக்கும் ஒரு கிறித்துவுக்கும் எப்படி ஒரு பொது பண்பாடு இருக்க முடியும். என்ன தான் வலுகட்டாயமாக அவன் அந்த மதத்தை பின் பற்றினாலும் அவன் அன்றாடம் வாழும் சமுகம் அல்லவா அவன் பண்பாட்டை கட்டமைக்கிறது. மஹாபாரத கதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பல கிறித்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஏன் என்றால் இந்து கதை என்பதை விட இந்தியாவின் கதை. அதை விட்டு விட்டு அவர் ஹெர்குலஸ் கதை சொல்ல முடியுமா? சொன்னால் சற்று செயற்கையாக இருக்கும்.


நான்காவதாக சாதி. சாதி இந்தியாவிலிருந்து மறைய வேண்டும் என்பது என் கருத்து. அது தானாகவே நடக்கும் என்று தான் நான் நினைக்கிறேன். கல்வியும், நவினமயமும் அதை தானாக இந்தியாவிற்கு ஓரிரு நூற்றாண்டுகளில் முழுமையாக கொண்டு வரும். எந்த இந்துவும் நான் இந்த சாதியில் இருப்பதால் நான் இந்து என்று சொல்வானா என்று தெரியாது. இந்து மதம் சாதி சார்ந்த தனது கோட்பாடுகளை மறுபரிசிலனை செய்து சமத்துவம் நிலைக்குமாறு மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இந்து மதம் மாற்றினால் சாதி பிடிப்புள்ளவர்கள் கேட்பார்களா? மாட்டார்கள். ஏனேனில் அவர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் இல்லாவிடிலும் அவர்களுக்கு சாதி என்ற ஒரு பிடிப்பு எப்போதுமே உண்டு.


தொடரும்...